Category Archives: Movie Talks

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

திரைப்படங்கள் நம்மை எந்தளவிற்கு பாதிக்கும் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டிய விசயம் அல்ல. இருந்தாலும் சில உதாரணங்கள் அல்லது நினைவூட்டலகள் பின்வருமாறு.

கர்நாடகாவில் ஒரு இளைஞன் அருந்ததி படம் பார்த்து தன் உடலைத் தீயிட்டுக் கொள்கிறான். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இறந்து போகிறான்.

ஹைதராபாத்தில் ஒரு குழு மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்சால் கவரப்பட்டு அதே பாணியில் திட்டமிட்டு ஆட்களைக் கடத்தி பணம் பறித்து வந்துள்ளனர். பிறகு ஒருநாள் போலீஸில் மாட்டிக்கொள்கின்றனர்.

கே.ஜி.எஃப் படம் பார்த்து தவறாக ஊக்கமடைந்த 19 வயது இளைஞன், டான் ஆகும் ஆசையில் இரவு நேர காப்பாளர்கள் மூவரை கொலை செய்துள்ளான்.

இதுபோல பல சம்பவங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சரி இதெல்லாம் இயல்பான மனநிலையில் இருப்பவர்கள் யாரும் செய்யப்போவதில்லை, மனநிலையில் சமன் இல்லாதவர்கள்தான் இப்படி சினிமாத்தனங்களை நிஜ வாழ்வில் பிரதிபலிப்பர் என்று நாம் எண்ணலாம். அதுதான் இல்லை. மேலே குறிப்பிடப்பட்டவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டவரகள். நாம் சிறிது சிறிதாக தொடர்ந்து பாதிக்கப்படுபவர்கள். சிறிது சிறிதாக நிறைய விசயங்களை சினிமாக்கள் ட்ரெண்டாக்கிக் கொண்டே செல்லும், நார்மலைஸ் ஆக்கிக்கொண்டே செல்லும், எல்லாவற்றுக்கும் நாமும் தலையாட்டிக் கொண்டே பின்பற்றுகிறோம்.

சினிமாவில் சாராயம், சரக்கு, பீர், சிகரெட்

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு சிகரெட் கூட குடித்ததில்லை என்றாலும், தமிழ்நாட்டில் நிச்சயம் பல்லாயிரக் கணக்கானோர் சிகரெட்டிற்கு அடிமையாகியிருப்பார்கள். இல்லை என நான் மறுக்கவில்லை. ஆனால், ரஜினி சிகரெட் குடித்து அதை ஒரு ஸ்டைல் என ப்ராண்டிங் செய்துவிட்டபடியால் சிகரெட் குடித்திருக்காதவர்களும் தன் இமேஜை ரஜினி போல ரிசம்பில் பண்ண சிகரெட்டை பழக்கப்படுத்தி இருப்பார்கள். இதை இல்லை என யாராலும் மறுக்க முடியாது. பிறகு வயதான காலத்தில் “அனுபவத்தில் சொல்றேன்” என டயலாக் அடித்து சிகரெட்டை வேண்டாம் என அட்வைஸ் செய்வதெல்லாம் யார் கேட்டது? அவர் பற்றவைத்த சிகரெட்தான் இன்னமும் அணையாமல் எரிந்துக் கொண்டே இருக்கிறது.

சரக்கும் என்னும் சாராயத்தையும் மிகப்பிரபலம் ஆக்கி அதை நார்மலைஸ் செய்ய முயற்சித்து பெருமளவிற்கு நார்மலைசும் செய்துவிட்டார்கள். சினிமாவின் வளர்ச்சிக்கு முன்பும் நமது ஊர்களில் சுப நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் சாராயம் அருந்துவார்கள்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அது இலைமறைக் காய்மறையாக நடந்து வந்தது. அதனை சினிமாக் காட்சிகளில், நகைச்சுவை, ஹீரோயிசம், மேன்லினஸ் என்று அடையாளப்படுத்தி பதினைந்து வயதினரும் இன்று மது அருந்துவது சாதாரணமாக்கி வைத்திருக்கிறார்கள். எப்போதும் ஒரு திரைப்படத்தில் படம் பார்ப்பவர்கள் தங்களை கதையின் நாயகனுடனே பொருத்திக் கொள்வார்கள். அதுதான் மனித இயல்பு. அந்த ஹீரோ செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்தும் போது அது எவ்வளவு பெரிய அபத்தமாக ஆகிறது. திரைப்படத்தில் ஒரு நடிகர் பிறர் பணத்திற்கு ஆசைப்பட மாட்டார் என்பதாலேயே பல ரசிகர்கள் பிறர் பணத்திற்கு ஆசைபடுவதை தவிர்த்திருப்பார்கள். ஒரு நடிகர் தன் கதாப்பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லலாம். அது ரசிகர்களின் கொள்கையாகக்கூட உருமாறி நிற்கும். ஆனால், மக்களை குஷிபடுத்துவதற்காக போதைக்காட்சிகளை பழக்கப்படுத்திவிட்டு அதில் வரும் வருமானத்தில் செட்டில் ஆவது ரசிகர்களின் மீதுள்ள அக்கறையை நன்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதை சரி செய்வதாக எண்ணிக்கொண்டு வளர்ந்து பெரிய நடிகர் ஆனப்பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை விட்டால் போதும் அதற்கும் விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய கோடி ரசிகர்கள் இங்குண்டு.

சமீப நாட்களில்தான் இவர்கள் கஞ்சாவை பிரபலப்படுத்திவருகிறார்கள். அரசாங்கம் இதை தடை செய்த போதிலும், இது போன்ற போதை வஸ்துகளை வைத்து படம் வந்து கொண்டுதான் இருக்கிறது. அரசாங்கம் கஞ்சாவை தடை செய்திருப்பது மக்கள் மீதிருக்கும் அக்கறையினால் மட்டும் இல்லை. இதற்குப் பின்னால் ஒரு வியாபார நோக்கமும் உள்ளது. ஒரு நாளைக்கு இந்தியர்கள் ஊதித்தள்ளும் சிகரெட்டுகளின் மதிப்பு மட்டும் நூறு கோடியாவது வரும். கஞ்சாவின் மீதிருக்கும் தடையை நீக்கிவிட்டால், அவரவர் வீட்டிலேயே வளர்த்து காயவைத்து சுருட்டி ஊதிக்கொள்வார்கள். நாள்தோறும் நூறு கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் அரசாங்கத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் கம்பெனிகள் எப்படி பிழைப்பது? கள்ளுக்கு தடை போட்டு அரசே டாஸ்மாக் நடத்துவது தனியாருக்கு லாபம். மரத்தடியில் சீட்டாடினால் அடித்து விரட்டிவிட்டு ஆன்லைன் ரம்மியை கண்டுகொள்ளாமல் இருப்பது தனியாருக்கு லாபம். கஞ்சாவை தடை செய்துவிட்டு சிகரெட் கம்பெனிகளுக்கு அனுமதியளிப்பது தனியார் கம்பெனிகளுக்கு லாபம். எல்லாமும் யாரோ சில பண முதலைகள் சில ஆயிரம் கோடிகளை பல ஆயிரம் கோடிகளாக்கக் திட்டம் வகுக்கின்றனர். மக்களாகிய நாம், அவர்களின் வளர்ச்சிக்கு நாள்தோறும் கண்விழித்து உழைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் காதல்

சரக்கு, சிகரெட், சில்லறைத்தனங்கள் எல்லாம் ஓகே, அவையெல்லாம் அதைப்பயன்படுத்தும் நபர்களையும் அவர்களது குடும்பங்களையுமே பாதிக்கும். காதல்? காதலை இந்த சினிமாக்காரர்கள் கற்பழித்தேவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கேட்க ஆளில்லாமல் போனதுதான் காரணமோ என்னமோ தெரியவில்லை. காதலை வளைத்து வளைத்து சீரழித்தே விட்டார்கள். 19ஆம் நூற்றாண்டில்தான் ரொமாண்டிசேஷன் என்பது உலகம் முழுக்க பரவியது. அதாவது காதலை உருகி உருகி ரசித்துக் கொண்டாடித்தீர்ப்பது. ஏன் அதற்கு முன்பு வரை காதலை வெறுத்தார்களா என்று கேட்காதீர்கள். சங்ககாலம் தொட்டே காதலைக் கொண்டாடிதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதை சாமானியரும் கொண்டாடித் தீர்க்க ஒரு பெரிய மேடை இல்லாததால் அது பெருமளவிற்கு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சற்று விளக்கமாக சொல்கிறேன். 1920களில் ஒரு தம்பதி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் அன்யோன்யம் எப்படிப்பட்டதாக இருக்கும்? கண்டிப்பாக காதல் சார்ந்த எந்த உணர்வுகளையும் அவர்களால் வெளிக்காட்டிக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் அப்போது இருந்தது கூட்டுக்குடும்ப முறை. ஒரு தம்பதிக்கென தனி அறை கிடைப்பதே அரிது. இதில் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் என்பதெல்லாம் அரிதிலும் அரிது. “புதுசா கல்யாணம் ஆனதுக ரொம்பத்தான் கொஞ்சிக்குதுங்க, எல்லாம் எத்தன நாளைக்கின்னுதான் பாக்குறேன்” என்று காது படவே பேசுவார்கள். அதற்காகவே தம்பதிகள் முகத்தை இறுக்கமாம வைத்துக் கொள்வார்கள். ஆசை உணர்வுகளை வெளிப்படுத்த போதிய பாடல்களோ, காலர் ட்யுன்களோ, பேஸ்புக் ஸ்டோரிகளோ, இன்ஸ்டா போஸ்டுகளோ இல்லாத காலக்கட்டம் அது. இதில் இருந்து வெளியே வருவதற்கு, அச்சு ஊடகங்களும் ரேடியோக்களும் பெரிதும் உதவின. புத்தகங்கள், பத்திரிக்கைகள் என எங்கும் காதல் குறித்த பாடல்கள், கவிதைகள், ஓவியங்கள், கதைகள் என திசையெங்கும் காதல் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் இதுதான் நிலை. இந்தக்கூட்டத்தில் சினிமா என்ற ஒரு பொக்கிஷமும் கிடைத்தது. ஆனால், யார் கைகளில் அது கிடைத்தது என்பதுதான் அதன் தரத்தை நிர்ணயித்தது. சினிமா பல அபத்தங்களை உடைத்தும் உள்ளது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதைவிட பல அபத்தங்களை அறிமுகம் படுத்தியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சமீப நாட்களில் இன்ஸ்டாவில் பள்ளி உடையணிந்து காதல் காட்சிகளாக நிறைய ரீல்ஸ்கள் வந்துக்கொண்டிருந்தன. யுடியூபிலும் இது தொடர்ந்தது. பொதுமக்களுள் ஒளிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் பல Pedophiles-ஐ இது உசுப்பிவிடும் செயல்களாகத்தான் நான் பார்க்கிறேன். யோசித்துப்பாருங்கள், இருபத்தி ஏழு வயதுள்ள யுவதி ஒருவள் இருக்கமான பள்ளி சீருடை அணிந்து ஒரு பாட்டுக்கு நடனமாடி இன்ஸ்டா, பேஸ்புக், யுடியூப் என பதிவிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு ஆணின் பாலுணர்வை வலுவாகத் தூண்டும். அந்த ஆசாமிக்கு இந்த கவர்ச்சி நடனம் ஆடிய யுவதி எட்டாக்கணி. ஆனால், அவனது ஊரில், அவனது தெருவில் தினமும் பள்ளிக்கு சென்று திரும்பும் பதினான்கு பதினைந்து வயது சிறுமி அவனுக்கு பலியாடு. 10K லைக்ஸ்-ஐப் பார்த்து சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் யுவதிகள், ஆண்களின் காம வெறிக்கு பாலூத்தி வளர்ப்பதைவிட பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. பெண்களின் தேக அழகைத்தாண்டி அவர்களிடம் பகிர்வதற்கும், படைப்பதற்கும் எண்ணற்ற திறன்கள், ஆற்றல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தவிர்த்து பிரபலமாகும் போதையில் பல முட்டாள் பெண்கள் செய்யும் க்ளாமர் கூத்துகளால் பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவிப் பெண்கள்தான். பிரபலமடைந்த பெண்கள் தன்னைப்பாதுகாத்துக்கொள்ள பவுன்சர்கள் வைத்துக் கொள்வார்கள். பவுன்சர்கள் இல்லையென்றால் நடிகைகளின் நிலமையை யோசித்துப்பாருங்கள். குதறி வைத்து விடுவார்கள் ஆண்கள். குறைந்த பட்சம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ, தன்னார்வலர்களோ இத்தகைய வீடியோக்களை படம் பிடிப்பதற்கும், ஒளிபரப்புவதற்கும் தடைவிதிக்கலாம். மீறினால் கடும் தண்டனை என எச்சரிக்கலாம். பள்ளி மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களுக்கு வழிவகுக்கும் திரைப்படங்கள், குறும்படங்கள், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், யுடியூப் வீடியோக்கள் என அனைத்து வகையான பதிவுகளும் நிச்சயமாக தடுக்கப்பட வேண்டியவைகள்தான். பிறகு மாணவன் டீச்சரைக் காதலிப்பது. யெப்பா டேய். தயவுசெய்து யாராவது இந்த ஆகச்சிற்ந்த இயக்குநர்களிடமிருந்து காப்பாத்திச் செல்லுங்கள் இந்த பாலாய்ப்போன சினிமாவை. டீச்சர்கள் என்றுமே தேவதைகள்தான் ஆனால் அவர்களுடனே வாழ நினைப்பது எனக்கு இன்செஸ்ட் போலத் தெரிகிறது.

எங்கோ எப்போதோ யாருக்கோ நடந்த விசயங்களை படமாக்குவதினால், அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு அது லாபம் ஈட்டித்தரும். ஆனால், அதைப் பார்த்து வளரும் இளைய சமுதாயம் தன்னையும் அந்த ஹீரோவுடன் பொருத்திப் பார்த்துக்கொண்டு, தானும் அப்படித்தான் உணர்வதாக கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டு சீரழியும்.

Stalking. ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது எப்போது காதல் வரும். அந்த ஆண் அவளை எங்காவது பார்த்திருப்பான். அவள் அழகாக இருப்பான். அவனுக்கு அவளது உடல்கூறுகள் பிடித்திருக்கும். கிறுக்குப் பிடிக்கும் அளவிற்கு அவளைப்பிடித்திருக்கும். காதல் மலர இது போதும். வேறு என்ன வேண்டும்? அவளது ஒப்புதலா? வேண்டாம் வேண்டாம். ஆணுக்கு காதல் வந்துவிட்டப் பிறகு வேறென்ன வேண்டும். அவளுக்கும் இவன்மீது காதல் வந்தே தீரவேண்டும். எப்படி வராமல் இருக்கும். கண்டிப்பாக அந்தப்பெண்ணிற்கும் இதே ஆணின் மீது காதல் வரவேண்டும். இல்லை என்றால். இவன் அவள் பின்னாடியே திரிவான். தாடி வளர்ப்பான். சோகப்பாடல் பாடுவான். தற்கொலைக்கு முயல்வான். (செய்துகொண்டால் நல்லது). தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதுவான். தூது அனுப்புவான். சொப்ப்ப்பாஆஆ. தலையே சுற்றுகிறது. குணா படமெல்லாம் இன்னும் சற்று உச்சம். Stolkhome Syndrome-ல் கமல் செய்த சோதனை முயற்சியாகக்கூட இருக்கலாம்.

சினிமா வளர்க்கும் எதிர்காலம்

சினிமாவும் நம்மை வெகுவாக அல்ல பெரிதாகவே பாதிக்கும். வெறுமென மூன்று மணி நேரம் திரையரங்கில் பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு வரும் நாடகம் மட்டுமல்ல சினிமா. அது நம்முடனே பயணிக்கும். நமது காதல் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது வேலை எத்தகையதாக இருக்க வேண்டும், நமது தோற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது எதிர்வினைகள் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது பைக் எத்தகையதாக இருக்க வேண்டும், அவ்வளவு ஏன் நமது ஹேர்கட் எத்தகையதாக என்பதைக்கூட பெரும்பாலும் அந்தந்த காலத்து சினிமாதான் தீர்மானிக்கின்றன.

இதற்கு இணையாக இன்னொரு விசயத்தையும் பார்ப்போம். செக்ஸ் எஜுகேஷன். ஊடலை யார் சொல்லித்தருவது? ஆசிரியரா? ஆசிரியையா? மாணவர்களுக்கு யார் சொல்லித்தருவது? மாணவிகளுக்கு யார் சொல்லித்தருவது? அவரவரே திருட்டுத்தனமான அங்கும் இங்குமாக தெரிந்துக்கொள்ளட்டுமா? அது சரியா? பாட புத்தகத்தில் பிறப்புறுப்புகளின் குறுக்குவெட்டு தோற்றத்தை அச்சிட்டுவிட்டு அந்தப் பாடம் வரும்போது மட்டும் கவனமாக பக்கங்களை கடந்து விடலாமா? காதலையும் காமத்தையும் சினிமாவே சொல்லித்தந்து கொண்டிருந்தால் வருங்காலம் என்னவாகும்? சின்ன உதாரணம் கீழுள்ள இணைப்பில்.

https://tamil.news18.com/news/cuddalore/a-student-gave-birth-in-a-school-toilet-in-cuddalore-797078.html?fbclid=IwAR1Hhs0dp5Y5gAqqzkg_PNmDkZ-FFYLzoEM4lc-ULFcEbe9XUKZJWeXPo1U

ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்தும் பொறுப்பு யாருடையது?

இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்தால் காதல் லவ் அஃபேர் என்று எதையாவது செய்துவிடுவார்கள் என்று ஆண் பிள்ளைகளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலோ பெண் பிள்ளைகளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலோ சேர்த்து விடுவார்கள். ஒருவேளை இருபாலர் படிக்கும் பள்ளியாக இருந்துவிட்டால் மாணவர்களுக்கு தனி வகுப்பறை அல்லது தனி ப்ளாக், மாணவிகளுக்கு தனி வகுப்பறை தனி ப்ளாக். சக மாணவிகளை மாணவர்களை மிக இயல்பாக யதார்த்தமாக எதிர்கொள்வது எப்படி என்று சொல்லித்தர வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்பாலின ஈர்ப்பை ஏன் இவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். பொறுப்புத்துறப்பு மனோபாவமும், பொறுப்பின்மையும், பொருளாதார நெருக்கடிகளும்தான் இப்படியெல்லாம் மாணவர்களையும் மாணவிகளையும் பிரித்து வைத்து கல்லூரி வரை கொண்டுவந்து பிறகு நழுவிக்கொள்வார்கள். ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டால் அதற்கும் காரணம் பள்ளியின் அதீத அழுத்தம் என்று பெற்றோர்களும், மாணவருக்கு காதல் இருந்து அது தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டார் என பள்ளித்தரப்பும் மாற்றி மாற்றி பழி போட்டுக்கொண்டே இருப்பதை நாம் பார்க்காமல் இல்லை. அவர்கள் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தால் மட்டும் அதில் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். செத்துப்போனால் அது அவரவர் இயலாமை. இதுதான் பொறுப்புத்துறப்பு மனோபாவம். கல்வியை வியாபாரமாக்கியதின் விபரீதம்.

இது போதாதென்று சினிமா அதன் இஷ்டத்திற்கு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி வைக்கிறது. எது கெத்து என்று சினிமா சொல்கிறதோ அதைத்தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிறார்கள் இளம் வயதினர். இந்த மாயையில் இருந்து மீள, கல்லூரி முடித்து வேலைக்கு சென்று சகப் பெண்களிடம் ஆண்களுக்குரிய கெத்தைக் காட்டி, வீட்டில் மனைவியிடம் கெத்தைக் காட்டி, செய்தித்தாள்களின் பெரும்பாலன பக்கங்களில் பெண்கள் மீதான வன்முறைகள்தான் தினமும் அச்சிடப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள்தான் ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்த சரியானவர்கள். காதல் காமம் இரண்டையும் பெற்றோர்கள் சொல்லித்தருவதே நல்லது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு இணைந்து ஆலோசித்து ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளிகளையே நடத்த வேண்டும். இருபாலர் பள்ளிகளுக்கே அனுமதியும் அளிக்க வேண்டும். பார்ன் வலைப்பக்கங்களை முடக்கிய அரசாங்கத்தினால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் காதல் கதை போன்ற படங்களை தடுத்து நிறுத்த முடியாதா என்ன? டாஸ்மாக்கையே மூடாத அரசாங்கத்திடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கற்பனைக்கும் அதிகம்தான். ஆனால் இந்தப் பிரச்சனைகளின் பொறுப்பு அரசுதான்.

சினிமாவிற்கு இணையாக ஸ்மார்ட்ஃபோன் செயலிகளும் களத்தில் குதித்துள்ளன. போட்டிப்போட்டுக்கொண்டு அடுத்த தலைமுறையை சீரழிப்பதில்தான் எத்தனை லாபம் இந்தப் பணத்திற்கு அடித்துக்கொள்ளும் ஆறறிவு மானுடர்களுக்கு! இந்தக் கிட்ஸ்களெல்லாம் வளர்ந்து ஆளாகி திருமணம் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போதாவது ரியாலிட்டியை தலை நிமிர்ந்து பார்ப்பார்களா என்று காத்திருக்கிறேன். அல்லது அதையும் ஆன்லைன் யுடியுப் என டிஜிட்டலைஸ் ஆக்கினால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நட்சத்திரம் நகர்கிறது சொல்லும் வாழ்வியல் என்ன?

இந்தப் படம் பேசிய விசயங்களில் ஆண்-பெண் உறவு, பொதுபுத்தி, தன்பாலீர்ப்பாளர்கள், ஆணவக்கொலை என எல்லாமும் முக்கியமானவை. ஒருசில தமிழ் இயக்குநர்களுக்காவது பாலின பேதத்தைக் களைய வேண்டும் என்கிற அக்கறை இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் ஆயிரம் படங்கள் இந்த ஜானரில் வரவேண்டும். யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் பேசமுடியாத பிரச்சனைகளைப்பற்றி பேச கலைத்துறையில் போதிய கலைஞர்கள் இல்லையென்றே உணர்கிறேன். இருப்பினும் இந்தப்படத்திலும் ஒரு முக்கியமான விசயத்தை குறிப்பிட மறந்துவிட்டார்கள். அதுதான் இந்தப்படத்தைப் பார்த்து தவறாக ஊக்கமடைவதில் இருந்து தடுத்திருக்கும். சில பக்குவமில்லாத இளைஞர்கள் செய்யும் அதே தவறை பா.ரஞ்சித்தும் செய்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர் தவறவிட்டது வேலை. வேலைதான். கலை வேலை அல்ல. கலை சிலருக்கு தொழிலாக இருக்கலாம். ஆனால் கலை ஒரு போதும் வேலையாக இருக்க முடியாது.

சற்று யோசித்துப்பாருங்கள், பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தியில் ஹீரோ இறுதியில் ஒரு வக்கிலாகிவிடுவார். இரண்டாவது படம் மெட்ராஸ் ஹீரோ ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்வார். அடுத்து வந்த இரண்டு ரஜினி படங்களிலும் ரஜினி என்ன வேலை செய்வார்? டான் வேலையில் இருந்தால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோ ஒரு கூலித்தொழிலாளி. நட்சத்திரம் நகர்கிறதில் வரும் கதாப்பாத்திரங்கள் என்ன வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள் ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள். அரங்கேற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வியலுக்கு எது உதவுகிறது? யார் அவர்களின் அன்றாட செலவுகளை பார்த்துக்கொள்கிறார்கள். what do they do for a living? அது கதைக்கு முக்கியம் இல்லை என்று சொல்லி மூடி விடாதீர்கள். ஒருவன் என்ன வேலை செய்து அவனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறான் என்பது மிக முக்கியம். அதை சொல்லாவிட்டால் படம் பார்க்கும் பக்குவம் இல்லாத இளம் வயதினர் சினிமாவின் மீதும் கலையின் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டு சென்னையில் வந்து என்னவென்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு self assesment-உம் செய்து பார்க்காமல், வெறுமனே பரவசத்தினால் மட்டும் சென்னைக்கு கிளம்பி வந்து விடுவார்கள். பிறகு, நாட்களை ஓட்ட முடியாமல், என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஸ்விக்கி, டிரைவர், ஹோட்டல், டெக்ஸ்டைல்ஸ், என்று தொடங்கி, எண்ணில் அடங்காத வேலைபாடுகளை செய்து தீர்க்கிறார்கள். இதில் பக்குவத்துடன் இருந்து உழைத்து வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெருபவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது அனைவருக்கும் அமைவதில்லை.

நட்சத்திரம் நகர்கிறது போல சினிமாவைப் பற்றியோ, கலையைப் பற்றியோ, படம் எடுக்கும்போது அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பணத்திற்கு என்ன செய்தார்கள் என்பதையும் காட்டுங்கள். ரூம் வாடகை தர முடியாமல், நண்பர்களின் காசில் எத்தனை மாதங்கள் இருக்க முடியும் என்று காட்டுங்கள். குடும்பம் பொருளாதாரரீதியாக உதவுமா என்பதைக் காட்சிப்படுத்துங்கள். ரெனே என்ன செய்கிறாள்? அர்ஜுனைப் போல ரெனேவிற்கும் அவளது குடும்பம் பெரும் பின்னனி கொண்டதாக தெரியவில்லை. அவள் சொல்லும் கதையில் அவள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாகத்தான் தெரிகிறாள். பொருளாதார பின்னனி இல்லாமல் எப்படி அவள் வாழ்கிறாள். வேலைக்கு போகிறாள் என்றால் என்ன வேலை. அலுவலகமா? freelancer ஆ? சுயத்தொழில் எதுவும் செய்கிறாளா? இப்படி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண், அவள் பெயர் ரெனெ என்று மட்டும் சொன்னால், நிஜத்தில் ரெனேக்களினால் கவரப்படும் பெண்கள் ரெனெவைப் போலவே புரட்சிகரமான வசனங்களைப் பேசிக்கோண்டு எந்த இடத்தில் வாழ முடியும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். ருத்ரையா இதில் தெளிவுடன் இருந்திருக்கிறார். மஞ்சு அவளுக்கென ஒரு வேலையையும் தேடிக்கொண்டு அதன் மூலம் தன் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு வாழ்கிறாள். தன்னுடைய தேவைகளுக்காக யாரிடம் வழிந்து நிற்கவோ, கெஞ்சவோ, கொஞ்சவோ, காலில் விழவோ, கண்ணீர் விடவோ, படுக்கவோ தேவை இல்லை. இந்த விசயத்தில் ரெனேவை இன்னும் கொஞ்சம் டீட்டெயில் செய்திருந்தால் ஒரு முழுமையான ஓவியமாக மிளிர்ந்திருப்பாள்.

நட்சத்திரம் நகர்கிறது மட்டும் இல்லை. படித்து வேலைக்கு போவதை விடவும் கலைத்துறையில் சாதிப்பதோ அல்லது பிரபலமடைவதோதான் உண்மையான வெற்றி என்று போலியாக நம்பவைக்கும் படங்கள் ஏராளம். மீசைய முறுக்கு, 96, மயக்கம் என்ன, விண்ணைத்தாண்டி வருவாயா, டான், தோனி, என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். Target audience என்றோரு வார்த்தை உள்ளது. அதாவது ஊதாரித்தனமாக இருப்பவனை ஹீரோவாக வைத்து செக்கச் செவேலென்று ஒரு ஹீரோயினைப் போட்டு, இருவருக்கும் காதல் மலர்வது போன்ற காட்சியமைத்து ஒரு கிளுகிளுப்பு ஊட்டினால்தான் முதல் நாள் முதல் காட்சி வந்து படம்பார்க்கும் மைனர் குஞ்சுகளுக்கு ஒரு பரவசம் ஏற்படும். கல்லா கட்டும். நாள் முழுக்க உழைத்து ஒரு குடும்பத்தின் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றும் அப்பாக்களும் அம்மாக்களும்தான் எனக்கு ஹீரோக்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் செய்யும் வேலை அவர்களது ஃபேஷன் இல்லைதான். ஆனால் அலுக்காமல் செய்கிறார்கள்.

புடிச்சத பண்ணு, புடிச்சத பண்ணுன்னு சினிமாக்காரனுங்க சொல்லிட்டு போயிருவானுங்க. நாமளும் பின்னாடியே போனா ஜெயிச்சரலாம்னு கண்மூடித்தனமா போனா, வாழ்க்கைல சில பல வருஷங்கள் அப்டியே போயிரும்னு யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

இந்த கிட்ஸ்சின் அம்மாக்களும் அப்பாக்களும் இவர்களைப்போலவே புடிச்சதை செய்துக்கொண்டிருந்தால் கிட்ஸ்கள் அனைவரும் படிப்புக்கும், சோத்துக்கும் என்ன செய்திருப்பார்கள்? அதனால் இது போன்ற படங்கள் எடுக்கும் போது அதீத கவனம் தேவை. நாம் ஒரு விசயத்த விளக்கும் போது அதோட அடிப்படை ஆதாரத்தையும் சேர்த்தே விவரிக்க வேண்டும். ஒரு நீண்ட நெடிய போராட்டம் எப்படி சாத்தியப்பட்டுது என்றும் சொல்ல வேண்டும். சொல்லவில்லை என்றால் நிறைய இளைஞர்களின் வாழ்க்கையை அது புரட்டிப்போட்டுவிடும் அபாயம் உள்ளது.

ஏன் கலைக்கூடம்?

படம் நடக்கும் தளம் ஒரு மேடை நாடகம் நடத்தும் ஒரு தன்னார்வக் குழுவினரின் கூடாரம். இந்தக் கதையை ஏன் ஒரு கலையரங்கில் அரங்கேற்றினார்கள்? இப்படத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் ஒரு கார்ப்பரேட் ஆஃபிசில் நடக்கலாம் அல்லவா? ஒரு கெட்டுகெதரில் சக நண்பர்களுக்கிடையே நடக்கலாம் அல்லவா? ஒரு குடும்ப நிகழ்வில் நடக்கலாம் அல்லவா? ஒரு கோவில் திருவிழாவில் நடக்கலாம். ஏன் நாடக மேடை? நாடகக்காதலை மறுத்துப்பேச நாடகமேடையே பொருத்தமானதாக இருந்துவிட்டதாக நான் உணரவில்லை. நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதைக்கூட நாடகமாடித்தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது.

ஏன் பாண்டிச்சேரி?

பாண்டிச்சேரி நகரம் முழுவதும் ஆங்காங்கே கலையின் கைவண்ணங்கள் ஓவியங்களாக அங்குள்ள மக்களின் ரசனைத்தன்மையையும், கலையார்வத்தையும் உணர்த்திக்கொண்டே இருக்கும். மேலும் சென்னையை விட்டு சினிமா கொஞ்சமாவது வெளியில் வந்தால் நல்லது என்றே எண்ணுகிறேன்.

அவ்வப்போது சில தரமான நல்ல சினிமாக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்து படங்களையும் வைத்து அடுத்த தலைமுறையையும் வைத்து பார்க்கும் போது சினிமா வளர்க்கும் எதிர்காலம் சற்று அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. இது போன்ற பல அபத்தங்களைப் பேசி ஒரு தெளிவுக்கு வருவதற்காகவே ஆயிரம் நட்சத்திரங்கள் நகரட்டும்.

References

https://www.ndtv.com/india-news/copying-horror-movie-arundhati-that-he-watched-several-times-23-year-old-dies-for-salvation-in-karnataka-3249204

https://www.newindianexpress.com/nation/2022/sep/02/kgf-inspired-19-year-old-tribal-an-ex-waiter-turns-out-to-be-mp-serial-killer-2494184.html

https://telanganatoday.com/inspired-by-money-heist-on-netflix-gang-pulls-off-kidnaps-in-hyderabad

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

மஞ்சு from அவள் அப்படித்தான்

ரெனேவைப் பேசுவதென்றால், ருத்ரையாவின் அவள் அப்படித்தான் படத்தில் வரும் மஞ்சுவைப்பற்றி பேசாமல் இருக்கமுடியாது.

“வித்தியாசமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்”,

“ஃப்ரீயா செக்ஸ் பத்தி பேசுறேன்தான். ஃப்ரீ செக்ஸ் வேணும்னா பேசுறேன்”,

“பழமொழிகளால வாழ்றத நான் விரும்பல”,

“i hate hypocrytes. வேஷம் போடுறவங்கள கண்டாலே எனக்கு பிடிக்காது.”

“அவங்க அப்டிதான் இருப்பாங்கன்னா, நானும் இப்டிதான் இருப்பேன்”,

“முரண்பாடு இல்லாம யாரு இருக்காங்க? முரண்பாடு இருக்கிறதாலதான் நாம மனுஷனா இருக்கோம்.”

“நீங்க ரொம்ப கஷ்டப்படப்போறீங்க” என்ற கமலின் வார்த்தைகளுக்கு “அதப்பத்தி எனக்கு கவலயில்ல” என்று நொடியில் பதிலளிக்கும் மஞ்சுதான், பின்பு தன்னை நல்லவன் போல் நடித்து உடலுறவு கொண்டவன் தன்னை தங்கை என்று சொல்லியதற்காக “அவன் தங்கச்சினு கூப்பிடாம, தேவிடியானு கூப்டிருந்தான்னா கூட I wouldn’t have bothered” என்று கொதிக்கிறாள்.
(படத்தை துள்ளலான தொனியில் நகர்த்திச்செல்வதே ரஜினியின் ரகளையான நடிப்பும் வசனங்களும்தான். இந்த ரஜினியை ரசிக்க தவறிவிடாதீர்கள். அவள் அப்படித்தான் படத்தின் லிங்க். https://youtu.be/lvhZBBt7oD8)

ரெனே – nose-cut நாயகி

தனக்கெனவே தனித்துவமான திமிருடன் மிளிரும் ரெனேக்கள் எப்படி உருவாகிறார்கள்? ரெனேக்களை உருவாக்குவது காயங்கள்தான். what doesn’t kill you makes you stronger. மனிதர்களின் வார்த்தைகளைத் தாண்டி அவர்களின் பார்வைகளில் இருந்தும் செயல்களில் இருந்தும் அவர்களைத் துள்ளியமாகக் கணிக்கத் தெரிந்தவர்கள். ஏனென்றால், ஒரு காலத்தில் அவர்களின் பாசாங்குகளினாலும் ஆசை வார்த்தைகளினாலும் சிறுபிள்ளைப்போல ஏமாந்து இருப்பார்கள். ரெனேக்களை பெண் என்பதாலே ருசிபார்த்திருப்பார்கள். பிறகு ஒரு கட்டத்திற்கு மேல தான் ஒரு பெண் என்பதையே கேடையமாக பயன்படுத்துவாள்.

ரெனேக்களுக்கும் மஞ்சுக்களுக்கும் பசப்புக்காரர்களின் பாசாங்குகள் நன்கு தெரியும். ஆண்கள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல ஒரே பேட்டர்னில் கொக்கி போடுவார்கள். ரெனேக்களுக்கு அலுத்தே போகியிருக்கும். இவன் அடுத்து இந்த நகர்வைத்தான் மேற்கொள்வான் என்று. பிரச்சனை என்னவென்றால், இவர்கள் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, யாவரையும் கயவர்களாகவும் நயவஞ்சகர்களாகவுமே யூகித்துப் பழகுவார்கள். 99 விழுக்காடு அவர்களின் கணிப்பு சரியானதாகத்தான் இருக்கும். ஆதரவு தருவதாகக்கூறி ஆர்கஸத்திற்கு அடித்தளமிடுவார்கள் ஆண்கள். பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள். கோரப்பற்கள் நிறைந்த தந்திர நரிகள். முத்தம் கொடுத்தால்கூட அக்கோரப்பற்களால் காயம்தான் படும். இடைவெளி கடைபிடிப்பது ரெனேக்களுக்கு நல்லது. மீதி ஒரு விழுக்காட்டு தூயமனம் படைத்த ஆண்களாகவே 99 விழுக்காடு ஆண்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அதனால் நெருங்கி வருபவர்களையெல்லாம் தூக்கி எறிவதே ரெனேக்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தருகிறது.

ரெனேவிற்கு பொருத்தமான ஆண் என்றாவது ஒருநாள் அமையலாம். இனியனைவிட, அர்ஜுனைவிட மிகப்பொருத்தமாய். ஆனால், அவனுடனும் ரெனே சண்டையிடுவாள். உலகின் மிக உண்ணதமான ஆணுடனும் ரெனே முரன்பட்டு சண்டையிடுவாள். உலகின் மகா அய்யோக்கியனிடமும் ரெனே முரன்பட்டு சண்டையிடுவாள். இந்த விஷியத்தில் ரெனேவும் ஒரு பெண்தான், எல்லாப் பெண்களும் ஒரு ரெனேதான். (ஆமா அந்தப்படத்துல இருந்துதான் சுட்டேன்.) தம்பி ஒருவன் என்னிடம் ஒரு பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டான், “அவ கல்யாணம் பண்ணிகிட்டாலே நிறைய சண்ட வரும்னு பயப்படுறாண்ணா, என்ன சொல்றது”. நான், “கல்யாணம் பண்ணினாலே சண்ட போட்டுதான் ஆகனும், அதுக்குதான் மனசுக்கு புடிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சம் சலிக்காம சண்ட போடலாம்னு சொல்லு”என்றேன். காதலும் மோதலும் வாழ்க்கைல சாதாரணமில்லையா?

அர்ஜுன் – a miserable character or a miserable characterisation?

வானவில்லைக் கடந்த காகம் பஞ்சவர்ணக்கிளி ஆனதுண்டா? அர்ஜுனும் அப்படித்தான். கபாலத்தில் அடிப்பட்ட உடன், திடீரென நல்லவனாக மாறிவிடுகிறான். அவன் தன் தவறை உணர்ந்து மாறும் அளவிற்கு என்ன நடந்துவிட்டது? திருநங்கை, தன்பாலீர்ப்பாளர்கள் மீதான அவனுடைய மதிப்பீடுகளை யார் மாற்றினார்கள்? தான் ஒரு நிகழ்வில் சண்டையிட்டு அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேன் அதனால் நான் அனைவரது உணர்வுகளையும் மதிக்கிறேன் என்று யாரும் கூறிவிடமுடியுமா? அப்படி மாறியதாகக் கூறினால் இதுவும் வெறும் நடிப்புதான் அன்றி வேறில்லை. அர்ஜுன்கள் இங்கு நிறைய உள்ளனர். ரெனே அவளைப்பற்றி சொல்லும் கதையைக் கேட்டு, அவள்மீது அனுதாபக்காதல் கொள்ளவில்லை அர்ஜுன். ஏற்கனவே அவள்மீதிருக்கும் தனது ஈர்ப்பை அவள் இளகிய நேரம்பார்த்து இறுதி ஆயுதத்தை கையில் எடுக்கிறான். ‘I love you Rene’ என்கிறான். ரெனே சலித்தேப்போய்விட்டாள். போடா டேய் என்கிறாள்.

அர்ஜுனின் மூலம் நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதை சொல்ல முயற்சிக்கிறார் பா.ரஞ்சித். இன்னும் சற்று இறங்கி அர்ஜுனின் வீட்டில் நடக்கும் நாடகங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாடகம் இருப்பக்கங்களிலும் இருக்கின்றன. அதனை இருத்தரப்புகளும் மறுத்துப் பேசுவது வாதமாக மட்டுமே இருக்கிறது. நியாயமாக இல்லை.

இப்படத்தில் தவிர்க்கமுடியாத இன்னொரு பெண் ரோஷினி. மாடர்ன் மங்கையாக வருபவர். மிகவும் இயல்பாகத் தன் வாழ்வியலுக்கேற்ற ஆடையுடனும் வரைமுறையுடனும் எல்லைகளுடனும் வாழும் பல பெண்களை, ஆடைகளைக் கொண்டு, கடிகார நேரங்களைக் கொண்டு குத்திவிளையாட ‘தேவிடியா’ என்ற சொல்லுடன் கண்படும் தூரத்தில், காது கேட்கும் தூரத்தில் எப்போதும் ஆண்கள் காத்திருப்பார்கள். இந்த கலாச்சாரக் காவலர்களிடமிருந்து இந்த பாலாய்ப்போன கலாச்சாரத்தை யாராவது காப்பாற்றினால் பரவாயில்லை என்றிருக்கும். ரெனேவும் இன்னொரு ரோஷினியாகியிருக்க வேண்டியவள். பிறப்பின்பால் தாழ்த்தப்படும் சமுதாயத்தில் ரெனேக்கள் என்றுமே ரோஷினியாக முடியாது.

ரெனேக்கள் பழகுவதற்கும், பேசுவதற்கும் மிகவும் ஆர்வமானவர்கள். அழகானவர்கள். அனைவரையும் அசரடிக்கும் அழகுகுணம் பொருந்தியவர்கள். முக்கியமாக பட்டாம்பூச்சி போன்றவர்கள். அவர்களின் ரெக்கைகளை காதல் காமம் என இரு விரல்களுக்கு இடையில் வைத்து கசக்கிவிடத் துடிக்காதீர்கள். பட்டாம்பூச்சியை பறக்கவிட்டால்தானே ரசிக்க முடியும். ரெனே ரெனேவாகவே பறக்கட்டும். நாம் ரசிகனாகவே ரசிக்கலாம். காதலோடு, ரசனையோடு, இளையராஜாவின் இசையோடு, வாழ்நாள் முழுக்க ரசிக்கலாம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

Preview in new tab

Watch Natchathiram nagargiradhu movie here in Netflix

படம் சுமார்தான். ஆனால் படத்தில் பேசுபொருட்களாக எடுத்துக்கொண்ட தலைப்புகள் மிக முக்கியமானவை. இந்தப்படத்தை நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் பெரிய தலைப்புகள்தான்.

  1. ஆணவக்கொலைகள்
  2. LGBTQIA+
  3. ரெனேக்களும் காதலும்
  4. படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

பகுதி-1 ஆணவக்கொலைகள்

தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் ஆங்காங்கே அரங்கேறுவது புதிதல்ல. அதன் பின்னனி முழுக்க 100 விழுக்காடும் ஜாதிப்பற்று அல்ல. அதில் ஒரு உளவியல் சார்ந்த சிக்கலும் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கம் என்று குறிப்பிடப்படும், ஒரு டிபிக்கல் குடும்பத்தை எடுத்துக்கொள்ளலாம். சொந்த வீடு, லோன் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஒரு கார். இரண்டு அல்லது மூன்று பைக்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டின் அப்பா ஒரு இயல்பான மனிதர் என்றே கொள்வோம். அவர் தினசரிகளில் வழக்கமாக செல்லும் இடங்கள் என்று சில இடங்களும், அங்கே வழக்கமாக சந்திக்கும் நபர்களும் இருப்பார்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள் என தினம் ஒரு பத்து பேரிடமாவது குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஏதேனும் பேசிவிட்டு வருவார். இந்த பேச்சுதான் அவரை இயல்புநிலையில் வைத்துக்கொள்ள உதவும். எதுவும் முக்கியமான பேச்சுகள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

“நேத்து நல்ல மழை, நைட்டு ஐம்பது நிமிஷம் கரண்ட்டே இல்ல. உக்ரேன்ல போர் நிறுத்திட்டாங்க. குஜராத்ல வெள்ளம். இந்த முறையும் ரெட்டலதான் வரும். வெயில் இப்பலாம் ஜாஸ்தி.”

இப்படியாக நியுஸ்பேப்பரிலும், அக்கம் பக்கத்தில் இருந்தும் அறிந்து வைத்திருந்த மேட்டர்களை பகிர்ந்து கொள்வர். இதுதான் இன்றளவும் தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பஸ்தர்களின் ராஜபோதை. இந்த நாலு பேரு மதித்து பேசும்படி இவரும், இவர் நின்று மதித்து பேசும்படி அந்த நான்கு பேர்களும் வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதற்காகவே சாராயம் தொடாதவர்களும் அதிகம் இருக்கிறார்கள். குடிச்சா யாரும் மதிக்க மாட்டாங்க என்பதால். இதற்காகவே டீ கடைகளில் டீ குடிப்பவர்களும் அதிகம். அங்குதான் நட்பு வெகுவாக பாராட்டப்படும்.

அந்தக் குடும்பத்தின் அம்மாவை எடுத்துக் கொள்வோம். இரண்டு பிள்ளைகளை வளர்த்த களைப்பு இன்னும் இருக்க, அதனோடே கணவனுக்கு மாத்திரைகளை எடுத்து கொடுத்து அவரையும் குழந்தைப்போல பார்த்துக்கொள்ளும் ஒரு அம்மாவின் மாபெரும் ஆறுதலே அவரைப்போன்ற மற்றோரிடம் பேசித்தீர்ப்பதுதான். அவர்களுக்குள்ளும் எப்போதுமே முக்கியமான பேச்சுக்கள் மட்டுமே இருக்காது. வாணி ராணி தொட்டு, பிக்பாஸ் வந்து, அமெரிக்காவில் இருந்து லீவில் வந்துவிட்டுப்போன சொந்தக்கார பையனைப்பற்றி பேசி, இன்னிக்கு என்ன டிஃபன் வரை எல்லா விசியங்களையும் சகஜமாகப் பேசி சிரிக்க ஒவ்வொரு சமயத்திலும் யாரேனும் ஒருவர் கிடைப்பர். இவர்களிடம் பேசுவதனாலே அம்மாக்களின் மனம் ஆசுவாசப்படும்.

இந்த சூழ்நிலையில் மகளோ மகனோ காதல் திருமணம் செய்துகொண்டால், அது வேறு ஜாதியில் இருந்தால், அந்த தினசரிகளில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களே இவர்களிடம் இயல்பாகப் பழக மாட்டர்கள். லாக்டவுன் காலத்தில் கொரோனா வந்த வீட்டின் முன்பு பச்சை நோட்டீஸ் ஒட்டுவார்கள் அல்லவா, அதைப்போலவே இவர்களது வீட்டின் விசியமும் ஏனையோர்களுக்கும் ஒரு பேச்சுபொருளாகிவிடும். இவர்களது வீடு பேச்சுபொருளாக ஆகியிருக்கிறது, அதற்கு காரணம் நடந்த காதல் திருமணம்தான் என்னும் தகவலை அந்த ஏனையோர்களில் சிலர் இந்த பெற்றோரிடமே சொல்லி அரிப்பை ஆர்கஸமாக்கிக் கொள்வர்.

இப்படிப்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த பெற்றோர்களும் தெரிந்தோ தெரியாமலோ பிறர் வீட்டில் காதல் திருமணம் நடக்கும் போதும் இதையேதான் செய்வர். இந்த சுற்றத்தாரின் பார்வை, சொல் தாங்காமலோ, தாங்கமுடியாது என்று பயந்தோதான், காதல் திருமணம் செய்த பிள்ளைகளை பெற்றோர்கள் இன்னும் சேர்த்துக்கொள்வதில்லை. யாரையும் பார்க்க முடியாமல், யாரிடமும் பேச முடியாமல், டிவிகளில் ஓடும் நியுஸ் சேனல்களையும், சீரியல்களையும் பார்த்து நாட்களை கடத்துவர். பிள்ளைகளது வாழ்க்கை அவர்களுக்கு பிடித்தது போல் இருப்பதில் இவர்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லைதான். ஆனால், சமூக அங்கீகாரம் கிடைக்கப்பெறாததால், அப்பாக்களின் தினசரிகளும், அம்மாக்களின் தினசரிகளையும் ஒரு காதல் திருமணம் சிதைத்து விடுகிறது. காமன் மேன்களால் இந்த உளவியல் சவாலை சமாளிக்கமுடியாமல் தினறவேண்டியதாக உள்ளது. இதைப்பற்றி பிள்ளைகள் கவலைப்பட்டு அப்பா அம்மாவிற்காக காதல் திருமணத்தை தவிர்க்க வேண்டியதில்லை. அந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ள பிள்ளைகள்தான் உடனிருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்த ஜெனேரஷன் கேப்பை நிறப்ப நிறைய விசியங்களை வெளிப்படையாக பேசவேண்டும். அவர்களின் சம்மதத்தோடு அதே காதல் திருமணம் சுற்றமும் நட்பும் சூழ நடக்க வேண்டும்.

எனது காதுகளில் நன்கு கேட்கிறது. இது எல்லோரது வீடுகளிலும் நடக்க வாய்ப்பு இல்லை. அதுவும் ஜாதி மூலமாகவே ஒரு கெளரவத்தையும் சொத்துகளையும் சேர்த்து வைத்த பெரிய மனிதற்களின் குடும்பத்தில் இது நடக்க வாய்ப்பே இல்லை.

அளவுக்கு அதிகமான பணமும் பிறர் மீதான அதிகாரமும் ஒருவனுக்கு பிறப்பின் காரணமாக மட்டுமே கிடைத்து அதையும் அவன் சிறுவயது முதலே அனுபவித்து வளர்ந்து திடீரென தன் மகனோ மகளோ வந்து பிற ஜாதியில் ஒருவரை திருமணம் செய்து வையுங்கள் என்று சொன்னாலே போதும், பாயாசத்தை ரெடி செய்ய தொடங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு இமேஜினால் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தன்னால் சுயமாக சம்பாதிக்க முடியாத இயலாத சொத்தையும் மரியாதையையும் இந்த ஜாதியில் பிறந்த ஒரே காரணத்தினாலே granted ஆக அணுபவித்து வந்திருக்கிறார்கள். இப்போது அந்த சகல செளகரியத்தை யாருக்காக விட்டுத்தருவார்கள்? யாருக்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். இவர்களின் தினசரி வாழ்க்கையை வசதியாக நடத்த பத்துக்கும் மேற்பட்ட கூலி ஆட்களை வேலைக்கு வைத்திருப்பர். மிகக் குறைந்த சம்பளத்தில் இவர்கள் எளிதில் கிடைப்பர். இவர்களை அடக்கி ஆள்வதில்தான் எத்தனை போதை இந்த பணம்படைத்த சாதிக்காரர்களுக்கு. இப்படி இருக்க தன் மகனோ மகளோ பணமில்லாத சாதியில் ஒருவரை காட்டி அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பது கூலிக்காரனை சம்பந்தி ஆக்குவதில்லையா? வாசலில் நின்று கைகட்டி பேசிய வேலைக்காரன், தோளில் துண்டு போட்டுக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்து சம்பந்தம் பேசுவது போன்ற காட்சிகளை கனவிலும் நினைத்துப் பார்க்காதவர்கள். இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர்கள் இருக்க, சரியான சமயத்தில் சக ஜாதிக்கார சொந்தங்கள், நண்பர்கள், பங்காளிகள் வந்து வேதம் ஓதுவார்கள். சாதிப்பெருமை, சாதிப்பற்று, சாதி வெறி, என அனைத்து கோணங்களிலும் ஒரு அப்பனையும் அம்மாவையும் நொடித்து பேசி, இதை சரிசெய்ய எந்த எல்லைக்கும் செல்லத்தான் வேண்டும் என்று நம்பவைத்துவிடுவர். பல சமயம் பணக்கார வீட்டு பிள்ளைகளை பலிகொடுப்பதில்லை. பணம் இல்லாதவர் வீட்டு பிள்ளையை பலி கொடுத்து பணம்படைத்த வீட்டு பிள்ளைகளை கலங்கப்படாமல் காப்பாற்றிவிடுவார்கள். கோகுல்ராஜ், இளவரசன் போன்றவர்களின் படுகொலைதான் வெளியில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. வெளியில் தெரியாத பல பெயர்கள் இன்னமும் உண்டு.

ஜாதிகளில் இருக்கும் படிநிலைகளை சமன்செய்ய ஜாதிக்கலப்பு திருமணம் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. ஏனென்றால், ஜாதி கலப்பு திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகளை அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்கவேண்டியோ அல்லது ஆணாதிக்கத்தாலோ அப்பாக்களின் ஜாதியையே பிள்ளைக்கும் பதிவிடுகின்றனர். ஆகவே, கலப்பு திருமணம் எவ்வளவு செய்தாலும் ஜாதி ஒழியாது. ஒரு ஜாதியினரின் பிள்ளை வேறு ஜாதியினரின் பட்டியலில் சேர்க்கப்படுவதினால் ஜாதி மாறுகிறதேத் தவிற ஜாதி அழிவதில்லை.

பின்பு எங்கிருந்து இதனை சரி செய்வது?

பொருளாதாரம். பொருளாதாரத்தினால் மட்டுமே வீழ்த்தப்பட்டார்கள். சோற்றுக்கே வழி இல்லாத சூழலில் அடிமைப்பட்டு உயிர்பிழைத்ததை நினைவில் கொண்டு, நிகழ்காலத்தில் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி படித்து, தொழில்தொடங்கி, தொழில் தொடங்க உதவி, பொருளாதாரத்தில் தன்னிறைவடைய வேண்டும். கோடி ரூபாய் இருந்துவிட்டால் மட்டும் கீழ் ஜாதி எனப்படுவோருக்கு மேல் ஜாதி எனப்படுவோர் தத்தம் மகனையோ மகளையோ திருமணம் செய்து கொடுப்பார்களா? நிச்சயமாக இல்லை! ஆனால், அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கும். நாடகக் காதல் என்ற பொய் குற்றம் சாட்ட வாய்ப்பிருக்காது. மாறாக வரட்டு கெளரவம்தான் திருமணத்திற்கு தடையாக இருக்கிறது என்ற உண்மையை மேல் ஜாதி எனப்படும் குடும்பத்தினர் உணர நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இவை அனைத்து ஒரே நாளில் நிறைவேறாது. பொருளாதார ரீதியாக மேம்பட இன்னமும் ஒரு தலைமுறை காலமாக ஆகும் என அனுமானிக்கிறேன்.

சில சமயங்களில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலருக்கு, மேல் சாதிக்காரனுக்கு பணத்தினால்தானே இத்தனை திமிர் என்று உணர்ச்சிவசப்பட்டு, பணம்படைத்தோரின் பணத்தையும் செல்வத்தையும் சூறையாடுவது மட்டுமே வழி என்று தப்பு கணக்கு போட்டுவிடுகின்றனர். அதன் விளைவே, கட்ட பஞ்சாயத்தின் போது, பணம் படைத்தவர்களை பணத்தை இழக்க வைக்க பேரம் பேசி பெரிய தொகையை பெற்று விடுகிறார்கள். இதுவும் சமூகத்தில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. பொருளாதாரத்தில் சமனடைய பணம் வைத்திருப்பவர்களிடம் அடாவடியாக பறிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பலரும் திறம்பட உழைத்து நிறைய பொருள் ஈட்டுகிறார்கள். நமக்கான வசதியை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். யாரிடம் இருந்தும் இலவசமாகவோ அடாவடியாகவோ பெறக்கூடாது.

ஆணவக்கொலைகள் அனைத்தும் கேட்க ஆளில்லாத நசுக்கப்பட்டவர்களின் மீது மட்டுமே நிகழ்த்தப்படுவது ஒன்றை தெளிவாக விளக்குகிறது. ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிகிறார்கள். அந்தத் துணிவு, ஆணவம் எப்படி வந்தது? அவர்களிடம் இருக்கும் பணபலத்தை நீக்கிவிட்டாலும் இதே போல வெறிகொண்டு எழுந்து வருவார்களா? கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் வசதிவாய்ப்புடன் இருந்திருந்தால், கொலை செய்ய துணிந்திருப்பார்களா? ஒரு உயிரைப் பறிகொடுத்த குடும்பம் அந்தக் குற்ற வழக்கை எடுத்து தொடர்ச்சியாக நடத்தக்கூட வசதியில்லாத நிலைமை குற்றவாளிகளுக்கு எவ்வளவு சாதகமாக அமைகிறது. அறியாமையையும், ஏழ்மையையும் களையத்தான் கல்வியும், சலுகைகளும் பெற்றுத்தந்துள்ளார் அன்னல் அம்பேத்கர். ஆணவத்தை அறிவுகொண்டு அடக்கிவிட முடியும். அடக்கிவிடுவோம். அறிவின் பின்னால் நாம் செல்வோம், நம் பின்னால் பொருளாதாரம் வரும், பொருளாதாரத்தின் பின்னால் சுதந்திரம் வரும். அடக்குமுறைகள் அக்கிரமங்கள் அற்ற முழு சுதந்திரம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

மலையன்குஞ்சு (Malayankunju) – உடைந்த கண்ணாடிகளில் நம் பிம்பம்

Movie 2022

ஃபகத் ஃபாசில் என்ற ராட்சசன். இன்னும் எத்தனை உலகங்களுக்கு நம்மை இழுத்துச்செல்வான் என்று தெரியவில்லை. ஆனால், இந்த மலையன்குஞ்சு ஒரு கண்ணாடி உலகம். இதில் பல இடங்களில் நம்மை நாம் கண்டுகொள்ள முடியும். அப்படி ஒரு கண்ணாடி உலகத்தில் கல்லெரிந்தால் என்ன ஆகும் என்று யோசிக்காதீர்கள். படம் தொடங்கும் முன்பே இந்த கண்ணாடி உலகத்தில் கற்கள் பல எறிந்து கண்ணாடிகள் உடைந்து பலவாறாக பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியில்லாத பிம்பங்களில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் அக்கண்ணாடியின் கூர்மையில் நாம் கிழித்துக்கொள்ளாமல் இருப்பது சிரமம்.

மகேஷ் நாராயணன் எழுதி ஒளிப்பதிவு செய்ய சாஜிமோன் பிரபாகரன் இயக்கியிருக்கும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக்கிடைக்கிறது. நேரம் ஒதுக்கி பார்க்குமளவிற்கு தரமான படைப்பு.

வாழ்க்கை ஓடும் ஓட்டத்தில் நாம் எவ்வளவுதான் நல்ல சிந்தனைகளை மனதிற்குள் கொண்டிருந்தாலும், சூழ்நிலை நம்மை சோதிக்கும்போது, மனதில் ஆத்திரமும், வன்மம், கோபமும் முட்டி மோதிக்கொண்டு முதலில் வந்து நிற்கும். நல்லவை மனதின் ஏதோ ஒரு மூலையில் பாய் விரித்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கும். அனிக்குட்டனாக நடித்திருக்கும் ஃபகத் ஃபாசில் வாழ்க்கை தந்த வலியை யாரிடமெல்லாமோ கோபமாய் கொட்டித் தீர்க்கப்பார்க்கிறார். ஆனாலும் தீரவில்லை. இறுதியில் அழுது கொட்டுகிறார் வலியும் வன்மமும் தீர்ந்து விடுகிறது. ஆண்பிள்ளை அழக்கூடாது என்ற எண்ணத்தினாலோ என்னமோ, வலியைக்கூட கோபமாகவே வெளிப்படுத்தத் தெரிகிறது அனிக்குட்டன் உட்பட பல ஆண்களுக்கு. முழு சைக்கோக்கள் இல்லை இவர்கள், ஷார்ட் டேர்ம் சைக்கோக்கள்.

படம்முழுக்க அனிக்குட்டன் கோபப்பட்டுக்கொண்டே இருப்பது போல இருக்கும். அவன் கோபப்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் வரும்போது அவனால் பொறுமை காக்க முடியவில்லை. காற்றடைத்த பலூனில் ஊசி குத்தியது போல வெடித்துச்சிதறுகிறான். என்றோ எங்கோ எதற்கோ யாரிடமோ ஏற்பட்ட வலி உணர்வு, அவனை நிழல்போல துரத்திக்கொண்டே வருகிறது.

மனிதன் ஒரு சமூகவிலங்கு என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. மனிதன் ஒரு உண்ர்ச்சிமிகு மிருகம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. ஆறு அறிவு இல்லை நூறு அறிவு இருந்தாலும், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதான். படம் நெடுக இதனை காட்சிப்படுத்திக் கொண்டே வருவர். அனிக்குட்டன் புத்திசாலி, சாமர்த்தியகாரன், விவரமான மனிதன். ஆனால் என்ன பயன், கோபம் அவனை அடிமுட்டாளாக்கிவிட்டது.

படத்தின் இன்னொரு ராட்சசன் இசைப்புயல் எ.ஆர். ரஹ்மான். இசையின் மழையில் நனைந்து நனைந்து மனமென்னும் ஈரமற்ற மலை கரைந்து சரிந்து தரைமட்டம் ஆகிவிடுகிறது. இயற்கை சீற்றத்திற்கு இசைப்புயலின் இசை ராகம் கூட்டியிருந்தது.

ஆயிரம் வருஷம் வாழும் ஒருவன் எத்தனை வருஷம் நல்லவனாக இருப்பான்? முதல் ஐநூறு ஆண்டுகள்? கடைசி நூறு ஆண்டுகள்? அறுபது வருசம் வாழும் நாமும் அப்படித்தான். இடையில் நல்லவராய் இருப்போம். இடையில் கெட்டவராய் இருப்போம். கெட்டதை உணர்ந்து திருந்தி நல்லவராய் இருப்போம். நல்லவராய் இருந்து பயனில்லை என்று அலுத்துபோய் மனம்போன போக்கில் அலைவோம். எல்லாம் முடியும் போது எது நல்லது என்று தேடித்தேடி அதை நோக்கி மட்டுமே நகர்வோம். இறுதி நிமிடங்களில் அனிக்குட்டன் தேடுவதைப் போல.

இது ஃபீல் குட் மூவி இல்லை. ஃபீல் கில்ட் மூவி. நாம் வில்லன் இல்லைதான். ஆனால் நல்லவனும் இல்லை. நமக்குள் இருக்கும் நல்லவனை வெளியில் கொண்டுவர போதாத காலம் வரும்வரை காத்திருக்காமல் ஒவ்வொரு நிமிடமும் நல்லதில் மனதில் இட்டுச்செல்லுங்கள். இதை உணர்த்த ஃபகத் ஃபாசிலும், ரஹ்மானும், மகேஷ் நாராயணனும், சாஜிமோனும், படத்தில் பங்களித்த அனைவரும் கைகோர்த்து படத்தை செதுக்கியுள்ளனர்.

பிரிவு 19(1)(a) & திரைப்படம் 19(1)(a) – 2022

Article 19(1)(a) in The Constitution Of India 1949 – to freedom of speech and expression

எழுத்து உரிமைக்கும் கருத்துரிமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதனை அச்சிட்டு பிரசுரம் செய்யும் உரிமைக்கும் தனியே ஒரு பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டுமோ என்கிற எண்ணத்தை வலியுறுத்தும் ஒரு உண்மை நிகழ்வும் ஒரு நிழற்படமும்மாய் கெளரி லங்கேஷும் 19(1)(a)வும்.

Chief editor Gauri Lankesh (55)

இந்தத் திரைப்படம் பெங்களூரில் 2017 செப்டம்பர் 5ல் நடத்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளரான கெளரி லங்கேஷ் (வயது 55) அவர்களின் படுகொலையை கருவாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனை குறிக்கவே விஜய் சேதுபதியின் பெயர் ‘கெளரி சங்கர்’ என கொண்டு வரப்பட்டது. (‘சங்கர்’ என பெயரிட்டதற்கும் உடுமலைப்பேட்டையில் 2016 மார்ச் 16ல் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட கெளசல்யாவின் கனவர் ‘சங்கர்’-கும் தொடர்பு உள்ளதா என்று சரியாகத் தெரியவில்லை. அது கெளரவக் கொலை என்பது குறிப்பிடப்பட்டது.) கெளரி லங்கேஷ் ஒரு பெண் பத்திரிக்கையாளர் மட்டுமல்ல அவர் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் ‘கெளரி லங்கேசு பத்ரிகே’ என்ற கன்னட வார இதழின் தலைமையாசிரியர். இவரது அப்பா P.லங்கேஷ் அவர்கள் தொடங்கிய பத்திரிக்கை அது. கெளரி லங்கேஷ் அவர்கள் இந்துத்துவா அவர்களுக்கு எதிராக அவரது பத்திரிக்கையில் எழுதிவந்ததினால், மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இப்படத்திலும் கெளரி சங்கரை மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து சுட்டுக் கொல்கின்றனர். அதே அதிகாலை நேரம் அது. படத்தில் சங்கரைக் கொன்ற இடம் தருமபுரி மாவட்டம். தன்னை நோக்கி துப்பாக்கியை நீட்டும் போது கூட அவர் ஒரு சின்ன புன்னகையோடு தோட்டாக்களை பெற்றுக்கொள்வதாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

கெளரி லங்கேஷ் அவர்கள் திருமணமாகி விவாகரத்தும் ஆனவர். குழந்தைகள் யாரும் இல்லை. சமூகத்தில் நடக்கும் அடக்குமுறைகளை அநியாயங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் உண்மையான journalist-ஆக வாழ்ந்து வந்தார். திரைப்படத்திலும் கெளரி சங்கர் (விஜய் சேதுபதி) அவர்களை தனிமையான ஆளாகத்தான் காட்டுவார்கள். தன் ஜன்னலில் இருக்கும் சிலந்தி வலையைக் கூட அவர் சுத்தம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் தெருவில் கிடக்கும் ஒரு குப்பையை எடுத்து குப்பையில் போடுகிறார். சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் அன்பும் தன்மீதுகூட இருந்ததில்லை என்பது போன்ற காட்சியமைப்புதான். இதை மனதில் வைத்து எடுத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவ்வாறே அமைந்து போனது.

இப்படத்தின் நாயகி பெண்குட்டி (நித்யா மேனன்), கேரளாவில் தன் அப்பாவின் ஜெராக்ஸ் கடையை நடத்தி வருகிறார். தனது அப்பா தொடங்கிய கடையை, அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவர் சரிவர பார்த்துக்கொள்ளாததால், பெண்குட்டியே எடுத்துக்கொள்கிறார். யாருடைய எதிர்பார்ப்பையும் ஏமாற்றிவிடாக்கூடாதென தன்னுடைய ஆசை எண்ணம் யாவற்றையும் பொருட்படுத்தாமல் வாழும் இந்தியப்பெண்கள் பெரும்பாலானோரது பிம்பமே இப்பெண். அதனாலோ என்னவோ இப்படத்தில் இவளது பெயர் இதுவென குறிப்பிட படவில்லை. இப்படத்தில் வரும் இசைகள் இப்பெண்குட்டியின் இதயத்துடிப்பாக எண்ண ஓட்டத்தின் இனிய சப்தமாக, அவளது உணர்வுகளை நம் மனதிற்கு கடத்தி விடுகிறது. உண்மையில் படத்தின் நாயகன் இசைதான். படம் மெதுவாக நகர்வதாக இருந்தாலும் தேவையான நேரம் கொடுத்தால்தான் பார்வையாளர்களின் மனதில் இப்பெண்குட்டியின் மனப்போராட்டம் சென்றடையும் என்ற முடிவு சரியானாதாகவே நம்புகிறேன்.

இப்படத்தின் திருப்புமுனையான ஒரு காட்சி. எழுத்தாளர் கெளரி சங்கர் (வி.சே.) தான் எழுதிய ‘கருப்பு’ என்னும் புத்தகத்தை நகல் எடுப்பதற்காக இப்பெண்குட்டியின் கடைக்கு வருகிறார். அதை நகல் எடுக்க சொல்லியும் அன்றிரவு வந்து வாங்கிக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு கிளம்புகிறார். கடைசியாக அப்பெண் கேட்கிறாள், பைண்டிங் பண்ணவா இல்ல ஸ்பைரல் போடவா என்கிறாள். கெளரி சங்கர், “உங்க இஷ்டம் போல பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அவரது பணி எழுதுவது அதை என்ன செய்ய வேண்டும் என்பது இச்சமூகமே முடிவு செய்யட்டும் என்பதாகவே என் காதுகளில் விழுகிறது.

அதன் பிறகே அவர் கொல்லப்பட்டார். அவர் கைப்பட எழுதிய ‘கருப்பு’ எனும் புத்தகமும் அதன் நகலும் அப்பெண்குட்டியினிடமே இருந்துவிடுகிறது. கடைக்கு வந்து நகலெடுக்க சொன்னவர் யாரென்றே தெரியாத பெண்குட்டி அவரது இறப்புக்கு பின்பே அவரைப்பற்றியும் அவரது எழுத்துக்கள் பற்றியும் தெரிந்து கொள்கிறாள். இச்சமூகம் இறந்தபிறகுதான் ஒருவருக்கு மாலையிட்டு மரியாதை செய்கிறது. சிலை வைக்கிறது. வாழும் பலரையும் கொண்டாட மறந்துவிடுகிறது. பலரது படைப்புகளையும்கூட மறந்துவிடுகிறது.

அவரை தெரிந்து கொள்ளும் பயனத்தில் சமூகத்தில் சத்தமில்லாமல் கிடக்கும் பல கேள்விகளையும் அடையாளம் கண்டுகொள்கிறாள். தன் சகோதரியிடமும்கூட அவளது கேள்விகேட்கத் தயங்கும், தன் கருத்தை சொல்லாமல் தவிர்க்கும் மனப்போக்கை கண்டு சமூகம் எப்படி கேள்விகளுக்கும் அதை எழுப்பும் குரல்களுக்கும் பூட்டு போட்டுள்ளது என சாட்சி படுத்திக்கொள்கிறாள். அவ்வப்போது காட்டப்படும் கருப்புக்கொடியும் கம்யுனிசக் கொடியும் சொல்லாமல் நிறைய சொல்லிவிட்டுப்போகின்றன.

ஆற்றோடு மிதந்து வரும் ஏதோ ஒரு பறவையின் இறகை தன் மேசைவரை கொண்டு வந்து வைத்துக்கொள்கிறாள் அப்பெண்குட்டி. கெளரி எழுதிய பிற புத்தகங்களுக்கும் அப்படிதான் அவள் தன் மேசையில் இடம் கொடுக்கிறாள்.

இப்படத்தின் ஒரு காட்சியில் கெளரியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடுவார்கள். வீட்டுக்கு வந்த கெளரி பதறிப்போய் தேடுவது தான் எழுதிய புத்தகத்தின் தாள்களைத்தான். எதைவிடவும் தன் எழுத்துதான் முக்கியம் என இருக்கும் ஒரு எழுத்தாளர் தான் எழுதிய புத்தகத்தின் அசலை அப்பெண்ணிடம் நம்பிக்கையோடு கொடுத்துவிட்டுச் செல்கிறார். அப்பெண்ணும் அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடுகிறாள். அவள் இஷ்டம்போல செய்கிறாள். அதுவே சரியானதாக இருக்கிறது. எது சரியோ அதுவே எனது இஷ்டம் என்ற நிலைப்பாட்டிற்கும் வந்தடைகிறாள்.

எல்லாவற்றிற்கும் மேலாக “ஒரு எழுத்தாளருக்கு இந்த உலகம் என்ன தந்துவிடப்போகிறது?” என்ற கேள்விதான் “அவர் எழுத வேண்டுமா?“அப்படி எழுதினால் எதை எழுத வேண்டும்? ” போன்றவற்றை முடிவு செய்கிறது. நன்கு கவனித்தீர்களானால் ஒன்று புரியும். ஒரு எழுத்தாளர் இவ்வுலகுக்கு எவ்வளவோ தரலாம், பதிலுக்கு இவ்வுலகம் ஒரு எழுத்தாளருக்கு மரியாதையையும் வசதியையும் மட்டுமே தரவியலும். இதை உணர்ந்ததினால்தான் சில எழுத்தாளர்கள் கொடுக்கவல்ல இடத்தைவிட்டு விலக மறுக்கிறார்கள். ஒரு பத்திரிக்கை எழுத்தாளனை விலைக்கு வாங்கிவிட முடியாது. அப்படி வாங்க முடிந்தால் அவன் சாதாரன கதாசிரியராகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நேர்மையான எழுத்தாளராகவும் ஒரு இயக்குனராகவும், நல்லதை கொடுக்கவல்ல இடத்தில் இருந்து பொறுப்புடன் திருமதி இந்து V. S. இப்படத்தை செதுக்கியுள்ளார்.

கெளரி சங்கரை கொலை செய்யும் மர்ம நபர்கள் வரும் இருசக்கர வாகனத்தின் ஒலி, படத்தின் இறுதியில் அப்பெண்குட்டி தன் கடையை அடைத்துவிட்டு வெளியே செல்லும்போதும் வரும். கெளரி சங்கரைக் கொன்ற போது வந்த அதே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுவிடுமோ என்ற பதற்றத்தை அது தந்துவிடுகிறது. சத்தம் கேட்டதா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். Hotstar-ல் படம் காணக்கிடைக்கிறது. தேட்டர் ரிலீஸ் ஆகியிருந்தால் நிச்சயமாக ஃப்லாப் லிஸ்டில் சேர்த்திருப்பார்கள். ஓடிடி என்பதால் இது மக்களுக்கு சென்றடைய போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

விஜய் சேதுபதியின் பேச்சு இன்னும்கூட நன்றாக இருந்திருக்கலாம். க்ளைமேக்ஸ் இன்னும் வீரியமாக இருந்திருக்கலாம். இந்திய மசாலாப் படங்களைப் பார்த்து பார்த்து ஊறிப்போன மனதிற்கு இயல்பான இறுக்கட்ட காட்சிகள் சற்று சலூப்பூட்டுவதாகவே தோன்றுகிறது. இப்படத்தைப் போன்ற படங்கள் அதிகம் வரும் போது இந்த dramatic, cinematic எல்லாமும் மனதின் எதிர்பார்ப்புகளில் இருந்து குறைந்துவிடும்.

“ஒரு படத்தைக்காண்பவர் அப்படத்தில் என்ன காட்டப்படுகிறதோ அதைப் பார்ப்பதைக்காட்டிலும்ம் தான் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் காண்கிறார்.” – (இதைச் சொன்னவர் யாரென சரியாகத் தெரியவில்லை. மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் சொல்லியதாக ஞாபகம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.)

-சூர்யா வாசு 10.00 pm 11-08-2022

காதல், மேட்டர் மற்றும் தமிழ் சினிமா

சினிமாவுல சொல்ற நிறைய விசியங்கள் முகம் சுளிக்கிற மாதிரிதான் இருக்கு. ஆண்-பெண் உறவுகளில் அது சொல்லவரும் கருத்து/நியாயம் என்பது பலவாறானது. அது அந்தந்த சினிமாக்காரர்களின் இலக்கணம், விருப்பம், ஆசை, நிராசை, கற்பனை இப்டிலாம் வச்சிக்கலாம் ரசிக்கலாம் தவிற, அது மக்களின் வாழ்க்கைக்கான நெறிகள் இல்லை. ஆனால் மக்கள் அவ்வளவு தெளிவா என்ன?


இப்போ, கல்யாணத்துக்கு முன்னாடி கற்பமாறதுதான் கான்சப்ட்.

லவ்’ங்கிற கான்செப்ட்ட ஓவர்ரேட் பண்ணி பண்ணி ரொமான்டிசைஸ் பண்ணி பண்ணி லவ்வுன்னா என்னன்னே தெரியாம நானும் லவ் பண்றேன்னு ஏதேதோ பண்ணிட்டு இருக்காங்க. (இருந்தோம், இருக்கிறோம், இன்னும் பலனூறு ஆண்டுகளுக்கு இருப்போம்.) 

சென்ஸிடிவ் விசியத்த சென்ஸிடிவா கையாளனும். அதுதான் சரி. அத வச்சி காமெடி பண்றது, நார்மலைஸ் பண்றது ரியாலிட்டிக்கு செட் ஆகாது. இவை பெரும்பாலும் வாழ்க்கையை கடினமாக்கும் விடயங்கள். ஒவ்வொன்றாக இதை வகைப்பிரிக்க முயற்சிக்கிறேன். நூறு சதவீதம் என்னால் இந்த சிக்கல்களை வகைப்பிரிக்க முடியாதுதான், இருந்தாலும் பரவால முயற்சிக்கிறேன்.

ஒரு ஆர்டராக வருவோம்.

  • புடிச்சிருக்கனும்
  • ப்ரொப்போஸ் பண்ணனும்
  • ஒன் சைட், டூ சைட் ஆகனும்
  • வீட்ல சொல்லனும், போராடி சம்மதிக்க வைக்கனும்
  • கல்யாணம்
  • ஃபஸ்ட் நைட் (90ஸ் கிட்ஸ் அப்டிதான் சொல்லுவோம். 2K கிட்ஸ்’கு மேட்டர்னு நெனைக்கிறேன்)
  • ப்ரெக்னெண்ட்
  • குழந்தை
  • அப்றம் ஸ்கூல் பீஸ் கட்ட போராடனும்.

இது யதார்த்த லவ் மேரேஜ் பண்ணவங்க லைப்ல நடக்கிற சம்பவங்கள். 

இதில் கல்யாணத்துக்கு முன்னாடி ஃபஸ்ட் நைட்/மேட்டர் வருதுனா அதுதான் ஆண் வர்க்கத்துக்கே உரித்தான லட்சியக் கனவு. அதற்காகவே ஏங்கித்தவிக்கும் வாலிபர்கள் இல்லாத பள்ளி, கல்லூரி, அலுவலகமே இல்லை.

அப்படி நடக்கும்போது மேட்டரின் போது இருந்த அதே காதலிதான் கல்யாணத்தின்போதும் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஆண்களுக்கு கட்டாயம் இல்லை. ஆனால், இதை திரையில் கொண்டு வந்து நார்மலைஸ் ஆக்குவது ஆபத்து. ஆல்ரெடி மேட்டர்ங்கிறது அங்க இங்கன்னு நார்மலைஸ் ஆகிட்டு இருக்கு.

கல்யாணத்துக்கு முன்னாடி ப்ரெக்னெண்ட் ஆகுறதுதான் ட்விஸ்ட்டு. அதுக்கு முன்னாடி மேல சொன்ன 1 to 9 ஆர்டர்ல, சினிமா என்னவெல்லாம் கலேபரம் பண்ணிவச்சிருக்குன்னு ஒரு ரீவைண்ட் பண்ணி பாக்கலாம்.

கான்செப்ட் 1

காதல் – கல்யாணம் – சுபம். 

ஒரு பையனுக்கு ஒரு பொண்ண புடிச்சிபோச்சின்னா அவளையே கல்யாணம் பண்ணிகிட்டா போதும் அவங்க வாழ்க்கைல ஜெயிச்சுருவாங்க. இதுல முக்கியமா கீழ் ஜாதி மேல் ஜாதி கலக்கனும், இல்லன்னா கிக் இருக்காது. தொரத்தி தொரத்தி அந்த பையன் ‘நீ என்னத்தான் லவ் பண்ணனும்’னு டார்ச்சர் பண்ணி, ‘ஆமா நான் உன்னதான் லவ் பண்றேன்’னு அந்த பொண்ணே சொல்லிறனும். பல வருடங்களா மொத்த தமிழ் சினிமாவும் இதுதான். இப்பவும் இது தொடருது. இந்த மண்டையனுக்கு லவ் வந்துட்டா அந்தப் பொண்ணுக்கும் இவன் மேல லவ் வந்தே ஆகனும். உன் லவ் ட்ரூ லவ்தான் இல்லங்குல, ஆனா உனக்கு புடிச்சிருக்குன்னா அவங்களுக்கும் புடிச்சே ஆகனுங்கிறது ஒருவிதமான சைக்கோத்தனத்துல வரலையா? ஸ்டாக்கிங்-க்கும் லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் சினிமா மாட்டுனா இதான் கதி.

எ.கா. காதலுக்கு மரியாதை, சிவாஜி, ஆடுகளம், இத்யாதி இத்யாதி, மெளனராகம்.

கான்செப்ட் 2

முதல் காதல் – தோல்வி – ரெண்டாவது காதல் – கல்யாணம் – சுபம்.

இது கொஞ்சம் யதார்த்தம், சில உஷாரான பொண்ணுங்க என்னதான் தொரத்தி தொரத்தி சைக்கோத்தனம் பண்ணினாலும் ஏமாறமாட்டாங்க. போடா டோமருன்னுட்டு தப்பிச்சு போயிடுவாங்க. (சினிமால இத ப்ரேக் அப்னு சொன்னா நல்லாருக்காதுன்னு, கதைப்படி முதல் காதிலி செத்துட்டான்னு ஒரே போடா போட்டுருவாங்க) ஆனா அதே பைத்தியக்காரத்தனம் சில பொண்ணுங்களுக்கு புடிச்சு போயிருக்கும். ஆமாம். 

எ.கா. வாலி, வாரணம் ஆயிரம், சில்லுன்னு ஒரு காதல், ராஜா ராணி, 7ஜி ரெயின்போ காலனி.

கான்செப்ட் 3

நிறைய காதல் – நிறைய தோல்வி – கடசியா ஒரு கல்யாணம் – சுபம்.

இத விளக்க தேவையில்லன்னு நினைக்கிறேன். கிடைக்கிற வரைக்கும் அலைய வேண்டியதுதான். பாக்குற எடத்துல எல்லாம் அப்ளிக்கேசன் போட்டறனும்.

எ.கா. ஆட்டோகிராஃப், ப்ரேமம், அட்டக்கத்தி.

இதுக்கு அடுத்த ஸ்டேஜ் மேட்டர். என்ன மாயமோ தெரியல தமிழ் சினிமால கல்யாணத்துக்கு முன்னாடி மேட்டர் பண்றதெல்லாம் ok cool / casual / not a problem / heavenly / so what? / they need it னு glorify பண்ற காலகட்டம் சீக்கிரமா முடிஞ்சிரிச்சி. அதிக டைம் எடுத்தக்கல.

கான்செப்ட் 4

காதல் – மேட்டர் – ப்ரேக்கப் – வேற ஒருத்தனோட கல்யாணம் – ஹீரோக்கும் வேற ஒரு புது லவ்.

எ.கா. வின்னைத்தாண்டி வருவாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா.

கான்செப்ட் 5

கல்யாணம் – குழந்தை – டிவோர்ஸ் – ரெண்டாவது காதல்

எ.கா. என்னை அறிந்தால், ரிதம், வேட்டையாடு விளையாடு, 

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆன கொஞ்ச வருசத்துல தன் கனவன் இறந்துட்டா, ரெண்டாவது கல்யாணம் பண்றதுன்னா அந்தப் பொண்ணுக்கே தப்புன்னு தோணும். அந்த அளவுக்கு சமூகம் போதிச்சு வச்சிருக்கும். இது வாழ்க்கைய இன்னும் கடினமாக்குறது. ரெண்டாவது கல்யாணம் எனும்போது, இது சரிதான் யார் என்ன சொன்னாலும் தன் நலனுக்காகவும் தன் குழந்தையின் நலனுக்காகவும் சில சமூக கட்டுபாடுகளை தாண்டி வந்துதான் கல்யாணம் செய்வார்கள். அது வரவேற்கத் தக்கது. வாழ்க்கை வாழ்வதற்கே. சமூகத்தை மனம் கோணாமல் வைத்து அழகு பார்ப்பதற்கு அல்ல.

திருமணத்திற்கு பிறகான காதலை பதிவு செய்த படங்கள் என்பது மிகச்சொற்பம். இருந்தா சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன். மிகைப்படுத்தப் படாத காதலை, யதார்த்த காதலை பதிவு செய்தப் படங்களுள் ஒன்று அட்டக்கத்தி. பசங்க அப்டிதான் லவ் பண்ணுவானுங்க. ஒன்னு போச்சினா இன்னொன்னு. 96 காதல்லாம் ரியாலிட்டில கோடில ஒன்னுதான். அதுவும் பைத்தியக்காரத் தனமாத்தான் தெரியுது எனக்கு. வேணும்னே கல்யாணம் பண்ணிக்காம இருந்துகிட்டு ஜானு மாதிரி யதார்த்த பொண்ணுக்கும் ஒரு கில்ட் ஃபீலிங் ஏற்படுத்த முயற்சிக்கிறது எவ்ளோ சைக்கோத்தனம்? அந்த கில்ட் போக அவ என்ன பண்ணனும். 96 படத்த பாத்துட்டு, கேரலாவுல நடந்த ஒரு ஸ்கூல் கெட்டுகெதர்ல ஒருவரது மனைவி தன் முன்னால் காதலனுடன் ஓடிப்போனதுதான் ரியாலிட்டி.

மேட்டர் லவ்வர் கூட மட்டுமா? இல்ல ஃபிரண்டஸ் வித் பெனிஃபிட்டா, மேட்டர் பண்ணிட்டா அந்த நபரையேத்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்களானுலாம் கேக்காதீங்க. பதில் இல்லை. பதில் இருந்தாலும் அது சரியா தவறா என்பதெல்லம் அந்தந்த சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்களா இல்லை காயப்படுத்திக் கொள்கிறார்களா என்பதே தீர்மானிக்கும். 

சில டாக்ஸிக் நபர்களிடம் இருந்து உறவுகளை முறித்துக் கொண்டால் அது சரியே. அது திருமணமே ஆகி மூன்று குழந்தைகள் இருந்தாலும் சரி. நம் வீக்நெஸ்ஸை தெரிந்துக் கொண்டு, நம்மை எமோஷ்னலாக துண்புறுத்தும் ட்ரிக்கர் செய்யும் எவரையும் நம் வாழ்வில் இருந்து தூக்கி எறிவதே சரி.

ஒரே ஒரு படம் வந்துச்சு ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’னு அதுலையும் ஏகப்பட்ட நாராசமான விசியங்கள 18+ ஆ இல்ல அடல்ட் காமெடியா இல்ல என்ன எழவுன்னே வகைப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். நான் ஒரு விர்ஜின் பையன், எனக்கு விர்ஜின் பொண்ணுதான் வேணும்னு ஜி.வி. கேக்க, விடிவி கனேஷ் ‘அதெல்லாம் டைநோசர் காலத்துலையே அழிஞ்சி போச்சிடா தம்பி’னு சொல்லுவார். என்ன சொல்ல வர்றாங்க? ஊர்ல இருக்குற பொண்ணுங்கெல்லம் தேவிடியான்னா? இதுக்கும் தேட்டர்ல விசில் பறந்துச்சு. அந்த தேட்டர்ல பெரும்பாலும் பசங்கதான், சில லவ்வர்ஸ் கப்பில்ஸ் வந்திருந்தாங்க. ஒரு குடும்பமும் வந்திருந்துச்சு. அதுவும் இண்டர்வல்ல கிளம்பி போகல. முழுபடமும் பாத்துட்டுதான் போனாங்க. டிக்கட் காசு வீணாகக்கூடாதுன்னு நெனச்சிருப்பாங்க போல. அந்தக்குடும்பத்துல பத்து வயசுப் பையனும் அடக்கம்.

அடுத்து அப்டி மேட்டர் பண்ணி ப்ரெக்னன்ட் ஆகுறது தனி கிக் ஆடியன்ஸுக்கு. இப்போ என்ன பண்ண போறாங்கன்னு இவங்களாலையே யூகிக்க முடியலனாதான் படம் சுவாரசியமா போச்சின்னு மைக்ல, fbல, டிவிட்டர்ல, யுடியுப்ல எல்லாம் சொல்லுவாங்க. இல்லன்னா படம் ஓடாது. லாபம் வராது. சினிமாக்காரங்க சிலர் கார் வீடு பங்களானு செட்டில் ஆக முடியாது.

அந்த சினிமால எதுலையும் கண்டிப்பா ஒரு மாத்திரைல கருவ கலைக்க மாட்டாங்க. அந்த பொண்ணுக்கு கலைக்க மனசு வராது. வராதா? இல்ல வரக்கூடாதா? இப்டிதான் கொஞ்ச காலம் தாலி செண்டிமெண்ட்ட தூக்கி புடிச்சிட்டு இருந்தாங்க. தாலி கட்டிட்டா அவந்தான் புருசன், அது இதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க. புதுப்பேட்ட தனுஷ் மாதிரி எவனாச்சும் தாலி கட்டினா யாரும் தாலிக்கட்டினவன் கூடத்தன வாழனும்னு பேசப்போறதில்ல. கழட்டி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க.

அப்போ தாலி, இப்போ கற்பம். 

கலைக்கவே கூடாதாம். ஏன்னா அது ஒரு உயிராம். அவசரப்பட்டு பையனும் பொண்ணும் தப்பு பண்ணிட்டாங்க அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் சரி. குழந்த பொறந்து நாலு அஞ்சு வருசம் கழிச்சி அந்தப் பையனுக்கு ஒரு சந்தேகம் வருது. சுயமாகவோ இல்லை சொல்லிக்கொடுத்தோ வரலாம். அந்த குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். அந்த பொண்ணோட வாழ்க்கையே சூனியமாகிவிடும். மெண்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பது எல்லருக்கும் இங்கு புரிய வாய்ப்பில்லை. மெண்டல் ஹெல்த் குறைவாக உள்ளவர்களிடம் நெருக்கமாக வாழ்ந்தவர்களுக்குதான் அது புரியும். ஒரு உயிர காப்பாத்தறதா சொல்லி, அந்த பொண்ண காயப்படுத்தி ரணமாக்கி கடசில அந்த குழந்தையோட மனசுலையும் நஞ்சுதான் வளரும்.

ப்ரோ டாடி படத்துல வர மாதிரியோ அர்ஜுன் ரெட்டி படத்துல வர மாதிரியோ அவ்ளோ ஈசியா கற்பமான பொண்ண ஒத்துக்க மாட்டாங்க. குடும்பம் அக்கம் பக்கம்னு அவள சுத்தி இருக்கிற எல்லாரும் அவள பேசிப்பேசியே சாவடிச்சிருவாங்க. அவ ஒரு தேவிடியாத்தான்னு நிரூபிக்க அவள எப்பவும் ஒரு கூட்டம் மொச்சிகிட்டே இருக்கும். அவளோட நடை உடை பாவனை பாவாடை மயிர் மட்டைன்னு எல்லாத்தையும் நோட்டம் விடும். எதாவது ஒரு நேரத்துல, அவ கால் சந்துல வேற யாரு இருக்கா, இருந்தா, இருப்பானு தெரிஞ்சிறாதானு தேடுவாங்க. அவ்ளோ அரிப்பு இருக்கு அடுத்தவங்க அந்தரங்கத்த தெரிஞ்சிக்கிறதுல.

சிங்கிள் மதர்களிடம் கேட்டுப்பாருங்கள், நியாமான காரணத்திற்காகவே அவர்கள் தன் கனவனை பிரிந்து தானே குழந்தையை வளர்க்க முயற்சித்தாலும், அது அவ்வளவு சுலபமாக இருந்திராது. பல ஆண்கள் தீண்டத்துடிப்பார்கள். சின்ன கேப் கிடைக்காதா எனக் காத்திருப்பர்கள். நல்லவர்கள் போல் நயமாக பேசி மனதைக்கவர மெனக்கெடுவார்கள். இவர்கள் அனைவரும் நரிகள்தான். அசந்த நேரம் வாயில் போட்டு மென்று தின்று சற்று கசந்தவுடன் சக்கையாய் துப்பிவிட்டு போடி தேவிடியா என்று வாயாற வாழ்த்திவிட்டு அடுத்த தேவிடியா யாரென்று தேடிப் போய் விடுவார்கள். ஆண்களுக்கு வெரைட்டியாக அனுபவிப்பதில் அவ்வளவு அலாதி இன்பம்.

ப்ரோ டாடில வர மாதிரி ரெண்டு பேர் வீட்லையும் அப்பா அம்மாலாம் எங்கயுமே இருக்க மாட்டாங்க. நாப்பது ஐம்பது வயச நெருங்கிய எல்லாருக்கும் தெரியும் சமூகத்துல நமக்கான மரியாத’ங்கிறது எவ்வளவு முக்கியம்னு. தன் பையனோ பொண்ணோ இப்டி பண்ணிட்டான்னு வெளிய தெரிஞ்சா தன்ன புறக்கனிப்பாங்கன்னு இங்க எல்லாருக்கும் தெரியும். ப்ரோ டாடில வர மாதிரி எல்லா அப்பாக்களும் இங்க கோடீஸ்வர முதலாளிகள் கிடையாது. பலரும் தமிழ்நாட்டுல மிடில் கிலாஸ்தான். இந்த எலைட் குடும்பங்கள் ஒரு பிரச்சனையை கையாளும் விதத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு சாதாரன மக்கள் தங்களின் பிரச்சனைகளை ஒரு இன்ச் கூட அனுக முடியாது.

ஆதலால் காதல் செய்வீர்தான் ரியாலிட்டியை பதிவு செய்த படம். அதுதான் யதார்த்தம். சபையில் ஒருவர் “ஏன்யா சும்மா பேசிட்டு இருக்கீங்க? பொண்ணோட ஒரு நைட்டு ரேட்டு எவ்ளோன்னு சொல்லுயா.” என்பார். எந்தத் தகப்பனும் கேட்கக் கூடாத வார்த்தைகள்.

இந்த சினிமாக்காரனுங்க இப்டிதான் எதையாவது டிரெண்ட் பண்ணிட்டு சமூகத்துல ஒரு மனநிலையை உருவாக்கிட்டு அடுத்த டிரெண்ட செட் பண்ண போயிருவானுங்க. பாவம் இந்த மக்கள்தான் அந்த டிரெண்டை தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஃபாலோ பண்ண ட்ரை பண்ணி செத்துகிட்டு இருக்காங்க. நல்லத சொல்லவும் இங்க படங்கள் இருக்கு. ஆனா சொற்பம். பேசப்படாத பல விசியங்கள பேசி ஒரு தீர்வு கொண்டு வரனும், அதற்கு கலை ஒரு மிகப்பெரிய ஆயுதம். அதை திருத்தமா பயன்படுத்தனும். இல்லன்னா அது திசையறியாமல் எல்லாரையும்தான் சிதைக்கும். முக்கியமா சினிமாவ பாத்து இதுதான் உலகம்னு நினைக்கிற வளரும் தலைமுறையினர ரொம்ப பாதிக்கும்.

இங்க யார் என்ன சொல்லனும்ங்கிற வரைமுறைய வகுக்குறது மிகப்பெரிய சிரமம். பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு. தெரியுதோ இல்லையோ வாய்க்கு வந்தத பேசிவச்சிட்டும் தோன்றத எல்லாம் படமா எடுத்துவச்சிட்டும் போயிருவாங்க. அது நன்மையா தீமையானு தெரியாம பரவசத்துல எடுத்து வாழ்க்கைல பொறுத்திபாத்துட்டு, பின்னாடி அவதிபடுறது என்னமோ சாதாரண மக்கள்தான்.

ஆகையால், “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்”ங்கிறத அடுத்த தலைமுறைக்கு நம் வாழ்வின் வழியாக வாழ்ந்து காட்டுவது நமது கடமை. நம் கடமை என்றென்றும் தவறேல். கலையை கலங்கமில்லாமல் உருவாக்கவும் உள்வாங்கவும் நல்லறிவுடன் முனைவோம்.

#brodaddymovie  #bachelormovie  #arjunreddymovie  #மா shortfilm #ஆதலால்_காதல்_செய்வீர்

-சூர்யா வாசு

-26-06-2022 11.20 am