கற்பழிப்பை தடுப்பது எப்படி?

இந்த கற்பழிப்பு சம்பவங்களை உடனடியாக நிறுத்துவது எப்படி? சட்டங்களை கடுமையாக்குதல், சமூக வலைத்தளங்களில் கண்ணீர்வடித்து கவிதை எழுதுதல், அந்த ரேபிஸ்ட்டை கண்டந்துண்டமாக வெட்டி வீச பரிந்துரைத்தல் என எல்லாமே ஓட்டை பானையில் உலை வைக்கும் யோசனைகள்தான். மீண்டும் மீண்டும் அது போன்ற அவலங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். சிறு வயது முதலே வக்கிர எண்ணங்களை மனதில் நீருற்றி வளர்த்துவிட்டு, ஒருவன் இச்சமூக்தின் அழுக்கை பிரதிபலித்தவுடன் அவனை தூக்கிலிடுவது மெய்யறிவற்ற செயலாகும். அதற்காக அவனை விட்டுவிடச் சொல்லவில்லை. அவனை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். அதற்கு முன் இன்னொரு Rapist உருவாகாமல் இருக்க என்ன முயற்சி எடுத்தோம் என்பதை சிந்தியுங்கள்.

குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு செய்தாலும் குற்றங்கள் குறையாது. குற்றவாளிகள் குற்றத்திற்கான மாற்று வழியைதான் கண்டுபிடிப்பார்கள். பிறகு எப்படித்தான் குற்றங்களை நிறுத்துவது என்றால், மக்களுக்கு குற்றம் புரிவதற்கான தேவையை இல்லாமல் செய்வதே ஒரே வழி. அதுபோலவே கற்பழிப்பும். ஒருவனை கற்பழிக்க தூண்டியது எது என்று ஆராய்ந்து அவற்றை களைந்தால் மட்டுமே கற்பழிப்பு சம்பவங்களை விரைவில் நிறுத்த முடியும். (குறைந்தது ஒரு தலைமுறை காலமாவது தேவைப்படும்)

கற்பழிப்பை தடுக்க என்று தலைப்பு வைத்துவிட்டு ஏன் இவ்வளவு அளக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம், பெண்களை சக மனிதத்துடன் பார்க்கும் மனநிலைக்கு தடைகளாக இருக்கும் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்ய தீர்வையும் ஆராய்ந்தால் மட்டுமே பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் எண்ணம் குறையும். குறைந்தபட்சம் அடுத்த தலைமுறைக்கு இந்த புரிதல்களை ஏற்படுத்தினாலே போதும் அவர்கள் தத்தம் வாழ்க்கையில் தகுந்த சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கவும் முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் பெரிதும் உதவும்.

பெண்களை ஏன் பலப்படுத்த வேண்டும் ?

என்னதான் பெண் என்பவள் ஆண்களைக்காட்டிலும் அதிக வலியைத் தாங்கிக் கொள்ளக்கூடியவள் (மகப்பேறு மற்றும் மாதவிடாய் நேரங்களில் உள்ள வலியை சில வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது) என்றாலும், உடல் வலிமை இல்லாத ஒரே காரணத்தாலேயே பல இடங்களில் தன்னை பகுதியாகவோ முழுவதுமாகவோ இழக்க நேரிடுகிறாள். அவளை பலசாலியாக்குவதே சில ஆண் மிருகங்களிடம் இருந்து அவளை தற்காத்துக் கொள்ள உதவும். உதாரணமாக விளையாட்டில் பங்குபெறும் பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் நடையே ஆண்களின் நடையைப் போன்று கம்பீரமாக இருக்கும்.

இப்படிப்பட்ட பெண் தனியாக வந்தாலும் நான்கு ஆண்கள் இருப்பினும் கை வைக்க சற்று யோசிப்பார்கள். சுற்றி வளைத்து பின்னாலிருந்து இறுக்கி பிடித்துக் கொண்டாலும் திமிறி கொண்டு விடுபடுவாள். ஒங்கி ஒரு அறை விட்டாலும், மயங்கி கீழே விழாமல் அதே வேகத்தில் பதிலறை விடுவாள். எதிர்க்கும் ஆணுக்கு பயம் வரும். பெண் தப்பிக்க வாய்ப்பிருக்கும். எனவே பெண் பிள்ளைகளுக்கு லெக்கின்ஸ், நகை, செல்போன் வாங்கி தருவதோடு, தடகளப் போட்டி, நீச்சல், போன்ற விளையாட்டுகளையும் கற்றுத்தாருங்கள். இது உடல் வலுபெற உதவும். தற்காப்பு கலைகளையும் கற்று கொடுக்க மறவாதீர்கள். அதுதான் யுக்தி. சமயோசித புத்தியும் உடல்வலிமையும் இணைந்தே எந்த ஒரு மோசமான சூழலையும் எதிர்த்து போராடி தப்பிக்க உதவும்.

மேலும் பெண் மனவலிமை பெற வீட்டில் அவளுக்கு சக மரியாதை கொடுங்கள். தானும் மதிக்கத்தக்கவள் என்ற எண்ணம் தாழ்வு மனப்பான்மையை போக்கும். தன்னை பலவீனத்தின் சின்னமாக நினைக்கும் பெண்கள் வெற்றிபெறுவதே இல்லை. உடல் வலிமை, மன வலிமை, யுக்தி இது மூன்றும் உள்ள பெண் எந்த ஒரு கெட்ட எண்ணம் கொண்ட ஆண் மிருகத்தையும் உதைத்தெறிவாள்.

ஆண்களின் வக்கிர எண்ணத்தை நீக்குவது எப்படி ?

ஆணின் மனதில் வக்கிர எண்ணங்கள் எழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உடலுறவு என்பது இனப்பெருக்கத்தின் ஒரு படி என்பதை யாரும் குழந்தை பருவத்தே சொல்லிக்கொடுப்பது இல்லை. பெற்றோருக்கே இந்த விசயத்தில் விழிப்புணர்வு தேவை. எதிர் பாலின ஈர்ப்பு, மரபிலேயே ஊரிய ஒன்றுதான். அதாவது உயிரினங்கள் அனைத்தும் இயல்பிலேயே சோம்பேறித்தனம் கொண்டவை என்பதால், மிக முக்கியமான செயல்களை நம் உடலே அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். செரிமானம், இதயத்துடிப்பு, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற பெரும்பாலான உடலியக்கங்களை நமது உடலே கவனித்துக் கொள்ளும். சுவாசம், கண்ணிமைத்தல் போன்ற சில இயக்கங்களை நாம் விருப்பப் பட்டால் ஒரு குறிப்பிட்ட நிலை வரை கட்டுப்படுத்த முடியும். அப்படி நம்மால் ஒரு குறிப்பிட்ட நிலை வரை காம உணர்வுகளையும் கட்டுபடுத்த முடியும். மற்றபடி இனப்பெருக்கம் என்பது நம் மரபியல் ஞாபகம் (genetical memory) ஆகும். தன் இனம் அழியாமல் இருக்க இந்த காம உணர்வுகள் நம் அனுமதி இருந்தாலும் இல்லையென்றாலும் சுயத்தையும் மீறியாவது வெளிப்படும்.

எனவே, என் பையன் பொண்ணுங்கள ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான் என்பது நிஜமல்ல. அப்படி நிஜம் என்றால் அவனை டாக்டரிடம் கூட்டிச் செல்வது நலம்.

உளவியல் ரீதியாக எதிர்பாலின ஈர்ப்பை கையாள பலருக்கும் தெரிவதில்லை.

உயிரினங்களின் இருப்பு

இனப்பெருக்கம் என்பது முழுவதும் நம் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் நம் இனம் என்றோ அழிந்திருக்கும். அந்த இனப்பெருக்கத்தின் ஒரு பகுதியான பிரசவத்தில் உயிர் போகும் வலி இருப்பதால், உயிரினங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்கிவிடாதிருக்கவே, அதனை சமன் செய்ய அல்லது ஈடுகட்ட மற்றொரு பகுதியான ஊடலில் இன்பம் என்பது இணைக்கப் பட்டுள்ளது. இப்படி அமைத்தது யார் என்று கேட்டால், பரிணாம வளர்ச்சியின் ஞானம் என்பேன் நான். உங்களின் நம்பிக்கை கடவுளின் செயலென்றால் வாதிட மாட்டேன். யாராக அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உயிரினங்களின் இருப்பை உறுதிப்படுத்தவே இத்தகைய வழிமுறைகள்.

அதிலும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக, எதிர் பாலின ஈர்ப்பு இருபாலினத்தவருக்கும் இருந்தாலும், இருபாலினத்தவரும் கட்டுப்பாடோது இருந்தால் இனம் பெருகாது. அதனால், வலியின்றி சுகம் மட்டும் பெறும் ஆணுக்கு உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் குறைந்த திறனையும், உடல்ரீதியாக மாற்றத்தையும் பிரசவ வலியையும் அனுபவிக்கும் பெண்ணுக்கு உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் அதிக திறனையும் அமைத்ததெல்லாம் படைப்பின் உச்சம். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். எனவேதான் ஆண்களே பெரும்பாலும் கற்பழிக்கிறார்கள்.

முறையாக கற்பித்தல்

நாம் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து நாகரிகங்கள் பல கடந்தபிறகு இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் உடலுறவு / Sex என்பது பேசத்தகாத வார்த்தையைப் போன்று திரித்து வைத்திருப்பதுவே முதல் சூழ்ச்சி. உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே இனப்பெருக்கத்தை பற்றி கற்றுக்கொடுப்பதுவே நல்லது. “இதெல்லாம் நான் எப்புடி சொல்வேன் ? இந்த வயசுலையே இதபத்தி தெரிஞ்சிகிட்டா தப்பா போயிருவான்/ள். ” என்று நினைப்பீர்களானால், டி.வி, சினிமா, டீக்கடை போஸ்டர், வார இதழ்களின் முகப்பு, நடுபக்கம் என எல்லாமே அவர்களைச்சுற்றிலும் காமத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும். தவறான வழியில் அவனை இட்டுச் செல்லும். Porn videos குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இல்லை என்பதை மறவாதீர்கள். நண்பர்கள் மூலமோ மொபைல் மூலமோ காமம் குறித்த தவறான கருத்துக்களை மனதில் ஏற்றிக் கொள்வர். பிறகு எல்லாமே சிக்கல்கள்தான்.

உங்கள் குழந்தைகளிடம், இனப்பெருக்கத்தின் முக்கியத்துவத்தை சொல்லி அதில் பருவமடைதல், உடலுறவு கொள்ளுதல், கருவுறுதல், கற்பகாலம், பிரசவம் என்ற நிலைகள் இருப்பதையும், அப்படி ஆணும் பெண்ணும் சேரும் நிகழ்வை சுற்றத்தார் அனைவரும் கொண்டாடுவதே திருமணம் என்றும், எதிர்பாலின ஈர்ப்பு தவறல்ல, அதை சரியான வயதில் ஒழுக்கத்துடன் வெளிப்படுத்துவதே நாகரிகம் என்றும், தகாத உறவுகள் ஆபத்தானவை என்பதையும் சொல்லிக் கொடுங்கள். வெறுமனே good touch bad touch மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது.

இணையத்தில் இருக்கும் porn videos ஐ முடக்குவதோ, தடை செய்வதோ தற்போதுள்ள நிலையை இன்னும் மோசமாக்கும். எதிர்பாலினத்தின் உடலமைப்பை மறைத்து வைக்க வைக்க அதைப் பார்க்கவே ஆர்வம் அதிகரிக்கும். மிக எளிமையாக இனப்பெருக்கத்தை குழந்தை பருவத்தே அறிமுகப் படுத்துவது பல தவறுகளை தவிர்க்க உதவும்.

இத்தனை புரிதல்களோடு சமூகத்தில் கலக்கும் குழந்தைகள் ஒருபோதும் பாலியல் தொந்தரவுகளை ஏற்படுத்த மாட்டார்கள். அவற்றிற்கு பலியும் ஆக மாட்டார்கள். தன் உணர்வுகளை ஹார்மோன்களின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்வார்கள்.

காதல் ?

காம உணர்வுகளுக்கு, எதிர் பாலின ஈர்ப்புக்கு காதல் என பெயர்சூட்டுவது புனிதப்படுத்துவது எல்லாம் கவிஞர்கள் செய்த சுயநலம். தன் மொழித்திறனை வெளிப்படுத்த காதலுக்கான வரையறையை அவரவர் விருப்பத்திற்கு அமைத்து விட்டார்கள். எதிர் பாலின ஈர்ப்பு, உடலுறவு, இல்வாழ்க்கையில் உள்ள அப்பட்டமான உண்மைகளை விளக்க சொற்ப கவிஞர்களுக்கே அறிவிருந்திருக்கிறது.

அப்புறம் காதல்னா என்ன? என்று கேட்காதீர்கள். நானும் எனக்கு ஏற்றாற்போல் என் சவுகரியத்துக்கு ஒரு விளக்கத்தை கொடுத்து உங்கள் மனதை குழப்ப விரும்பவில்லை. உற்ற துணையோடு வாழ்ந்து பாருங்கள், காதலுக்கான விளக்கம் அர்த்தம் எல்லாம் தன்னால் புரியும்.

சினிமாவில் வரும் டூயட் பாடல்களைக் கண்டு ஆசைப்பட்டு நீங்களும் பீச்சு பார்க்கு தியேட்டர் ஹோட்டல் என்று ஜோடியாக சென்றிருப்பீர்கள். யதார்த்தத்தில் அவ்வளவு கவித்துவமாகவும் காதல் ததும்பவும் உங்களின் பயணம் இருந்திருக்காது. ஏனென்றால் நிஜத்தில் பொருளாதாரம் என்ற வில்லன் எல்லா இடங்களிலும் இருப்பான். குப்பை என்ற காமெடியன் எங்கு திரும்பினும் கிடப்பான். படத்தில் பரவசமூட்ட காதலுக்காக எந்த எல்லையையும் ஹீரோ தாண்டுவார். சினிமா சண்டைகள் எப்படி நிஜத்தில் சாத்தியமில்லையோ, சினிமா காதல்களும் அப்படி நிஜத்தில் சாத்தியமில்லை. அதற்காக காதல் கேவலமானது என்று சொல்லவில்லை. காதல் இயற்கையானது. காதலை அழகுபடுத்த முயற்சிப்பது அதனை மேலும் கொச்சைப்படுத்துவதாகும். எதிர் பாலின ஈர்ப்பை (காதலை) உள்ளவாறே ஏற்றுக்கொள்ளுங்கள். அதைவிடவும் இல்வாழ்க்கையில் பேரின்பம் வேறேதும் கிடையாது.

அழகு ?

வெள்ளைத்தோல் நடிகைகளை கழிவறைக் கற்பனைகளில் கற்பழிக்கும் ஆண்களுக்கு நிஜத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தவறவிடுவார்களா ? ஒரு பெண்ணின் வாழ்வை சூறையாடி விடுவார்கள்.

நிறத்திற்கும் அழகிற்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்று உணர்வதும் சுற்றத்தாருக்கு உணர்த்துவதும் பகுத்தறிவு கொண்டவர்களின் கடமையாக கருதுகிறேன். நம்பவில்லை என்றால் அவரவர் பெற்றோர்களைக் கண்டாவது புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் நிறம் அழகு அன்பு எதற்கும் சம்பந்தம் இருக்காது. அழகு நிறம் தோற்றம் எல்லாம் வியாபாரத்திற்குதான் தேவை, வாழ்க்கைக்கு இல்லை.

ஆதி மனிதன் பகல் நேரத்தில் (வெளிச்சம்-வெள்ளை) பாதுகாப்பாகவும் இரவு நேரத்தில் (கருப்பு-இருள்) பயமாகவும் உணர்ந்ததின் பரிணாம வளர்ச்சியே வெள்ளையின் மீதான நம்பிக்கையும் கருப்பின் மீதான அவநம்பிக்கையும். இந்த உளவியல் உண்மையின் அடிப்படையில்தான், வெள்ளையர்கள் நம்மைவிட மேம்பட்டவர்கள் என நம்பினோம். அவர்களின் வாழ்க்கை முறையை கண்டு ஆசைப்பட்டோம், ஏமாந்தோம், ஏமாறுகிறோம். இப்போதும் அது தொடர்வதற்கு சாட்சி, வெள்ளை தேகத்துடன் பெண்கள் நடிக்கும் விளம்பரங்களும், சினிமாக்களும்தான். பெண்மை மீதான ஈர்ப்பும் வெண்ணிறத்தின் மீதான நம்பிக்கையும் இணைந்துதான் பல சமயங்களில் நகைகடை திறப்புவிழாவிற்கு வரும் நடிகைகளால் நகரமே ஸ்தம்பித்து விடுகிறது‌.

மேலும் அழகு என்பதற்கு வெள்ளைதான் அர்த்தம் என்று நம் மூளையை கழுவி வைத்திருக்கிறார்கள். பேர் அன்ட் லவ்லி, பவுடர் டப்பா இல்லாத வீடுகளே இல்லை அல்லவா. அப்படியானால் கருப்புதான் அழகா என்றால் அதுவும் இல்லை. உலகில் அழகு என்ற சொல்லுக்கு வரையறையே கிடையாது. ஏனென்றால் ஒருவரை அழகு என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம் மூளையில் உள்ள அமிக்டலா என்ற இடம்தான். அங்குதான் அழகு குறித்த நிபந்தனைகள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். அதாவது முதலில் அவரவர் அம்மாவின் முகவமைப்பு அங்கு நம்பிக்கைக் உரியவர்களாக பதிவாகும். ஆதுவே அழகு என்றும் வரையறை நிர்ணயமாகும். பிறகு வளர வளர தன் சுற்றம் மதிப்பிடும் அழகை அங்கு பதிவேற்றிக் கொள்ளும்.

பெண்களின் மார்பை கவர்ச்சிப் பொருளாக்கிய பெருமை ஊடகத் துறையையே சாரும். பெண்களை சதைப் பிண்டமாய் காட்டுவது மட்டுமே ஆதாயம் தரும் என்பதே பல பத்திரிக்கைகளின் தார்மீக மந்திரம். லாபம் வந்து என்ன செய்வது ? தத்தம் பிள்ளைகள் வீதியில் பாதுகாப்பாய் நடக்கக் கூட முடியாத சமூகத்தை உருவாக்கிவிட்டு, வங்கிக் கணக்கு புத்தகங்களில் சேமிப்புத் தொகையை திரும்பத் திரும்பப் பார்த்து பாதுகாப்பாய் உணர்வது அடிமுட்டாள்தனமே. என்றுதான் பத்திரிகை முதலாளிகளுக்கு இது புரியப்போகிறதோ. சிலரது லாபத்திற்காக ஊடகம் செய்யும் இந்த சீரழிப்பை சமூகத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறோம் என்று சப்பை கட்டு கட்டுவார்கள்.

ஊரு ஒலகத்துல நடக்காததையா நாங்க பேப்பர்ல/ டிவில/ சினிமாவுல காட்டுறோம் ?

என்று கேட்பார்கள். ஓரிடத்தில் நடந்ததை தண்டோரா அடித்து லட்சக்கணக்கானோரின் அறிவுக்கு கொண்டு சென்று அதில் ஏதாவது ஓரிரண்டு லூசுகள் பின்பற்றிவிட்டால் அவர்களை சமூகத்தின் பிரதிநிதிகளாக சித்தரித்து இந்த சமூகமே இப்படித்தான் என நம்மையே நம்ப வைப்பார்கள்.

மறுபுறம், அழுக்குகளில் ஆதாயம் தேடும் இந்த அற்ப பிறவிகளின் வலையில் இருந்து பெண்கள் சமூகத்தை மீட்டெடுப்பது சற்று கடினம். பத்திரிகை தர்மம் மீறும் இவர்களின் உரிமத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும். அயிட்டம் சாங் இல்லாத சினிமா, டூ பீஸ் நடிகை படம் இல்லாத வார இதழ், கள்ளக்காதல் செய்திகள் இல்லாத நாளிதழ், என எப்போது திருந்துகிறார்களோ அப்போதுதான் பெண்ணை கவர்ச்சிப் பொருளாக பார்ப்பது குறையும்.

Make-up எல்லை உண்டு

பெண்களுக்கும் ஆடை உடுத்துவதில் சற்று அதிக கவனம் தேவை. அழகான தோற்றம் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றாலும், மனித மிருகங்கள் எங்கு எந்த உருவத்தில் இருக்கும் என்று தெரியாதல்லவா, எனவே சமூகம் காமம்குறித்த பகுத்தறிவு பெரும் வரை உடலை மார்பை தொடைகளை அப்பட்டமாக காட்டும் உடைகளை தவிர்த்திடுங்கள். முக்கியமாக லெக்கின்ஸ். Modern culture என்று நினைத்துக் கொண்டு உள்ளூரில் டீசர்ட்டுடன் திரிவீர்கள் என்றால் பல ஆண்களுக்கு பார்க்கத் தூண்டும், சில ஆண்களுக்கு தீண்டத் தூண்டும். வெறி கொண்டு விரட்டும் ஆண்மிருகத்திடம் பெண்ணியம் பேச எல்லாம் நேரமிருக்காது. வெளிநாடுகளில் பெண்களின் உடல்குறித்த தெளிவு எல்லா ஆண்களுக்கும் இருக்கும். நம்மூரில் அப்படி இல்லை. ஏ படங்களின் போஸ்டரையே ஏக்கமாக பார்க்கும் ஆண்களே அதிகம். இந்த நிலை மாறும் வரை உடை குறித்த கவனம் பெண்களுக்கு தற்காத்துக் கொள்ள உதவும்.

மேக்கப் போடும் போது இரவு நேர பொது இடங்களில் ஆண்களை கவர நிற்கும் விலை மாதர்கள் அளவிலான பூச்சுகளை உதட்டுச் சாயங்களை தவிர்ப்பது உத்தமம்.

உடனே ஆண்மகன்கள் “அப்புடி சொல்லுங்க பாஸு ” என்று மனதுக்குள் ஆறுதலடைவது தெரிகிறது. உங்களுக்கும் பெண்களை ரசிக்க பாடம் எடுக்க வேண்டும்.

பெண்ணை ரசிப்பதற்கும் வக்கிர எண்ணத்தோடு பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவளுக்கு உறுத்தாத வரை அவளது வெளிப்புற அழகை (முகம் மற்றும் உடல் வடிவம்) தள்ளி நின்று தீண்டாமல் ரசிக்கலாம். மேலும் ஆணின் பார்வை பெண்ணிற்கு உறுத்தலை ஏற்படுத்துவதற்கு முன்பான நிலைதான் ரசிப்பதற்கான எல்லை. அத்துடன் நாம் ரசிப்பதற்கான அனுமதி முடிகிறது. பின்தொடர்வதோ, வைத்த கண் வாங்காமல் பார்ப்பதோ, பயமுறுத்துவதாகும். இவை பெண்களுக்கு ஆண்கள் மீதான வெறுப்பையே அதிகரிக்கும்.

பெண்கள் உளவியல்

பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குவது மட்டும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல் இல்லை. அவளின் வாழ்வை வடிவமைக்கும் முக்கியமான முடிவுகளையும் ஆண்களே எடுப்பது (என்ன படிக்க வேண்டும், எப்போது யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும் போன்ற முக்கியமான முடிவுகள்), பொருளாதார ரீதியாக அவளின் சுதந்திரத்தை பறிப்பது, சமூக தொடர்புகளை தடுப்பது, கண்ணத்தில் அறைவது உட்பட அதட்டும் அடக்குமுறைகள், வீட்டிலேயே அடைப்பது, என அவளின் உரிமைகளை சுதந்திரத்தை பறிக்கும் எல்லாமும் வன்கொடுமைகள்தான்.

இந்த ஈர வெங்காயமெல்லா எங்களுக்கு தெரியும், அவ வேலைக்கு போயி ஒன்னும் குடும்பத்த காப்பாத்த வேணாம், பெண்புத்தி பின்புத்தி, பொண்ணுங்கள எல்லாம் வைக்குற எடத்துல வைக்கனும், போன்ற பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான். அவளையும் சமூகத்தில் ஒரு அங்கமாக அங்கீகாரம் கொடுங்கள், பொறுப்புகளை கொடுங்கள், பிறகு பாருங்கள், சீரியலில் வரும் கதாபாத்திரங்கள் போல இல்லாத அர்த்தங்களை கண்டுபிடிக்க அவளுக்கு நேரமில்லாமல் போகும். பெண்கள் மட்டுமல்ல எந்த ஒரு ஆணையும் பெண்களின் உலகிற்கான இருபத்தி நான்கு மணி நேர வேலைகளை பணித்தால், அவனும் அவ்வாறே நடந்து கொள்வான். பிரச்சினை ஆணா பெண்ணா என்பதில் இல்லை. எந்த சூழலுக்கு ஆளாக்கப்படுகிறோம் என்பதில்தான் இருக்கிறது.

ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை அவிழ்க்க தன்னார்வலர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் போன்றவர்கள் எந்த அளவுக்கு முயற்சிக்கிறார்களோ, அதைவிட அதிகமாகன சிக்கல்களை ஊடகங்களும், சமூகமும், அதை விளைத்த குடும்பமும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆணும் பெண்ணும் சமம் என்று நான் சொல்லவில்லை. இருவரும் அவரவர் வழியில் சிறந்தவர்கள். அதேசமயம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

பெண்ணை புரிந்து கொள்ளவே முடியாது. பொண்ணுங்க மனசு ஆழம் நீளம் என்று அளப்பதை முதலில் நிறுத்திவிடுங்கள். அவளை புரிந்து கொள்வது மிக சுலபம். கீழே உள்ள வாசகத்தை நன்கு மனதில் பதிந்து கொள்ளுங்கள்.

Whatever you give a woman, she is going to multiply. If you give her sperm, she’ll give you a baby. if you give her a house, she will give you a home. If you give her groceries, she’ll give you a meal. If you give her a smile, she’ll give you her heart. She multiplies and enlarges what is given to her. So, if you give her any crap, you will receive a ton of shit.

நீங்கள் பெண்ணிடம் என்ன கொடுக்கிறீர்களோ அதையே அவள் பல்கிப் பெருக்கி தருவாள்.

முரண்

பெண்களை ஒரு பக்கம் ஊடகம் வர்ணித்து தள்ளியும், இன்னொரு பக்கம் சமூகம் வசைபாட பெண்களது பிறப்புறுப்பை பயன்படுத்தியும் அடுத்த தலைமுறையை வளர்க்கிறது. இந்த முரணின் அர்த்தம்தான் என்ன ? திருமணம் ஆகும்வரை உள்ள காதலை கவித்துவமாகவும் திருமணத்திற்கு பிறகு பெண்கள் ஒரு தொல்லை எனவும் இளைஞர்கள் மனதில் ஊடகங்கள் புகுட்டுவதின் விளைவுகள் என்ன ? பெண்ணின் உடலைப் பார்த்த பின்பு ஆன்களுக்கு பெண்கள் மீது உள்ள மோகம் தீர்ந்து விடுகிறது என்பதா ? இந்த முரண்களை ஆராய்ந்தால் ஒரு உண்மை புரியும். பெண்கள் எவரும் அழகானவர்கள் அல்ல. அனைவருமே இயல்பானவர்கள். அவர்களை அழகாக்குவது திருமனத்திற்கு பின் உள்ள அன்பான வாழ்க்கைதான்.

உணவு

உணவுப் பழக்கத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திக்காதீர்கள். நிறையவே தொடர்பிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் உணவுப் பழக்கத்தை கவனியுங்கள். பரோட்டா, சிக்கன் ரைஸ், ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், மற்றும் பிராய்லர் கோழியை அதிகம் உட்கொள்கிறார்கள். இவை அனைத்தும் மூளையின் வளர்ச்சியில் சிறிதும் உதவாதவை. மேலும் பக்கவிளைவுகளாக ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும் அபாயமும் இருக்கிறது‌. உடல் சோர்வு, சோம்பேறித்தனம் என எல்லாம் இலவசங்கள். இப்படி சோம்பேறித்தனங்களின் மொத்த உருவமாய் இருக்கும் ஒரு இளைஞனை பரவசப்படுத்தும் ஒரே விஷயம் காமம். தனிமையில் காமக் கற்பனைகளை கட்டவிழ்த்துவிட்டு இன்புற்று போலியான திருப்தி அடைகிறார்கள். மோசமான சூழ்நிலையில் எதிர்நிற்கும் பெண்ணின் உடலை வெறும் இச்சையை தனிக்கும் பொருளாகவே பார்க்கிறான். இப்படி மந்தை போன்ற இளைஞர் சமுதாயம் உருவாக உணவு முறைகளும் முக்கிய காரணம்.

சிறுதானியங்கள் காய்கறிகள் பழவகைகள் என்று மூளையின் வளர்ச்சிக்கு தேவையான fatty acids, omega acids, போன்ற அத்தியாவசிய மூலக்கூறுகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளவதே இதற்கு தீர்வாக அமையும்.

தண்டனைகள்

மேற்கூறிய அனைத்து புரிதல்கள் இருந்தாலும், மிருகத்திலிருந்து மனிதன் முழுவதுமாக பரிணாம வளர்ச்சி அடையவில்லை என்பதற்கு உதாரணமாக தினமும் கற்பழிப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குற்றம் நொடியில் நிகழ்ந்திட அதற்கான நீதி, தண்டனை என எல்லாமும் பேசி பேசி இழுத்து அடுத்த குற்றமே நிகழ்ந்து மக்களின் கவனம் திசைதிருப்பப்பட்டுவிடும். இதற்கு ஒரே தீர்வு குற்றம் புரிவோருக்கு தண்டனை குறித்த பயத்தை ஏற்படுத்துவதே. குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு ரேபிஸ்ட் தண்டனைக்கு உள்ளாக்குவதை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும். நான்கு சுவற்றுக்குள் தூக்கிலிடுவது முடிந்த குற்றத்திற்கான தண்டனை மட்டுமே. அதை ஒளி பரப்புவது நடக்கவிருக்கும் குற்றத்திற்கான எச்சரிக்கையாக இருக்கும்.

இதுபோக ஏகப்பட்ட காரணங்களுக்காக பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். இவற்றில் சாதி, மதம், பழியுணர்வு, காதல் என எதை எதையோ உள்நுழைத்து வதை செய்கிறார்கள். அம்மிருகங்களை சமூகத்தில் இருந்து நீக்குவதே சமூகத்திற்கு நலம்.

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.

Image result for comment please

பின்னூட்ட தவறேல். உரையாடி அறியாமை களை.

Surya devan V — 30.04.2018

2 thoughts on “கற்பழிப்பை தடுப்பது எப்படி?”

  1. Physiological approach, root cause findings, brilliantly written and presented. Hope the sane and sensible people of the society would read and discuss about this. Kudos brother.

    Reply

Leave a Comment