Category Archives: Movie Talks

The Substance (2024) Not for all the adults

அது என்ன Not for all adults என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு பெரும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் கல்நெஞ்சமும் வேண்டும். அது அனைத்து adult-சுக்கும் இங்கு இருப்பதில்லை. இது ஒரு R rated movie என்பதால், R rating என்றால் என்ன என்று பார்த்துவிட்டு, அவற்றில் பட்டிலிடப்பட்டிருக்கும் விசயங்களை உங்களால் படத்தில் தயக்கமின்றி பார்க்கமுடியும் என்றால் இந்தப்படத்தை நீங்களும் பார்க்கலாம். இந்தப் படம் அமெசான் ப்ரைம் வீடியொவில் காணக்கிடைக்கிறது.


1. அழகும் பருவமும்

ஒரு பெண் பிறந்தது முதல் இறப்பு வரை அவள் பெண்தான். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு அவளிடம் இருக்கும். அதைக்கொண்டு பெண்ணின் பருவங்களை ஏழாகப் பிரிக்கிறார்கள்.

பேதை: 5-7 வயது
பெதும்பை: 8-11 வயது
மங்கை: 12-13 வயது
மடந்தை: 14-19 வயது
அரிவை: 20-25 வயது
தெரிவை: 26-31 வயது
பேரிளம்பெண்: 32-40 வயது

இந்த ஏழு பருவங்களின் வயது வரம்புகளும் அவ்வப்போது வேறுபடுகின்றன. ஆனால், பெண்ணின் பருவங்களை இப்படியாகத்தான் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதில் பேரிளம் பெண்தான் நம் கதை கதாநாயகி. அவள் அரிவையாக (20 வயது) இருந்ததுமுதல் கதை நடக்கும் நிகழ்காலம் வரை நாற்பதைக் கடந்தபின்பும் துள்ளலாகவும், ஆரோக்கியமாகவும் வசீகரத்துடன் வாழ்ந்து வருகிறாள். புகழ் பணம் இருந்தும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் குழந்தைகளும் இல்லை. அவளுடைய மிகப்பெரிய சொத்தே அவளுடைய மங்காத பேரழகுதான் என்று அவள் திர்க்கமாக நம்பி வாழ்ந்து வருகிறாள்.

ஒரு நாள் அவளின் வயதின் மூப்பு காரணமாக அவளுடைய வசீகரம் குறைய ஆரம்பிக்கிறது, ஆரோக்கியம் குன்றுகிறது. தன் கண் முன்னே தன் இளமை தன்னைவிட்டு போய்க்கொண்டு இருப்பதை அவளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. தன் அழகும் இளமையும் நிரந்தரமாக தனக்கு வேண்டும் என்று எண்ணுகிறாள். அதற்காக எதையும் செய்யத்துணிகிறாள். ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.

நிற்க.


2. வாரிசு

தன்னுடலைக் கிழித்துப் பிறந்த பெண்பிள்ளைக்கு தாய்ப்பாலூட்டி வளர்க்கிறாள் ஒருதாய். மகள் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வேகமாகவும் வளர்கிறாள். ஆனால் அந்த தாய்க்கு அதில் மகிழ்ச்சி இல்லை. ஏனென்றால், அந்தப் பெண் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போதெல்லாம், அந்த தாய்க்கு முதுமை அதிகரிக்கிறது. குழந்தை வேகமாக தாய்ப்பால் குடிக்க குடிக்க குழந்தை அழகாய் மாறுகிறது, தாயின் இளமையோ வேகமாகக் குறைகிறது. குழந்தையின் பேரழகை உலகமே போற்றுகிறது. புகழுக்கு மயங்கிய குழந்தைக்கு நிறைய பால் தேவைப்பட்டது.

தாயினால் குழந்தையைத் தடுக்க முடியவில்லை. தாய்ப்பாசமோ, தன் உருவத்தை தானே தாக்குவதா, என்ற எண்ணமோ, ஏதோ ஒரு இனம்புரியாதக் காரணம் அந்தத் தாயினால் குழந்தையை நிறுத்தமுடியவில்லை. ஆனால், கருணையற்ற அந்தக்குழந்தை தான் மேலும் அழகாக மாற தன் தாயை கிட்டத்தட்ட மரணத்தின் எல்லைக்கே தள்ளிவிட்டது. தாய் சுதாரித்துக்கொள்ளும் தருணம் குழந்தை பலசாலியாகவும் தாய் பலகீனமாகவும் இருக்கிறாள். தாய்க்கும் மகளுக்கும் நடந்த யுத்தத்தில் தாய் மகளை தின்று தன் இளமையை அழகை மீண்டும் எடுத்துக்கொள்கிறாள்.

நிற்க


3. ஆவேசம்

ஒரு செல்வச் செழிப்பான வனம். அதில் எல்லா விதமான செடிகளும் கொடிகளும் மரங்களும் இருந்தன. எல்லா வகையான உயிரினங்களும் இருந்தன. நிலத்துக்கு மேலே தாவர வளங்களும், பல்லுயிர் வளங்களும், நிலத்துக்கு கீழே தங்கமும் இருந்தன. இந்த கோடிக்கணக்கான வயதுடைய வனத்திற்கு அதுவரை மனிதர்கள் யாரும் வந்ததேயில்லை. அப்படி ஒரு வனத்தில் மனிதர்களின் கால் பட்டது.

மனிதர்கள் முதலில் தாவரங்களைப் பறித்து, பசியாற்றினார்கள். மரங்களை வெட்டி பொருட்கள் பல செய்தார்கள். ஆடைகள் நெய்தார்கள். மிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாடிப் புசித்தார்கள். நிலங்களை வெட்டி தங்கச்சுரங்கங்கள் அமைத்தார்கள். ஆபரணங்கள் செய்து மிடுக்காய் நடனமாடி கவர்ந்தீர்த்து புணர்ந்து இனத்தைப் பெருக்கினார்கள்.

ஆயிரம் வருடங்கள் செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தார்கள். எல்லா வளங்களும் தீர்ந்தப்பிறகு வேறு வளமான வனம் தேடினார்கள். தேடிக்கொண்டிருக்கும் போதே சிலர் வெள்ளம் வந்து மூழ்கி மரணித்தனர். சிலர் நிலச்சரிவில் சிக்கி மாண்டனர். சிலர் பட்டினியில் இறந்தனர். யாருக்கும் அந்த வனம் போல வேறு வனம் கிடைக்கவில்லை. தங்கம் வீதியில் இரைந்துக் கிடந்தது. எல்லாரும் இறந்தப்பிறகு மழை வந்தது மீண்டும் அந்த வனம் துளிர்விட ஆரம்பித்தது.

நிற்க


எது அழகு?

எனக்குப் பிடித்தமான தத்துவம் ஒன்று இருக்கிறது. அது

அழகாய் இருப்பதெல்லாம் நமக்குப் பிடித்திருப்பதில்லை.

நமக்குப் பிடித்திருப்பவை எல்லாம் அழகாய் தெரிகிறது.

அழகு என்பது முழுக்க முழுக்க அகம் சார்ந்தது. தோற்றம் சார்ந்தது இல்லை. நம்ப மாட்டீர்கள் அல்லவா? சரி, அவரவரது அம்மாவும் அப்பாவும் அவரவருக்கு அழகுதானே? தாத்தா பாட்டி, அழகு இல்லையா? அசிங்கம் என்று சொல்லி விடுவீர்களா? உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ளுமா? பார்க்கப் பார்க்க எல்லாம் அழகாய் தெரியும் என்பது பொய். சிலரைப் பார்க்க பார்க்க எரிச்சலும் வரும். ஆக, அழகு, பிடித்தம் எல்லாமுமே அகம் சார்ந்த விசியம்.

ஆனால்,

ஆனால்,

ஆனால், ‘அழகு’ என்று ஒன்று இருக்கிறது. அது வியாபாரம் சொல்லும் ‘அழகு‘. நிறுவனங்கள் லாபத்திற்காக, உள்நோக்கத்திற்காக அழகு என்பதற்கான வரையரையை அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.

  1. வெள்ளை அல்லது சிவப்பாய் இருந்தால் அழகு
  2. கூந்தல் நீளமாக இருந்தால் அழகு
  3. இடுப்பு மட்டும் ஒல்லியாக இருந்தால் அழகு
  4. தாடை கூர்மையாக இருந்தால் அழகு
  5. மூக்கு சின்னதாக க்யூட்டாக இருந்தால் அழகு
  6. உதடு சற்று பெரிதாய் இருந்தால் அழகு
  7. புருவங்கள் திருத்தப்பட்டிருந்தால் அழகு
  8. கை கால்களில் ரோமங்கள் மழிக்கப்பட்டிருந்தால் அழகு
  9. நகங்கள் சற்று நீளமாகவும் பளபளப்பாகவும் நிறங்கள் பூசி இருந்தால் அழகு
  10. கூந்தல் வளைவு நெளிவாக இல்லாமல் நேராக இருந்தால் அழகு
  11. மினுமினுக்கும் ஆடை அனிந்திருந்தால் அழகு
  12. அதுவரை ஆடை மறைத்திருந்த மேனியை சற்று தெரியும்படி ஆடை அனிந்தால் அழகு
  13. ஆடையைக் குறைத்துக் கொண்டால் அழகு
  14. உதட்டில் சாயம் அப்பிக்கொண்டால் அழகு
  15. இத்யாதி இத்யாதி

மேலே சொன்ன எல்லாமும் வியாபார நோக்கம் மட்டுமே அன்றி வேறில்லை. இவை அனைத்தும் வெளிச்சாயம் மற்றும் புறம் சார்ந்த விசியங்கள். இவையனைத்தும் இருந்தும் சிலரை பலரை நமக்குப் பிடிக்காமல் போகும். அதன் பிறகு அவர்கள் நம் கண்களுக்கு அழகாய் தெரியமாட்டார்கள். பிறகு எது அழகு?

  1. அன்பாய் இருத்தல் அழகு
  2. ஆசையாய் கொடுத்தல் அழகு
  3. உண்மையாய் இருத்தல் அழகு
  4. சுத்தமாய் இருத்தல் அழகு
  5. ஆரோக்கியமாய் இருத்தல் அழகு
  6. கடமையை செய்தல் அழகு
  7. கட்டுப்பாடுடன் இருத்தல் அழகு
  8. பரிவாய் இருத்தல் அழகு
  9. இத்யாதி இத்யாதி

மேலே சொன்ன அனைத்தும் அகம் சார்ந்த விசியங்கள். இந்தப் பண்புடையவர்களின் முகம் எப்படி இருந்தாலும் நமக்குப் பிடிக்கும். இவை அனைத்தும் நம் தாத்தாப் பாட்டியிடம் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆனால்,

ஆனால்,

ஆனால், ‘மீடியா’ என்று ஒன்று இருக்கிறது. (டிவி, சினிமா, ரேடியோ, விளம்பரம், யுடியூப், எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்.) அவை பெண்களை எப்போதும் ஒப்பனை செய்து கொள்ளத்தூண்டிக்கொண்டே இருக்கிறது.

பெண்கள் மீதான காதலை வெளிப்படுத்தும் போது, அவளது புற அழகை வர்ணிக்காமல், அவளது அகப்பண்புகளை வர்ணித்து குண்நலன்களை வர்ணித்து எழுதிய சினிமாப்பாடல்களை பட்டியலிடுங்கள் பார்க்கலாம்? இருக்காது, இருக்கவே இருக்காது. பெண்களின் கண்ணில் தொடங்கி, அவளது நிழல் வரை எல்லாமும், நிறம், அளவு, தோற்றம் என்று உடல் உறுப்புகளை வர்ணித்தே இருக்கும்.

காதலன் காதலியை நினைத்துப் பாடும் பாட்டில் ஏன் அவளைக் காதலிக்கிறான் என்பதற்கான காரணத்தை தேடிப்பாருங்கள், அழகு என்ற ஒற்றைக்கூற்றைத் தவிர வேறு எதுவும் இருக்காது. ஆக, ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது மூன்று அல்லது நான்கு ஜான் இடத்தைதான். அதற்குள் இருப்பவற்றை கடித்துக் குதறியப்பிறகு, “நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு, அதுக்குதாண்டா வந்துபோறேன் டெய்லி வைனுசாப்புக்கு”ன்னு பாட்டு பாடுவார்கள்.

திருமணத்திற்குப்பிறகு ஏன் வாழ்க்கை கசக்கிறது? நாமக்கு காதலிக்க சொல்லித்தந்த சினிமா, அழகான பெண்களைத்தான் காதலிக்க சொல்லித் தந்தது. நமக்கு பிடித்தமான பெண்களை காதலிக்க சொல்லித்தரவில்லை. இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

கடந்த ஒரு நூற்றாண்டுகளாக வண்ன ஓவிய விளம்பரங்களும், புகைப்படங்களும் வந்தப்பிறகு, நாம் திரும்பும் திசையெல்லாம், விளம்பரப் பலகைகளிலும், டிவி விளம்பரங்களிலும், சினிமாக்களிலும், வெள்ளைத் தோல் பெண்களையே நடிக்க வைத்து நம் கண்களில், அவர்கள் மட்டுமே பட்டுக் கொண்டிருந்ததாலும், நமக்குப் பிடித்தமான நடிகரின் காதலியும் சினிமாக்களில் வெள்ளையாக இருந்து வந்ததாலும், நமக்கும் நம்மை அறியாமலே நம் மூலைக்குள் வெள்ளையாய் இருக்கும் பெண்களைத்தான் அழகிகள் என்றும் அவர்களே நாம் காதலிக்கத் தகுதியானவர்கள் என்றும் ஆழமாக நம்பவைத்திருக்கிறார்கள்.

‘அங்கவை சங்கவை’ என்று சிவாஜிபடத்தில் ஒரு காட்சி வரும். அதெல்லாம் நிற வன்மத்தின் உச்சம்.

இதன் மற்றோரு வியாபார வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்ததுதான் ‘Fair and Lovely’. கருப்பாக இருக்கும் பெண்களின் மனதில் அவர்கள் தாழ்வுமனப்பாண்மையோடுதான் இருக்கிறார்கள் என்று விளம்பரத்தில் காட்டி காட்டி, உண்மையிலேயே தாழ்வுமனப்பாண்மையை வரவழைத்துவிட்டார்கள். ஆண் வர்க்கமும், பொண்ணு செவப்பா எலுமிச்ச பழ கலர்ல இர்ந்தால்தான் கட்டிக்குவேன்னு அடம்பிடிக்க, வியாபார முதலைகளின் காட்டில் பணமழைதான்.

மற்றொரு பெரும் மோசடி ஒல்லியான தோற்றம். உடற் பருமனுடன் இருக்கும் எல்லோரையுமே ஒரு தாழ்வுமனப்பாண்மைக்கு தள்ளிக்கொண்டே இருக்க வேண்டியது. உடற்பருமனுடன் ஆரோக்கியமாக இருந்தவர்களே இல்லையா? ஒல்லியான தோற்றமுடைவர்கள் அனைவரும் நூறுவயது ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதீத உடற்பருமன் ஆபத்துதான். ஆனால், அதைக்கொண்டு வியாபராம் செய்ய லாபம் பார்க்க மக்களை பயமுறுத்த வேண்டிய அளவிற்கு லாப வெறியில் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களே உஷார்.

ஒரு பக்கம் பெருநிறுவனங்கள் சினிமா, சீரியல், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் அழகான பெண்களுக்கான வரையறையை நிறுத்தாமல் ஒளிபரப்பு செய்துகொண்டே இருக்கின்றன. பெண்களும் விட்டில் பூச்சியாய் அந்த ரசாயன சாயங்களை வாங்கி தேவையற்ற செலவை செய்து உடல்நலத்தையும் மனநலனையும் கெடுத்துக்கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம், அந்த சினிமா, சீரியல், விள்மபரங்கள், பார்க்கும் ஆண்கள் சிவப்பழகு பெண்களையே நாங்கள் சைட் அடிப்போம், காதலிப்போம், திருமணம் செய்வோம், கருப்பான பெண்களை கலாய்ப்போம் என்று பெண்களை ஒல்லியான தோற்றம், சிவப்பழகு இத்யாதி இத்யாதி அழகை நோக்கி ஓட வைக்கிறார்கள். பெண்களும் சலைக்காமல் ஓடுகிறார்கள்.

பெருநிறுவன முதலாளி ஆண்களுக்கு பண லாபம். சாதாரன மக்களில் இருக்கும் ஆசாமி ஆண்களுக்கு வென்னிறத்தோல் கொண்ட பெண்ணுறுப்புகள் லாபம். பெண்களுக்கு என்ன லாபம்?

அவள் பேரழகி என்ற சொற்பகால பட்டமா?

~

வா. சூர்யதேவன்

3.33 am டிசம்பர் 19, 2024

(கடைசிவரை படத்தைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை என்று நினைக்கவேண்டாம். படத்தைப்பாருங்கள். இந்தப் பதிவு முழுக்கவே அந்தப்படத்தில் இருப்பவை பற்றிதான். ஆனால் இப்படியே இல்லை)

/the social dilemma_ & THE CIRCLE (2017)

/the social dilemma_ ஒரு ஆவணப்படம். நெட்ஃபிலிக்ஸில் காணக்கிடைக்கிறது. டிஜிட்டல் உலகம் நம்மை நாளுக்கு நாள் விழுங்கிக்கொண்டே இருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அதன் கூர்முனைகள் நம் தினசரிகளை, நம் இயல்புகளை, நம் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கின்றது என்பதை நாம் அளவிட்டுப் பார்க்கத் தவறுகிறோம். இந்த ஆவணப்படம் அப்படிப்பட்ட அளவீட்டை உள்ளடக்கியதுதான்.

தொலை தொடர்பு என்பது இன்றளவில் மிக அவசியமானது. மறுப்பதற்கில்லை. ஆனால், அருகில் இருப்பவர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளுமளவிற்கு தகுதிவாய்ந்ததா? யோசித்துப்பாருங்கள். மனிதர்களின் இயல்பு வெகு வேகமாக மாறிவருகிறது.

பிறரிடம் வாய்விட்டு வார்த்தைகளில் பேசுவதைக் காட்டிலும் chatboxகளில் எமொஜிகளிலும், abbrevationsகளிலும் மட்டுமே பேசத்தெரிந்த தலைமுறை நம் கண்முன்னே உருவாகிக் கொண்டிருக்கின்றது. இவர்களின் உலகம் வெவ்வேறானதாக இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வோரு உலகத்தில் வாழ்கின்றார்கள். ஏனென்றால் பெரும்பாலான இணையதளங்கள் செயலிகள் ஒவ்வொருவரின் பயன்பாட்டை வைத்து ஒரு குறிப்பிட்ட மாடலை உருவாக்குகிறது. அதைக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனி (News feed) காட்டுகின்றது. எல்லாமே கருத்துகள்தான். opinions. எதுவும் உண்மையோ சரியான தகவலோ அல்ல. Not a fact. வெறும் கருத்துகளை மட்டும் நம்பி செயல்படும் பெரும் மனிதக் கூட்டம் பேராபத்தானது. அது ஒரு கலவரத்தையும் உண்டுபடுத்தும். பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். உதாரணத்திற்கு Pizzagate Conspiracy என்று கூகிள் செய்து பாருங்கள்.

புதிதாக எந்த தொழில்நுட்பம் வந்தாலும், அதை குறைசொல்லி, பழைய பெருமைகளைப் பேசி பழமைவாதத்தை தூக்கிப்பிடிக்கும் அறிவிலிகளின் புலம்பல் இல்லை இந்த ஆவணப்படம். புதிய கண்டுபிடிப்புகள் தொழிநுட்பங்கள் நமக்கு எந்த அளவிற்கு நன்மை செய்கின்றன, எந்த அளவிற்கு தீமை செய்கின்றன என்பதை தெளிவாக ஆராய்ந்து, இந்த தீமைகளை சகித்துக்கொள்ளும் அளவிற்கு, பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு இருக்கின்றனவா என்று நம் முன்னே காட்டுகிறார்கள்.

உச்சகட்டமாக சில குழந்தைகளின் உயிர் வரை இந்த தொழில்நுட்பங்கள் குடித்திருக்கின்றன.

முகநூல் நிறுவனர் மார்க் 2024 ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதை இந்த லிங்கில் தருகிறேன் படித்துப் பாருங்கள். https://www.bbc.com/news/technology-68161632

இந்த ஆவணப்படத்தைப் பற்றி பேசும்போது, THE CIRCLE எனப்படும் டாம் ஹான்க்ஸ் நடித்த திரைப்படத்தைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது.

மக்களின் ப்ரைவசி தகவல்கள் தனியார்களின் கைகளில் கிடைத்தால் அதை வைத்து அவர்கள் பணம் பார்க்காமலா இருப்பார்கள்? தனியாரிடம் மக்களின் நேரமும் கவனமும் செல்லும் போது, அதை அவர்கள் சரியான நோக்கத்திற்குதான் பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை யார் எப்போது உருவாக்குவது. மக்களின் தகவல்களை பெரும் நிறுவனங்கள் சரியான நோக்கத்திற்குதான் பயன்படுத்துவார்கள் என்ற உத்திரவாதத்தை யார் அளிப்பது? அப்படி தொழில்நுட்பத்தின் பெருஞ்சக்கரத்தில் மக்களும் குழுந்தைகளும் நசுங்காமல் பாதுகாப்பாக வாழும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையில்,

~ வா. சூர்யதேவன்.

Coffee Addict ☕️

I’m a coffee addict என்று சொல்லிக்கொள்ள அனைவருக்கும் இன்று பிடிக்கிறது. இன்ஸ்டா பேஸ்புக்  வாட்சப்  போன்ற பல தளங்களில் இளம் வயதினர் தங்களை காஃபி அடிக்ட் என்று பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். காஃபி அடிக்ட்டாக இருப்பது உண்மையில் பெருமைக்கொள்ளக்கூடிய விசியமா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்பதுதான் பதில். அப்படியானால் காஃபி ஆபத்தானதா என்றால் அதுவும் இல்லை. அமிர்தமும் அளவுக்கு மிஞ்சினால் விஷம் என்பதுபோல காஃபி உட்கொள்ளுவதற்கும் சில வரம்புகள் உண்டு.

நம் உடல் சோர்வடையும் போது இயற்கையாகவே நமது உடலில் இருக்கும் Adenosine என்ற மூலக்கூறு நமது மூளையைச் சென்றடையும். அடினோசைனின் வேலையே மூளையை உறங்கச் சொல்வதுதான். நாம் காஃபி உட்கொள்ளும் போது அதில் உள்ள Caffeine என்ற மூலக்கூறு மூளையை சென்றடையும்.

அடினோசைன் செல்ல வேண்டிய இடங்களை இந்த காஃபீன் ஆக்கிரமித்து கொண்டு மூளையை சுறுசுறுப்பூட்டும். ஆனால் மூளையை சென்றடையாத அடினோசைன்கள் பக்கத்திலேயே காத்துக்கொண்டு இருக்கும். நமது உடல் மேலும் அதிக அடிசைன்களை மூளைக்கு அனுப்பிவிடும். பிறகு காஃபீன் தீர்ந்த உடன் காத்துக்கொண்டிருந்த மொத்த அடினோசைன்களும் மூளையை சோர்வுற வைக்கும். ஓய்வு எடுக்கச் சொல்லி, தூங்கச் சொல்லி தாலாட்டுப் பாடும். இம்முறையும் நீங்கள் சோர்வடையாமால் இருக்க வேண்டுமானால் மீண்டும் காஃபியை உட்கொள்ள வேண்டும். இப்படித்தான் நாம் காஃபி அடிக்ட்டுகள் ஆகிறோம்.

ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கும் பலருக்கும் காஃபி என்பது ஒரு இன்றியமையாத துணை எனலாம். முக்கியமாக மதிய வேளைகளில் சாப்பிட்ட பிறகு கண்ணைச்சொருகும் சயங்களில் சூடான காஃபி என்பது ஒரு அல்டிமேட் புஸ்டர். இரவு நேர பணியாளர்களுக்கு சொல்லவே வேண்டாம். ஆனால் ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை அல்லது அதைவிட அதிகமாக காஃபி உட்கொள்ளுவது ஆரோக்கியமானது அல்ல. 

உடல் சோர்வடையும் போது நாம் ஓய்வு எடுக்க வேண்டும். அப்படி ஓய்வு எடுக்க அனைவரும் படுத்தவிட்டால் எந்த வேலையும் நடக்காது. எனவே வேலை செய்யும் நேரத்தில் சோர்வுறாமல் இருப்பதற்கு மட்டுமே காஃபியை அளவோடு பயன்படுத்த வேண்டும். அதிகாலையில் எழுந்த உடன் பெட்காஃபி குடிப்பது பழக்கமாக இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். ஏனென்றால் நமது உடல் இயற்கையாகவே Cortisol என்ற மூலக்கூறை உற்பத்தி செய்யும். இந்த கார்டிசால் நம்மை தூக்கத்தில் இருந்து விழிப்பு நிலைக்கு கொண்டுவரும். அதனால் காலை நேரங்களில் காஃபியை உட்கொள்வது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. மேலும் அலுவலகத்திற்கு அடித்து பிடித்து சென்றதில் உடல் சோர்வடைந்திருந்தாலோ, அலுவலக அமைதியும் ஏசி காற்றும் கலந்ததில் ரம்யமாக தூக்கம் கட்டியணைத்தாலோ மட்டும் காலை பத்து மணி அளவில் அன்றைய முதல் காஃபியை உட்கொள்ளுங்கள். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தூக்கம் அறவே தவிர்க்கப்படும். அடுத்த மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஒரு உறக்கம் ஊடுருவும். மதியம் இரண்டு மணி அளவில் ஒரு கப் காஃபி உட்கொள்ளுங்கள். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு புத்துணர்வு கிடைக்கும். அதன் பின்னர் அன்றைய நாளுக்கான காஃபியை தவிர்ப்பது உடலுக்கு நன்மைத்தரும். மாலை நான்கு மணிக்கு பிறகு குடிக்கும் காஃபியில் உள்ள காஃபீன் இரவு தூக்கத்தை பாதிக்கும். தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு பிரதான காரணமே காஃபி உட்கொள்வதுதான் என்றால் நம்புவது கடினமாகத்தானே இருக்கும். 

இரண்டு முறை பெரிய கப்பில் கால் லிட்டர் காஃபியைக் குடிப்பதைக் காட்டிலும், சிறிய கப்பில் மூன்று முறை குடிப்பது நல்லது. சரியாக காலை பத்து மணிக்கு ஒரு காஃபி பிறகு மதியம் இரண்டு மணிக்கு ஒரு காஃபி என்று ஒரே அடியாக மாறவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவருக்கும் காஃபியின் பாதிப்பு அவரவர் உடலுக்கேற்ப வேறுபடும். எனவே உங்களுக்கு எப்போது சோர்வு ஏற்படுகிறது என்பதைக்கவனித்து காஃபியை உட்கொள்வது சிறந்தது. அதே நேரத்தில் சோர்வுற்று தூங்கி விழும்வரை காத்திருக்கக்கூடாது. ஏனென்றால் அடினோசைனால் உறங்கிய மூளையை கஃபீனைக்கொண்டு எழுப்பி வேலை செய்ய சொல்வது நீண்ட நேர புத்துணர்வைத் தராது. மாறாக தூக்கம் வரும் சமிக்ஞைகள் தெரிந்தவுடனே காஃபியை உட்கொள்வது நல்ல நீண்ட புத்துணர்வைத் தரும். 

எனவே இயல்பாக அவ்வப்போது காஃபி குடிப்பதை நிறுத்திவிட்டு நிதானமாக யோசித்து எப்போது காஃபி உட்கொள்ள வேண்டும் என்ற தெளிவுடன் இருங்கள். காஃபி அடிக்ட் என்பதை விட ஹெல்த் அடிக்ட் என்பது பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

மேலும் காஃபி குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ள ரியன் ப்ரெளன் (Ryan Brown) என்பவர் காஃபி மீது கொண்ட ஆர்வத்தினால், காஃபி குறித்த தகவல்களை உலகம் முழுவதும் பயனித்து சேகரித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். புத்தகத்தின் பெயர் Dear Coffee Buyer. இதை நீங்கள் காஃபீ குடித்துக்கொண்டேகூட படித்து பயன்பெறலாம். 

வா. சூர்யதேவன்

ஒரு காதல் வந்தால் போகாது! அது போனால் குற்றம் ஆகாது! – Modern Love Chennai

யாயும் ஞாயும் டைட்டில் பாடலில் இருந்தே தொடங்குவோம். யுகபாரதி எழுதி, ஷிவானி பண்ணீர்செல்வம் பாடி, யுவன் அமைத்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை.

ப்ரைம் வீடியோவில் மே 18ல் வெளியான இந்த ஆந்தாலஜி வகை வெப் சீரிஸ், காதல் என்ற ஒற்றைப் புள்ளியை வைத்து ஆறு கதைகள் வரையப்பட்டிருந்தாலும், வழக்கத்தில் இருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசமான தொகுப்பாக இருக்கிறது.

முதல் படம்: லாலாகுண்டா பொம்மைகள். ராஜுமுருகனின் வழக்கமான ஸ்டைலில், சமூக அவலங்களை ஆங்காங்கே அடிக்கோடிட்டு காதலோடு பயனிக்க வைத்து இறுதியில் ஒரு குபீர் ட்விஸ்டை கொடுத்துவிட்டார். படம் ஜாலி.

இரண்டாவது படம்: இமைகள். தமிழ் சினிமாவில் மாமாங்கமாக காதலில் வெற்றியடைவதென்பதை திருமணம் செய்து கொள்வதென்று இலக்கணமே வகுத்துவிட்டனர். திருமணத்திற்குப் பிறகும் எப்படி காதலோடு பயனிப்பது என்பதுகுறித்த படங்கள் மிகமிக சொற்பமாகவே உள்ளன. ஆணோ பெண்ணோ, குறை என்பது யார் ஒருவரிடமும் இருக்கலாம். எந்த ஒரு குறையும், குடும்பத்தில் மகிழ்ச்சியை, அன்பை கெடுத்துவிடாமல் இருக்க வாழ்க்கைத்துணையின் புரிதலும், அக்கறையும் நிறையவே தேவை. இருந்தாலும், இந்தப்படத்தில் மனைவிக்கு ஒரு பிரச்சனை இருக்க, கணவனுக்கு ஒரு தேவை இருக்க, “மனைவி வீணை கற்றுக்கொள்வது அவளக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்ற கவனின் ஐடியாவைக் கேட்டால் ‘அதற்கு இது பதில் இல்லையே’ என்ற வடிவேலு வசனம்தான் வாயில் வருகிறது. மனைவியின் பிரச்சனை தீர்ந்ததா? தெரியவில்லை. கணவன் ஆசைப்பட்டதுபோல மனைவி இன்னொரு குழந்தைக்கு ஒத்துக்கொண்டாளா? தெரியவில்லை. ஒரு இரவு முழுக்க கணவன் யோசித்து எடுத்த முடிவுதான் மனைவி வீணை வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது. அதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறான். படத்தில் வேறு சில பிரச்சனைகளையும் இயக்குநர் காட்டாமல் இல்லை. மனைவிக்கு காலையில் அதிகப்படியான வேலைகள் இருக்கின்றன. ஆனால், கணவன் அதைப்பற்றி கண்டுக்கொள்வதில்லை. இனிமேல் கண்டுகொள்வானா? மனைவிக்கு பார்வை முழுவதுமாக மறைந்துப்போன பிறகு எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? இறுதியில் வீணை வாசித்துவிட்டால் மட்டும் மற்றப் பிரச்சனைகள் சரியாகிவிடுமா? வேலை அதிகமாக இருக்கும் போது, வெளியே சென்று ஒரு டீ தம் போட்டுவிட்டு வருவது போல, அலுப்பு நிறைந்த விருப்பமற்ற வேலை நாட்களின் மத்தியில் வீக்கெண்ட் நண்பர்களுடன் ஒரு பாருக்குச் சென்று பீர் சாப்பிடுவது போல, மனைவிக்கு அவ்வப்போது வீணை வகுப்பும், ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்-ஆ இல்லை ட்ரெக்கா? எனக்கு புரியவில்லை. “வேலை செய்ய கஷ்டமா இருக்கா? புள்ள பெத்துக்க கஷ்டமா இருக்கா?, இந்தா புடி வீணைய, கொஞ்ச நேரம் நோண்டிட்டு வந்து வேலை பாரு, புரியுதா?” என்று தடித்த குரலில் சொல்வதாகவே எனக்கு கேட்கிறது. பேரன்பே பாடல் ஃபேவரிட்.

மூன்றாவது படம்: காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி. பலரைப்போலும் சினிமாக்காதலைப் பார்த்து பார்த்து நிஜ உலகிலும் சினிமாத்தனமான காதலைத் தேடும் ஒரு பெண்ணின் கதை. துள்ளலான ஜாலியான படம். ‘குக்கூனு கூவும் காகம் நீ’ பாடல் செம. படம் முழுக்க ரசித்தேன். அங்கங்க சிரித்தேன். முக்கியமாக, டேட்டிங்க் ஆப் மூலமாக பல ஆண்களை ஒரு ரெஸ்டாரெண்ட்டில் சந்திக்கிறாள். அது ரகளையான சீக்குவன்ஸ். அதில் ஒருவன் கதாசிரியன், சாப்பிட்ட பில்லை நீட்டும்போது அவன் சொல்லுவான், “காதாசிரியருங்க, கததான் வரும். காசு வராது. அவங்ககிட்டயே குடுங்க”. இதைக்கேட்டதும் கனெக்ட் ஆகி யோவ் டைரெக்டரு… யாருயா நீனு தேடிப்பாத்தேன். கிருஷ்ணக்குமார் ராம்குமார். தெரிந்த முகம்தான். படத்தின் இன்னொரு இடத்தில் ஒரு ரோமியோ வருவார், முக்கியமான நேரத்தில், “ஒரு முக்கியமான விசியம் கேட்கனும்‘ என்பான். மல்லிகா, “நான் விர்ஜினானு தெரியனுமா?” என்பாள். ரோமியோ, “ஹே, இதெல்லாம் ஒரு விஷியமா, என்ன பாத்தா உனக்கு எப்டி இருக்கு? நான் ஒன்னும் ஓல்ட் ஃபேஷன் கிடையாது. இது வேற விசியம்.” மல்லிகா, “என்ன விசியம்?” ரோமியோ, “நீங்க என்ன ஆளுங்க?” என்று கேட்பான். புஹாஹா என்று கைத்தட்டி சிரித்துக்கொண்டிருந்தேன். படங்களில் மழையில் நனைந்துகொண்டே நடனமாடுவதை பின்னனி இசையை சேர்த்து செம ரொமான்டிசைஸ் செய்திருப்பார்கள். ஆனால், நிஜத்தில் கொச கொசவென இருக்கும் என்ற கூற்றை ஏற்க மறுப்பாள் மல்லிகா. இறுதியில் வைபவும் மல்லிகாவும் சேர்ந்து மழையில் நனைந்துகொண்டே டேன்ஸ் ஆடும் போது, மழையே பின்னனி இசையாகிப்போனதே காதல். யெஸ், ரொமாண்டிக் லவ் நிஜ உலகில் சாத்தியமே. நமக்குத் தேவை சரியான ஆள் மட்டுமே. அமைந்து விட்டாள், வாழ்வின் பல சீன்கள் பெஸ்ட் ரொமாண்டிக் சீன்ஸ்தான். பிஜிஎம் இல்லாமலே கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி போல காதலாய் சிரிக்கலாம். படத்தில் சரக்கடிக்கும் தம்மடிக்கும் சீன்களை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

நான்காவது படம்: மார்கழி.காதல் காமத்தில் உச்சம் தொடும். காதலின் அதீத வெளிப்பாடே காமம்.” என்பதான போதனைகள்தான், சினிமா முழுக்க நிரம்பிவழிகிறது. மார்கழியில், ஜாஸ்மீனுக்கு காதல் வருவதே மில்டனை தன்னோடு அந்தரங்கமாக கற்பனை செய்து பார்ப்பதிலிருந்துதான். நிதர்சனம் இதுதான். ஒருவரை காமுறுவதாக கற்பனை செய்வதை தடுக்கமுடியாதிருப்பதே காதலின் முதல் அறிகுறி. அப்படி இணை சேருவதை அழகாய் அலங்கரிப்பதும், நியாயப்படுத்துவதும், புனிதப்படுத்த முயற்சிப்பதும், காதல் என்ற சொல்தான். ஹார்மோன்களால் தூண்டப்படுகிறோம். இசையால் இச்சைகளை காதலாக்கி கொண்டாடித் தீர்க்கிறோம். இந்தப்படத்தில் காதல் தோன்றுவதையும் அது இருவருள்ளும் அழகாய் படர்ந்திருப்பதையும் காட்டி இருக்கிறார். இந்தப் படத்தில் காமம் உச்சம் பெருவது காதலில். இளையராஜவின் இசை இன்பத் தேன்.

ஐந்தாவது படம்: பறவைக்கூட்டில் வாழும் மான்கள். ஃபக். ஆண் எவ்வளவு பேராசைக்காரனாக இருக்கிறான். ஒருவளை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகள் பெற்று, வேலைக்கு சென்று வரும் ஒரு ஆணுக்கு தினசரி பயணத்தில் ஒரு பெண் தோழி அமைய, அவளையும் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். தன் முதல் மனைவியை விவாகரத்து செய்ய மனைவியோடே பேசுகிறான். புது காதலியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவள். நான் கலாச்சாரம் பாரம்பரியம் பட்டு சேலை வேட்டி சட்டை என்றெல்லாம் அளக்க மாட்டேன். மனைவியாக வரும் ரேவதி என்பவள் குடும்பத்திற்காக உழைத்து வந்திருக்கிறாள். அவளது குடும்பத்தை எதற்காக அவள் விட்டுக்கொடுக்க வேண்டும்? ரவி’க்கு ரேவதியை பிடிக்காமல் போனதற்காகவா? ரவிக்கு ரோஹினியை பிடித்துப்போனதற்காகவா? ஆண் பொதுவாகவே வெரைட்டியை தேடுபவன். எந்தப் பெண்மீதும் சில நாட்களுக்குப் பிறகு சலுப்பு தட்டுபவன். பெண்கள் விசியம் என்றால், அன்லிமிட்டட் ஆப்ஷன்ஸ் வைத்துக்கொள்ள தயங்காதவன். மனம்போன போக்கில் வாழ்க்கையை செலுத்துவது நிஜத்தில் வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு புரட்டிப்போட்டுவிடும். மனம் என்பது ஒரு குரங்கு போல, கிளைக்கு கிளை மட்டும் அல்ல, மரம் விட்டு மரமும் தாவும். கண்டபடி தாவும்போது நாம்தான் செல்லமாக செருப்பாலடித்து, அன்பாக ஒரு கொட்டு வைத்து, உமிழ்நீரை உமிழ்ந்து ஒரு இடத்தில் உட்கார வைக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு, பெரிய லார்ட்டு போல டயலாக் பேசுவதோ, ஆண் என்ற அகம்பாவத்தில் தான் செய்வதுதான் சரி என்று திரிவதோ அந்த ஆணுக்கே கூட நல்லதற்கில்லை. (டாக்ஸிக் துணையுடன் வாழவேண்டாம். ஆனால், ரேவதி டாக்ஸிக் இல்லை.) ரவி கத்தவில்லை. முறைக்கவில்லை. வற்புருத்தவில்லை. ஆனால், தனக்கு வேண்டும் என்பதை செய்துகொள்கிறான். அதனால் யார் எப்படி பாதிக்கப்பட்டாலும் அவனுக்கு மயிரா போச்சி என்பதாக இருக்கிறான். படத்தின் இறுதியில் வரும் அந்த குட்டிப்பாப்பாவின் நரேஷன் அருமையாக இருந்தது. அதே சமயத்தில் பரிதாபமாகவும் இருந்தது, என்றாவது ஒருநாள் அப்பா, ரோஹினி அம்மா மீது ஆசைப்பட்டே ரேவதி அம்மாவை கழட்டி விட்டார் என்று தெரிய வரும்போது? குழந்தைகளுக்கு அப்போதும் இனிக்குமா? அல்லது அடடா எப்படி நமக்கு வலிக்காமல் அப்பா ஜோடி மாற்றிக் கொண்டார் என்று இனிக்குமா? குறைந்த பட்சம் ரோஹினி மீதான ஆர்வத்தை கள்ளத்தனமாகவே முடித்திருக்கலாம். முடிந்து இருக்கும். அதை குடும்பமாக மாற்ற முயற்சிப்பது ரேவதிக்கு நடக்கும் அநியாயம் இல்லையா? அதை அவளே ஏற்றுக்கொள்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அது அநியாயம்தான். ஆண்களின் பேராசைதான் இது மாதிரியான கதைகளையும் க்ளோரிஃபை செய்யப்பார்ப்பது.

ஆறாவது படம்: நினைவோ ஒரு பறவை. இது தனிப்பதிவாகவே எழுதலாம். பரவாயில்லை இங்கேயே எழுத முயற்சிக்கிறேன். இயக்குநர் தியாகராஜா குமாரராஜா வழக்கம்போல, வாழ்வின் மீதான தத்துவங்கள், தியரிகள், கேள்விகள், பிரபஞ்சம், சொசைட்டி, வரலாறு, கடவுள், ஏலியன், கேவ்மென், பூனைகள், cancer kuchigal என தன் மனதில் இருக்கும் எண்ணங்களை எல்லாம் அழகாக ஒரு ரொமான்டிக் படத்தில் கொட்டி தீர்த்திருக்கிறார். நினைவோ ஒரு பறவை படம், சூப்பர் டீலக்ஸ் படத்தின் spin off. பூனைகள் காணாமல் போவது, கீழ்வீட்டு சேட்டு பொண்ணு, வானத்தில் பறக்கும் தட்டு தென்படுவது, ‘வாழ்வின் இரகசியம்’ என்னும் பிட்டுபடம், என நிறைய ரெபரெண்ஸ்கள் வருகின்றன. காதல் இலக்காவுக்கு வருவோம். பெண்ணின் பெயர் Sam. தமிழில் சம் என்று வாராது. அவள் பெயரை காதலன் K, ஸ்சஅம் என்றே உச்சரிப்பான். இருவரும் செய்யும் காதலே அப்பட்டமான, உன்னதமான காதல் என்பேன். இதில் ஈகோ இல்லை. வன்மம் இல்லை. வஞ்சம் இல்லை. அகம்பாவம் இல்லை. ஆதிக்கம் இல்லை. பேதம் இல்லை. இன்பம் இருக்கிறது. சிரிப்பு இருக்கிறது. உண்மை இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. குழந்தைத்தனம் இருக்கிறது. பைத்தியக்காரத்தனம் இருக்கிறது. ஸ்டுபிடிட்டி இருக்கிறது. அதனாலே இந்தக் காதல் மிகவும் அழகாய் இருக்கிறது. Near perfect காதலாக இருக்கிறது. காமமும் இந்தப்படத்தில் இசைபோல ஒன்றிவிட்டது. “ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும்டா டேய்” என்று ஸ்சஅம் சொல்வதாய் இருக்கட்டும், “கோமாவுக்கு போய் எல்லாம் மறந்தும் நான் உன்னமட்டும்தான ஸ்சஅம் மறக்கல” என்று K சொல்வதாய் இருக்கட்டும், pure ecstasy. ‘தேன் மழையோ’ பாடல் காதுகளுக்கு ஆர்கஸம் என்று சொல்லுவேன், தப்பு தப்பாக கற்பனை செய்ய வேண்டாம். கேட்டுவிட்டு நீங்களும் ஆர்கஸம் அடையுங்கள். ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம்போல இதுவும் கதையை பாதி சொல்லி மீதி சொல்லாமல், நம்மை நமக்கே உண்டான தனித்தனி தியரிகளுடன் திரியவைக்கும்; பறக்க வைக்கும். நினைவோ ஒரு பறவை.

மொத்தத்தில் ‘நினைவோ ஒரு பறவை’ மட்டும் அவுட் ஆஃப் தி பாக்ஸ். எல்லாப்படத்திலுமே பின்னனி சப்தங்கள், இசைகள், குறிப்பிட்டு பாராட்டுமளவிற்கு தூள்கிளப்பி இருக்கிறார்கள்.

சூர்யாவாசு. 3.ஜூன்.2023. மாலை 6.53

Love Today❤️, Breakup Tomorrow💔, 2nd Love Day after Tomorrow❤️‍🩹

உங்களில் பலரும் படத்தைப் பார்த்திருப்பீர்கள். நெட்ஃபிலிக்ஸிலும் காணக்கிடைக்கிறது. படம் ஹிட். ப்ரதீப் ரங்கநாதன் செம நடிப்பு. ரஜினி பாராட்டினார். விஜய் ஃபோன் பண்ணினார். எல்லாம் ஓகே. எனக்கும் சிலபல கேள்விகள் உள்ளன. அதற்கு முன் படம் பேசும் அரசியலுக்கு வருவோம்.

நிகிதாவும் மாமாகுட்டியும் பாண்டிச்சேரியில் ரூம் போட்டிருந்தால்? ? ? ? ?” இதுதான் ப்ரதீப்’களால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத காட்சி. படம் இங்குதான் விறுவிறுப்புடன் வேகமெடுக்கிறது. சொல்லுங்க மாமாகுட்டி பாடலை போட்டு ப்ரதீப் படும் அவஸ்தைகளை துள்ளலாக காட்சிப்படுத்தியுள்ளார். ஏன் நமக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொள்கிறது? விரிவாகப் பார்ப்போம். இது ஒரு டீட்டெயில்டு கட்டுரை. அதனால் பல தலைப்புகள் உள்ளே வரும். பொறுமையாக வாசியுங்கள். Dots will connect.

மோனோகமி (Monogamy)

ஒருவனுக்கு ஒருத்தி என்று எளிமையாக சொல்லலாம். விரிவாக சொல்வதென்றால், ஒருவர் அவரது வாழ்நாளில் ஒரே ஒரு நபருடன் மட்டும் உடலாலும் மனதாலும் இணைந்து வாழ்வது. பறவைகளில் 95 விழுக்காடு மோனோகமி உறவுமுறையை உடையவை. ஆனால் பாலூட்டிகளில் வெறும் 5 விழுக்காடு மட்டுமே மோனோகமி உறவுமுறையை பின்பற்றுபவை. மனிதர்கள் ஏன் மோனோகமி வகையில் வரமாட்டார்கள்? உலகின் பல கலாச்சாரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறை இருந்தாலும் அது சமூகத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிற பறவைகள் போல இயற்கையாகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை நாம் பின்பற்றுவதில்லை. (வாய்ப்பு கிடைக்காத வரை அனைவருமே மோனோகமி எனலாம்.) பறவைகளிலும் socially monogamous என்ற உறவுமுறை இருக்கிறது. அதாவது வாழ்நாள் முழுக்க ஒரு துணையுடன் தான் வாழும். ஆனால் அதற்காக வேறு எந்த துணையையும் இணைசேர அனுமதிக்காது என்றில்லை. வேறு ஒரு பறவையுடன் இணை சேரும் ஆனால் அதுனோடு வாழாது. கூடு கட்டுவது, இறை தேடுவது, முட்டைகளை அடைகாப்பது என எல்லாமும் ஒரு பறவையோடு மட்டும்தான் இருக்கும். serial monogamy என்றொரு உறவுமுறை உள்ளது. ஒரு துணை இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்து விட்டாலோ அதன் பிறகு இன்னொரு துணையுடன் இணை சேர்வது. ஒரு நேரத்தில் ஒரு துணையுடன் மட்டுமே வாழ்வது.

மனிதர்கள் (மோனோகமி) ஒருதார உறவு கொள்பவர்களா?

“சிய்யான் நாலு பொண்டாட்டி கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ள” என்னும் போது அதில் எந்த வார்த்தையும் கசப்பது இல்லை. “ஆயா நாலு புருசன கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காங்க” என்னும் போது எவ்வளவு எதிர்மறை எண்ணங்கள் மனதில் எழுகின்றன. OCDயே தான். இங்கே ஆண்கள் எதிர்பார்ப்பது, நிறுவ நினைப்பது எல்லாமே female monogamy. அதாவது பெண்கள் தன் வாழ்நாளில் ஒருவனுடன் மட்டுமே இணை சேர வேண்டும். ஆண்கள் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் இணைசேரலாம். சிறிது தசாப்தத்திற்கு முன்பு வரை இரண்டு பொண்டாட்டி கலாச்சாரம் சாதாரணமாக இருந்தது. அது ஒரு கெத்து போல கட்டி வாழ்ந்தார்கள். இந்த இரண்டு பொண்டாட்டி, மூன்று பொண்டாட்டி கட்டிக்கொள்வது சாதாரணமாக இருந்ததற்கு சமூகக்காரணங்கள் சில உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு ஊரில் நூறு குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதில் நிச்சயம் பெண் குழந்தைகள்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் உயிரின் தேர்வு அவ்வாறானது. ஒரு உயிர் தனது இனத்தைக் காத்துக்கொள்ள எடுக்கும் தன்னிச்சையான முடிவு அது. உயிர் உருவாகும் போது அது ஆணாக வேண்டுமா அல்லது பெண்ணாக வேண்டுமா என்பது அதுவே எடுத்துக்கொள்ளும் முடிவு. பெரும்பாலும் பெண்ணாகத்தான் முடிவு எடுக்கும். அதற்கான உயிரியல் காரணம் இதோ.

ஒரு ஊரில் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஐந்து ஆண் குழந்தைகளும் ஐந்து பெண் குழந்தைகளும் பிறக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இனப்பெருக்கம் அந்த ஐந்து பெண் குழந்தைகள் மூலமாக மட்டுமே நிகழும். அந்த ஐந்து பெண் குழந்தைகளும் பருவமடைந்தப் பிறகு, குழந்தையை சுமப்பதற்கு தயராகிவிடுகிறார்கள். வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் அந்த ஐந்து பெண்களாலும் பத்து வருடங்களில் ஐம்பது குழந்தைகளைத்தான் பெற்றுதர முடியும். அதுவே ஒன்பது பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தால், பருவமடைந்த பிறகு வருடத்திற்கு ஒன்பது குழந்தைகள் வீதம் பத்து வருடங்களில் தொன்னூறு குழந்தைகளை பெற்று தர இயலும். இந்தக் கணக்கில்தான் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. (சரி நான் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம். கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் உங்களுக்குத்தெரிந்த யாருக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தது, அதில் எத்தனை ஆண் குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள் என்று விரல் விடுங்கள். நிச்சயமாக பெண் குழந்தைகளே அதிகம் பிறந்து இருப்பார்கள்.)

ஆண் குழந்தைகள் குறைந்த விகிதத்தில் பிறக்கின்றன. அதனால் ஆண் குழந்தைகள் அரிதாகப் பார்க்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்டது போல ஒரு ஆண் குழந்தைக்கு ஒன்பது பெண் குழந்தை என்றால் அவர்கள் பருவமடைந்தப் பிறகு ஒரு ஆணுக்கு ஒன்பது பொண்டாட்டி என்பதாகத்தான் ஆகும். பெண்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களுக்கான டிமாண்ட் குறைந்து அவர்கள் மீது ஒரு சலிப்பான எண்ணமும் ஏற்படும். அதனாலேயே பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகம் நிகழ்த்தப்பட்டு வந்தது. பாதுகாப்பு என்பதும் அதிகம் தேவைப்படுகிறது.

தற்போது இருப்பது போல கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அப்போது இல்லை. அதனால், பிறந்த பிறகே ஆணா பெண்ணா என்று தெரியும். பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கலைத்து வந்தனர். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் அரசு ஒரு சட்டத்தை இயற்றி கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிவதை சட்டவிரோதமாக்கியது. நல்ல விசியம்தான். ஆனால் அதே அரசாங்கம், பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை கட்டமைக்கும் நோக்கத்தில் ஏதேனும் செயல்படுகிறதா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும். சில நல்ல மனிதர்களால் பெண்களுக்கு கல்வி உரிமையும், ஓட்டு உரிமையும் கொண்டுவரப்பட்டது ஆறுதலானது. ஆனால், போதுமான பாதுகாப்பு என்பது இன்னும் ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

https://ourworldindata.org/sex-ratio-at-birth

மேலே உள்ள விளக்கப்படத்தில் பார்த்தால் 1950களில், 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் வீதம் பதிவாகியிருக்கும். அந்தக்காலகட்டத்தில் வீட்டுலேயே பிரசவம் நடந்தது அதிகம். எதன் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வந்தன என்று தெரியவில்லை. ஆனால், மருத்துவமனையில் தரவுகள் பதிவுசெய்வது 80, 90களில் இருந்துதான் முழுமையாகக் கொண்டுவரப்பட்டது. இன்று மருத்துவமனையில் மட்டுமே 100 விழுக்காடு பிரசவங்கள் நடைபெறுகின்றன. வீட்டில் மருத்துவர் துணையின்றி பிரசவம் பார்ப்பது குற்றமாகவே கருதப்படுகிறது. அதனால் மேலுள்ள விளக்கப்படத்தின் தரவுகளை இந்தியாவின் 90களில் இருந்து எடுத்துக்கொள்வோம். ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 107ல் இருந்து 110 வரை உயர்ந்திருக்கும். இந்தக்காலகட்டத்தில்தான் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கருகலைப்பு செய்வது அதிகரித்தது. அதைத்தொடர்ந்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்வது சட்டவிரோதம் எனக் கொண்டுவரப்பட்டது. பிறகு ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து தற்போது 107ல் வந்திருக்கிறது. இது இன்னமும் குறையும். நூறு பெண் குழந்தைகளுக்கு நூறுக்கும் குறைவான ஆண் குழந்தைகளே பிறக்கும் நிலை வரும். அப்போது மீண்டும் பெண்களுக்கான டிமேண்ட் குறையும். இதனை அரசு எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்று தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

இதுவரை பெண்களில் நிலை என்ன?

மனிதர்கள் குழுவாக வாழ்ந்து வந்த காலம் தொட்டே பிற இனக்குழுவின் பெண்களை காமத்திற்காக கடத்தி, கொன்று, விற்று, அடிமைப்படுத்தி, கொடுமை படுத்தி, பல இன்னல்களுக்கு ஆளாக்கினர். விளையாடி தீர்த்தனர். பிற இனக்குழு போக, அவரவர் குழுவிலும் தனியாக இருக்கும் பெண்களை ஆண்கள் தனியே விட்டுவைப்பதில்லை. ஆகவே பெண்களுக்கான சமூக பாதுகாப்பிற்காக அவளை இரண்டாம் தாரமாகவாவது ஒரு ஆணுக்கு கட்டி வைத்துவிட்டால் அவள் ஒரு ஆணுடைய உடைமை ஆகிவிடுவாள். வேற்று ஆண்கள் யாரும் அவளை சீண்ட மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்தனர். அவளை கட்டிக்கொண்டவன் அவளுக்கு வாழ்க்கை கொடுத்தது போல் உணர்வான். உணர்ந்தான். அவளைத் தன் உடமைப் போல நடத்தினான். உடமை என்ன உடமை, அடிமைதான். அதன் நீட்சியே பெண்களை குறிக்கும் போது அஃறிணையில் சாடுவது அம்மா வந்திச்சி, அக்கா சொன்னிச்சி, என்பதெல்லாம் இன்றும் தொடர்கிறது. இந்த பெண்ணடிமைத்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அது எப்படி அமைந்தது என்று விளக்குகிறேன் அவ்வளவுதான். பெண்களுக்கு சம்பாதித்து போடுவதாலும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாலுமே அவளை தன் அடிமையாகப்பார்த்தான். அவளை பிற ஆண்கள் தீண்டாதவாறு பார்த்துக்கொள்வான். ஒரு நிலத்தை, பொருளை பாதுகாப்பது போல தன் மனைவிகளையும் பாதுகாத்து வருவான். இந்நிலையில் தன் மனைவி இன்னொருவனுடன் தொடர்பில் இருக்கிறாள் என்பதை எந்தக்கணவனாலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. தான் பராமரிக்கும் ஒரு பொருளை இன்னொருவன் அனுபவிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள் அல்லவா? சமூகத்தில் கள்ளத்தொடர்பு என்பது எந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது என்பதை தினசரி நாளிதழ் வாசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். தினசரி ஒரு செய்தியாவது கள்ளத்தொடர்பு சம்மந்தப்பட்ட குற்றங்களில் நடந்திருக்கும். கள்ளத்தொடர்பு ஏற்படுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது கொலையிலோ, தற்கொலையிலோ, கொலை முயற்சியிலோ, தற்கொலை முயற்சியிலோ சென்று முடிவதன் காரணம் பெண்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் ‘பத்னி’ என்ற கூற்றுதான்.

வேற்று ஆள் தன்னுடைய மனைவியை புணர்ந்துவிட்டால் தன் மனைவிமீது வரும் அருவருப்பு, மாற்றான் மனைவியை தான் புணரும்போது தன்மீதோ அந்தப் பெண்மீதோ (புணரும் வரை) வருவதில்லை.

இது போக தன் மனைவியுடன் உறவுகொண்டு அதன்வழி வரும் குழந்தையையும் ஒரு பிண்டமாகவே பார்த்து வந்தான். பத்து பதினைந்து குழந்தைகள் இருக்கும்போது, அனைவரின் மீதும் அளவுகடந்த பாசம் வருவதில்லை. அந்த வாரிசுகளையும் ஒரு சுமையாகவே எண்ணுவர். இப்படி இருக்கும்போது அந்தப்பிள்ளைகளில் யாரேனும் தன்னுடைய வாரிசு இல்லை என்பது தெரியவந்தால்? யாருடைய வாரிசுக்கு நான் உழைத்துக்கொட்டுவது என்ற கோபமும் வரும்.

இப்படி இருக்க, பெண்களுக்கு மாப்பிளை கிடைப்பது அரிதாகி கிடைத்த மாப்பிளையின் கையில் பெண் பிள்ளைகளை பிடித்துக்கொடுப்பதற்கு பெண்ணுடன் சேர்த்து பணம், தங்கம், பொருள், காடு, மாடு, சொத்து, எல்லாத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது. ஆண் பிள்ளைகளின் மீதான மோகத்திற்கு இதுவும் ஒரு காரணம். வரதட்சனையாக ஒரு புடி புடித்துவிடலாம். நான்கு பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு நகை போட்டு கட்டிக்கொடுப்பதே வாழ்நாள் சாதனையாகும்.

பெண் குழந்தைகளை வளர்த்து கட்டிக்கொடுப்பது சவாலான அந்தக் காலத்தில் ஐந்து பெண்குழந்தைகள் பிறந்த வீட்டில் ஆறாவதும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதனை கள்ளிப்பால் ஊற்றிக்கொன்று விடுவர். இதற்கு பிஜிஎம் போட்டு ஹாரிஃபை பண்ண வேண்டாம். நானும் க்ளோரிஃபை பண்ணப்போவதில்லை. வத வதவென பிள்ளைகளை பெற்று தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறத்தல் என்பது மிக சாதாரண விசயமாக இருந்தது. பத்துப் பதினைந்து பிள்ளைகளில் ஒன்று இரண்டு தவறி விடுவதே சாதாரணமாக நிகழும் ஒன்றுதான். ஆதலால், பெண் சிசுக் கொலை என்பது தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. குழந்தையை கொல்வது பாவம் என்று தோன்றாதா? தோன்றாது! பிழைக்க வழியில்லாத இந்த உலகில் இன்னொரு உயிரையும் தன் விருப்பத்திற்கு கொண்டுவந்து கொடுமைகளுக்கு ஆளாக்குவதற்கு பதில் அதை இறக்கச் செய்வதே மேல் என்றும், தனக்கு மேலும் மேலும் சுமைகள் வேண்டாம் என்றும் கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றுவிடுவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் எந்தக் கவலையும் இல்லை. அதுவே இருப்பதை உண்டு வளர்ந்து, கிடைக்கும் வேலைய செய்து பிழைத்துக்கொள்ளும். இதனால்தான் எல்லாருக்கும் ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று ஆசை. சற்று கவலையின்றி இருக்கலாம்.

சரி இவையெல்லாம் அந்தக்காலம். தற்போது? பெண்கள் அவர்களை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். தன் பெற்றோர்களையும் சேர்த்து பார்த்துக்கொள்கிறார்கள். சிங்கில் மதர் என்று தானே பிள்ளையை வளர்க்கிறார்கள். பல நிறுவனங்களை உருவாக்கி நடத்துகிறார்கள். நாடாளுகிறார்கள். சிகரம் தொட்டு நிற்கிறார்கள். ஆனாலும், இன்னமும் சமூக பாதுகாப்பிற்காக ஒரு ஆணின் நிழலில் நிற்க வேண்டிய கதிதான் தொடர்கிறது. ஏனென்றால் எவனும் பட்டா போடவில்லை என்றால் தற்காலிகமாக நாம் கொட்டா போட்டுக்கொள்ளலாம் என்ற துடிப்பு ஒவ்வொரு ஆணிடமும் இருக்கிறது. யாருக்கும் சொந்தமில்லாத ஒரு பொருளை சிறிதுகாலம் தான் அனுபவித்துக்கொள்ளலாம் என்றுதான் எண்ணுவார்கள். காலத்திற்கும் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பமாட்டாரகள். இதெல்லாம் பெண்களுக்கும் ஆரம்பத்தில் புரியாது. சற்று லேட்டாகத்தான் புரியும்.

வரலாற்றில் ஆண்கள் எப்போதும் ஒரு தார உறவுமுறையில் வாழ்ந்ததில்லை. ஆனால், பெண்களை ஒரு தார உறவு முறையில் நிற்கவைக்க அனைத்து விதிகளையும் வகுத்து வந்துள்ளான். பத்தினி, கன்னி, சுமங்கலி, விதவை/கைம்பெண், தேவிடியா, ஐடம், மேட்டர், கேஸு, என்று எல்லா வார்த்தைகளும் ஒரு பெண்ணை பல ஆண்களுடன் பழகுவதைத் தடுக்கத்தான். ஆண்களுக்கு பெண்களின் மீது அக்கறை எல்லாம் இல்லை. இத்தனை விதிகளைப்போட்டு பாதுகாக்க. ஒரு ஆண் இன்னொரு ஆணிடமிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். அந்த ஆண் பிற ஆண்களிடம் இருந்து அதே பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். ஆக மொத்தம் திருடனும் கணவனும் ஆண்கள்தான். பலியாடு மட்டுமே பெண்கள்.

சமகாலக காதலி(யி)ன் கதி என்ன?

சமகாலத்தில் காதல், கல்யாணம், ரிலேசன்ஷிப் எல்லாம் எப்படி என்பது உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், அதன் சிக்கல்களை புரிந்து கொள்வதற்கு மேலே குறிப்பிட்ட விசியங்களை இவ்வளவு ரீவைண்ட் செய்ய வேண்டியுள்ளது. பையனோ பொண்ணோ நிறைய நபர்களுடன் பேசிப்பழக வேண்டும். கேரக்டர்கள் பலவிதம் உண்டு. அவர்களை படிப்பதன் மூலமாகவே வாழ்க்கையை கற்றுக்கொள்ள முடியும். ஒரு கேவலமான பிறவியையாவது சந்தித்து அதனுடன் ஓராண்டாவது வாழ்ந்துவிடுவீர்கள். அதன்பிறகு வாழ்க்கையில் நீங்கள் ஒரு கேவலமான செயலையும் சுயநினைவுடன் செய்ய மாட்டீர்கள்.

சரி பழகும் அத்தனை பேரையும் லவ்வர் என்று சொல்லிவிடலாமா? பெண்களுக்கு அப்படி சொல்ல விருப்பமில்லை என்றாலும், ஆண்களின் கொக்கியே ‘ஐ லவ் யு சொல்லு’, ‘லவ் பண்றன்னு சொல்லு’, ‘ஓகே சொல்லு’ என்பதாகத்தான் இருக்கிறது. அதாவது ஒருவனை முழுதாக தெரிந்துகொள்ளும் முன்பே கமிட்மெண்ட்டை கொடுக்க சொல்லி அடம்பிடிப்பது. “ஓய் செல்ஃபி எனக்கு எப்போ ஓகே சொல்ல போற?” என்று பின்னாடியே சுத்துவார்கள். எஸ்.கே ரசிகைகளும் ‘அவன் என்னை தொரத்தி தொரத்தி லவ் பண்ணினான் அதான் ஓகே சொன்னேன்’ என்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளவார்கள். உண்மையில் பையனோ பொண்ணோ ஒருவர் “சுத்த லூசு, மெண்டல், சைக்கோ” என என்று தெரிகிறதோ, அன்று முதல் அவனோ அவளோ எக்ஸ் (Ex) ஆகிவிடுகிறார்கள். பிறகு மீண்டும் ஜோடி தேடும் காட்சிகள் தொடரும். இது ஒரு லூப் போல போயிக் கொண்டே இருக்கும்.

சினிமாவில் பையனும் பொண்ணும் காதலிக்காமல், காதல், லவ் என்ற வார்த்தை இல்லாமல் பழகுவது போன்ற காட்சிகளோ, பாடல்களோ ரெஃபரென்ஸாகக்கூட இல்லை என்றே எண்ணுகிறேன். ( ஆட்டோகிராஃப் படத்தில் சேரனும் ஸ்னேகாவும் நண்பர்களாக இருப்பார்கள். குலு குலு படத்தின் அன்பரே பாடல் மட்டுமே ஞாபகத்திற்கு வருகிறது). அதனாலே ஒரு பெண் தன்னிடம் பேசினாலே லவ் என்று கற்பனை கட்டிக்கொள்கிறார்கள். காதலின்றி ஆணும் பெண்ணும் பழகுவது எவ்வளவு அழகானது என்று யார் இவர்களுக்கு சொல்லித்தருவது?

பள்ளி, கல்லூரி, அலுவலகம், தெரு, ஊர், பஸ், ட்ரெயின், மால், பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டா, ட்விட்டர், ஸ்னாப்ச்சேட், டெலிக்ராம், டிண்டர், அன்பே, டன் டன், இத்யாதி இத்யாதி இடங்களிலும் தளங்களிலும் ஆண்கள் பெண்களைத் துரத்திக்கொண்டுதான் இருப்பார்கள். பெண்கள் யாரிடமும் சிக்காமல் தப்பி வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலகீனமான இடம், காலம், சூழல், வார்த்தை, பாடல், பெயர் என்று எப்படியும் இருக்கும் அல்லவா? அதில் சிக்கிவிடுவார்கள். ஆண்களும் லேசுபட்ட ஜீவன்கள் இல்லை. பெரும்பாலும் பெண்கள் எளிதில் சிக்கிக் கொள்வர்.

ஒரு பையனை பிடிக்கும் என்பதற்கும் அவனோடு வாழவேண்டும் என்பதற்குமான இடைவெளி பெண்களின் பார்வையில் மைல் தூரமிருக்கும். ஆண்களின் பார்வையில் அது மயிர் தூரத்தில்கூட இல்லை. பிடித்துவிட்டால் வேறென்ன? வாழந்துவிட வேண்டியதுதானே என்பதாகத்தான் இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொண்டு வாழும் அளவிற்கு தான் என்ன தகுதியுடன் வாழ்கிறோம் என்பதையெல்லாம் சிறிதும் யோசிக்க மாட்டார்கள். படங்களில் வரும் காதல் காட்சிகளை மனதில் ஊறப்போட்டு அதன் பாதிப்பில் காதலித்தவர்கள்தான் இங்கு ஏறாளம். உண்மையில் ஒரு நபரின் மீது நல்ல எண்ணம் தோன்றி, அவரை வாழ்நாளில் தவறவிடக்கூடாது என்று உணர்ந்து, அவருக்கும் தன்மீது அதே எண்ணம் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தி, பிறகு காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ அரிதிலும் அரிதாகவே நடக்கிறது. சினிமாத்தனம் கலக்காத காதல் எங்கேனும் உண்டா என்ன?

Chatbox📱

மெசேஜ் செய்யும் போது ஒரு தைரியம் வரும். ரியால்டியில் அது வராது. மெசேஜ் செய்யும் போது ஒரு ஸ்பரிசம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான ஸ்பரிசம் வரும்.) மெசேஜ் செய்யும் போது ஒரு கோபம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான கோபம் வரும்.) ஏனென்றால் ச்சேட்டிங்கில் நாம் பேசுவது, பதில் வருவது எல்லாம் நம் மூளைக்குள் கற்பனையாக மறு உருவாக்கம் செய்யப்படுவது. அதனை நம் மூளை மிகைப்படுத்திக் கொண்டே வரும். communication என்பது முகபாவனை, வார்த்தையின் உச்சரிப்பு, வார்த்தை பயன்பாடு என எல்லாமும் சேர்ந்தது. இதில் வெறும் வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு நம் மூளை அதற்கு கற்பனையாக ஒரு முகபாவனையையும், உச்சரிப்பு தொனியையும் உருவாக்கும் பொழுது மறுமுனையில் இருந்து பேசுபவர் சொல்ல வருவதில் 50% விழுக்காடு நாம் தவறாகத்தான் உள்வாங்கிக்கொள்வோம். உதாரணமாக நீங்கள் சமீபத்தில் சேட்டிங்க் செய்தபோது, “I mean…” என்று நீங்களோ மற்றவரோ முன்பு சொன்னதையே நிச்சயம் விளக்கிக்கூற வேண்டிய சூழல் வந்திருக்கும். நேரில் பேசும்போது ஏற்படும் communication gaps மிகக்குறைவாக இருக்கும். சேட்டிங்கில் குழப்பம் இல்லாமல் இருக்காது. ரிலேஷன்சிப்பும் இப்படித்தான். மிக எளிதாக தவறாக உள்வாங்கிக்கொள்ளப்படும். ‘I feel low today 😞’ என்று ஒருவர் மெசேஜ் செய்தால் உடனே நாம் ஒரு 🥸 motivational speaker 🫵🏻 ஆகி சொற்பொழிவை நிகழ்த்த ஆரம்பித்துவிடுவோம். எதிரில் இருப்பவர் ‘hey tk it ez 🤪. Im alryt . Im jst not feel g8 2day. But thats 5n. Chill 🙃’ என்று சொல்வதற்குள் நாம் நிறைய பேசிருப்போம். இதுதான் சேட்பாக்ஸின் மிகப்பெரிய பிரச்சனை. ஒரு ஸ்மைலியும் ஓரிரு வார்த்தையும் நாம் நினைப்பதை அவ்வாறே மறுபக்கத்தில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்காது. மாறாக அவர் புரிந்துகொள்ளும்போது அது நாம் சொல்லிய விசியத்தின் அளவை, தன்மையை, அழுத்தத்தை கூட்டியோ குறைத்தோதான் வெளிப்படுத்தும்.

இது போக ஒருவரிடம் மெசேஜ்ஜில் பேசுவதற்கும் நேரில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் வரும். மெசேஜ்ஜில் பேசுவதை வைத்து ஒருவரின் குணங்களை எடைப்போடுவது, நல்லவர் வல்லவர் என நம்புவது நன்றல்லது. அப்படி பேசுபவர்களை மெசேஜ்ஜுடன் வைத்துக்கொள்வதே நன்று. நேரில் சந்திப்பதோ, வீட்டிற்கு அழைப்பதோ, பணம் அனுப்புவதோ, பாஸ்வேர்ட் கொடுப்பதோ, எல்லாமும் ரிஸ்க் நிறைந்ததுதான்.

மெளனம்

சமூக வலைதளங்களில் நண்பராகும் பலரும் சில காலம் நெருக்கமாக பேசிக்கொள்வர். யாரு என்ன என்பது போன்ற விசியங்களை பரிமாரிக்கொள்வர். பிறகு அந்த பேச்சுக்கள் அப்படியே நீர்த்துப்போகும். இது மிக மிக சாதாரணமான ஒன்று. மேலும் ஆன்லைனில் இருக்கும் நபர் நம்முடன் பேசவில்லை என்றால் அதற்கு ஆயிரம் இல்லை பத்தாயிரம் காரணம் இருக்கலாம். அதில் முதல் காரணம், நம்முடன் பேசுவது மட்டுமே அவருக்கு வேலை இல்லை என்பதுதான். நம்மைத் தவிற மற்ற தலைவலிகளும் அவருக்கு இருக்கக்கூடும் அல்லவா? இந்த யதார்த்தத்தைக்கூடப் புரிந்து கொள்ள நம் மூளை மறுக்கும். காரணம் அது கற்பனையில் ஒருவரை உருவாக்கியுள்ளது. நம் மூளை அவருக்கு ஒரு சராசரி மனிதர் செய்யும் வேலைகளை கற்பனைகூட செய்து பார்க்காது. சமீபத்தில் ஒரு வாக்கியம் படித்தேன். ‘People are not rude. They are just busy’. எவ்வளவு உண்மை இது. எதையும் சிந்திக்காமல் “reply me, reply pannu, saaptiya, enna panra, yen pesa matra, ennaachi, en mela kovama?, naan ethum thappa pesitana, antha msg nan pannala, awlothana?” என்று ஐம்பது நூறு மெசேஜ்களை அனுப்பித் தள்ளுவான். சனியன் இம்சகட்றானே என்று ப்ளாக் செய்தால், இன்னொரு ஐ.டி. ஓபன் பண்ணி மாறு வேடத்தில் வந்து உயிரெடுப்பான். மாப்ளைக்கு அவ்வளவு வெறி.

பெண்கள் பத்தினியாக இருக்க வேண்டுமா? வேண்டாமா?

இந்த விஷயத்தில் ஆண்களில் இரண்டு பிரிவினர் என் கண்களுக்குப் புலப்படுகிறார்கள்.

முதல் வகையினர், போலி புரட்சியாளர்கள். ‘பெண்கள் யாருடன் வேண்டுமனாலும் உறவு வைத்துக்கொள்ளட்டும்’, ‘அவள் உடல் அவளது சுதந்திரம்’, ‘உடலைப் பகிர்வதும் விற்பதும் அவளது உரிமை’, என்றெல்லாம் பெண்களின் சுதந்திரத்தை அவளது உடலைக் குறித்தே முன்வைப்பார்கள். இவர்கள் யாரும் பெண்களுக்கு காவலர்கள் இல்லை. காசு கொடுத்தால் பெண்கள் கிடைப்பார்கள் என்ற சூழல் வரும் போது, பெண்களின் உடலை காசு கொடுத்து அனுபவித்துக்கொள்ளலாம் என்ற பேரன்பு கொண்டவர்கள். பாவம் காசு சம்பாதிக்க பெண்கள் ஏன் படித்து வேலைக்குச் சென்று உழைக்க வேண்டும்? உடலை விற்றாலே காசு வரும் என்றால் இவர்களின் வாழ்க்கை சற்று சுலபம்தானே. பெண்கள் ‘தான் ஒருவனுடந்தான் வாழ்வேன், அந்த ஒருவனுடன் தான் புணர்வேன்’ என்பது இவ்வகை ஆண்களுக்கு மிகவும் கசக்கும். எனவே அதை பழமைவாதம் என்றும், பெண்ணடிமைத்தனம் என்றும் பெரியாருக்கே லெக்சர் எடுப்பதுபோல பேசுவார்கள். பெண்களின் மோனோகமியை எதிர்ப்பவர்கள். புரட்சியாளர்கள் போல் வேடமிடும் இவ்வகை ஆண்களுக்கு பெண்களின் மீது அளவற்ற அன்பொன்றும் இல்லை. அடக்கமுடியாத ஆசைதான் அவர்களை அப்படி பேச வைக்கிறது. இந்தக்கசாப்புக் கடைக்காரர்களிடமும் ஆடுகள் தானாக வந்து சிக்காமலில்லை.

இரண்டாம் வகையினர், கலாச்சாரக் காவலர்கள். பெண்களை பத்தினியாகத்தான் இருக்கவேண்டும் என்று நிர்பந்திப்பவர்கள். அதன் காரணமாக பெண்களை யாருடனும் பழக அனுமதிக்க மாட்டார்கள். வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பெண்களின் வாழ்க்கையில் கல்யாணமும் குழந்தையை வளர்ப்பதும் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் ஊறியவர்கள். சமூகத்திலும் இதனையே முன் வைப்பார்கள். கலாச்சாரம், பண்பாடு, மதநெறிகள், குடும்ப மானம், கெளரவம், வம்ச வீரம், என சகலத்தையும் துணைக்கு வைத்துக்கொள்வார்கள். பெண்களின் நலனில் அக்கரை காட்டுவதாக சொல்லிக்கொண்டு அவர்களின் சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி பெண்களுக்கென்று சொல்லி ஒரு மிருதுவான மெத்தை செய்து அதில் இவர்களும் படுத்து அதே பெண்களை புணர்வார்கள். கன்னித்தன்மையின் மீது ஆண்கள் அடுக்கும் இந்த எண்ணற்ற கூற்றுகள் யாவும் ஆண்களுக்கு பொருந்தாது இருப்பதுதான் ஆச்சர்யம். இவர்களின் முழு நோக்கமும், ஒரு பெண் திருமணம் வரை கன்னித்தன்மையோடும் திருமணத்திற்குப் பிறகு பத்தினியாகவும் இருந்துவிட்டால் போதும், ‘அவள் படித்து என்ன சாதிக்கப்போகிறாள்?’, ‘வேலைக்கு சென்று யாரைக்காப்பாற்றப் போகிறாள்?’, என்ற கீழ்நிலையிலே சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள். பெண்களை ஆட்டிவைக்கவும் இந்தக்கூற்றுகள் வசதியாக இருக்கின்றன. மற்றவருடன் பழகுவதையே விரும்பாத பொசசிவ் பேர்வழிகளுடன் காலந்தள்ளுவது சற்று கடினமான விசயம்தான். ஆனால், மற்றவருடன் பேசுவதை பழகுவதை நம்பி அனுமதிக்கும் அளவிற்கு யாரும் யோக்கியஸ்தன் இல்லை என்பது பெண்களுக்கும் நன்கு தெரியும். (அத்துமீறுவது ஆண்கள் மட்டும்தான் என்ற முடிவிற்கு நான் வரவில்லை. அதுதான் உண்மை. பெரும்பாலான தருணங்களில் ஆண்கள்தான் அத்துமீறுகிறார்கள். பெண்களும் ஆங்காங்கே ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக விதவிதமாக கள்ளத்தொடர்பில் தூள் கிளப்பி வருகிறார்கள்.)

இருவகையினருமே பெண்கள் ஏன் கன்னித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்கிற அடிப்படையை புரிந்துக்கொள்ளாதவர்கள்.

ஒன்று சமூகக்காரணம். மனிதன் ஒரு சமூக விலங்கு. அவன் தனியே வாழ்பவன் அல்ல. குடும்பமாகவும் சமூகமாகவும் உறவாடுவதிலேயே மனதில் அமைதியைக் காண்பவன். பெண்ணுக்கும் அதேதான். பிற மனிதர்களிடம் பேசி உறவாடுவதிலே தன்னை அறிந்துக்கொள்ளக்கூடியவர்கள். ஒரு ஆணும் பெண்ணும் முறையே ஒருவருக்கு ஒருவர் உண்மையாக குடும்பமாக வாழவில்லை என்றால் அவர்களது குடும்பத்திற்கு சமூகத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காது. இதில் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமல்ல, அவர்களது வழிவந்த குழந்தைகளும்தான். சுற்றம் யாவும் கீழாக நடத்தும் சூழ்நிலையில் வளரும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது ஆணும் பெண்ணும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை பின்பற்ற வேண்டும். (சைக்கோ, டாக்ஸிக், சந்தேகப்பேர்வழி, துணையுடன் வாழவேண்டும் என்றில்லை. நல்ல குடும்ப உறவில் இருக்கும் போது மனசஞ்சலங்களை தவிர்க்கவேண்டும் என்கிறேன்.)

மற்றொன்று உயிரியல் காரணம். இரு உயிர் சேர்ந்து மூன்றாவதாக ஒரு உயிரை உருவாக்குவதே உடலுறவு. இன்னொரு உயிரை இப்பூமிக்கு கொண்டுவருபவர்கள், அவ்வுயிரை தன்னால் இயன்றவரை துயரத்தில் இருந்தும் ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றி ஆளாக்கிவிட வேண்டும். ஒரு பெண் பல ஆண்களுடன் உறவில் இருந்துவந்தால் அவளால் ஒரு அழகான, லட்சனமான குழந்தையை பெற்றெடுக்க இயலாது. உடலுறவு முதல் கருவுற்று பிரசவித்து தாய்பாலூட்டி வளர்க்கும் வரை ஒரு பெண் எந்த மனநிலையில் இருக்கிறாளோ அதுதான் குழந்தையின் குணமாக மாறும். உதாரணத்திற்கு ஒரு பெண் தான் உடலுறவு கொண்டது முதல் பேறு காலம் வரை கொடுமைகளுக்கு ஆளாகாமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்து வருகிறாள் என்றால் அவளது குழந்தை அழகாகவும் லட்சனமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். இதுவே அவளை பல கொடுமைகளுக்கு ஆளாக்கி, துன்புறுத்தி, அல்லது அவளே பெரும் குழப்பத்திலும் மனம் போன போக்கிலும் வாழ்கிறாள், குழந்தையை ஒரு சுமையாக எண்ணுகிறாள் என்றால் அந்தக்குழந்தை அவலட்சனமாகவும், விகாரமாகவும், குறைபாடுகளுடனும் பிறக்கும். ஒரு உயிர் உருவாகும் போது அதை சுமக்கும் உயிரும் உடலும் மனதும் இன்புற்றிருக்க வேண்டும். குழப்பத்திலும், விரக்தியிலும், துயரத்திலும் பிறத்தல் நன்றன்று.

அப்படியானால், பெண்கள் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் புணர்ந்துக்கொண்டு, திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆணுடன் மட்டும் வாழ்ந்து நல்லபடியாக குழந்தைய பெற்றுக்கொண்டு. பிறகு மீண்டும் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாமா என்று கேட்கலாம். அதுதான் இல்லை. ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால் அதில் அனைவருமே புத்திசாலியாக இருப்பது அரிதே. முதல் குழந்தை அறிவாளியாக இருக்கும், இரண்டாவது குழந்தை சற்று மந்தமாக இருக்கும். அல்லது முதல் குழந்தை மந்தமாக இருக்கும், இரண்டாவது குழந்தை புத்திசாலியாக இருக்கும். இதற்குக் காரணம் பெற்றோர்களின் மனநிலையே. முதல் கர்ப்பம் திருமணம் முடிந்த முதல் வருடமே ஏற்படும்போது, பெண்ணுக்கு கணவனின் குடும்பம், இல்லற வாழ்க்கை எல்லாம் புதிதாக இருக்கும். கொடுமைகார ஆட்கள் இல்லை என்றால், கர்பகாலம் இனிமையாக அமையும், குழந்தையும் ஆரோக்யமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். பிறகு கனவன் மனைவி சண்டைகள் ஆரம்பித்து முத்தி, வாழ்க்கையை வெறுத்து, குழந்தையை வளர்க்கும் பாரம் தெரிந்தப்பிறகு ஒரு கர்ப்பம் நிகழும்பொழுது, முதல் குழந்தைக்கு இருந்த அதே ஆர்வமும் குதூகலமும் இரண்டாவது குழந்தைக்கு இருக்காது. எனவே இரண்டாவது குழந்தை சற்று புத்திக்கூர்மை குறைவாகப் பிறக்கும். பலதார உறவுகளில் எந்த மனக்குழப்பமும் இருக்காது என்று யார் உத்தரவாதம் தரமுடியும்? இந்த வாதங்கள் ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். நம் மன ஓட்டங்கள் நாளுக்கு நாள் மாறும், அந்தப்பொழுதில் ஒரு குழந்தை உருவாகும் போது அது அந்த குணங்களுடனே பிறக்கும்.

கன்னித்தன்மையுடனும் பத்தினியாகவும் இருப்பது ஒரு பொறுப்பு. அதன் அர்த்தமறிந்து பின்விளைவுகளைப் புரிந்து அந்தப்பொறுப்புகளை ஏற்க வேண்டும். ஆண்கள் வரைவதற்காகவே எந்தக்கோட்டையும் தாண்டாமல் இருக்கவேண்டிய அவசியமில்லை. வரைமுறைகளின் அர்த்தமறிந்து அதனை ஏற்றுக்கொண்டால் போதுமானது.

ப்ரதீப் காட்சிப்படுத்தும் (நிகிதா) பெண்கள்

நிகிதா ரெவியை தம்பி என்றுதான் அறிமுகப்படுத்தினாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவளே பின் அதை மாற்றிப்பேசுவதாக காட்சி அமைத்திருக்கிறார் திரு.உத்தமன் ப்ரதீப். நம் மூளை நாம் பேசுவதை அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. சிலசில வார்த்தைகள் எண்கள் இடங்கள் அளவுகளை நம் மூளை தவறாகத்தான் பதிவேற்றிக்கொள்ளும். அது நாம் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம் அல்லது பிறர் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இதை நிகிதாவின் கேரக்டரை டேமேஜ் செய்வதாக, அவள் பச்சையாக பொய் சொல்கிறாள் என்று காட்சி அமைத்துள்ளார் உத்தமன் ப்ரதீப்.

சொல்லுங்க மாமாகுட்டிக்கு துள்ளலாக பாடல் அமைத்த திரு.உத்தமன் ப்ரதீப்களால், ட்ரைபல் ஃபோட்டோஸ் கேட்டு அலைந்ததற்கு ஒரு பாட்டுகூட போடமுடியாமல் போனதுதான் ஆச்சர்யமே. நிகிதாவின் இன்ஸ்டாகிராமில் இருக்கும் மெசேஜ்களை படிக்கும்போது வரும் விஷுவலில் பல ஆண்களை காட்டி இருப்பார் உத்தமன் ப்ரதீப். சாப்டியா, சாப்டியா, சாப்டியா என என்னேரமும் அக்கரைக்கொள்ளும் ஆண்கள் முதல், கெளதம் வாசுதேவ் மேனன் பானியில் வரும் போலி இன்டெலக்சுவல் உமனைசர் வரை மிக நேர்த்தியாக காட்சி அமைத்த உத்தமன் ப்ரதீப்பும் அவர்களில் ஒருவர்தான். பலருக்கும் கொக்கி போட்டு வைத்திருப்பவர். மற்ற ஆண்கள் நிகிதாவிடம் நெருங்க முயற்சிப்பது க்ரின்ஜ் என்றால் இவர் மற்ற பெண்களிடம் பழக முயற்சிப்பதற்கு பெயர் என்ன?

நிகிதாவின் ஆபாச வீடியோ வந்தப்பிறகு யாரும் அவளை நம்ப மாட்டர்கள். உத்தமன் ப்ரதீப் மட்டும் அவளை நம்புவான். எப்படி? பாண்டிச்சேரி போய்விட்டு வந்ததையே சந்தேகப்பட்டவன், இப்போது எப்படி வீடியோவைக்கண்டப் பிறகும் நிகிதாவை நம்புகிறான்? மாமரத்தைக் கண்டதாலா? ராதிகா கண்திறந்துவிட்டதாலா? உத்தமன் ப்ரதீப் போன்ற ஆவரேஜ் ஆண்களுக்கு நிகிதாவே அதிகம். அதனால் இவன் பெருந்தன்மையாக நிகிதாவை ஏற்றுக்கொள்ளும்படியான காட்சியமைக்க வேண்டுமானால் அவளை அசிங்கமாகக் காட்ட வேண்டும். அங்குதான் நிகிதாவின் கற்பை துணைக்கு வைத்துக்கொள்கிறார் புத்திசாலி உத்தமன் ப்ரதீப்.

ஆண்களிடம் இருக்கும் காஜி மனப்பான்மையை நார்மலைஸ் செய்வதே தவறு, அதிலும் இறுதிகட்ட காட்சியில் நிகிதாவை அவளது அப்பாவே நம்பாதது போலவும், ஆனால் உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப் அவர்கள் நிகிதாவை நம்புவதாக காட்சி அமைத்திருக்கிறார். ஏன் உத்தமன் ப்ரதீப் அவர்களின் ஆபாச வீடியோ வைரலாகி நிகிதா அதே உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாதா? அப்படி ஒரு காட்சி, ஆம்பள ஐட்டத்தை பெண் ஒருத்தி ஏற்றுக்கொள்வது போல ஒரு காட்சி இருந்திருந்தால் அது அனைவருக்குமே (பெண்கள் உட்பட) உறுத்தும், கசக்கும், உமட்டும், ஒவ்வாது, படம் ஓடாது. ஆனால் கெட்டுப்போனதாக நம்பப்படும் நிகிதாவை ப்ரதீப்கள் நம்புவதாக காட்சி அமைத்தால் படம் ஹிட். பெண்களை மட்டப்படுத்தி ஆண்களை க்ளோரிஃபை செய்யும் ஹிட் ஃபார்முலாவை முன்பு ரஜினி காப்பாற்றி வந்தார், பிறகு விஜய், தனுஷ், சிம்பு, சிவா கார்த்திகேயன், இவர்களின் வரிசையில் தற்போது திரு.உத்தமன் ப்ரதீப் கற்று தேர்ந்து மெரிட்டில் தொழிலுக்கு வந்துள்ளார். இன்னும் நிறைய லெக்சர் ப்ராஜெக்டுகள் இவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். உத்தமன் ப்ரதீப் படத்தில் ஹீரோ, நிஜத்தில் அவர் நல்ல தரமான பிஸ்னஸ்மேன். க்ரியேட்டிவ் பிஸ்னஸ்மேன். நல்லவன் கெட்டவன் என வகைமைக்குள் வராத லாபம் பார்க்கும், வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்ட இண்டெலெக்சுவல் பிஸ்னஸ்மேன்.

கிட்டதட்ட அனைவருமே லவ் டுடேவை ரசித்துக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது எனக்கு மட்டும் இதில் இருக்கும் ஆபத்து கண்ணுக்கு தெரிந்தது. நண்பர்களுடன் கலந்துரையாடும் போது இதில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் என்ஜாய் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. என்னிடம், “ஒரு படத்தை இவ்வளவு சீரியசாக பார்க்காதே, இது வெறும் ஒரு படம்”, “ஏன் ஹுமரெஸ்சாவே பாக்க மாட்ற?”, என்றெல்லாம் நண்பர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் யதார்த்தில், சினிமா நம்மையும் நம் வாழ்வையும் பலமாக பாதிக்கிறது. எம்.ஜி.ஆர், கலைஞர், என சினிமாவில் வந்தவர்கள் நாடாளும் வரை செல்கிறார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்க வேண்டும் என்றால், சினிமாவில் சீரியஸான விசயங்களை சீரியஸாகவும், ஜாலியான விசியங்களை ஜாலியாகவும் காட்சிபடுத்த வேண்டும். யதார்தத்தில் சீரியஸான விசயங்களை சினிமாவில் ஜாலியாக காட்டுவதன் மூலம் பல அபத்தங்களை நார்மலைஸ் செய்வதும் க்ளோரிஃபை செய்வதும் பெரும் ஆபத்தானது. அதை மிகக்கவனமாக கையாள வேண்டும். என்னைப்போலவே RJ ஆனந்தி அவர்களும் இப்படத்தில் இருக்கும் அபத்தங்களை எடுத்துரைத்தார். இன்னும் பலரும் இந்தப்படத்தில் இருக்கும் அபத்தங்களை புரிந்திருக்கக்கூடும், அவர்களும் வாய்திறந்து பேச வேண்டும். கலந்துரையாடி களையவேண்டிய தேவை இதில் இருக்கிறது.

‘ரிலேஷன்சிப் பற்றி அடுத்த தலைமுறைக்கு நாம் நல்லவிதமாக சொல்லிக்கொடுக்கிறோம்’ என்ற பொறுப்பை நான் சினிமாக்காரர்களிடம் எதிர்பார்க்கவில்லை. பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம் என யாருமே அதை கையில் எடுக்காமல் இருப்பதால்தான் ஆண் பெண் உறவுகளைப் பற்றி சினிமா பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சினிமா ஒரு வணிகம். இங்கு நல்லதை எதிர்பார்க்க முடியாது. எது வியாபார ரீதியாக வெற்றி அடையுமோ அதைத்தான் நாம் பார்க்க நேரிடுகிறது.

பின்னூட்டம் முக்கியம் அன்பர்களே. உரையாடி அறியாமை களைவோம்.

Surya devan V —— 02.01.2023

அம்மு (Ammu) 2022 மற்றும் The Great Indian Kitchen 2021

அம்மு – Ammu (2022)

அக்டோபர் மாதம் அமேசான் ப்ரைமில் வெளிவந்த அம்மு படம், சத்தமில்லாமல் பல மெளனங்களை உடைத்தது என்றே சொல்லலாம். உடைபட்ட உடன் மெளனங்கள் உரக்கப் பேசின என எண்ண வேண்டாம். அதுதான் நடக்கவில்லை. சில மெளனங்களை உடைக்கும் சத்தம் அதிகமாக இருக்கும். சில மெளனங்கள் உடைந்த பிறகு வரும் குரலின் சத்தம் அதிகமாக இருக்கும். சில சமயம் அந்த குரலின் கனம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தப் படம் சற்று வித்தியாசமாக இருந்தது. இது ஒரு பெரும் மெளனத்தை உடைத்தது. உடைக்கும் சத்தமும் யாருக்கும் கேட்கவில்லை. உடைத்த பிறகும் எந்த சத்தமும் எழவில்லை. ஆம் அப்படி ஒரு நிசப்தமான பேரசைவுதான் அம்மு. 

இந்தப் படத்தில் வரும் அம்முவின் கணவர் பெயர் ரவி. ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ரவியுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தான் எந்தளவிலான முரடன் என்பதை சாட்சிப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தத்ரூபமான கதாப்பாத்திரம் ரவி. அதை ஏற்று நடித்த நவின் சந்திரா கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். யதார்த்தத்தில் ஆண்கள் அனைவரும் ரவி அளவிற்கு கொடூரக்காரர்கள் இல்லை என்றாலும் சில சில இடங்களில் ரவியுடன் ஒத்துப்போகாமல் இருக்க முடியாது. நிஜத்தில் பல ரவி’க்களும் இங்கு உள்ளனர்.

போலீஸ் ரவி வில்லன். திருடன் பிரபு ஹீரோ. பிரபு கதாப்பாத்திரத்தில் பாபி சிம்மா நடித்துள்ளார். ஜிகர்தண்டா, இறைவி படங்களுக்குப்பிறகு அவரது நல்ல நடிப்பை அம்முவில் காணலாம். தான் செய்த எந்தத் தப்பிற்கும் சிறிதும் வருந்தாத ரவி மிருகமாகவும் தான் செய்த ஒரே ஒரு தவறுக்கு தினந்தினம் மனம் வருந்தும் பிரபு நல்லவனாகவும் தெரிகிறார்கள். ரவி பிரபுவை அடிக்கும் போது பிரபு சொல்லும் ஒரு வசனம், ‘ஆனா நீங்க சூப்பர் சார்! யாரை அடிச்சா திருப்பி அடிக்க மாட்டாங்களோ கரெக்டா செலெக்ட் பண்ணி அடிக்றீங்க சார்.’ என்று சொல்லிவிட்டு அம்முவை நோக்கி, ‘மேடம் கரெக்டா?’ என்பான். இதுதான் உண்மையும் கூட. ரவி’களுக்கு யாரை அடிக்க முடியும் யாரால் நம்மை திருப்பி அடிக்க முடியாது என்பதெல்லம் அத்துபடி. மனதில் இருக்கும் வன்மத்தை பெண்கள் மீது காட்டுவதை மிக மிக எளிதாக்கிக் கொள்வார்கள். ரக்கட் பாய் மொமெண்ட்டுகள் நிறையவே இருக்கும். ஆனால் அது பெண்கள் மீது மட்டுமே இருக்கும்.

அம்மு படத்தின் இயக்குநர் சாருகேஷ் சேகர். நிஜத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்களை மிக நேர்த்தியாக காட்சிபடுத்தியுள்ளார். ஆனால், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதை மட்டும் நிஜத்தில் நடப்பது போல் யோசிக்காமல் சினிமாத்தனமாக தீர்வை வைத்துள்ளார். படத்தின் முதல் பாதி அப்பட்டமான நிஜ வாழ்வியலைக் கண்முன்னே நிறுத்திவிட்டு. இரண்டாம் பாதியை வழக்கமான வெற்றித் திரைப்படங்களின் பேட்டர்னில் திரைக்கதை அமைத்துள்ளார். அம்மு படத்தின் இறுதிக்கட்ட திரைக்கதையை zootopia (2016) என்னும் அனிமேஷன் படத்தில் இருந்து தழுவி எடுத்துள்ளார் என்பதை மறுக்கமுடியாது.

அம்மு. அம்மு ஒரு சராசரி இந்தியப் பெண் என்று சொல்லலாம். உலகம் தெரியாதவள். ரவிதான் அவளுக்கு உலகம் என நம்பிக்கொண்டிருப்பவள். ரவியை விட்டுவிட்டால் என்ன செய்வதென்றே தெரியாதவள். நாள் முழுக்க ரவியையும் தன் வீட்டையுமே சிந்தனையாய்க் கொண்டவள். அக்கம் பக்கத்தினரிடம் தன் மனதைப் பேசி ஆறுதல் அடைந்து கொள்ளும் இயல்பான பெண். ஒரு கொடூர ஆணிடம் சிக்கித் தவிக்கிறாள். இதற்கிடையில் தான் கருவுற்றால், குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று திணறுகிறாள். இவள் அனுபவிக்கும் வதைகளே போதும். இந்தப் போராட்டத்தில் இன்னொரு உயிரைக்கொண்டு வர வேண்டாம் என்று எண்ணுகிறாள். ஆனால் நிஜம் வேறு. ஓரிரு வருடத்தில் ஒரு குழந்தையும் அடுத்த மூன்று நான்கு வருடத்தில் இன்னொரு குழந்தையும் பிறந்துவிடும். சுற்றி சுற்றி அழுகையும், முதுகை ஒடிக்கும் வீட்டு வேலையும், சமையல் வாடையுமாய் ஆறேழு ஆண்டுகள் ஓடுவதே தெரியாமல் போய்விடும். இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றால்தால்தான் மதிய வேளையில் அப்பாடா என்று ஜன்னல் திரையை இழுத்து வெளிச்சத்தை மறைத்துவிட்டு அலுப்பில் பாதி தீர ஒரு உறக்கம் போட முடியும். இதில் கணவனின் அறச்சீற்றங்கள், நாத்தனாரின் நாரதர் பணிகள், மாமியாரின் புதுப்புது அர்த்தங்கள், மாமனாரின் லேட்டஸ்ட் ரூல்ஸ்கள், என டிசைன் டிசைனாக சவால்கள் வந்தவண்ணம் இருக்கும். அம்மு நிஜமானவள். அம்முவின் பிரச்சனைகளும் நிஜமானவை. அம்முவிற்கான தீர்வு மட்டும் கற்பனையானது வருத்தம்.

தி கிரேட் இந்தியன் கிட்சன் – The great Indian kitchen (2021)

சென்ற வருட தொடக்கத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் இதை மறு உருவாக்கம் செய்கிறார்கள் என்று அறிகிறேன்.

சமையல் தெரியாத பெண்கள் இன்று ஏராளம். அது தவறு இல்லை. சமையலின் முக்கியத்துவம் தெரியாததில்தான் பிரச்சனை. சமைக்க வராத பெண்களுக்கு சமையலின்மீது ஒரு பெருங்கோபம் இருக்கும். அதை யார்மீது காட்டுவது என்று தெரியாது. அவர்களுக்கு இந்தப்படம் ஒரு சிறந்தப் படமாகத் தெரியும். அதுதான் ஆபத்து. படத்தின் பேசுபொருளாக இருப்பது ஆணாதிக்கம் என்பது போல் தெரிந்தாலும் உண்மையில் பேசுபொருள் ‘உழைப்பு’. யார் எங்கு என்ன உழைக்கிறார்கள் என்பதே அடிநாதம். சமைக்க வரவில்லை அல்லது பிடிக்கவில்லை என்பதற்கு தீர்வு ஒரு சமையல் தெரிந்த வேலையாள். அது போதும். மருமகளேதான் சமைக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. சமையலுக்கு ஆள் போட வேண்டும் என்றால் மருமகள் அதற்கேற்றார்போல் சம்பாதிக்கவும் வேண்டும். முப்பதாயிரம் நாப்பதாயிரம் என சம்பளம் வாங்கும் பெண் சுலபமாக ஒரு பணியாளை சமையலுக்கு வைத்துக்கொள்ளலாம். வேலைக்கும் போக மாட்டேன், டான்ஸ் க்ளாஸ் போவேன், அரசு வேலைத்தேர்வுகளுக்கு படிக்கிறேன் பேர்வழி தன் பொறுப்புகளில் இருந்து நழுவிக்கொள்ள ஏதுவாக ஆணாதிக்கத்தை சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இல்லை.

ஒரு கற்பனை பரிமாணத்திற்குள் செல்வோம். பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்று வீடு திரும்புகிறார்கள். ஆண்கள் அனைவரும் வீட்டை பார்த்துக் கொள்கிறார்கள். ஆண்களும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும். பெண்களும் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் சமாளிக்க வேண்டும்.

படத்தில் வரும் மாமனார் கதாப்பாத்திரம் காலத்துக்கும் உழைத்து ஓய்ந்துவிட்டார். அவர் சேர்த்து வைத்த சொத்துக்களை பராமரிப்பதற்கே மருமகளுக்கு அலுப்பாய் இருக்கிறது. அத்தனையையும் சேர்ப்பதற்கு மாமனாரும் பாடுபட்டிருப்பார். மாமனார் வெளியே செல்லும் போதெல்லாம் மாமியார்தான் வந்து செருப்பை எடுத்து தருவார். தினமும் காலையில் பல்விளக்க ப்ரஷில் பேஸ்ட் வைத்து தருவார். இப்படி கணவனை தாங்கிக்கொண்டிருக்கும் மாமியார் ஊருக்கு சென்றுவிட்டப்பிறகு அந்தப் பணிகளை மருமகள் செய்வது போல் ஆகும். ஒரு கிழவனுக்கு பேஸ்ட் எடுத்து கொடுப்பதும் செருப்பு எடுத்து கொடுப்பதுமா இந்த நவயுவதிகளின் ஆசை கனவு லட்சியம்? அந்த மாமனார் பேஸ்ட் கேட்பார் ஆனால் செருப்பை அவரே எடுத்து போட்டுக்கொள்வார். மருமகளிடம் கேட்க மாட்டார். தனக்கு வைக்கும் சோற்றை விறகடுப்பில் வைக்கச் சொல்வார். அது அவரது விருப்பம். ஆனால் மருமகளுக்கு அது கடினம். கேஸ் அடுப்பு என்றால் சற்று எளிதாக முடியும் வேலை. விறகடுப்பில் கண்கள் எரிய சமைக்கவேண்டும்.

சரி இப்படி வைத்துக் கொள்வோம். இதே கதையில் வரும் கணவனும் மாமனாரும் அவர்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ள அவர்களது தினசரிகளில் யார் யாரையெல்லாம் எதிர்கொள்கிறார்கள், எதையெல்லாம் எதிர்கொள்கிறார்கள் என்ற அவர்களது சவால்களையும் பிரதான காட்சிகளாகக் காட்டிவிட்டு, அவ்வப்போது மருமகள் கோரும் வசதிகள், ஆடைகள், ஊர்சுத்தல்கள், தீனிகள், நகைகள், செளகரியங்கள் யாவற்றையும் காட்சிப்படுத்தினால், மருமகள்மீது அனைவருக்கும் கோபம்தான் வரும். எவ்வளவு பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது இதில் இது தேவைதானா என்று சலிப்பார்கள்.

இந்தப்படத்தின் இயக்குநர் ஜோ பேபி. சமையலறையில் நடக்கும் அலுப்பூட்டும் வேலைகளை மிகத்துல்லியமாக படமாக்கியுள்ளார். ஆனால், அவராலும் முதல் பாதிக்கு மேல் கதையை நகர்த்த முடியாமல் திசைமாறி மாதவிடாய் என்ற மற்றொரு கருப்பொருளுக்குள் சென்றுவிடுகிறார். மாதவிடாய் நாட்களில் பெண்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்றளவிலும் பல இடங்களில் இது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தப்படத்தில் இந்தத் தலைப்பிற்கு இடமில்லை என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் படத்தின் எதிரி ஆணாதிக்கமாக இருக்க முடியாது. படத்தில் வரும் கணவன் மாமனார் என இரு ஆண்களுமே முழுமையான ஆணாதிக்கவாதிகள் இல்லை. ஆணாக நடந்துக் கொள்பவர்கள். அவர்களை முழுமையான ஆணாதிக்கவாதியாகக் காட்டாமல், ஆணாதிக்கத்தை எதிர்த்து ‘பெண்களை சமைக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள் பார்த்தீர்களா?’ என்பது பூட்டிய வீட்டில் சண்டைக்குப்போவது போல் ஆகிறது.

கணவனும் மாமனாரும் முருங்கைக்காயை மென்று துப்பி மேசையில் வைத்து விடுவார்கள். அதை மருமகள் எடுக்கும் போது ஏதோ குடிகாரனின் வாந்தியை அள்ளுவது போல் முகும் சுழிப்பாள். ஓவராகத்தான் இருந்தது. அடுத்தவர் மென்றுவிட்டு துப்பியவற்றை அள்ளி எடுக்க அருவறுப்பாக இருந்தால், ஒரு சின்ன தட்டோ ப்ளேட்டோ வைத்து அதில் வைக்குமாறு சொல்லிவிடலாம். அந்த தட்டை அப்படியே எடுத்து குப்பை தொட்டியில் தட்டிவிடலாம். பிரச்சனைக்கு தேவை தீர்வு. அதை சிந்திக்கவோ சரியான முறையில் அணுகவோ பெண்களுக்கு தெரியவில்லை என்றால் பரவாயில்லை. ஒரு இயக்குநருக்கும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப்பிரச்சனைகளுக்காக மருமகள் மாமனாரின் மீதும் கணவன் முகத்திலும் அழுக்குத்தண்ணியை ஊற்றிவிட்டு வேக வேகமாக வீட்டை விட்டு வெளியே செல்கிறாள். இதைப்பார்க்கும் சமையலறையில் வெந்து தவிக்கும் பெண்களுக்கு விசிலடித்து கைத்தட்டி கொண்டாடத் தோன்றும். இதைப்படிக்கும் உங்களுக்கும் அப்படி தோன்றினால், வெறுமனே கேட்பதையும் பார்ப்பதையும் மட்டுமே நம்புபவர்கள் நீங்கள் என அறிந்து கொள்ளுங்கள். உண்மையை உற்றுப்பாருங்கள். சோசியல் செக்யுரிட்டி என்ற ஒன்று நமது ஊரில் நிச்சயம் தேவை. அது இந்த மாமனாரின் வீட்டில் இருக்கும். இந்தப் படத்தில் வரும் இன்னொரு பெண்ணுக்கு இருக்காது. அந்த இன்னொரு பெண் ஒரு சிங்கிள் மதர். அவளது சமூக செயல்பாட்டிற்காக அவளது வீட்டில் கல்லெறிவார்கள். ஸ்கூட்டியை கொளுத்துவார்கள். இந்த மருமகளின் வீட்டில் யாரும் வந்து அப்படி ஒரு கல்லை எறிந்துவிட முடியாத அளவிற்கு அந்த ஊரில் செல்வாக்கை சம்பாதித்து வைத்திருக்கிறார் மாமனார். அந்த சிங்கிள் மதர் பதிவிடும் முகநூல் பதிவைப்பார்த்துதான் இந்த மருமகளுக்கும் உணர்ச்சிகள் பொங்கும்விதமாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர். இப்படி நிறைய இடத்தில் ஸ்லீப்பர் செல் போல சேம் சைட் கோல் அடித்திருக்கிறார் இயக்குநர். படம் எதை எதிர்க்கிறதோ அதற்கு ஆதரவான பல விசியங்கள் படத்திலேயே இருக்கின்றன.

Patriarchy and Feminism

இன்றும் பல குடும்பங்களில் கணவன்கள் மனைவிகளைக் கொன்றுவிடக்கூடத் தயங்க மாட்டார்கள். ஆனால் கொன்றுவிட்டால் எங்கு போலீஸில் மாட்டிக்கொள்வோமோ, ஊரில் மரியாதைக் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உயிரோடு விட்டுவிடுவார்கள். சரியாகச் சொல்வதென்றால் உயிரை மட்டும் விட்டுவிடுவார்கள். மீதி இருக்கும் நிம்மதி, மரியாதை, மன அமைதி, ஆசை, ஆழ் மனம், உடல்நலம், மனநலம் என அனைத்தையும் தினந்தினம் அடித்துக் கொன்று மென்று தூ எனத் துப்பிவிட்டு ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவரச் சொல்வார்கள், அதே மனைவியிடம். 

இவை அனைத்தும் அவர்களது குழந்தைகளை பார்வையாளர்களாக வைத்துக்கொண்டேதான் நடக்கும். பிறகு அந்தக் குழந்தை ஆணாக இருந்தால் அதே முரட்டு அப்பா போலவும், பெண்ணாக இருந்தால் அதே அப்பாவி அம்மா போலவும் வளர்ந்து நிற்கும். தொன்றுதொட்டு இது தொடரவது கவலைக்குரியது. இந்த அபாயத்தை திரையில் கொண்டுவந்திருக்கலாம். திருமணத்திற்குப்பிறகு கணவன் மனைவி உறவில் பல உரசல்கள் சலசலப்புகள் நிகழும் அது இயல்பு. இன்னொரு உயிருடன் வாழ்வதற்கு ஒரு குறைந்தபட்ச சகிப்புத்தன்மை நிச்சயம் வேண்டும். ஆனால், எந்த அளவிற்கு அந்த சகிப்புத்தன்மையின் எல்லையை நீட்டிக்கொண்டே போவது என்பதில்தான் பெரும் பிரச்சனை. எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதா? எதையுமே சகித்துக்கொள்ளாமல் செல்வதா? எதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டும்? எதையெல்லாம் எள்ளளவும் சகித்துக்கொள்ளவே கூடாது? பதில் எளியது.

தன்னை ஒரு சக மனிதராகக்கூட பார்க்கத்தெரியாத, பார்க்கமுடியாத, தன் மன அமைதியை கெடுக்கவும், என்ன சொன்னால் என்ன செய்தால் தான் பாதிப்புக்கு உள்ளாவேன் என்பதைத் தெரிந்து தன் பலவீனத்தினால் தன்னைக் காயப்படுத்தவும் ஆட்டிவைக்கவும் தயங்காத எவரையும் வாழ்க்கைத் துணையாக தொடராதீர்கள்.

அது கணவனோ மனைவியோ. சின்ன சின்ன விசியங்களை சகித்துக்கொள்ளுங்குள். பேசி சரி செய்யுங்கள். சகிக்கவே முடியாத காரியங்களை மூடி மறைக்க ஆயிரம் குட்டிக்கரணங்கள் அடித்தாலும் அதை ஏறெடுத்தும் பார்க்காதீர்கள்.

கணவன்கள் செய்துவரும் அட்டூழியங்கள் ஏராளம். அதைத் தாங்கிப்பிடிக்க சில சொற்றொடர்களை வசதியாக துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.

  1. ஆம்பளனா கொஞ்சம் அப்டி இப்டிதான் இருப்பான்
  2. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
  3. அரசன நம்பி புருசனா விட்றாத
  4. ஜான் பிள்ளைனாலும் ஆண்பிள்ளை
  5. ஆம்பள சிங்கம்டி
  6. அதிகமா ஆசபட்ற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல. (அதாவது பொண்ணுங்க கோபப்படக்கூடாதாம்).

தனிப்பட்ட முறையில் சிறுவயது முதலே கணவன்கள் மனைவிகளை அடிப்பதை ஆங்காங்கே கண்டு வந்திருக்கிறேன். அதில் அடி உதையுடன் நின்றவைதான் அதிகம். சில சமயம் அறைவது முடியைப்பிடித்து ஆட்டுவது என்பதைத் தாண்டி தாக்குதல்கள் எல்லைமீறி செல்லும். அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

  1. வயசான நபர் ஒருவர் தான் அழைப்பது கேட்காமல் அசந்து தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவிக்கு, தக்க பாடம் புகட்ட அவள் தூங்கிக்கொண்டிருக்கும்போதே அவளது ஒரு காதை கத்தியால் அறுத்துவிடுகிறார்.
  2. கணவன் மனைவி சண்டையில் கணவன் மனைவியின் தோடை பிடித்து இழுத்ததில் காது மடலில் இருக்கும் ஓட்டை கிழிந்துவிடுகிறது.

உண்மையான தீர்வு

நிஜ உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நிஜ உலகில் சாத்தியப்படக்கூடிய தீர்வுகளை திரையில் கொண்டுவருவதே மிகச் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். உதாரணத்திற்கு லஞ்சம் என்பதை எடுத்துக் கொள்வோம். அதை வைத்து ஏகப்பட்ட படங்கள் வந்தாகிவிட்டது. ரமனா, அந்நியன், இந்தியன், இத்யாதி இத்யாதி. எதிலுமே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அரசியல்வாதிகளை விதவிதமாக கொன்றுக் குவிப்பார்கள். யதார்த்தத்தில் இதற்கு சாத்தியமே இல்லை. அதாவது நிஜத்தில் இருக்கும் பிரச்சனையை சரி செய்யாமல் அதைவைத்து படம் எடுத்து மக்களை மேலும் உணர்ச்சிவசப்பட வைத்து பிரபலம் ஆகி செட்டிலும் ஆகிவிடுவார்கள். ஒரு பிரச்சனையை சரி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதை வைத்து பணம் பண்ண நினைப்பது ஏதோ ஒரு வகையில் மருத்துவத் துறையை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. நோயை குணப்படுத்தும் வகையில் அவர்களின் ஃபீசில் குறியாக இருப்பார்கள். நோய் தீர்ந்தாலும் தீராவிட்டாலும் பில் கட்டித்தான் ஆகவேண்டும். தொழில் என்றால் அப்படிதான் இருக்கும். மருத்துவமும் இன்று சேவை இல்லை. சினிமாவும் இன்று கலையில்லை. எல்லாமும் வியாபாரம். நாம் அனைவரும் வாடிக்கையாளர்கள். தவறாமல் ஏமாறும் வாடிக்கையாளர்கள்.