Monthly Archives: September 2022

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

மஞ்சு from அவள் அப்படித்தான்

ரெனேவைப் பேசுவதென்றால், ருத்ரையாவின் அவள் அப்படித்தான் படத்தில் வரும் மஞ்சுவைப்பற்றி பேசாமல் இருக்கமுடியாது.

“வித்தியாசமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்”,

“ஃப்ரீயா செக்ஸ் பத்தி பேசுறேன்தான். ஃப்ரீ செக்ஸ் வேணும்னா பேசுறேன்”,

“பழமொழிகளால வாழ்றத நான் விரும்பல”,

“i hate hypocrytes. வேஷம் போடுறவங்கள கண்டாலே எனக்கு பிடிக்காது.”

“அவங்க அப்டிதான் இருப்பாங்கன்னா, நானும் இப்டிதான் இருப்பேன்”,

“முரண்பாடு இல்லாம யாரு இருக்காங்க? முரண்பாடு இருக்கிறதாலதான் நாம மனுஷனா இருக்கோம்.”

“நீங்க ரொம்ப கஷ்டப்படப்போறீங்க” என்ற கமலின் வார்த்தைகளுக்கு “அதப்பத்தி எனக்கு கவலயில்ல” என்று நொடியில் பதிலளிக்கும் மஞ்சுதான், பின்பு தன்னை நல்லவன் போல் நடித்து உடலுறவு கொண்டவன் தன்னை தங்கை என்று சொல்லியதற்காக “அவன் தங்கச்சினு கூப்பிடாம, தேவிடியானு கூப்டிருந்தான்னா கூட I wouldn’t have bothered” என்று கொதிக்கிறாள்.
(படத்தை துள்ளலான தொனியில் நகர்த்திச்செல்வதே ரஜினியின் ரகளையான நடிப்பும் வசனங்களும்தான். இந்த ரஜினியை ரசிக்க தவறிவிடாதீர்கள். அவள் அப்படித்தான் படத்தின் லிங்க். https://youtu.be/lvhZBBt7oD8)

ரெனே – nose-cut நாயகி

தனக்கெனவே தனித்துவமான திமிருடன் மிளிரும் ரெனேக்கள் எப்படி உருவாகிறார்கள்? ரெனேக்களை உருவாக்குவது காயங்கள்தான். what doesn’t kill you makes you stronger. மனிதர்களின் வார்த்தைகளைத் தாண்டி அவர்களின் பார்வைகளில் இருந்தும் செயல்களில் இருந்தும் அவர்களைத் துள்ளியமாகக் கணிக்கத் தெரிந்தவர்கள். ஏனென்றால், ஒரு காலத்தில் அவர்களின் பாசாங்குகளினாலும் ஆசை வார்த்தைகளினாலும் சிறுபிள்ளைப்போல ஏமாந்து இருப்பார்கள். ரெனேக்களை பெண் என்பதாலே ருசிபார்த்திருப்பார்கள். பிறகு ஒரு கட்டத்திற்கு மேல தான் ஒரு பெண் என்பதையே கேடையமாக பயன்படுத்துவாள்.

ரெனேக்களுக்கும் மஞ்சுக்களுக்கும் பசப்புக்காரர்களின் பாசாங்குகள் நன்கு தெரியும். ஆண்கள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல ஒரே பேட்டர்னில் கொக்கி போடுவார்கள். ரெனேக்களுக்கு அலுத்தே போகியிருக்கும். இவன் அடுத்து இந்த நகர்வைத்தான் மேற்கொள்வான் என்று. பிரச்சனை என்னவென்றால், இவர்கள் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, யாவரையும் கயவர்களாகவும் நயவஞ்சகர்களாகவுமே யூகித்துப் பழகுவார்கள். 99 விழுக்காடு அவர்களின் கணிப்பு சரியானதாகத்தான் இருக்கும். ஆதரவு தருவதாகக்கூறி ஆர்கஸத்திற்கு அடித்தளமிடுவார்கள் ஆண்கள். பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள். கோரப்பற்கள் நிறைந்த தந்திர நரிகள். முத்தம் கொடுத்தால்கூட அக்கோரப்பற்களால் காயம்தான் படும். இடைவெளி கடைபிடிப்பது ரெனேக்களுக்கு நல்லது. மீதி ஒரு விழுக்காட்டு தூயமனம் படைத்த ஆண்களாகவே 99 விழுக்காடு ஆண்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அதனால் நெருங்கி வருபவர்களையெல்லாம் தூக்கி எறிவதே ரெனேக்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தருகிறது.

ரெனேவிற்கு பொருத்தமான ஆண் என்றாவது ஒருநாள் அமையலாம். இனியனைவிட, அர்ஜுனைவிட மிகப்பொருத்தமாய். ஆனால், அவனுடனும் ரெனே சண்டையிடுவாள். உலகின் மிக உண்ணதமான ஆணுடனும் ரெனே முரன்பட்டு சண்டையிடுவாள். உலகின் மகா அய்யோக்கியனிடமும் ரெனே முரன்பட்டு சண்டையிடுவாள். இந்த விஷியத்தில் ரெனேவும் ஒரு பெண்தான், எல்லாப் பெண்களும் ஒரு ரெனேதான். (ஆமா அந்தப்படத்துல இருந்துதான் சுட்டேன்.) தம்பி ஒருவன் என்னிடம் ஒரு பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டான், “அவ கல்யாணம் பண்ணிகிட்டாலே நிறைய சண்ட வரும்னு பயப்படுறாண்ணா, என்ன சொல்றது”. நான், “கல்யாணம் பண்ணினாலே சண்ட போட்டுதான் ஆகனும், அதுக்குதான் மனசுக்கு புடிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சம் சலிக்காம சண்ட போடலாம்னு சொல்லு”என்றேன். காதலும் மோதலும் வாழ்க்கைல சாதாரணமில்லையா?

அர்ஜுன் – a miserable character or a miserable characterisation?

வானவில்லைக் கடந்த காகம் பஞ்சவர்ணக்கிளி ஆனதுண்டா? அர்ஜுனும் அப்படித்தான். கபாலத்தில் அடிப்பட்ட உடன், திடீரென நல்லவனாக மாறிவிடுகிறான். அவன் தன் தவறை உணர்ந்து மாறும் அளவிற்கு என்ன நடந்துவிட்டது? திருநங்கை, தன்பாலீர்ப்பாளர்கள் மீதான அவனுடைய மதிப்பீடுகளை யார் மாற்றினார்கள்? தான் ஒரு நிகழ்வில் சண்டையிட்டு அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேன் அதனால் நான் அனைவரது உணர்வுகளையும் மதிக்கிறேன் என்று யாரும் கூறிவிடமுடியுமா? அப்படி மாறியதாகக் கூறினால் இதுவும் வெறும் நடிப்புதான் அன்றி வேறில்லை. அர்ஜுன்கள் இங்கு நிறைய உள்ளனர். ரெனே அவளைப்பற்றி சொல்லும் கதையைக் கேட்டு, அவள்மீது அனுதாபக்காதல் கொள்ளவில்லை அர்ஜுன். ஏற்கனவே அவள்மீதிருக்கும் தனது ஈர்ப்பை அவள் இளகிய நேரம்பார்த்து இறுதி ஆயுதத்தை கையில் எடுக்கிறான். ‘I love you Rene’ என்கிறான். ரெனே சலித்தேப்போய்விட்டாள். போடா டேய் என்கிறாள்.

அர்ஜுனின் மூலம் நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதை சொல்ல முயற்சிக்கிறார் பா.ரஞ்சித். இன்னும் சற்று இறங்கி அர்ஜுனின் வீட்டில் நடக்கும் நாடகங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாடகம் இருப்பக்கங்களிலும் இருக்கின்றன. அதனை இருத்தரப்புகளும் மறுத்துப் பேசுவது வாதமாக மட்டுமே இருக்கிறது. நியாயமாக இல்லை.

இப்படத்தில் தவிர்க்கமுடியாத இன்னொரு பெண் ரோஷினி. மாடர்ன் மங்கையாக வருபவர். மிகவும் இயல்பாகத் தன் வாழ்வியலுக்கேற்ற ஆடையுடனும் வரைமுறையுடனும் எல்லைகளுடனும் வாழும் பல பெண்களை, ஆடைகளைக் கொண்டு, கடிகார நேரங்களைக் கொண்டு குத்திவிளையாட ‘தேவிடியா’ என்ற சொல்லுடன் கண்படும் தூரத்தில், காது கேட்கும் தூரத்தில் எப்போதும் ஆண்கள் காத்திருப்பார்கள். இந்த கலாச்சாரக் காவலர்களிடமிருந்து இந்த பாலாய்ப்போன கலாச்சாரத்தை யாராவது காப்பாற்றினால் பரவாயில்லை என்றிருக்கும். ரெனேவும் இன்னொரு ரோஷினியாகியிருக்க வேண்டியவள். பிறப்பின்பால் தாழ்த்தப்படும் சமுதாயத்தில் ரெனேக்கள் என்றுமே ரோஷினியாக முடியாது.

ரெனேக்கள் பழகுவதற்கும், பேசுவதற்கும் மிகவும் ஆர்வமானவர்கள். அழகானவர்கள். அனைவரையும் அசரடிக்கும் அழகுகுணம் பொருந்தியவர்கள். முக்கியமாக பட்டாம்பூச்சி போன்றவர்கள். அவர்களின் ரெக்கைகளை காதல் காமம் என இரு விரல்களுக்கு இடையில் வைத்து கசக்கிவிடத் துடிக்காதீர்கள். பட்டாம்பூச்சியை பறக்கவிட்டால்தானே ரசிக்க முடியும். ரெனே ரெனேவாகவே பறக்கட்டும். நாம் ரசிகனாகவே ரசிக்கலாம். காதலோடு, ரசனையோடு, இளையராஜாவின் இசையோடு, வாழ்நாள் முழுக்க ரசிக்கலாம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

இந்த தலைப்பும் சற்று சென்சிடிவான தலைப்பு. எனவே, அடிப்படையில் இருந்து அலசி பார்த்தோமேயானால் ஒரு தெளிவுக்கு வரலாம்.

பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னார் முதன் முதலில் உயிர் தோன்றியபோது அது ஆணாக இருந்ததா? பெண்ணாக இருந்ததா? அல்லது இரண்டுமாக இருந்ததா? அல்லது இரண்டும் இல்லாமல் வேறு ஒரு பாலின வகையில் இருந்ததா? பதில் யாருக்கும் தெரியாது. ஆனால் யூகத்தின் அடிப்படையில் அவரவருக்கு ஒரு கருத்தும் நம்பிக்கையும் இதுதான் உண்மை என்று நேரில் பார்த்தது போல சத்தியம் செய்து எல்லாம்கூட சொல்லுவர்.

90களின் முடிவில் எனது ஊரில் சர்ச்சில் திரை கட்டி ஒரு படம் ஓட்டினார்கள். அதில் மண்ணில் இருந்து ஒரு மணிதன் தோன்றுவான் (ஆதாம்). அவன் தனியாக காட்டில் திரிந்து கொண்டிருப்பான். பிற விலங்குகள் எல்லாம் அதனதன் இணையோடு இருப்பதைக்கண்டு அவன் தனக்கொரு துனை இல்லை என்று ஏங்குவான். பிறகு எங்கிருந்தோ இன்னொரு பெண் ஒருத்தி (ஈவ்) வருவாள். இதைத்தான் மனிதனின் தோற்றம் என்று எத்தனை நாள் நம்பினேன் என்று தெரியவில்லை. ஆனால், டார்வினின் தியரி விரைவில் என்னை வந்தடைந்து நம்பும்படியான ஒரு கதையைத் தந்தது.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலரும் உண்மை என்று நம்பும் ஒரு கூற்று ஆணும் பெண்ணும் இனைந்தால் தானே இன்னொரு உயிர் தோன்றும் என்பது. ஆனால் ஒரு உயிர் தோன்ற ஆணும் பெண்ணும்தான் தேவை என்பது நூறு விழுக்காடும் அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நத்தை இனங்கள் ஒரே சமயத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும். இணை சேரும்போது எதோ ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் பங்காற்றி இனப்பெருக்கச் சேர்க்கையில் ஈடுபடும். எந்த ஒரு நத்தையாலும் விந்தணுக்களையும் உற்பத்தி செய்ய முடியும், கரு முட்டைகளையும் உற்பத்தி செய்து இனச்சேர்க்கையின் மூலம் கருக்களையும் சுமக்க முடியும். அதாவது நத்தை ஆணாகவும் இருக்கும், பெண்ணாகவும் இருக்கும், சமயத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப ஆணாகவும் நடந்து கொள்ளும், பெண்களாகவும் நடந்து கொள்ளும். ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? இதைவிட ஆச்சர்யம், நன்கு வளர்ந்த சில நத்தைகளால் தானாகவே கருவுற முடியும். இன்னொரு நத்தையின் துணை தேவையில்லை. இவ்வகை உயிரினங்களை hermophrodites என்பார்கள். மண் புழுக்களும் இவ்வகையைச் சார்ந்தவைகள் தான். ஆனால், அவைகளால் சுயமாக கருவுற முடியாது.

சில உயிரினங்கள் இதற்கு நேர்மாரானவை. ஒன்று ஆணாக இருக்கும் அல்லது பெண்ணாக இருக்கும். இரண்டு பாலுறுப்புகளையும் ஒரே உயிர் கொண்டிருக்காது. அவ்வகை உயிரினங்களை gonochoristic species என்பார்கள். விலங்குகளில் 95 விழுக்காடு gonochoristic தான். முதுகெலும்பு கொண்ட 99% உயிரினங்கள் gonochoristic தான். அது ஏன் 99% என்கிறார்கள் என்றால், மனிதர்களில் சிலர் அரிதாக இரண்டு பாலுறுப்புகளுடனும் இருப்பது உண்டு. அவர்களை true hermophordites அல்லது intersex என்றழைக்கிறார்கள். ‘LGBTQIA+’ல் உள்ள ‘I’ எழுத்து intersex ஐ குறிப்பதாகும். இவர்களுக்கு இரண்டு பாலுறுப்புகள் இருந்தாலும் ஏதேனும் ஒன்றுதான் முழு பயன்பாட்டில் இருக்கும். இவர்களை பலசமயங்களில் transgender/திருநர் என குழப்பிக்கொள்வார்கள்.

trioecy என சொல்லப்படும் உயிரினங்களில் male ஆண் இனங்கள் இருக்கும், female பெண் இனங்கள் இருக்கும், இந்த இரண்டு பாலுறுப்புகளும் கலந்த hermophrodites களும் இருக்கும்.

இவ்வளவு விளக்கங்கள் எதற்காக என்று யோசித்திருப்பீர்கள். ஒருவர் யாராக இருக்க வேண்டும், யாராக இருக்கப் போகிறார் என்ற முடிவு கருவில் இருக்கும் போது முடிவாவது. அது ரசாயன செயல். எந்தெந்த ஹார்மோன்கள் எவ்வளவு சுரக்க வேண்டும் என்பது யார் ஒருவரும் முடிவு செய்வதில்லை. அது இயற்கை. அதை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு இன்றி பிறத்தல் அரிது.” – கந்தன் கருணை படத்தில் இருந்து ‘அரியது கேட்கும்’ பாடல் வரிகள். இந்தப் பாடலை நாம் நிச்சயம் கேட்டிருப்போம். இதில் வரும் பேடு என்ற சொல் hermaphrodites ஐக் குறிக்கும் சொல். இந்த பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். ஒரு உயிர் முறையே முழு ஆணாகவோ அல்லது முழு பெண்ணாகவோ பிறத்தல்தான் அரிது என்கிறார். ஏனென்றால் அதுதான் இனப்பெருக்கத்திற்கான வழி. ஆனால், வாழ்தல் என்பது வெறும் இனப்பெருக்கத்தை மட்டுமே மையப்படுத்தியது அல்ல. வாழ்க்கை என்பது பலவாறானது.

சில ஆண்களிடம் பெண்மைக்கான பண்புகள் சற்று அதிகமாக இருக்கும். சில பெண்களிடம் ஆண்களுக்கான பண்புகள் சற்று அதிகமாக இருக்கும். அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் புரிதலும் எந்தக்காலத்திலும் மனிதர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கலை கலைஞர்களில் கைகளில் வந்திருக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

L G B T Q I A +

‘L’ என்றால் Lesbian. தன்பாலீர்ப்பு கொண்ட ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல். இது உணர்வு சார்ந்த விடயம். ஒரு பெண்ணுக்கு எப்படி இன்னொரு பெண்ணைப் பிடிக்கும் என்பதுதான் இன்னமும் பலரது கேள்வி. இக்கேள்விக்கு பதில் கிடைக்காமல் இல்லை. பதில்களை ஏற்றுக்கொள்ளும் புரிந்துகொள்ளும் தன்மையே இல்லாதவர்களால் இதனை எளிதில் கடந்து வர முடியாது. தாராளமாக ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணைப் பிடிக்கலாம். இது உடல்சார்ந்த விடயம் அல்ல. முழுமையான பெண்களுக்கும் இன்னொரு பெண்ணின் மீது காதலும் வரும்.

‘G’ என்றால் ‘Gay’. தன்பாலீர்ப்பு கொண்ட ஒரு ஆணைக் குறிக்கும் சொல். லெஸ்பியன்கள் போலதான் இவர்களும். ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணின் மீது காதலும் காமமும் ஏற்படலாம். இவர்களும் உடல் அளவில் முழு ஆணாக இருப்பார்கள். சிலர் gay என்ற சொல் பொதுவாக தன்பாலீர்ப்பு கொண்டவர்களை குறிக்கும் எனவும் விளக்குகின்றனர்.

‘B’ என்றால் ‘Bisexual’. சிலருக்கு ஆண் பெண் இருபாலர் மீதும் ஈர்ப்பு இருக்கும். இவர்கள் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். திருநங்கையாகவும் இருக்கலாம். இதுவும் அவரவர் மனதின் விருப்பத்தைப்போன்றது.

‘T’ என்றால் ‘Transgender’. இந்த வார்த்தை நம்மில் பலருக்கு தெரிந்ததுதான். ஆணாகப்பிறந்து, பெண்ணாகவோ அல்லது பெண்ணாகப் பிறந்து ஆணாகவோ மாறிவிடுவார்கள். இவர்களை இழிவாக சித்தரித்தே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காட்சிகள் காமெடி என்று வடிவமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு ஆண் பெண்போல வேடமிட்டாலோ, நடந்துகொண்டாலோ அதனை நக்கலடிக்காமல் இருக்க யாருலும் முடியாது. அலி, பொட்ட, ஒம்போது என பலவாறான இழி பெயர்களை தவறாமல் அடுத்தத்த தலைமுறைகளுக்கு கடத்திவந்தனர். சமீப வருடங்களில்தான், இவர்களுக்கான பொதுப்பெயராக, திருநங்கை transwoman, திருநம்பி transman, இவர்கள் இருவரையும் குறிக்கும் பெயராக திருநர் transgender ஆகியவை வழக்கத்திற்கு வந்தன. ஒரு ஆணின் மனம் பெண்ணில் உடலில் சிக்கிக் கொண்டால் எவ்வளவு சிரமப் படுமோ, அதே சிரமம்தான் ஒரு பெண்ணாக உளமாற உணர்பவர்களும் பிறப்பால் ஆணின் உடலில் சிக்கிக்கொள்வர். தான் ஒரு தவறான உடலில் இருப்பதாக உணர்வார்கள். இது க்ரோமோசோம்களின் கலவையே அன்றி தனிப்பட்ட நபர்களின் கேரக்டர் இல்லை. சமூகத்தில் இவர்களும் நல்ல நல்ல பதவிகளில் கால்பதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குறியது.

‘Q’ என்றால் ‘questioning’. இவ்வகை நபர்கள், தனக்கு யார் மீது ஆர்வம் மிகுதியாய் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்லத்தெரியாதவர்கள். அல்லது அதைக்கண்டரியும் நோக்கில் பயனப்படுபவர்கள். ‘Q’ என்றால் ‘Queer’ என்றும் குறிப்பிடுகிறார்கள். gay என்றால் ஒரு ஆண் இன்னொரு ஆண்மீது ஈர்ப்பு கொள்வதாக எடுத்துக்கொள்ளலாம். குயிர் என்பதும் ஆணின்மீது வரும் ஈர்ப்புதான் ஆனால் தான் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் அற்று தனது விருப்பத்தை மட்டும் வெளிப்படுத்த உதவும் ஒரு தனிச்சொல்.

‘I’ என்றால் ‘Intersex’. இவர்கள் சற்று அரிய வகையினர். முழுமையான ஆணும் அல்லாமல், பெண்ணும் அல்லாமல், இரண்டும் கலந்து, பிறப்புறுப்பு, க்ரோமோசோம்கள், இனப்பெருக்க உறுப்புகள் என்று அனைத்திலும் சின்ன சின்ன மாற்றங்களுடன் மொத்தம் முப்பது வகையாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ‘Intersex” என்ற ஒற்றை வார்த்தைக்குள் கொண்டுவருகிறார்கள். ஏனென்றால் மேலே உள்ள ஐந்து வகையினரும் LGBTQ தனித்தனியாக குறிப்பிட்ட உடல் பண்புகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இண்டர்செக்ஸ் எனப்படுபவர்களுக்கு பலவாறான உடல் பண்புகள் இருக்கின்றன. கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி இவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.slideshare.net/balogunwasiu/hermaphroditism-45763096

‘A’ என்றால் ‘Asexual’. இவர்களுக்கு ஊடலில் குறைவான ஆர்வமோ அல்லது கொஞ்சம் கூட ஆரவமில்லாமலோ இருக்கும். இவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆண், பெண், திருநர், இண்டர்செக்ஸ்.

இப்படி பலவாரன உடல் அமைப்புகளையும், பாலின ஈர்ப்புகளையும், உணர்வுகளையும் உள்ளடக்கிய பல வகுப்பினர் இங்கு இருக்கிறார்கள். இந்தப்பட்டியல் இப்படி நீண்டு கொண்டே செல்வதாலும், இவர்களுக்கென தனியே ஒரு + குறியீட்டை பயன்படுத்துகின்றனர்.

‘+’ என்றால் மேலே குறிப்பிட்ட வகுப்பினரும் அல்லாது ஏனையோரைக் குறிப்பது ஆகும். இதில் Pansexual, Allosexual, Aromantic, Demiromantic, Demisexual, Dyke, Faggot, Androsexual, Gynesexual, Polyamorous, skoliosexual, sapiosexual, reciprosexual, இத்யாதி இத்யாதி வகுப்பினர் உண்டு. அதனால் ‘+’ குறியீட்டை பயன்படுத்துகின்றனர். ‘+’ல் வகைப்படுத்தப்படும் பட்டியலில் சிலவகுப்பினர் இடம்பெற மாட்டார்கள். அவர்கள் heterosexual/straight- எதிர்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மற்றும் cisgender- பிறப்பால் எந்த பாலினத்தவரோ அதே உணர்வுடன் வாழ்பவர்கள். ஆணாகப் பிறந்து உடலிலும் உணர்விலும் முழு ஆணாக இருந்து ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்பவர்கள் அல்லது பெண்ணாகப் பிறந்து உடலாலும் உணர்வாலும் முழு பெண்ணாக இருந்து ஒரு ஆணின் மீது ஈர்ப்பு கொள்பவர்கள். இவர்கள் ‘+’ல் இடம்பெற மாட்டார்கள்.

ஏன் இவ்வளவு தனித்தனிப்பெயர்கள்? ஏன் இவ்வளவு பெருமை இதில்? இதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது? என்று பலரும் கூறக்கேட்டிருக்கிறேன். அதுவும் ப்ரைட் வாக்கின் போது வரும் சகிக்கவியலாத பேச்சுகளுக்கு குறைவே இல்லை. அதற்கான பதிலும், மேலே வகைப்படுத்தப்பட்ட தனிப்பெயர்களுக்கான தேவையும் இதோ. இங்கு பெரும்பாண்மை என்னவாக இருக்கிறதோ அதுவாகத்தான் சிறுபாண்மையும் இருக்கவேண்டும் என்ற திணிப்பும் அப்படி இல்லையேல் அதை வதைகளுக்கும், இழிவுகளுக்கும், குற்றவுணர்வுக்கும் உட்படுத்த முற்படும் மிருகத்தனம்தான் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒருவரை அவரது பாலின அடையாளத்தை வைத்து சிறுமை படுத்த முயற்சிக்கும் போது, குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தும்போது, தன்போன்றோரைத்தேடி தனக்கான குரலை பதிவு செய்து, தனக்கான அடிப்படை மரியாதையேக் கோரவும், “தனது பாலினத்தாலும், தனது பாலீர்ப்பாலும் தான் குறைவாக உணரவில்லை, நிறைவாகத்தான் உணர்கிறேன். சரியாகத்தான் உணர்கிறேன்.” என்பதை உரக்கச் சொல்வதற்கும் ‘எனது சுயத்தில் நான் வெட்கப்பட ஏதுமில்லை” என்பதை உலகுக்கு உணர்த்த இந்தப் பெயர்களும், முத்திரைகளும், pride-உம் அவசியம் தேவைப்படுகிறது.

சரி இவ்வளவு விசியங்களையும் பெரும்பாண்மையான பொதுப் புத்திக்காரர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பாக்கலாமா? இதை பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று யோசியுங்கள். இத்தனை நாட்கள் முகம்சுளித்தே பழகியவர்கள், இழிவுபடுத்தி பழகியவர்கள், நகைத்துப்பேசி மட்டுமே பழிகியவர்கள், அசிங்கம், கேவலம், என்று பலவாறு அறுவருப்புடன் பேசியவர்களால் முழுமனதுடன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வரும் தலைமுறையினருக்கு இதனை முறையே நல்வழியில் அறிமுகப் படுத்த முடியும். அதற்கு இன்னும் ஆயிரம் நட்சத்திரங்கள் நகரவேண்டும். நகரும் என்று நம்புவோம்.

None of your business. இதைத்தான் நான் சொல்லவிரும்புகிறேன். நான் யாருடன் உறவுகொள்ள விரும்புகிறேன் என்பதோ, நான் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பதோ, நான் ஆணா பெண்ணா திருநங்கையா திருநம்பியா என்பதோ, நான் யாராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்பதோ நான் மட்டுமே கவலைப்படவும் மற்றும் நான் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதைத் தீர்மானிக்க எனது குடும்பத்தினருக்கோ, சொந்தக்காரர்களுக்கோ, நண்பர்களுக்கோ, ஊரார்களுக்கோ யாருக்கும் உரிமை இல்லை. Stereotype-களாகத்தான் வாழவேண்டும் என்று நிர்பந்திக்க யாருக்கும் உரிமை இல்லை. None of your business.

ஆனால், நான் யாரக இருக்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அக்கறைகொள்ளும் நபர்களும் என்னோடு சேர்ந்து பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும். odd man out-ஆக ஒருவரை இச்சீர்மிகு சமூகம் புறக்கணிக்கும். இதைவெல்ல போதுமான மனத்திண்மை பாதிக்கப்படுவோர்களிடம் இருப்பது அரிது. வரலாற்றை திரும்பிப் பார்த்தால், பெண்களுக்கான வாக்குரிமையே சமீப ஆண்டுகளில்தான் நாம் பெற்றுள்ளோம். feminism-ஐ சரிவரப் புரிந்துகொள்ளவே (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம். இவர்களிடம் “LGBTQIA+” என்றால், “அப்டினா?” என்பார்கள்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

Preview in new tab

Watch Natchathiram nagargiradhu movie here in Netflix

படம் சுமார்தான். ஆனால் படத்தில் பேசுபொருட்களாக எடுத்துக்கொண்ட தலைப்புகள் மிக முக்கியமானவை. இந்தப்படத்தை நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் பெரிய தலைப்புகள்தான்.

  1. ஆணவக்கொலைகள்
  2. LGBTQIA+
  3. ரெனேக்களும் காதலும்
  4. படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

பகுதி-1 ஆணவக்கொலைகள்

தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் ஆங்காங்கே அரங்கேறுவது புதிதல்ல. அதன் பின்னனி முழுக்க 100 விழுக்காடும் ஜாதிப்பற்று அல்ல. அதில் ஒரு உளவியல் சார்ந்த சிக்கலும் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கம் என்று குறிப்பிடப்படும், ஒரு டிபிக்கல் குடும்பத்தை எடுத்துக்கொள்ளலாம். சொந்த வீடு, லோன் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஒரு கார். இரண்டு அல்லது மூன்று பைக்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டின் அப்பா ஒரு இயல்பான மனிதர் என்றே கொள்வோம். அவர் தினசரிகளில் வழக்கமாக செல்லும் இடங்கள் என்று சில இடங்களும், அங்கே வழக்கமாக சந்திக்கும் நபர்களும் இருப்பார்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள் என தினம் ஒரு பத்து பேரிடமாவது குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஏதேனும் பேசிவிட்டு வருவார். இந்த பேச்சுதான் அவரை இயல்புநிலையில் வைத்துக்கொள்ள உதவும். எதுவும் முக்கியமான பேச்சுகள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

“நேத்து நல்ல மழை, நைட்டு ஐம்பது நிமிஷம் கரண்ட்டே இல்ல. உக்ரேன்ல போர் நிறுத்திட்டாங்க. குஜராத்ல வெள்ளம். இந்த முறையும் ரெட்டலதான் வரும். வெயில் இப்பலாம் ஜாஸ்தி.”

இப்படியாக நியுஸ்பேப்பரிலும், அக்கம் பக்கத்தில் இருந்தும் அறிந்து வைத்திருந்த மேட்டர்களை பகிர்ந்து கொள்வர். இதுதான் இன்றளவும் தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பஸ்தர்களின் ராஜபோதை. இந்த நாலு பேரு மதித்து பேசும்படி இவரும், இவர் நின்று மதித்து பேசும்படி அந்த நான்கு பேர்களும் வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதற்காகவே சாராயம் தொடாதவர்களும் அதிகம் இருக்கிறார்கள். குடிச்சா யாரும் மதிக்க மாட்டாங்க என்பதால். இதற்காகவே டீ கடைகளில் டீ குடிப்பவர்களும் அதிகம். அங்குதான் நட்பு வெகுவாக பாராட்டப்படும்.

அந்தக் குடும்பத்தின் அம்மாவை எடுத்துக் கொள்வோம். இரண்டு பிள்ளைகளை வளர்த்த களைப்பு இன்னும் இருக்க, அதனோடே கணவனுக்கு மாத்திரைகளை எடுத்து கொடுத்து அவரையும் குழந்தைப்போல பார்த்துக்கொள்ளும் ஒரு அம்மாவின் மாபெரும் ஆறுதலே அவரைப்போன்ற மற்றோரிடம் பேசித்தீர்ப்பதுதான். அவர்களுக்குள்ளும் எப்போதுமே முக்கியமான பேச்சுக்கள் மட்டுமே இருக்காது. வாணி ராணி தொட்டு, பிக்பாஸ் வந்து, அமெரிக்காவில் இருந்து லீவில் வந்துவிட்டுப்போன சொந்தக்கார பையனைப்பற்றி பேசி, இன்னிக்கு என்ன டிஃபன் வரை எல்லா விசியங்களையும் சகஜமாகப் பேசி சிரிக்க ஒவ்வொரு சமயத்திலும் யாரேனும் ஒருவர் கிடைப்பர். இவர்களிடம் பேசுவதனாலே அம்மாக்களின் மனம் ஆசுவாசப்படும்.

இந்த சூழ்நிலையில் மகளோ மகனோ காதல் திருமணம் செய்துகொண்டால், அது வேறு ஜாதியில் இருந்தால், அந்த தினசரிகளில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களே இவர்களிடம் இயல்பாகப் பழக மாட்டர்கள். லாக்டவுன் காலத்தில் கொரோனா வந்த வீட்டின் முன்பு பச்சை நோட்டீஸ் ஒட்டுவார்கள் அல்லவா, அதைப்போலவே இவர்களது வீட்டின் விசியமும் ஏனையோர்களுக்கும் ஒரு பேச்சுபொருளாகிவிடும். இவர்களது வீடு பேச்சுபொருளாக ஆகியிருக்கிறது, அதற்கு காரணம் நடந்த காதல் திருமணம்தான் என்னும் தகவலை அந்த ஏனையோர்களில் சிலர் இந்த பெற்றோரிடமே சொல்லி அரிப்பை ஆர்கஸமாக்கிக் கொள்வர்.

இப்படிப்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த பெற்றோர்களும் தெரிந்தோ தெரியாமலோ பிறர் வீட்டில் காதல் திருமணம் நடக்கும் போதும் இதையேதான் செய்வர். இந்த சுற்றத்தாரின் பார்வை, சொல் தாங்காமலோ, தாங்கமுடியாது என்று பயந்தோதான், காதல் திருமணம் செய்த பிள்ளைகளை பெற்றோர்கள் இன்னும் சேர்த்துக்கொள்வதில்லை. யாரையும் பார்க்க முடியாமல், யாரிடமும் பேச முடியாமல், டிவிகளில் ஓடும் நியுஸ் சேனல்களையும், சீரியல்களையும் பார்த்து நாட்களை கடத்துவர். பிள்ளைகளது வாழ்க்கை அவர்களுக்கு பிடித்தது போல் இருப்பதில் இவர்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லைதான். ஆனால், சமூக அங்கீகாரம் கிடைக்கப்பெறாததால், அப்பாக்களின் தினசரிகளும், அம்மாக்களின் தினசரிகளையும் ஒரு காதல் திருமணம் சிதைத்து விடுகிறது. காமன் மேன்களால் இந்த உளவியல் சவாலை சமாளிக்கமுடியாமல் தினறவேண்டியதாக உள்ளது. இதைப்பற்றி பிள்ளைகள் கவலைப்பட்டு அப்பா அம்மாவிற்காக காதல் திருமணத்தை தவிர்க்க வேண்டியதில்லை. அந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ள பிள்ளைகள்தான் உடனிருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்த ஜெனேரஷன் கேப்பை நிறப்ப நிறைய விசியங்களை வெளிப்படையாக பேசவேண்டும். அவர்களின் சம்மதத்தோடு அதே காதல் திருமணம் சுற்றமும் நட்பும் சூழ நடக்க வேண்டும்.

எனது காதுகளில் நன்கு கேட்கிறது. இது எல்லோரது வீடுகளிலும் நடக்க வாய்ப்பு இல்லை. அதுவும் ஜாதி மூலமாகவே ஒரு கெளரவத்தையும் சொத்துகளையும் சேர்த்து வைத்த பெரிய மனிதற்களின் குடும்பத்தில் இது நடக்க வாய்ப்பே இல்லை.

அளவுக்கு அதிகமான பணமும் பிறர் மீதான அதிகாரமும் ஒருவனுக்கு பிறப்பின் காரணமாக மட்டுமே கிடைத்து அதையும் அவன் சிறுவயது முதலே அனுபவித்து வளர்ந்து திடீரென தன் மகனோ மகளோ வந்து பிற ஜாதியில் ஒருவரை திருமணம் செய்து வையுங்கள் என்று சொன்னாலே போதும், பாயாசத்தை ரெடி செய்ய தொடங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு இமேஜினால் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தன்னால் சுயமாக சம்பாதிக்க முடியாத இயலாத சொத்தையும் மரியாதையையும் இந்த ஜாதியில் பிறந்த ஒரே காரணத்தினாலே granted ஆக அணுபவித்து வந்திருக்கிறார்கள். இப்போது அந்த சகல செளகரியத்தை யாருக்காக விட்டுத்தருவார்கள்? யாருக்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். இவர்களின் தினசரி வாழ்க்கையை வசதியாக நடத்த பத்துக்கும் மேற்பட்ட கூலி ஆட்களை வேலைக்கு வைத்திருப்பர். மிகக் குறைந்த சம்பளத்தில் இவர்கள் எளிதில் கிடைப்பர். இவர்களை அடக்கி ஆள்வதில்தான் எத்தனை போதை இந்த பணம்படைத்த சாதிக்காரர்களுக்கு. இப்படி இருக்க தன் மகனோ மகளோ பணமில்லாத சாதியில் ஒருவரை காட்டி அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பது கூலிக்காரனை சம்பந்தி ஆக்குவதில்லையா? வாசலில் நின்று கைகட்டி பேசிய வேலைக்காரன், தோளில் துண்டு போட்டுக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்து சம்பந்தம் பேசுவது போன்ற காட்சிகளை கனவிலும் நினைத்துப் பார்க்காதவர்கள். இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர்கள் இருக்க, சரியான சமயத்தில் சக ஜாதிக்கார சொந்தங்கள், நண்பர்கள், பங்காளிகள் வந்து வேதம் ஓதுவார்கள். சாதிப்பெருமை, சாதிப்பற்று, சாதி வெறி, என அனைத்து கோணங்களிலும் ஒரு அப்பனையும் அம்மாவையும் நொடித்து பேசி, இதை சரிசெய்ய எந்த எல்லைக்கும் செல்லத்தான் வேண்டும் என்று நம்பவைத்துவிடுவர். பல சமயம் பணக்கார வீட்டு பிள்ளைகளை பலிகொடுப்பதில்லை. பணம் இல்லாதவர் வீட்டு பிள்ளையை பலி கொடுத்து பணம்படைத்த வீட்டு பிள்ளைகளை கலங்கப்படாமல் காப்பாற்றிவிடுவார்கள். கோகுல்ராஜ், இளவரசன் போன்றவர்களின் படுகொலைதான் வெளியில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. வெளியில் தெரியாத பல பெயர்கள் இன்னமும் உண்டு.

ஜாதிகளில் இருக்கும் படிநிலைகளை சமன்செய்ய ஜாதிக்கலப்பு திருமணம் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. ஏனென்றால், ஜாதி கலப்பு திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகளை அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்கவேண்டியோ அல்லது ஆணாதிக்கத்தாலோ அப்பாக்களின் ஜாதியையே பிள்ளைக்கும் பதிவிடுகின்றனர். ஆகவே, கலப்பு திருமணம் எவ்வளவு செய்தாலும் ஜாதி ஒழியாது. ஒரு ஜாதியினரின் பிள்ளை வேறு ஜாதியினரின் பட்டியலில் சேர்க்கப்படுவதினால் ஜாதி மாறுகிறதேத் தவிற ஜாதி அழிவதில்லை.

பின்பு எங்கிருந்து இதனை சரி செய்வது?

பொருளாதாரம். பொருளாதாரத்தினால் மட்டுமே வீழ்த்தப்பட்டார்கள். சோற்றுக்கே வழி இல்லாத சூழலில் அடிமைப்பட்டு உயிர்பிழைத்ததை நினைவில் கொண்டு, நிகழ்காலத்தில் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி படித்து, தொழில்தொடங்கி, தொழில் தொடங்க உதவி, பொருளாதாரத்தில் தன்னிறைவடைய வேண்டும். கோடி ரூபாய் இருந்துவிட்டால் மட்டும் கீழ் ஜாதி எனப்படுவோருக்கு மேல் ஜாதி எனப்படுவோர் தத்தம் மகனையோ மகளையோ திருமணம் செய்து கொடுப்பார்களா? நிச்சயமாக இல்லை! ஆனால், அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கும். நாடகக் காதல் என்ற பொய் குற்றம் சாட்ட வாய்ப்பிருக்காது. மாறாக வரட்டு கெளரவம்தான் திருமணத்திற்கு தடையாக இருக்கிறது என்ற உண்மையை மேல் ஜாதி எனப்படும் குடும்பத்தினர் உணர நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இவை அனைத்து ஒரே நாளில் நிறைவேறாது. பொருளாதார ரீதியாக மேம்பட இன்னமும் ஒரு தலைமுறை காலமாக ஆகும் என அனுமானிக்கிறேன்.

சில சமயங்களில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலருக்கு, மேல் சாதிக்காரனுக்கு பணத்தினால்தானே இத்தனை திமிர் என்று உணர்ச்சிவசப்பட்டு, பணம்படைத்தோரின் பணத்தையும் செல்வத்தையும் சூறையாடுவது மட்டுமே வழி என்று தப்பு கணக்கு போட்டுவிடுகின்றனர். அதன் விளைவே, கட்ட பஞ்சாயத்தின் போது, பணம் படைத்தவர்களை பணத்தை இழக்க வைக்க பேரம் பேசி பெரிய தொகையை பெற்று விடுகிறார்கள். இதுவும் சமூகத்தில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. பொருளாதாரத்தில் சமனடைய பணம் வைத்திருப்பவர்களிடம் அடாவடியாக பறிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பலரும் திறம்பட உழைத்து நிறைய பொருள் ஈட்டுகிறார்கள். நமக்கான வசதியை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். யாரிடம் இருந்தும் இலவசமாகவோ அடாவடியாகவோ பெறக்கூடாது.

ஆணவக்கொலைகள் அனைத்தும் கேட்க ஆளில்லாத நசுக்கப்பட்டவர்களின் மீது மட்டுமே நிகழ்த்தப்படுவது ஒன்றை தெளிவாக விளக்குகிறது. ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிகிறார்கள். அந்தத் துணிவு, ஆணவம் எப்படி வந்தது? அவர்களிடம் இருக்கும் பணபலத்தை நீக்கிவிட்டாலும் இதே போல வெறிகொண்டு எழுந்து வருவார்களா? கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் வசதிவாய்ப்புடன் இருந்திருந்தால், கொலை செய்ய துணிந்திருப்பார்களா? ஒரு உயிரைப் பறிகொடுத்த குடும்பம் அந்தக் குற்ற வழக்கை எடுத்து தொடர்ச்சியாக நடத்தக்கூட வசதியில்லாத நிலைமை குற்றவாளிகளுக்கு எவ்வளவு சாதகமாக அமைகிறது. அறியாமையையும், ஏழ்மையையும் களையத்தான் கல்வியும், சலுகைகளும் பெற்றுத்தந்துள்ளார் அன்னல் அம்பேத்கர். ஆணவத்தை அறிவுகொண்டு அடக்கிவிட முடியும். அடக்கிவிடுவோம். அறிவின் பின்னால் நாம் செல்வோம், நம் பின்னால் பொருளாதாரம் வரும், பொருளாதாரத்தின் பின்னால் சுதந்திரம் வரும். அடக்குமுறைகள் அக்கிரமங்கள் அற்ற முழு சுதந்திரம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

மலையன்குஞ்சு (Malayankunju) – உடைந்த கண்ணாடிகளில் நம் பிம்பம்

Movie 2022

ஃபகத் ஃபாசில் என்ற ராட்சசன். இன்னும் எத்தனை உலகங்களுக்கு நம்மை இழுத்துச்செல்வான் என்று தெரியவில்லை. ஆனால், இந்த மலையன்குஞ்சு ஒரு கண்ணாடி உலகம். இதில் பல இடங்களில் நம்மை நாம் கண்டுகொள்ள முடியும். அப்படி ஒரு கண்ணாடி உலகத்தில் கல்லெரிந்தால் என்ன ஆகும் என்று யோசிக்காதீர்கள். படம் தொடங்கும் முன்பே இந்த கண்ணாடி உலகத்தில் கற்கள் பல எறிந்து கண்ணாடிகள் உடைந்து பலவாறாக பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியில்லாத பிம்பங்களில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் அக்கண்ணாடியின் கூர்மையில் நாம் கிழித்துக்கொள்ளாமல் இருப்பது சிரமம்.

மகேஷ் நாராயணன் எழுதி ஒளிப்பதிவு செய்ய சாஜிமோன் பிரபாகரன் இயக்கியிருக்கும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக்கிடைக்கிறது. நேரம் ஒதுக்கி பார்க்குமளவிற்கு தரமான படைப்பு.

வாழ்க்கை ஓடும் ஓட்டத்தில் நாம் எவ்வளவுதான் நல்ல சிந்தனைகளை மனதிற்குள் கொண்டிருந்தாலும், சூழ்நிலை நம்மை சோதிக்கும்போது, மனதில் ஆத்திரமும், வன்மம், கோபமும் முட்டி மோதிக்கொண்டு முதலில் வந்து நிற்கும். நல்லவை மனதின் ஏதோ ஒரு மூலையில் பாய் விரித்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கும். அனிக்குட்டனாக நடித்திருக்கும் ஃபகத் ஃபாசில் வாழ்க்கை தந்த வலியை யாரிடமெல்லாமோ கோபமாய் கொட்டித் தீர்க்கப்பார்க்கிறார். ஆனாலும் தீரவில்லை. இறுதியில் அழுது கொட்டுகிறார் வலியும் வன்மமும் தீர்ந்து விடுகிறது. ஆண்பிள்ளை அழக்கூடாது என்ற எண்ணத்தினாலோ என்னமோ, வலியைக்கூட கோபமாகவே வெளிப்படுத்தத் தெரிகிறது அனிக்குட்டன் உட்பட பல ஆண்களுக்கு. முழு சைக்கோக்கள் இல்லை இவர்கள், ஷார்ட் டேர்ம் சைக்கோக்கள்.

படம்முழுக்க அனிக்குட்டன் கோபப்பட்டுக்கொண்டே இருப்பது போல இருக்கும். அவன் கோபப்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் வரும்போது அவனால் பொறுமை காக்க முடியவில்லை. காற்றடைத்த பலூனில் ஊசி குத்தியது போல வெடித்துச்சிதறுகிறான். என்றோ எங்கோ எதற்கோ யாரிடமோ ஏற்பட்ட வலி உணர்வு, அவனை நிழல்போல துரத்திக்கொண்டே வருகிறது.

மனிதன் ஒரு சமூகவிலங்கு என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. மனிதன் ஒரு உண்ர்ச்சிமிகு மிருகம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. ஆறு அறிவு இல்லை நூறு அறிவு இருந்தாலும், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதான். படம் நெடுக இதனை காட்சிப்படுத்திக் கொண்டே வருவர். அனிக்குட்டன் புத்திசாலி, சாமர்த்தியகாரன், விவரமான மனிதன். ஆனால் என்ன பயன், கோபம் அவனை அடிமுட்டாளாக்கிவிட்டது.

படத்தின் இன்னொரு ராட்சசன் இசைப்புயல் எ.ஆர். ரஹ்மான். இசையின் மழையில் நனைந்து நனைந்து மனமென்னும் ஈரமற்ற மலை கரைந்து சரிந்து தரைமட்டம் ஆகிவிடுகிறது. இயற்கை சீற்றத்திற்கு இசைப்புயலின் இசை ராகம் கூட்டியிருந்தது.

ஆயிரம் வருஷம் வாழும் ஒருவன் எத்தனை வருஷம் நல்லவனாக இருப்பான்? முதல் ஐநூறு ஆண்டுகள்? கடைசி நூறு ஆண்டுகள்? அறுபது வருசம் வாழும் நாமும் அப்படித்தான். இடையில் நல்லவராய் இருப்போம். இடையில் கெட்டவராய் இருப்போம். கெட்டதை உணர்ந்து திருந்தி நல்லவராய் இருப்போம். நல்லவராய் இருந்து பயனில்லை என்று அலுத்துபோய் மனம்போன போக்கில் அலைவோம். எல்லாம் முடியும் போது எது நல்லது என்று தேடித்தேடி அதை நோக்கி மட்டுமே நகர்வோம். இறுதி நிமிடங்களில் அனிக்குட்டன் தேடுவதைப் போல.

இது ஃபீல் குட் மூவி இல்லை. ஃபீல் கில்ட் மூவி. நாம் வில்லன் இல்லைதான். ஆனால் நல்லவனும் இல்லை. நமக்குள் இருக்கும் நல்லவனை வெளியில் கொண்டுவர போதாத காலம் வரும்வரை காத்திருக்காமல் ஒவ்வொரு நிமிடமும் நல்லதில் மனதில் இட்டுச்செல்லுங்கள். இதை உணர்த்த ஃபகத் ஃபாசிலும், ரஹ்மானும், மகேஷ் நாராயணனும், சாஜிமோனும், படத்தில் பங்களித்த அனைவரும் கைகோர்த்து படத்தை செதுக்கியுள்ளனர்.