Keyboard கிறுக்கல்கள்

இந்தப்பக்கத்தில் நான் என் எண்ணங்களைப் பகிர விரும்புகிறேன். இதில் கதைகள் இருக்கலாம். கவிதைகள் இருக்கலாம். கிறுக்கல்கள் இருக்கலாம். புலம்பல்கள் இருக்கலாம். உங்களின் ஒரு பிம்பமும் என்னுடைய பிம்பமும் கூட சேர்ந்து இருக்கலாம்.

பாசிட்டிவ் நெகட்டிவ் வேண்டாம்


பாசிட்டிவ் நெகட்டிவ் வேண்டாம்
அன்பும் வெறுப்பும் வேண்டாம்
சிரிப்பும் அழுகையும் வேண்டாம்
ஆசையும் கோபமும் வேண்டாம்

சிறு புன்னகையோடு கடந்து செல்லும்
யாரோ ஒருவராக வாழ்ந்துவிடப் பார்க்கிறேன்

நெருங்கி வந்து ஏன் என்னை
கொன்று போகிறீர்கள்.

அருகில் வர வேண்டாம்.
ஆறுதல் தர வேண்டாம்.
அதற்கு முன் ரனங்களையும்
தரவே வேண்டாம்.

பேசவும் வேண்டாம்.
சிரிக்கவும் வேண்டாம்.
தோன்றவும் வேண்டாம்.
மறையவும் வேண்டாம்.

தனிமையில் நான் லயிப்பது சோகத்தைதான்.
ஒருமையில் நான் பயில்வது நிம்மதியைதான்.

சாமியிடம் நான் கேட்பது
இன்மையைதான்.
எதுவும் வேண்டாம்.
யாரும் வேண்டாம்.
நான் மட்டும் போதும்.
எனக்கு நான் மட்டும் போதும்.

விழிகள் விற்பனைக்கு

பலவாறாக அழுதுத்தேம்பி 
பலவருட காலம் அனுபவமுள்ள 
விழிகள் விற்பனைக்கு ! 

கண்ணீர் வற்றாது 
ஆறு அங்குல ஆழத்தில் 
கண்ணீர் ஊற்றெடுக்கும் 
விழிகள் விற்பனைக்கு ! 

முறைக்காத 
சந்தேகப்படாத 
ஏளனமாய்ப் பார்க்காத 
விழிகள் விற்பனைக்கு ! 

கருணை குறையாத 
ஏக்கம் மறையாத 
குற்றம் இழைக்காத 
விழிகள் விற்பனைக்கு ! 

இரவிலும் தூங்காத 
பகலிலும் தூங்காத 
அழுதும் வீங்காத 
விழிகள் விற்பனைக்கு ! 

கருப்பு வெள்ளை நிறத்தில் 
காதல் இருந்த இடத்தில் 
மழலைப் போன்ற தரத்தில் 
இரு விழிகள் விற்பனைக்கு ! 

விலை மலிவுதான்.
அன்புதான் விலை.
இலவச இனைப்பாக
ஆயுள் வரை நினைவில் இருப்பீர்கள்!

இன்றே முந்துவீர்.
இரு கண்களே உள்ளன!

In small talks we know about others..
In long conversations we know about ourselves…

வேறு ஒரு உலகம் வேண்டும்

வேறு ஒரு உலகம் வேண்டும்
அங்கு நான் பாவங்கள் 
செய்யாதிருக்க வேண்டும்

வேறு ஒரு பெயர் வேண்டும்
அதை அனைவரும் 
அன்போடு அழைக்க வேண்டும்

வேறு ஒரு மனம் வேண்டும்
அதில் ரனங்கள் ஏதும் 
இல்லாதிருக்க வேண்டும்

வேறு ஒரு வானம் வேண்டும்
அதில் நிலவு தேயாது 
வளர்ந்து வானமாக வேண்டும்

வேறு ஒரு தேகம் வேண்டும்
அதில் தழும்புகள் 
இல்லாதிருக்க வேண்டும்

வேறு ஒரு வாழ்க்கை வேண்டும்
அதில் பிழைகள் 
இல்லாதிருக்க வேண்டும்

வேறு ஒரு மொழி வேண்டும்
அதில் வார்த்தைகள் எல்லாம் 
மெட்டுக்களாக வேண்டும்

வேறு ஒரு சுற்றம் வேண்டும்
அதில் குற்றம் 
இல்லாதிருக்க வேண்டும்

வேறு ஒரு நவரசம் வேண்டும்
அதில் பயம் இழிவு அழுகை கோவம் 
இல்லாதிருக்க வேண்டும்

வேறு ஒரு வேஷம் வேண்டும்
அதிலாவது கெட்டவனாய் இருந்து நல்லவனாய் நடிக்க 
தெரிந்திருக்க வேண்டும்.