அம்மு (Ammu) 2022 மற்றும் The Great Indian Kitchen 2021

அம்மு – Ammu (2022)

அக்டோபர் மாதம் அமேசான் ப்ரைமில் வெளிவந்த அம்மு படம், சத்தமில்லாமல் பல மெளனங்களை உடைத்தது என்றே சொல்லலாம். உடைபட்ட உடன் மெளனங்கள் உரக்கப் பேசின என எண்ண வேண்டாம். அதுதான் நடக்கவில்லை. சில மெளனங்களை உடைக்கும் சத்தம் அதிகமாக இருக்கும். சில மெளனங்கள் உடைந்த பிறகு வரும் குரலின் சத்தம் அதிகமாக இருக்கும். சில சமயம் அந்த குரலின் கனம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தப் படம் சற்று வித்தியாசமாக இருந்தது. இது ஒரு பெரும் மெளனத்தை உடைத்தது. உடைக்கும் சத்தமும் யாருக்கும் கேட்கவில்லை. உடைத்த பிறகும் எந்த சத்தமும் எழவில்லை. ஆம் அப்படி ஒரு நிசப்தமான பேரசைவுதான் அம்மு. 

இந்தப் படத்தில் வரும் அம்முவின் கணவர் பெயர் ரவி. ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ரவியுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தான் எந்தளவிலான முரடன் என்பதை சாட்சிப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தத்ரூபமான கதாப்பாத்திரம் ரவி. அதை ஏற்று நடித்த நவின் சந்திரா கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். யதார்த்தத்தில் ஆண்கள் அனைவரும் ரவி அளவிற்கு கொடூரக்காரர்கள் இல்லை என்றாலும் சில சில இடங்களில் ரவியுடன் ஒத்துப்போகாமல் இருக்க முடியாது. நிஜத்தில் பல ரவி’க்களும் இங்கு உள்ளனர்.

போலீஸ் ரவி வில்லன். திருடன் பிரபு ஹீரோ. பிரபு கதாப்பாத்திரத்தில் பாபி சிம்மா நடித்துள்ளார். ஜிகர்தண்டா, இறைவி படங்களுக்குப்பிறகு அவரது நல்ல நடிப்பை அம்முவில் காணலாம். தான் செய்த எந்தத் தப்பிற்கும் சிறிதும் வருந்தாத ரவி மிருகமாகவும் தான் செய்த ஒரே ஒரு தவறுக்கு தினந்தினம் மனம் வருந்தும் பிரபு நல்லவனாகவும் தெரிகிறார்கள். ரவி பிரபுவை அடிக்கும் போது பிரபு சொல்லும் ஒரு வசனம், ‘ஆனா நீங்க சூப்பர் சார்! யாரை அடிச்சா திருப்பி அடிக்க மாட்டாங்களோ கரெக்டா செலெக்ட் பண்ணி அடிக்றீங்க சார்.’ என்று சொல்லிவிட்டு அம்முவை நோக்கி, ‘மேடம் கரெக்டா?’ என்பான். இதுதான் உண்மையும் கூட. ரவி’களுக்கு யாரை அடிக்க முடியும் யாரால் நம்மை திருப்பி அடிக்க முடியாது என்பதெல்லம் அத்துபடி. மனதில் இருக்கும் வன்மத்தை பெண்கள் மீது காட்டுவதை மிக மிக எளிதாக்கிக் கொள்வார்கள். ரக்கட் பாய் மொமெண்ட்டுகள் நிறையவே இருக்கும். ஆனால் அது பெண்கள் மீது மட்டுமே இருக்கும்.

அம்மு படத்தின் இயக்குநர் சாருகேஷ் சேகர். நிஜத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்களை மிக நேர்த்தியாக காட்சிபடுத்தியுள்ளார். ஆனால், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதை மட்டும் நிஜத்தில் நடப்பது போல் யோசிக்காமல் சினிமாத்தனமாக தீர்வை வைத்துள்ளார். படத்தின் முதல் பாதி அப்பட்டமான நிஜ வாழ்வியலைக் கண்முன்னே நிறுத்திவிட்டு. இரண்டாம் பாதியை வழக்கமான வெற்றித் திரைப்படங்களின் பேட்டர்னில் திரைக்கதை அமைத்துள்ளார். அம்மு படத்தின் இறுதிக்கட்ட திரைக்கதையை zootopia (2016) என்னும் அனிமேஷன் படத்தில் இருந்து தழுவி எடுத்துள்ளார் என்பதை மறுக்கமுடியாது.

அம்மு. அம்மு ஒரு சராசரி இந்தியப் பெண் என்று சொல்லலாம். உலகம் தெரியாதவள். ரவிதான் அவளுக்கு உலகம் என நம்பிக்கொண்டிருப்பவள். ரவியை விட்டுவிட்டால் என்ன செய்வதென்றே தெரியாதவள். நாள் முழுக்க ரவியையும் தன் வீட்டையுமே சிந்தனையாய்க் கொண்டவள். அக்கம் பக்கத்தினரிடம் தன் மனதைப் பேசி ஆறுதல் அடைந்து கொள்ளும் இயல்பான பெண். ஒரு கொடூர ஆணிடம் சிக்கித் தவிக்கிறாள். இதற்கிடையில் தான் கருவுற்றால், குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று திணறுகிறாள். இவள் அனுபவிக்கும் வதைகளே போதும். இந்தப் போராட்டத்தில் இன்னொரு உயிரைக்கொண்டு வர வேண்டாம் என்று எண்ணுகிறாள். ஆனால் நிஜம் வேறு. ஓரிரு வருடத்தில் ஒரு குழந்தையும் அடுத்த மூன்று நான்கு வருடத்தில் இன்னொரு குழந்தையும் பிறந்துவிடும். சுற்றி சுற்றி அழுகையும், முதுகை ஒடிக்கும் வீட்டு வேலையும், சமையல் வாடையுமாய் ஆறேழு ஆண்டுகள் ஓடுவதே தெரியாமல் போய்விடும். இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றால்தால்தான் மதிய வேளையில் அப்பாடா என்று ஜன்னல் திரையை இழுத்து வெளிச்சத்தை மறைத்துவிட்டு அலுப்பில் பாதி தீர ஒரு உறக்கம் போட முடியும். இதில் கணவனின் அறச்சீற்றங்கள், நாத்தனாரின் நாரதர் பணிகள், மாமியாரின் புதுப்புது அர்த்தங்கள், மாமனாரின் லேட்டஸ்ட் ரூல்ஸ்கள், என டிசைன் டிசைனாக சவால்கள் வந்தவண்ணம் இருக்கும். அம்மு நிஜமானவள். அம்முவின் பிரச்சனைகளும் நிஜமானவை. அம்முவிற்கான தீர்வு மட்டும் கற்பனையானது வருத்தம்.

தி கிரேட் இந்தியன் கிட்சன் – The great Indian kitchen (2021)

சென்ற வருட தொடக்கத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் இதை மறு உருவாக்கம் செய்கிறார்கள் என்று அறிகிறேன்.

சமையல் தெரியாத பெண்கள் இன்று ஏராளம். அது தவறு இல்லை. சமையலின் முக்கியத்துவம் தெரியாததில்தான் பிரச்சனை. சமைக்க வராத பெண்களுக்கு சமையலின்மீது ஒரு பெருங்கோபம் இருக்கும். அதை யார்மீது காட்டுவது என்று தெரியாது. அவர்களுக்கு இந்தப்படம் ஒரு சிறந்தப் படமாகத் தெரியும். அதுதான் ஆபத்து. படத்தின் பேசுபொருளாக இருப்பது ஆணாதிக்கம் என்பது போல் தெரிந்தாலும் உண்மையில் பேசுபொருள் ‘உழைப்பு’. யார் எங்கு என்ன உழைக்கிறார்கள் என்பதே அடிநாதம். சமைக்க வரவில்லை அல்லது பிடிக்கவில்லை என்பதற்கு தீர்வு ஒரு சமையல் தெரிந்த வேலையாள். அது போதும். மருமகளேதான் சமைக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. சமையலுக்கு ஆள் போட வேண்டும் என்றால் மருமகள் அதற்கேற்றார்போல் சம்பாதிக்கவும் வேண்டும். முப்பதாயிரம் நாப்பதாயிரம் என சம்பளம் வாங்கும் பெண் சுலபமாக ஒரு பணியாளை சமையலுக்கு வைத்துக்கொள்ளலாம். வேலைக்கும் போக மாட்டேன், டான்ஸ் க்ளாஸ் போவேன், அரசு வேலைத்தேர்வுகளுக்கு படிக்கிறேன் பேர்வழி தன் பொறுப்புகளில் இருந்து நழுவிக்கொள்ள ஏதுவாக ஆணாதிக்கத்தை சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இல்லை.

ஒரு கற்பனை பரிமாணத்திற்குள் செல்வோம். பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்று வீடு திரும்புகிறார்கள். ஆண்கள் அனைவரும் வீட்டை பார்த்துக் கொள்கிறார்கள். ஆண்களும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும். பெண்களும் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் சமாளிக்க வேண்டும்.

படத்தில் வரும் மாமனார் கதாப்பாத்திரம் காலத்துக்கும் உழைத்து ஓய்ந்துவிட்டார். அவர் சேர்த்து வைத்த சொத்துக்களை பராமரிப்பதற்கே மருமகளுக்கு அலுப்பாய் இருக்கிறது. அத்தனையையும் சேர்ப்பதற்கு மாமனாரும் பாடுபட்டிருப்பார். மாமனார் வெளியே செல்லும் போதெல்லாம் மாமியார்தான் வந்து செருப்பை எடுத்து தருவார். தினமும் காலையில் பல்விளக்க ப்ரஷில் பேஸ்ட் வைத்து தருவார். இப்படி கணவனை தாங்கிக்கொண்டிருக்கும் மாமியார் ஊருக்கு சென்றுவிட்டப்பிறகு அந்தப் பணிகளை மருமகள் செய்வது போல் ஆகும். ஒரு கிழவனுக்கு பேஸ்ட் எடுத்து கொடுப்பதும் செருப்பு எடுத்து கொடுப்பதுமா இந்த நவயுவதிகளின் ஆசை கனவு லட்சியம்? அந்த மாமனார் பேஸ்ட் கேட்பார் ஆனால் செருப்பை அவரே எடுத்து போட்டுக்கொள்வார். மருமகளிடம் கேட்க மாட்டார். தனக்கு வைக்கும் சோற்றை விறகடுப்பில் வைக்கச் சொல்வார். அது அவரது விருப்பம். ஆனால் மருமகளுக்கு அது கடினம். கேஸ் அடுப்பு என்றால் சற்று எளிதாக முடியும் வேலை. விறகடுப்பில் கண்கள் எரிய சமைக்கவேண்டும்.

சரி இப்படி வைத்துக் கொள்வோம். இதே கதையில் வரும் கணவனும் மாமனாரும் அவர்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ள அவர்களது தினசரிகளில் யார் யாரையெல்லாம் எதிர்கொள்கிறார்கள், எதையெல்லாம் எதிர்கொள்கிறார்கள் என்ற அவர்களது சவால்களையும் பிரதான காட்சிகளாகக் காட்டிவிட்டு, அவ்வப்போது மருமகள் கோரும் வசதிகள், ஆடைகள், ஊர்சுத்தல்கள், தீனிகள், நகைகள், செளகரியங்கள் யாவற்றையும் காட்சிப்படுத்தினால், மருமகள்மீது அனைவருக்கும் கோபம்தான் வரும். எவ்வளவு பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது இதில் இது தேவைதானா என்று சலிப்பார்கள்.

இந்தப்படத்தின் இயக்குநர் ஜோ பேபி. சமையலறையில் நடக்கும் அலுப்பூட்டும் வேலைகளை மிகத்துல்லியமாக படமாக்கியுள்ளார். ஆனால், அவராலும் முதல் பாதிக்கு மேல் கதையை நகர்த்த முடியாமல் திசைமாறி மாதவிடாய் என்ற மற்றொரு கருப்பொருளுக்குள் சென்றுவிடுகிறார். மாதவிடாய் நாட்களில் பெண்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்றளவிலும் பல இடங்களில் இது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தப்படத்தில் இந்தத் தலைப்பிற்கு இடமில்லை என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் படத்தின் எதிரி ஆணாதிக்கமாக இருக்க முடியாது. படத்தில் வரும் கணவன் மாமனார் என இரு ஆண்களுமே முழுமையான ஆணாதிக்கவாதிகள் இல்லை. ஆணாக நடந்துக் கொள்பவர்கள். அவர்களை முழுமையான ஆணாதிக்கவாதியாகக் காட்டாமல், ஆணாதிக்கத்தை எதிர்த்து ‘பெண்களை சமைக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள் பார்த்தீர்களா?’ என்பது பூட்டிய வீட்டில் சண்டைக்குப்போவது போல் ஆகிறது.

கணவனும் மாமனாரும் முருங்கைக்காயை மென்று துப்பி மேசையில் வைத்து விடுவார்கள். அதை மருமகள் எடுக்கும் போது ஏதோ குடிகாரனின் வாந்தியை அள்ளுவது போல் முகும் சுழிப்பாள். ஓவராகத்தான் இருந்தது. அடுத்தவர் மென்றுவிட்டு துப்பியவற்றை அள்ளி எடுக்க அருவறுப்பாக இருந்தால், ஒரு சின்ன தட்டோ ப்ளேட்டோ வைத்து அதில் வைக்குமாறு சொல்லிவிடலாம். அந்த தட்டை அப்படியே எடுத்து குப்பை தொட்டியில் தட்டிவிடலாம். பிரச்சனைக்கு தேவை தீர்வு. அதை சிந்திக்கவோ சரியான முறையில் அணுகவோ பெண்களுக்கு தெரியவில்லை என்றால் பரவாயில்லை. ஒரு இயக்குநருக்கும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப்பிரச்சனைகளுக்காக மருமகள் மாமனாரின் மீதும் கணவன் முகத்திலும் அழுக்குத்தண்ணியை ஊற்றிவிட்டு வேக வேகமாக வீட்டை விட்டு வெளியே செல்கிறாள். இதைப்பார்க்கும் சமையலறையில் வெந்து தவிக்கும் பெண்களுக்கு விசிலடித்து கைத்தட்டி கொண்டாடத் தோன்றும். இதைப்படிக்கும் உங்களுக்கும் அப்படி தோன்றினால், வெறுமனே கேட்பதையும் பார்ப்பதையும் மட்டுமே நம்புபவர்கள் நீங்கள் என அறிந்து கொள்ளுங்கள். உண்மையை உற்றுப்பாருங்கள். சோசியல் செக்யுரிட்டி என்ற ஒன்று நமது ஊரில் நிச்சயம் தேவை. அது இந்த மாமனாரின் வீட்டில் இருக்கும். இந்தப் படத்தில் வரும் இன்னொரு பெண்ணுக்கு இருக்காது. அந்த இன்னொரு பெண் ஒரு சிங்கிள் மதர். அவளது சமூக செயல்பாட்டிற்காக அவளது வீட்டில் கல்லெறிவார்கள். ஸ்கூட்டியை கொளுத்துவார்கள். இந்த மருமகளின் வீட்டில் யாரும் வந்து அப்படி ஒரு கல்லை எறிந்துவிட முடியாத அளவிற்கு அந்த ஊரில் செல்வாக்கை சம்பாதித்து வைத்திருக்கிறார் மாமனார். அந்த சிங்கிள் மதர் பதிவிடும் முகநூல் பதிவைப்பார்த்துதான் இந்த மருமகளுக்கும் உணர்ச்சிகள் பொங்கும்விதமாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர். இப்படி நிறைய இடத்தில் ஸ்லீப்பர் செல் போல சேம் சைட் கோல் அடித்திருக்கிறார் இயக்குநர். படம் எதை எதிர்க்கிறதோ அதற்கு ஆதரவான பல விசியங்கள் படத்திலேயே இருக்கின்றன.

Patriarchy and Feminism

இன்றும் பல குடும்பங்களில் கணவன்கள் மனைவிகளைக் கொன்றுவிடக்கூடத் தயங்க மாட்டார்கள். ஆனால் கொன்றுவிட்டால் எங்கு போலீஸில் மாட்டிக்கொள்வோமோ, ஊரில் மரியாதைக் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உயிரோடு விட்டுவிடுவார்கள். சரியாகச் சொல்வதென்றால் உயிரை மட்டும் விட்டுவிடுவார்கள். மீதி இருக்கும் நிம்மதி, மரியாதை, மன அமைதி, ஆசை, ஆழ் மனம், உடல்நலம், மனநலம் என அனைத்தையும் தினந்தினம் அடித்துக் கொன்று மென்று தூ எனத் துப்பிவிட்டு ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவரச் சொல்வார்கள், அதே மனைவியிடம். 

இவை அனைத்தும் அவர்களது குழந்தைகளை பார்வையாளர்களாக வைத்துக்கொண்டேதான் நடக்கும். பிறகு அந்தக் குழந்தை ஆணாக இருந்தால் அதே முரட்டு அப்பா போலவும், பெண்ணாக இருந்தால் அதே அப்பாவி அம்மா போலவும் வளர்ந்து நிற்கும். தொன்றுதொட்டு இது தொடரவது கவலைக்குரியது. இந்த அபாயத்தை திரையில் கொண்டுவந்திருக்கலாம். திருமணத்திற்குப்பிறகு கணவன் மனைவி உறவில் பல உரசல்கள் சலசலப்புகள் நிகழும் அது இயல்பு. இன்னொரு உயிருடன் வாழ்வதற்கு ஒரு குறைந்தபட்ச சகிப்புத்தன்மை நிச்சயம் வேண்டும். ஆனால், எந்த அளவிற்கு அந்த சகிப்புத்தன்மையின் எல்லையை நீட்டிக்கொண்டே போவது என்பதில்தான் பெரும் பிரச்சனை. எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதா? எதையுமே சகித்துக்கொள்ளாமல் செல்வதா? எதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டும்? எதையெல்லாம் எள்ளளவும் சகித்துக்கொள்ளவே கூடாது? பதில் எளியது.

தன்னை ஒரு சக மனிதராகக்கூட பார்க்கத்தெரியாத, பார்க்கமுடியாத, தன் மன அமைதியை கெடுக்கவும், என்ன சொன்னால் என்ன செய்தால் தான் பாதிப்புக்கு உள்ளாவேன் என்பதைத் தெரிந்து தன் பலவீனத்தினால் தன்னைக் காயப்படுத்தவும் ஆட்டிவைக்கவும் தயங்காத எவரையும் வாழ்க்கைத் துணையாக தொடராதீர்கள்.

அது கணவனோ மனைவியோ. சின்ன சின்ன விசியங்களை சகித்துக்கொள்ளுங்குள். பேசி சரி செய்யுங்கள். சகிக்கவே முடியாத காரியங்களை மூடி மறைக்க ஆயிரம் குட்டிக்கரணங்கள் அடித்தாலும் அதை ஏறெடுத்தும் பார்க்காதீர்கள்.

கணவன்கள் செய்துவரும் அட்டூழியங்கள் ஏராளம். அதைத் தாங்கிப்பிடிக்க சில சொற்றொடர்களை வசதியாக துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.

  1. ஆம்பளனா கொஞ்சம் அப்டி இப்டிதான் இருப்பான்
  2. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
  3. அரசன நம்பி புருசனா விட்றாத
  4. ஜான் பிள்ளைனாலும் ஆண்பிள்ளை
  5. ஆம்பள சிங்கம்டி
  6. அதிகமா ஆசபட்ற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல. (அதாவது பொண்ணுங்க கோபப்படக்கூடாதாம்).

தனிப்பட்ட முறையில் சிறுவயது முதலே கணவன்கள் மனைவிகளை அடிப்பதை ஆங்காங்கே கண்டு வந்திருக்கிறேன். அதில் அடி உதையுடன் நின்றவைதான் அதிகம். சில சமயம் அறைவது முடியைப்பிடித்து ஆட்டுவது என்பதைத் தாண்டி தாக்குதல்கள் எல்லைமீறி செல்லும். அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

  1. வயசான நபர் ஒருவர் தான் அழைப்பது கேட்காமல் அசந்து தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவிக்கு, தக்க பாடம் புகட்ட அவள் தூங்கிக்கொண்டிருக்கும்போதே அவளது ஒரு காதை கத்தியால் அறுத்துவிடுகிறார்.
  2. கணவன் மனைவி சண்டையில் கணவன் மனைவியின் தோடை பிடித்து இழுத்ததில் காது மடலில் இருக்கும் ஓட்டை கிழிந்துவிடுகிறது.

உண்மையான தீர்வு

நிஜ உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நிஜ உலகில் சாத்தியப்படக்கூடிய தீர்வுகளை திரையில் கொண்டுவருவதே மிகச் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். உதாரணத்திற்கு லஞ்சம் என்பதை எடுத்துக் கொள்வோம். அதை வைத்து ஏகப்பட்ட படங்கள் வந்தாகிவிட்டது. ரமனா, அந்நியன், இந்தியன், இத்யாதி இத்யாதி. எதிலுமே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அரசியல்வாதிகளை விதவிதமாக கொன்றுக் குவிப்பார்கள். யதார்த்தத்தில் இதற்கு சாத்தியமே இல்லை. அதாவது நிஜத்தில் இருக்கும் பிரச்சனையை சரி செய்யாமல் அதைவைத்து படம் எடுத்து மக்களை மேலும் உணர்ச்சிவசப்பட வைத்து பிரபலம் ஆகி செட்டிலும் ஆகிவிடுவார்கள். ஒரு பிரச்சனையை சரி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதை வைத்து பணம் பண்ண நினைப்பது ஏதோ ஒரு வகையில் மருத்துவத் துறையை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. நோயை குணப்படுத்தும் வகையில் அவர்களின் ஃபீசில் குறியாக இருப்பார்கள். நோய் தீர்ந்தாலும் தீராவிட்டாலும் பில் கட்டித்தான் ஆகவேண்டும். தொழில் என்றால் அப்படிதான் இருக்கும். மருத்துவமும் இன்று சேவை இல்லை. சினிமாவும் இன்று கலையில்லை. எல்லாமும் வியாபாரம். நாம் அனைவரும் வாடிக்கையாளர்கள். தவறாமல் ஏமாறும் வாடிக்கையாளர்கள்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

திரைப்படங்கள் நம்மை எந்தளவிற்கு பாதிக்கும் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டிய விசயம் அல்ல. இருந்தாலும் சில உதாரணங்கள் அல்லது நினைவூட்டலகள் பின்வருமாறு.

கர்நாடகாவில் ஒரு இளைஞன் அருந்ததி படம் பார்த்து தன் உடலைத் தீயிட்டுக் கொள்கிறான். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இறந்து போகிறான்.

ஹைதராபாத்தில் ஒரு குழு மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்சால் கவரப்பட்டு அதே பாணியில் திட்டமிட்டு ஆட்களைக் கடத்தி பணம் பறித்து வந்துள்ளனர். பிறகு ஒருநாள் போலீஸில் மாட்டிக்கொள்கின்றனர்.

கே.ஜி.எஃப் படம் பார்த்து தவறாக ஊக்கமடைந்த 19 வயது இளைஞன், டான் ஆகும் ஆசையில் இரவு நேர காப்பாளர்கள் மூவரை கொலை செய்துள்ளான்.

இதுபோல பல சம்பவங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சரி இதெல்லாம் இயல்பான மனநிலையில் இருப்பவர்கள் யாரும் செய்யப்போவதில்லை, மனநிலையில் சமன் இல்லாதவர்கள்தான் இப்படி சினிமாத்தனங்களை நிஜ வாழ்வில் பிரதிபலிப்பர் என்று நாம் எண்ணலாம். அதுதான் இல்லை. மேலே குறிப்பிடப்பட்டவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டவரகள். நாம் சிறிது சிறிதாக தொடர்ந்து பாதிக்கப்படுபவர்கள். சிறிது சிறிதாக நிறைய விசயங்களை சினிமாக்கள் ட்ரெண்டாக்கிக் கொண்டே செல்லும், நார்மலைஸ் ஆக்கிக்கொண்டே செல்லும், எல்லாவற்றுக்கும் நாமும் தலையாட்டிக் கொண்டே பின்பற்றுகிறோம்.

சினிமாவில் சாராயம், சரக்கு, பீர், சிகரெட்

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு சிகரெட் கூட குடித்ததில்லை என்றாலும், தமிழ்நாட்டில் நிச்சயம் பல்லாயிரக் கணக்கானோர் சிகரெட்டிற்கு அடிமையாகியிருப்பார்கள். இல்லை என நான் மறுக்கவில்லை. ஆனால், ரஜினி சிகரெட் குடித்து அதை ஒரு ஸ்டைல் என ப்ராண்டிங் செய்துவிட்டபடியால் சிகரெட் குடித்திருக்காதவர்களும் தன் இமேஜை ரஜினி போல ரிசம்பில் பண்ண சிகரெட்டை பழக்கப்படுத்தி இருப்பார்கள். இதை இல்லை என யாராலும் மறுக்க முடியாது. பிறகு வயதான காலத்தில் “அனுபவத்தில் சொல்றேன்” என டயலாக் அடித்து சிகரெட்டை வேண்டாம் என அட்வைஸ் செய்வதெல்லாம் யார் கேட்டது? அவர் பற்றவைத்த சிகரெட்தான் இன்னமும் அணையாமல் எரிந்துக் கொண்டே இருக்கிறது.

சரக்கும் என்னும் சாராயத்தையும் மிகப்பிரபலம் ஆக்கி அதை நார்மலைஸ் செய்ய முயற்சித்து பெருமளவிற்கு நார்மலைசும் செய்துவிட்டார்கள். சினிமாவின் வளர்ச்சிக்கு முன்பும் நமது ஊர்களில் சுப நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் சாராயம் அருந்துவார்கள்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அது இலைமறைக் காய்மறையாக நடந்து வந்தது. அதனை சினிமாக் காட்சிகளில், நகைச்சுவை, ஹீரோயிசம், மேன்லினஸ் என்று அடையாளப்படுத்தி பதினைந்து வயதினரும் இன்று மது அருந்துவது சாதாரணமாக்கி வைத்திருக்கிறார்கள். எப்போதும் ஒரு திரைப்படத்தில் படம் பார்ப்பவர்கள் தங்களை கதையின் நாயகனுடனே பொருத்திக் கொள்வார்கள். அதுதான் மனித இயல்பு. அந்த ஹீரோ செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்தும் போது அது எவ்வளவு பெரிய அபத்தமாக ஆகிறது. திரைப்படத்தில் ஒரு நடிகர் பிறர் பணத்திற்கு ஆசைப்பட மாட்டார் என்பதாலேயே பல ரசிகர்கள் பிறர் பணத்திற்கு ஆசைபடுவதை தவிர்த்திருப்பார்கள். ஒரு நடிகர் தன் கதாப்பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லலாம். அது ரசிகர்களின் கொள்கையாகக்கூட உருமாறி நிற்கும். ஆனால், மக்களை குஷிபடுத்துவதற்காக போதைக்காட்சிகளை பழக்கப்படுத்திவிட்டு அதில் வரும் வருமானத்தில் செட்டில் ஆவது ரசிகர்களின் மீதுள்ள அக்கறையை நன்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதை சரி செய்வதாக எண்ணிக்கொண்டு வளர்ந்து பெரிய நடிகர் ஆனப்பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை விட்டால் போதும் அதற்கும் விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய கோடி ரசிகர்கள் இங்குண்டு.

சமீப நாட்களில்தான் இவர்கள் கஞ்சாவை பிரபலப்படுத்திவருகிறார்கள். அரசாங்கம் இதை தடை செய்த போதிலும், இது போன்ற போதை வஸ்துகளை வைத்து படம் வந்து கொண்டுதான் இருக்கிறது. அரசாங்கம் கஞ்சாவை தடை செய்திருப்பது மக்கள் மீதிருக்கும் அக்கறையினால் மட்டும் இல்லை. இதற்குப் பின்னால் ஒரு வியாபார நோக்கமும் உள்ளது. ஒரு நாளைக்கு இந்தியர்கள் ஊதித்தள்ளும் சிகரெட்டுகளின் மதிப்பு மட்டும் நூறு கோடியாவது வரும். கஞ்சாவின் மீதிருக்கும் தடையை நீக்கிவிட்டால், அவரவர் வீட்டிலேயே வளர்த்து காயவைத்து சுருட்டி ஊதிக்கொள்வார்கள். நாள்தோறும் நூறு கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் அரசாங்கத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் கம்பெனிகள் எப்படி பிழைப்பது? கள்ளுக்கு தடை போட்டு அரசே டாஸ்மாக் நடத்துவது தனியாருக்கு லாபம். மரத்தடியில் சீட்டாடினால் அடித்து விரட்டிவிட்டு ஆன்லைன் ரம்மியை கண்டுகொள்ளாமல் இருப்பது தனியாருக்கு லாபம். கஞ்சாவை தடை செய்துவிட்டு சிகரெட் கம்பெனிகளுக்கு அனுமதியளிப்பது தனியார் கம்பெனிகளுக்கு லாபம். எல்லாமும் யாரோ சில பண முதலைகள் சில ஆயிரம் கோடிகளை பல ஆயிரம் கோடிகளாக்கக் திட்டம் வகுக்கின்றனர். மக்களாகிய நாம், அவர்களின் வளர்ச்சிக்கு நாள்தோறும் கண்விழித்து உழைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் காதல்

சரக்கு, சிகரெட், சில்லறைத்தனங்கள் எல்லாம் ஓகே, அவையெல்லாம் அதைப்பயன்படுத்தும் நபர்களையும் அவர்களது குடும்பங்களையுமே பாதிக்கும். காதல்? காதலை இந்த சினிமாக்காரர்கள் கற்பழித்தேவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கேட்க ஆளில்லாமல் போனதுதான் காரணமோ என்னமோ தெரியவில்லை. காதலை வளைத்து வளைத்து சீரழித்தே விட்டார்கள். 19ஆம் நூற்றாண்டில்தான் ரொமாண்டிசேஷன் என்பது உலகம் முழுக்க பரவியது. அதாவது காதலை உருகி உருகி ரசித்துக் கொண்டாடித்தீர்ப்பது. ஏன் அதற்கு முன்பு வரை காதலை வெறுத்தார்களா என்று கேட்காதீர்கள். சங்ககாலம் தொட்டே காதலைக் கொண்டாடிதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதை சாமானியரும் கொண்டாடித் தீர்க்க ஒரு பெரிய மேடை இல்லாததால் அது பெருமளவிற்கு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சற்று விளக்கமாக சொல்கிறேன். 1920களில் ஒரு தம்பதி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் அன்யோன்யம் எப்படிப்பட்டதாக இருக்கும்? கண்டிப்பாக காதல் சார்ந்த எந்த உணர்வுகளையும் அவர்களால் வெளிக்காட்டிக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் அப்போது இருந்தது கூட்டுக்குடும்ப முறை. ஒரு தம்பதிக்கென தனி அறை கிடைப்பதே அரிது. இதில் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் என்பதெல்லாம் அரிதிலும் அரிது. “புதுசா கல்யாணம் ஆனதுக ரொம்பத்தான் கொஞ்சிக்குதுங்க, எல்லாம் எத்தன நாளைக்கின்னுதான் பாக்குறேன்” என்று காது படவே பேசுவார்கள். அதற்காகவே தம்பதிகள் முகத்தை இறுக்கமாம வைத்துக் கொள்வார்கள். ஆசை உணர்வுகளை வெளிப்படுத்த போதிய பாடல்களோ, காலர் ட்யுன்களோ, பேஸ்புக் ஸ்டோரிகளோ, இன்ஸ்டா போஸ்டுகளோ இல்லாத காலக்கட்டம் அது. இதில் இருந்து வெளியே வருவதற்கு, அச்சு ஊடகங்களும் ரேடியோக்களும் பெரிதும் உதவின. புத்தகங்கள், பத்திரிக்கைகள் என எங்கும் காதல் குறித்த பாடல்கள், கவிதைகள், ஓவியங்கள், கதைகள் என திசையெங்கும் காதல் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் இதுதான் நிலை. இந்தக்கூட்டத்தில் சினிமா என்ற ஒரு பொக்கிஷமும் கிடைத்தது. ஆனால், யார் கைகளில் அது கிடைத்தது என்பதுதான் அதன் தரத்தை நிர்ணயித்தது. சினிமா பல அபத்தங்களை உடைத்தும் உள்ளது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதைவிட பல அபத்தங்களை அறிமுகம் படுத்தியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சமீப நாட்களில் இன்ஸ்டாவில் பள்ளி உடையணிந்து காதல் காட்சிகளாக நிறைய ரீல்ஸ்கள் வந்துக்கொண்டிருந்தன. யுடியூபிலும் இது தொடர்ந்தது. பொதுமக்களுள் ஒளிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் பல Pedophiles-ஐ இது உசுப்பிவிடும் செயல்களாகத்தான் நான் பார்க்கிறேன். யோசித்துப்பாருங்கள், இருபத்தி ஏழு வயதுள்ள யுவதி ஒருவள் இருக்கமான பள்ளி சீருடை அணிந்து ஒரு பாட்டுக்கு நடனமாடி இன்ஸ்டா, பேஸ்புக், யுடியூப் என பதிவிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு ஆணின் பாலுணர்வை வலுவாகத் தூண்டும். அந்த ஆசாமிக்கு இந்த கவர்ச்சி நடனம் ஆடிய யுவதி எட்டாக்கணி. ஆனால், அவனது ஊரில், அவனது தெருவில் தினமும் பள்ளிக்கு சென்று திரும்பும் பதினான்கு பதினைந்து வயது சிறுமி அவனுக்கு பலியாடு. 10K லைக்ஸ்-ஐப் பார்த்து சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் யுவதிகள், ஆண்களின் காம வெறிக்கு பாலூத்தி வளர்ப்பதைவிட பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. பெண்களின் தேக அழகைத்தாண்டி அவர்களிடம் பகிர்வதற்கும், படைப்பதற்கும் எண்ணற்ற திறன்கள், ஆற்றல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தவிர்த்து பிரபலமாகும் போதையில் பல முட்டாள் பெண்கள் செய்யும் க்ளாமர் கூத்துகளால் பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவிப் பெண்கள்தான். பிரபலமடைந்த பெண்கள் தன்னைப்பாதுகாத்துக்கொள்ள பவுன்சர்கள் வைத்துக் கொள்வார்கள். பவுன்சர்கள் இல்லையென்றால் நடிகைகளின் நிலமையை யோசித்துப்பாருங்கள். குதறி வைத்து விடுவார்கள் ஆண்கள். குறைந்த பட்சம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ, தன்னார்வலர்களோ இத்தகைய வீடியோக்களை படம் பிடிப்பதற்கும், ஒளிபரப்புவதற்கும் தடைவிதிக்கலாம். மீறினால் கடும் தண்டனை என எச்சரிக்கலாம். பள்ளி மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களுக்கு வழிவகுக்கும் திரைப்படங்கள், குறும்படங்கள், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், யுடியூப் வீடியோக்கள் என அனைத்து வகையான பதிவுகளும் நிச்சயமாக தடுக்கப்பட வேண்டியவைகள்தான். பிறகு மாணவன் டீச்சரைக் காதலிப்பது. யெப்பா டேய். தயவுசெய்து யாராவது இந்த ஆகச்சிற்ந்த இயக்குநர்களிடமிருந்து காப்பாத்திச் செல்லுங்கள் இந்த பாலாய்ப்போன சினிமாவை. டீச்சர்கள் என்றுமே தேவதைகள்தான் ஆனால் அவர்களுடனே வாழ நினைப்பது எனக்கு இன்செஸ்ட் போலத் தெரிகிறது.

எங்கோ எப்போதோ யாருக்கோ நடந்த விசயங்களை படமாக்குவதினால், அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு அது லாபம் ஈட்டித்தரும். ஆனால், அதைப் பார்த்து வளரும் இளைய சமுதாயம் தன்னையும் அந்த ஹீரோவுடன் பொருத்திப் பார்த்துக்கொண்டு, தானும் அப்படித்தான் உணர்வதாக கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டு சீரழியும்.

Stalking. ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது எப்போது காதல் வரும். அந்த ஆண் அவளை எங்காவது பார்த்திருப்பான். அவள் அழகாக இருப்பான். அவனுக்கு அவளது உடல்கூறுகள் பிடித்திருக்கும். கிறுக்குப் பிடிக்கும் அளவிற்கு அவளைப்பிடித்திருக்கும். காதல் மலர இது போதும். வேறு என்ன வேண்டும்? அவளது ஒப்புதலா? வேண்டாம் வேண்டாம். ஆணுக்கு காதல் வந்துவிட்டப் பிறகு வேறென்ன வேண்டும். அவளுக்கும் இவன்மீது காதல் வந்தே தீரவேண்டும். எப்படி வராமல் இருக்கும். கண்டிப்பாக அந்தப்பெண்ணிற்கும் இதே ஆணின் மீது காதல் வரவேண்டும். இல்லை என்றால். இவன் அவள் பின்னாடியே திரிவான். தாடி வளர்ப்பான். சோகப்பாடல் பாடுவான். தற்கொலைக்கு முயல்வான். (செய்துகொண்டால் நல்லது). தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதுவான். தூது அனுப்புவான். சொப்ப்ப்பாஆஆ. தலையே சுற்றுகிறது. குணா படமெல்லாம் இன்னும் சற்று உச்சம். Stolkhome Syndrome-ல் கமல் செய்த சோதனை முயற்சியாகக்கூட இருக்கலாம்.

சினிமா வளர்க்கும் எதிர்காலம்

சினிமாவும் நம்மை வெகுவாக அல்ல பெரிதாகவே பாதிக்கும். வெறுமென மூன்று மணி நேரம் திரையரங்கில் பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு வரும் நாடகம் மட்டுமல்ல சினிமா. அது நம்முடனே பயணிக்கும். நமது காதல் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது வேலை எத்தகையதாக இருக்க வேண்டும், நமது தோற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது எதிர்வினைகள் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது பைக் எத்தகையதாக இருக்க வேண்டும், அவ்வளவு ஏன் நமது ஹேர்கட் எத்தகையதாக என்பதைக்கூட பெரும்பாலும் அந்தந்த காலத்து சினிமாதான் தீர்மானிக்கின்றன.

இதற்கு இணையாக இன்னொரு விசயத்தையும் பார்ப்போம். செக்ஸ் எஜுகேஷன். ஊடலை யார் சொல்லித்தருவது? ஆசிரியரா? ஆசிரியையா? மாணவர்களுக்கு யார் சொல்லித்தருவது? மாணவிகளுக்கு யார் சொல்லித்தருவது? அவரவரே திருட்டுத்தனமான அங்கும் இங்குமாக தெரிந்துக்கொள்ளட்டுமா? அது சரியா? பாட புத்தகத்தில் பிறப்புறுப்புகளின் குறுக்குவெட்டு தோற்றத்தை அச்சிட்டுவிட்டு அந்தப் பாடம் வரும்போது மட்டும் கவனமாக பக்கங்களை கடந்து விடலாமா? காதலையும் காமத்தையும் சினிமாவே சொல்லித்தந்து கொண்டிருந்தால் வருங்காலம் என்னவாகும்? சின்ன உதாரணம் கீழுள்ள இணைப்பில்.

https://tamil.news18.com/news/cuddalore/a-student-gave-birth-in-a-school-toilet-in-cuddalore-797078.html?fbclid=IwAR1Hhs0dp5Y5gAqqzkg_PNmDkZ-FFYLzoEM4lc-ULFcEbe9XUKZJWeXPo1U

ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்தும் பொறுப்பு யாருடையது?

இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்தால் காதல் லவ் அஃபேர் என்று எதையாவது செய்துவிடுவார்கள் என்று ஆண் பிள்ளைகளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலோ பெண் பிள்ளைகளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலோ சேர்த்து விடுவார்கள். ஒருவேளை இருபாலர் படிக்கும் பள்ளியாக இருந்துவிட்டால் மாணவர்களுக்கு தனி வகுப்பறை அல்லது தனி ப்ளாக், மாணவிகளுக்கு தனி வகுப்பறை தனி ப்ளாக். சக மாணவிகளை மாணவர்களை மிக இயல்பாக யதார்த்தமாக எதிர்கொள்வது எப்படி என்று சொல்லித்தர வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்பாலின ஈர்ப்பை ஏன் இவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். பொறுப்புத்துறப்பு மனோபாவமும், பொறுப்பின்மையும், பொருளாதார நெருக்கடிகளும்தான் இப்படியெல்லாம் மாணவர்களையும் மாணவிகளையும் பிரித்து வைத்து கல்லூரி வரை கொண்டுவந்து பிறகு நழுவிக்கொள்வார்கள். ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டால் அதற்கும் காரணம் பள்ளியின் அதீத அழுத்தம் என்று பெற்றோர்களும், மாணவருக்கு காதல் இருந்து அது தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டார் என பள்ளித்தரப்பும் மாற்றி மாற்றி பழி போட்டுக்கொண்டே இருப்பதை நாம் பார்க்காமல் இல்லை. அவர்கள் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தால் மட்டும் அதில் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். செத்துப்போனால் அது அவரவர் இயலாமை. இதுதான் பொறுப்புத்துறப்பு மனோபாவம். கல்வியை வியாபாரமாக்கியதின் விபரீதம்.

இது போதாதென்று சினிமா அதன் இஷ்டத்திற்கு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி வைக்கிறது. எது கெத்து என்று சினிமா சொல்கிறதோ அதைத்தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிறார்கள் இளம் வயதினர். இந்த மாயையில் இருந்து மீள, கல்லூரி முடித்து வேலைக்கு சென்று சகப் பெண்களிடம் ஆண்களுக்குரிய கெத்தைக் காட்டி, வீட்டில் மனைவியிடம் கெத்தைக் காட்டி, செய்தித்தாள்களின் பெரும்பாலன பக்கங்களில் பெண்கள் மீதான வன்முறைகள்தான் தினமும் அச்சிடப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள்தான் ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்த சரியானவர்கள். காதல் காமம் இரண்டையும் பெற்றோர்கள் சொல்லித்தருவதே நல்லது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு இணைந்து ஆலோசித்து ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளிகளையே நடத்த வேண்டும். இருபாலர் பள்ளிகளுக்கே அனுமதியும் அளிக்க வேண்டும். பார்ன் வலைப்பக்கங்களை முடக்கிய அரசாங்கத்தினால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் காதல் கதை போன்ற படங்களை தடுத்து நிறுத்த முடியாதா என்ன? டாஸ்மாக்கையே மூடாத அரசாங்கத்திடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கற்பனைக்கும் அதிகம்தான். ஆனால் இந்தப் பிரச்சனைகளின் பொறுப்பு அரசுதான்.

சினிமாவிற்கு இணையாக ஸ்மார்ட்ஃபோன் செயலிகளும் களத்தில் குதித்துள்ளன. போட்டிப்போட்டுக்கொண்டு அடுத்த தலைமுறையை சீரழிப்பதில்தான் எத்தனை லாபம் இந்தப் பணத்திற்கு அடித்துக்கொள்ளும் ஆறறிவு மானுடர்களுக்கு! இந்தக் கிட்ஸ்களெல்லாம் வளர்ந்து ஆளாகி திருமணம் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போதாவது ரியாலிட்டியை தலை நிமிர்ந்து பார்ப்பார்களா என்று காத்திருக்கிறேன். அல்லது அதையும் ஆன்லைன் யுடியுப் என டிஜிட்டலைஸ் ஆக்கினால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நட்சத்திரம் நகர்கிறது சொல்லும் வாழ்வியல் என்ன?

இந்தப் படம் பேசிய விசயங்களில் ஆண்-பெண் உறவு, பொதுபுத்தி, தன்பாலீர்ப்பாளர்கள், ஆணவக்கொலை என எல்லாமும் முக்கியமானவை. ஒருசில தமிழ் இயக்குநர்களுக்காவது பாலின பேதத்தைக் களைய வேண்டும் என்கிற அக்கறை இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் ஆயிரம் படங்கள் இந்த ஜானரில் வரவேண்டும். யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் பேசமுடியாத பிரச்சனைகளைப்பற்றி பேச கலைத்துறையில் போதிய கலைஞர்கள் இல்லையென்றே உணர்கிறேன். இருப்பினும் இந்தப்படத்திலும் ஒரு முக்கியமான விசயத்தை குறிப்பிட மறந்துவிட்டார்கள். அதுதான் இந்தப்படத்தைப் பார்த்து தவறாக ஊக்கமடைவதில் இருந்து தடுத்திருக்கும். சில பக்குவமில்லாத இளைஞர்கள் செய்யும் அதே தவறை பா.ரஞ்சித்தும் செய்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர் தவறவிட்டது வேலை. வேலைதான். கலை வேலை அல்ல. கலை சிலருக்கு தொழிலாக இருக்கலாம். ஆனால் கலை ஒரு போதும் வேலையாக இருக்க முடியாது.

சற்று யோசித்துப்பாருங்கள், பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தியில் ஹீரோ இறுதியில் ஒரு வக்கிலாகிவிடுவார். இரண்டாவது படம் மெட்ராஸ் ஹீரோ ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்வார். அடுத்து வந்த இரண்டு ரஜினி படங்களிலும் ரஜினி என்ன வேலை செய்வார்? டான் வேலையில் இருந்தால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோ ஒரு கூலித்தொழிலாளி. நட்சத்திரம் நகர்கிறதில் வரும் கதாப்பாத்திரங்கள் என்ன வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள் ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள். அரங்கேற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வியலுக்கு எது உதவுகிறது? யார் அவர்களின் அன்றாட செலவுகளை பார்த்துக்கொள்கிறார்கள். what do they do for a living? அது கதைக்கு முக்கியம் இல்லை என்று சொல்லி மூடி விடாதீர்கள். ஒருவன் என்ன வேலை செய்து அவனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறான் என்பது மிக முக்கியம். அதை சொல்லாவிட்டால் படம் பார்க்கும் பக்குவம் இல்லாத இளம் வயதினர் சினிமாவின் மீதும் கலையின் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டு சென்னையில் வந்து என்னவென்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு self assesment-உம் செய்து பார்க்காமல், வெறுமனே பரவசத்தினால் மட்டும் சென்னைக்கு கிளம்பி வந்து விடுவார்கள். பிறகு, நாட்களை ஓட்ட முடியாமல், என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஸ்விக்கி, டிரைவர், ஹோட்டல், டெக்ஸ்டைல்ஸ், என்று தொடங்கி, எண்ணில் அடங்காத வேலைபாடுகளை செய்து தீர்க்கிறார்கள். இதில் பக்குவத்துடன் இருந்து உழைத்து வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெருபவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது அனைவருக்கும் அமைவதில்லை.

நட்சத்திரம் நகர்கிறது போல சினிமாவைப் பற்றியோ, கலையைப் பற்றியோ, படம் எடுக்கும்போது அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பணத்திற்கு என்ன செய்தார்கள் என்பதையும் காட்டுங்கள். ரூம் வாடகை தர முடியாமல், நண்பர்களின் காசில் எத்தனை மாதங்கள் இருக்க முடியும் என்று காட்டுங்கள். குடும்பம் பொருளாதாரரீதியாக உதவுமா என்பதைக் காட்சிப்படுத்துங்கள். ரெனே என்ன செய்கிறாள்? அர்ஜுனைப் போல ரெனேவிற்கும் அவளது குடும்பம் பெரும் பின்னனி கொண்டதாக தெரியவில்லை. அவள் சொல்லும் கதையில் அவள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாகத்தான் தெரிகிறாள். பொருளாதார பின்னனி இல்லாமல் எப்படி அவள் வாழ்கிறாள். வேலைக்கு போகிறாள் என்றால் என்ன வேலை. அலுவலகமா? freelancer ஆ? சுயத்தொழில் எதுவும் செய்கிறாளா? இப்படி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண், அவள் பெயர் ரெனெ என்று மட்டும் சொன்னால், நிஜத்தில் ரெனேக்களினால் கவரப்படும் பெண்கள் ரெனெவைப் போலவே புரட்சிகரமான வசனங்களைப் பேசிக்கோண்டு எந்த இடத்தில் வாழ முடியும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். ருத்ரையா இதில் தெளிவுடன் இருந்திருக்கிறார். மஞ்சு அவளுக்கென ஒரு வேலையையும் தேடிக்கொண்டு அதன் மூலம் தன் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு வாழ்கிறாள். தன்னுடைய தேவைகளுக்காக யாரிடம் வழிந்து நிற்கவோ, கெஞ்சவோ, கொஞ்சவோ, காலில் விழவோ, கண்ணீர் விடவோ, படுக்கவோ தேவை இல்லை. இந்த விசயத்தில் ரெனேவை இன்னும் கொஞ்சம் டீட்டெயில் செய்திருந்தால் ஒரு முழுமையான ஓவியமாக மிளிர்ந்திருப்பாள்.

நட்சத்திரம் நகர்கிறது மட்டும் இல்லை. படித்து வேலைக்கு போவதை விடவும் கலைத்துறையில் சாதிப்பதோ அல்லது பிரபலமடைவதோதான் உண்மையான வெற்றி என்று போலியாக நம்பவைக்கும் படங்கள் ஏராளம். மீசைய முறுக்கு, 96, மயக்கம் என்ன, விண்ணைத்தாண்டி வருவாயா, டான், தோனி, என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். Target audience என்றோரு வார்த்தை உள்ளது. அதாவது ஊதாரித்தனமாக இருப்பவனை ஹீரோவாக வைத்து செக்கச் செவேலென்று ஒரு ஹீரோயினைப் போட்டு, இருவருக்கும் காதல் மலர்வது போன்ற காட்சியமைத்து ஒரு கிளுகிளுப்பு ஊட்டினால்தான் முதல் நாள் முதல் காட்சி வந்து படம்பார்க்கும் மைனர் குஞ்சுகளுக்கு ஒரு பரவசம் ஏற்படும். கல்லா கட்டும். நாள் முழுக்க உழைத்து ஒரு குடும்பத்தின் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றும் அப்பாக்களும் அம்மாக்களும்தான் எனக்கு ஹீரோக்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் செய்யும் வேலை அவர்களது ஃபேஷன் இல்லைதான். ஆனால் அலுக்காமல் செய்கிறார்கள்.

புடிச்சத பண்ணு, புடிச்சத பண்ணுன்னு சினிமாக்காரனுங்க சொல்லிட்டு போயிருவானுங்க. நாமளும் பின்னாடியே போனா ஜெயிச்சரலாம்னு கண்மூடித்தனமா போனா, வாழ்க்கைல சில பல வருஷங்கள் அப்டியே போயிரும்னு யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

இந்த கிட்ஸ்சின் அம்மாக்களும் அப்பாக்களும் இவர்களைப்போலவே புடிச்சதை செய்துக்கொண்டிருந்தால் கிட்ஸ்கள் அனைவரும் படிப்புக்கும், சோத்துக்கும் என்ன செய்திருப்பார்கள்? அதனால் இது போன்ற படங்கள் எடுக்கும் போது அதீத கவனம் தேவை. நாம் ஒரு விசயத்த விளக்கும் போது அதோட அடிப்படை ஆதாரத்தையும் சேர்த்தே விவரிக்க வேண்டும். ஒரு நீண்ட நெடிய போராட்டம் எப்படி சாத்தியப்பட்டுது என்றும் சொல்ல வேண்டும். சொல்லவில்லை என்றால் நிறைய இளைஞர்களின் வாழ்க்கையை அது புரட்டிப்போட்டுவிடும் அபாயம் உள்ளது.

ஏன் கலைக்கூடம்?

படம் நடக்கும் தளம் ஒரு மேடை நாடகம் நடத்தும் ஒரு தன்னார்வக் குழுவினரின் கூடாரம். இந்தக் கதையை ஏன் ஒரு கலையரங்கில் அரங்கேற்றினார்கள்? இப்படத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் ஒரு கார்ப்பரேட் ஆஃபிசில் நடக்கலாம் அல்லவா? ஒரு கெட்டுகெதரில் சக நண்பர்களுக்கிடையே நடக்கலாம் அல்லவா? ஒரு குடும்ப நிகழ்வில் நடக்கலாம் அல்லவா? ஒரு கோவில் திருவிழாவில் நடக்கலாம். ஏன் நாடக மேடை? நாடகக்காதலை மறுத்துப்பேச நாடகமேடையே பொருத்தமானதாக இருந்துவிட்டதாக நான் உணரவில்லை. நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதைக்கூட நாடகமாடித்தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது.

ஏன் பாண்டிச்சேரி?

பாண்டிச்சேரி நகரம் முழுவதும் ஆங்காங்கே கலையின் கைவண்ணங்கள் ஓவியங்களாக அங்குள்ள மக்களின் ரசனைத்தன்மையையும், கலையார்வத்தையும் உணர்த்திக்கொண்டே இருக்கும். மேலும் சென்னையை விட்டு சினிமா கொஞ்சமாவது வெளியில் வந்தால் நல்லது என்றே எண்ணுகிறேன்.

அவ்வப்போது சில தரமான நல்ல சினிமாக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்து படங்களையும் வைத்து அடுத்த தலைமுறையையும் வைத்து பார்க்கும் போது சினிமா வளர்க்கும் எதிர்காலம் சற்று அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. இது போன்ற பல அபத்தங்களைப் பேசி ஒரு தெளிவுக்கு வருவதற்காகவே ஆயிரம் நட்சத்திரங்கள் நகரட்டும்.

References

https://www.ndtv.com/india-news/copying-horror-movie-arundhati-that-he-watched-several-times-23-year-old-dies-for-salvation-in-karnataka-3249204

https://www.newindianexpress.com/nation/2022/sep/02/kgf-inspired-19-year-old-tribal-an-ex-waiter-turns-out-to-be-mp-serial-killer-2494184.html

https://telanganatoday.com/inspired-by-money-heist-on-netflix-gang-pulls-off-kidnaps-in-hyderabad

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

மஞ்சு from அவள் அப்படித்தான்

ரெனேவைப் பேசுவதென்றால், ருத்ரையாவின் அவள் அப்படித்தான் படத்தில் வரும் மஞ்சுவைப்பற்றி பேசாமல் இருக்கமுடியாது.

“வித்தியாசமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்”,

“ஃப்ரீயா செக்ஸ் பத்தி பேசுறேன்தான். ஃப்ரீ செக்ஸ் வேணும்னா பேசுறேன்”,

“பழமொழிகளால வாழ்றத நான் விரும்பல”,

“i hate hypocrytes. வேஷம் போடுறவங்கள கண்டாலே எனக்கு பிடிக்காது.”

“அவங்க அப்டிதான் இருப்பாங்கன்னா, நானும் இப்டிதான் இருப்பேன்”,

“முரண்பாடு இல்லாம யாரு இருக்காங்க? முரண்பாடு இருக்கிறதாலதான் நாம மனுஷனா இருக்கோம்.”

“நீங்க ரொம்ப கஷ்டப்படப்போறீங்க” என்ற கமலின் வார்த்தைகளுக்கு “அதப்பத்தி எனக்கு கவலயில்ல” என்று நொடியில் பதிலளிக்கும் மஞ்சுதான், பின்பு தன்னை நல்லவன் போல் நடித்து உடலுறவு கொண்டவன் தன்னை தங்கை என்று சொல்லியதற்காக “அவன் தங்கச்சினு கூப்பிடாம, தேவிடியானு கூப்டிருந்தான்னா கூட I wouldn’t have bothered” என்று கொதிக்கிறாள்.
(படத்தை துள்ளலான தொனியில் நகர்த்திச்செல்வதே ரஜினியின் ரகளையான நடிப்பும் வசனங்களும்தான். இந்த ரஜினியை ரசிக்க தவறிவிடாதீர்கள். அவள் அப்படித்தான் படத்தின் லிங்க். https://youtu.be/lvhZBBt7oD8)

ரெனே – nose-cut நாயகி

தனக்கெனவே தனித்துவமான திமிருடன் மிளிரும் ரெனேக்கள் எப்படி உருவாகிறார்கள்? ரெனேக்களை உருவாக்குவது காயங்கள்தான். what doesn’t kill you makes you stronger. மனிதர்களின் வார்த்தைகளைத் தாண்டி அவர்களின் பார்வைகளில் இருந்தும் செயல்களில் இருந்தும் அவர்களைத் துள்ளியமாகக் கணிக்கத் தெரிந்தவர்கள். ஏனென்றால், ஒரு காலத்தில் அவர்களின் பாசாங்குகளினாலும் ஆசை வார்த்தைகளினாலும் சிறுபிள்ளைப்போல ஏமாந்து இருப்பார்கள். ரெனேக்களை பெண் என்பதாலே ருசிபார்த்திருப்பார்கள். பிறகு ஒரு கட்டத்திற்கு மேல தான் ஒரு பெண் என்பதையே கேடையமாக பயன்படுத்துவாள்.

ரெனேக்களுக்கும் மஞ்சுக்களுக்கும் பசப்புக்காரர்களின் பாசாங்குகள் நன்கு தெரியும். ஆண்கள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல ஒரே பேட்டர்னில் கொக்கி போடுவார்கள். ரெனேக்களுக்கு அலுத்தே போகியிருக்கும். இவன் அடுத்து இந்த நகர்வைத்தான் மேற்கொள்வான் என்று. பிரச்சனை என்னவென்றால், இவர்கள் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, யாவரையும் கயவர்களாகவும் நயவஞ்சகர்களாகவுமே யூகித்துப் பழகுவார்கள். 99 விழுக்காடு அவர்களின் கணிப்பு சரியானதாகத்தான் இருக்கும். ஆதரவு தருவதாகக்கூறி ஆர்கஸத்திற்கு அடித்தளமிடுவார்கள் ஆண்கள். பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள். கோரப்பற்கள் நிறைந்த தந்திர நரிகள். முத்தம் கொடுத்தால்கூட அக்கோரப்பற்களால் காயம்தான் படும். இடைவெளி கடைபிடிப்பது ரெனேக்களுக்கு நல்லது. மீதி ஒரு விழுக்காட்டு தூயமனம் படைத்த ஆண்களாகவே 99 விழுக்காடு ஆண்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அதனால் நெருங்கி வருபவர்களையெல்லாம் தூக்கி எறிவதே ரெனேக்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தருகிறது.

ரெனேவிற்கு பொருத்தமான ஆண் என்றாவது ஒருநாள் அமையலாம். இனியனைவிட, அர்ஜுனைவிட மிகப்பொருத்தமாய். ஆனால், அவனுடனும் ரெனே சண்டையிடுவாள். உலகின் மிக உண்ணதமான ஆணுடனும் ரெனே முரன்பட்டு சண்டையிடுவாள். உலகின் மகா அய்யோக்கியனிடமும் ரெனே முரன்பட்டு சண்டையிடுவாள். இந்த விஷியத்தில் ரெனேவும் ஒரு பெண்தான், எல்லாப் பெண்களும் ஒரு ரெனேதான். (ஆமா அந்தப்படத்துல இருந்துதான் சுட்டேன்.) தம்பி ஒருவன் என்னிடம் ஒரு பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டான், “அவ கல்யாணம் பண்ணிகிட்டாலே நிறைய சண்ட வரும்னு பயப்படுறாண்ணா, என்ன சொல்றது”. நான், “கல்யாணம் பண்ணினாலே சண்ட போட்டுதான் ஆகனும், அதுக்குதான் மனசுக்கு புடிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சம் சலிக்காம சண்ட போடலாம்னு சொல்லு”என்றேன். காதலும் மோதலும் வாழ்க்கைல சாதாரணமில்லையா?

அர்ஜுன் – a miserable character or a miserable characterisation?

வானவில்லைக் கடந்த காகம் பஞ்சவர்ணக்கிளி ஆனதுண்டா? அர்ஜுனும் அப்படித்தான். கபாலத்தில் அடிப்பட்ட உடன், திடீரென நல்லவனாக மாறிவிடுகிறான். அவன் தன் தவறை உணர்ந்து மாறும் அளவிற்கு என்ன நடந்துவிட்டது? திருநங்கை, தன்பாலீர்ப்பாளர்கள் மீதான அவனுடைய மதிப்பீடுகளை யார் மாற்றினார்கள்? தான் ஒரு நிகழ்வில் சண்டையிட்டு அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேன் அதனால் நான் அனைவரது உணர்வுகளையும் மதிக்கிறேன் என்று யாரும் கூறிவிடமுடியுமா? அப்படி மாறியதாகக் கூறினால் இதுவும் வெறும் நடிப்புதான் அன்றி வேறில்லை. அர்ஜுன்கள் இங்கு நிறைய உள்ளனர். ரெனே அவளைப்பற்றி சொல்லும் கதையைக் கேட்டு, அவள்மீது அனுதாபக்காதல் கொள்ளவில்லை அர்ஜுன். ஏற்கனவே அவள்மீதிருக்கும் தனது ஈர்ப்பை அவள் இளகிய நேரம்பார்த்து இறுதி ஆயுதத்தை கையில் எடுக்கிறான். ‘I love you Rene’ என்கிறான். ரெனே சலித்தேப்போய்விட்டாள். போடா டேய் என்கிறாள்.

அர்ஜுனின் மூலம் நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதை சொல்ல முயற்சிக்கிறார் பா.ரஞ்சித். இன்னும் சற்று இறங்கி அர்ஜுனின் வீட்டில் நடக்கும் நாடகங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாடகம் இருப்பக்கங்களிலும் இருக்கின்றன. அதனை இருத்தரப்புகளும் மறுத்துப் பேசுவது வாதமாக மட்டுமே இருக்கிறது. நியாயமாக இல்லை.

இப்படத்தில் தவிர்க்கமுடியாத இன்னொரு பெண் ரோஷினி. மாடர்ன் மங்கையாக வருபவர். மிகவும் இயல்பாகத் தன் வாழ்வியலுக்கேற்ற ஆடையுடனும் வரைமுறையுடனும் எல்லைகளுடனும் வாழும் பல பெண்களை, ஆடைகளைக் கொண்டு, கடிகார நேரங்களைக் கொண்டு குத்திவிளையாட ‘தேவிடியா’ என்ற சொல்லுடன் கண்படும் தூரத்தில், காது கேட்கும் தூரத்தில் எப்போதும் ஆண்கள் காத்திருப்பார்கள். இந்த கலாச்சாரக் காவலர்களிடமிருந்து இந்த பாலாய்ப்போன கலாச்சாரத்தை யாராவது காப்பாற்றினால் பரவாயில்லை என்றிருக்கும். ரெனேவும் இன்னொரு ரோஷினியாகியிருக்க வேண்டியவள். பிறப்பின்பால் தாழ்த்தப்படும் சமுதாயத்தில் ரெனேக்கள் என்றுமே ரோஷினியாக முடியாது.

ரெனேக்கள் பழகுவதற்கும், பேசுவதற்கும் மிகவும் ஆர்வமானவர்கள். அழகானவர்கள். அனைவரையும் அசரடிக்கும் அழகுகுணம் பொருந்தியவர்கள். முக்கியமாக பட்டாம்பூச்சி போன்றவர்கள். அவர்களின் ரெக்கைகளை காதல் காமம் என இரு விரல்களுக்கு இடையில் வைத்து கசக்கிவிடத் துடிக்காதீர்கள். பட்டாம்பூச்சியை பறக்கவிட்டால்தானே ரசிக்க முடியும். ரெனே ரெனேவாகவே பறக்கட்டும். நாம் ரசிகனாகவே ரசிக்கலாம். காதலோடு, ரசனையோடு, இளையராஜாவின் இசையோடு, வாழ்நாள் முழுக்க ரசிக்கலாம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

இந்த தலைப்பும் சற்று சென்சிடிவான தலைப்பு. எனவே, அடிப்படையில் இருந்து அலசி பார்த்தோமேயானால் ஒரு தெளிவுக்கு வரலாம்.

பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னார் முதன் முதலில் உயிர் தோன்றியபோது அது ஆணாக இருந்ததா? பெண்ணாக இருந்ததா? அல்லது இரண்டுமாக இருந்ததா? அல்லது இரண்டும் இல்லாமல் வேறு ஒரு பாலின வகையில் இருந்ததா? பதில் யாருக்கும் தெரியாது. ஆனால் யூகத்தின் அடிப்படையில் அவரவருக்கு ஒரு கருத்தும் நம்பிக்கையும் இதுதான் உண்மை என்று நேரில் பார்த்தது போல சத்தியம் செய்து எல்லாம்கூட சொல்லுவர்.

90களின் முடிவில் எனது ஊரில் சர்ச்சில் திரை கட்டி ஒரு படம் ஓட்டினார்கள். அதில் மண்ணில் இருந்து ஒரு மணிதன் தோன்றுவான் (ஆதாம்). அவன் தனியாக காட்டில் திரிந்து கொண்டிருப்பான். பிற விலங்குகள் எல்லாம் அதனதன் இணையோடு இருப்பதைக்கண்டு அவன் தனக்கொரு துனை இல்லை என்று ஏங்குவான். பிறகு எங்கிருந்தோ இன்னொரு பெண் ஒருத்தி (ஈவ்) வருவாள். இதைத்தான் மனிதனின் தோற்றம் என்று எத்தனை நாள் நம்பினேன் என்று தெரியவில்லை. ஆனால், டார்வினின் தியரி விரைவில் என்னை வந்தடைந்து நம்பும்படியான ஒரு கதையைத் தந்தது.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலரும் உண்மை என்று நம்பும் ஒரு கூற்று ஆணும் பெண்ணும் இனைந்தால் தானே இன்னொரு உயிர் தோன்றும் என்பது. ஆனால் ஒரு உயிர் தோன்ற ஆணும் பெண்ணும்தான் தேவை என்பது நூறு விழுக்காடும் அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நத்தை இனங்கள் ஒரே சமயத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும். இணை சேரும்போது எதோ ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் பங்காற்றி இனப்பெருக்கச் சேர்க்கையில் ஈடுபடும். எந்த ஒரு நத்தையாலும் விந்தணுக்களையும் உற்பத்தி செய்ய முடியும், கரு முட்டைகளையும் உற்பத்தி செய்து இனச்சேர்க்கையின் மூலம் கருக்களையும் சுமக்க முடியும். அதாவது நத்தை ஆணாகவும் இருக்கும், பெண்ணாகவும் இருக்கும், சமயத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப ஆணாகவும் நடந்து கொள்ளும், பெண்களாகவும் நடந்து கொள்ளும். ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? இதைவிட ஆச்சர்யம், நன்கு வளர்ந்த சில நத்தைகளால் தானாகவே கருவுற முடியும். இன்னொரு நத்தையின் துணை தேவையில்லை. இவ்வகை உயிரினங்களை hermophrodites என்பார்கள். மண் புழுக்களும் இவ்வகையைச் சார்ந்தவைகள் தான். ஆனால், அவைகளால் சுயமாக கருவுற முடியாது.

சில உயிரினங்கள் இதற்கு நேர்மாரானவை. ஒன்று ஆணாக இருக்கும் அல்லது பெண்ணாக இருக்கும். இரண்டு பாலுறுப்புகளையும் ஒரே உயிர் கொண்டிருக்காது. அவ்வகை உயிரினங்களை gonochoristic species என்பார்கள். விலங்குகளில் 95 விழுக்காடு gonochoristic தான். முதுகெலும்பு கொண்ட 99% உயிரினங்கள் gonochoristic தான். அது ஏன் 99% என்கிறார்கள் என்றால், மனிதர்களில் சிலர் அரிதாக இரண்டு பாலுறுப்புகளுடனும் இருப்பது உண்டு. அவர்களை true hermophordites அல்லது intersex என்றழைக்கிறார்கள். ‘LGBTQIA+’ல் உள்ள ‘I’ எழுத்து intersex ஐ குறிப்பதாகும். இவர்களுக்கு இரண்டு பாலுறுப்புகள் இருந்தாலும் ஏதேனும் ஒன்றுதான் முழு பயன்பாட்டில் இருக்கும். இவர்களை பலசமயங்களில் transgender/திருநர் என குழப்பிக்கொள்வார்கள்.

trioecy என சொல்லப்படும் உயிரினங்களில் male ஆண் இனங்கள் இருக்கும், female பெண் இனங்கள் இருக்கும், இந்த இரண்டு பாலுறுப்புகளும் கலந்த hermophrodites களும் இருக்கும்.

இவ்வளவு விளக்கங்கள் எதற்காக என்று யோசித்திருப்பீர்கள். ஒருவர் யாராக இருக்க வேண்டும், யாராக இருக்கப் போகிறார் என்ற முடிவு கருவில் இருக்கும் போது முடிவாவது. அது ரசாயன செயல். எந்தெந்த ஹார்மோன்கள் எவ்வளவு சுரக்க வேண்டும் என்பது யார் ஒருவரும் முடிவு செய்வதில்லை. அது இயற்கை. அதை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு இன்றி பிறத்தல் அரிது.” – கந்தன் கருணை படத்தில் இருந்து ‘அரியது கேட்கும்’ பாடல் வரிகள். இந்தப் பாடலை நாம் நிச்சயம் கேட்டிருப்போம். இதில் வரும் பேடு என்ற சொல் hermaphrodites ஐக் குறிக்கும் சொல். இந்த பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். ஒரு உயிர் முறையே முழு ஆணாகவோ அல்லது முழு பெண்ணாகவோ பிறத்தல்தான் அரிது என்கிறார். ஏனென்றால் அதுதான் இனப்பெருக்கத்திற்கான வழி. ஆனால், வாழ்தல் என்பது வெறும் இனப்பெருக்கத்தை மட்டுமே மையப்படுத்தியது அல்ல. வாழ்க்கை என்பது பலவாறானது.

சில ஆண்களிடம் பெண்மைக்கான பண்புகள் சற்று அதிகமாக இருக்கும். சில பெண்களிடம் ஆண்களுக்கான பண்புகள் சற்று அதிகமாக இருக்கும். அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் புரிதலும் எந்தக்காலத்திலும் மனிதர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கலை கலைஞர்களில் கைகளில் வந்திருக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

L G B T Q I A +

‘L’ என்றால் Lesbian. தன்பாலீர்ப்பு கொண்ட ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல். இது உணர்வு சார்ந்த விடயம். ஒரு பெண்ணுக்கு எப்படி இன்னொரு பெண்ணைப் பிடிக்கும் என்பதுதான் இன்னமும் பலரது கேள்வி. இக்கேள்விக்கு பதில் கிடைக்காமல் இல்லை. பதில்களை ஏற்றுக்கொள்ளும் புரிந்துகொள்ளும் தன்மையே இல்லாதவர்களால் இதனை எளிதில் கடந்து வர முடியாது. தாராளமாக ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணைப் பிடிக்கலாம். இது உடல்சார்ந்த விடயம் அல்ல. முழுமையான பெண்களுக்கும் இன்னொரு பெண்ணின் மீது காதலும் வரும்.

‘G’ என்றால் ‘Gay’. தன்பாலீர்ப்பு கொண்ட ஒரு ஆணைக் குறிக்கும் சொல். லெஸ்பியன்கள் போலதான் இவர்களும். ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணின் மீது காதலும் காமமும் ஏற்படலாம். இவர்களும் உடல் அளவில் முழு ஆணாக இருப்பார்கள். சிலர் gay என்ற சொல் பொதுவாக தன்பாலீர்ப்பு கொண்டவர்களை குறிக்கும் எனவும் விளக்குகின்றனர்.

‘B’ என்றால் ‘Bisexual’. சிலருக்கு ஆண் பெண் இருபாலர் மீதும் ஈர்ப்பு இருக்கும். இவர்கள் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். திருநங்கையாகவும் இருக்கலாம். இதுவும் அவரவர் மனதின் விருப்பத்தைப்போன்றது.

‘T’ என்றால் ‘Transgender’. இந்த வார்த்தை நம்மில் பலருக்கு தெரிந்ததுதான். ஆணாகப்பிறந்து, பெண்ணாகவோ அல்லது பெண்ணாகப் பிறந்து ஆணாகவோ மாறிவிடுவார்கள். இவர்களை இழிவாக சித்தரித்தே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காட்சிகள் காமெடி என்று வடிவமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு ஆண் பெண்போல வேடமிட்டாலோ, நடந்துகொண்டாலோ அதனை நக்கலடிக்காமல் இருக்க யாருலும் முடியாது. அலி, பொட்ட, ஒம்போது என பலவாறான இழி பெயர்களை தவறாமல் அடுத்தத்த தலைமுறைகளுக்கு கடத்திவந்தனர். சமீப வருடங்களில்தான், இவர்களுக்கான பொதுப்பெயராக, திருநங்கை transwoman, திருநம்பி transman, இவர்கள் இருவரையும் குறிக்கும் பெயராக திருநர் transgender ஆகியவை வழக்கத்திற்கு வந்தன. ஒரு ஆணின் மனம் பெண்ணில் உடலில் சிக்கிக் கொண்டால் எவ்வளவு சிரமப் படுமோ, அதே சிரமம்தான் ஒரு பெண்ணாக உளமாற உணர்பவர்களும் பிறப்பால் ஆணின் உடலில் சிக்கிக்கொள்வர். தான் ஒரு தவறான உடலில் இருப்பதாக உணர்வார்கள். இது க்ரோமோசோம்களின் கலவையே அன்றி தனிப்பட்ட நபர்களின் கேரக்டர் இல்லை. சமூகத்தில் இவர்களும் நல்ல நல்ல பதவிகளில் கால்பதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குறியது.

‘Q’ என்றால் ‘questioning’. இவ்வகை நபர்கள், தனக்கு யார் மீது ஆர்வம் மிகுதியாய் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்லத்தெரியாதவர்கள். அல்லது அதைக்கண்டரியும் நோக்கில் பயனப்படுபவர்கள். ‘Q’ என்றால் ‘Queer’ என்றும் குறிப்பிடுகிறார்கள். gay என்றால் ஒரு ஆண் இன்னொரு ஆண்மீது ஈர்ப்பு கொள்வதாக எடுத்துக்கொள்ளலாம். குயிர் என்பதும் ஆணின்மீது வரும் ஈர்ப்புதான் ஆனால் தான் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் அற்று தனது விருப்பத்தை மட்டும் வெளிப்படுத்த உதவும் ஒரு தனிச்சொல்.

‘I’ என்றால் ‘Intersex’. இவர்கள் சற்று அரிய வகையினர். முழுமையான ஆணும் அல்லாமல், பெண்ணும் அல்லாமல், இரண்டும் கலந்து, பிறப்புறுப்பு, க்ரோமோசோம்கள், இனப்பெருக்க உறுப்புகள் என்று அனைத்திலும் சின்ன சின்ன மாற்றங்களுடன் மொத்தம் முப்பது வகையாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ‘Intersex” என்ற ஒற்றை வார்த்தைக்குள் கொண்டுவருகிறார்கள். ஏனென்றால் மேலே உள்ள ஐந்து வகையினரும் LGBTQ தனித்தனியாக குறிப்பிட்ட உடல் பண்புகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இண்டர்செக்ஸ் எனப்படுபவர்களுக்கு பலவாறான உடல் பண்புகள் இருக்கின்றன. கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி இவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.slideshare.net/balogunwasiu/hermaphroditism-45763096

‘A’ என்றால் ‘Asexual’. இவர்களுக்கு ஊடலில் குறைவான ஆர்வமோ அல்லது கொஞ்சம் கூட ஆரவமில்லாமலோ இருக்கும். இவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆண், பெண், திருநர், இண்டர்செக்ஸ்.

இப்படி பலவாரன உடல் அமைப்புகளையும், பாலின ஈர்ப்புகளையும், உணர்வுகளையும் உள்ளடக்கிய பல வகுப்பினர் இங்கு இருக்கிறார்கள். இந்தப்பட்டியல் இப்படி நீண்டு கொண்டே செல்வதாலும், இவர்களுக்கென தனியே ஒரு + குறியீட்டை பயன்படுத்துகின்றனர்.

‘+’ என்றால் மேலே குறிப்பிட்ட வகுப்பினரும் அல்லாது ஏனையோரைக் குறிப்பது ஆகும். இதில் Pansexual, Allosexual, Aromantic, Demiromantic, Demisexual, Dyke, Faggot, Androsexual, Gynesexual, Polyamorous, skoliosexual, sapiosexual, reciprosexual, இத்யாதி இத்யாதி வகுப்பினர் உண்டு. அதனால் ‘+’ குறியீட்டை பயன்படுத்துகின்றனர். ‘+’ல் வகைப்படுத்தப்படும் பட்டியலில் சிலவகுப்பினர் இடம்பெற மாட்டார்கள். அவர்கள் heterosexual/straight- எதிர்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மற்றும் cisgender- பிறப்பால் எந்த பாலினத்தவரோ அதே உணர்வுடன் வாழ்பவர்கள். ஆணாகப் பிறந்து உடலிலும் உணர்விலும் முழு ஆணாக இருந்து ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்பவர்கள் அல்லது பெண்ணாகப் பிறந்து உடலாலும் உணர்வாலும் முழு பெண்ணாக இருந்து ஒரு ஆணின் மீது ஈர்ப்பு கொள்பவர்கள். இவர்கள் ‘+’ல் இடம்பெற மாட்டார்கள்.

ஏன் இவ்வளவு தனித்தனிப்பெயர்கள்? ஏன் இவ்வளவு பெருமை இதில்? இதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது? என்று பலரும் கூறக்கேட்டிருக்கிறேன். அதுவும் ப்ரைட் வாக்கின் போது வரும் சகிக்கவியலாத பேச்சுகளுக்கு குறைவே இல்லை. அதற்கான பதிலும், மேலே வகைப்படுத்தப்பட்ட தனிப்பெயர்களுக்கான தேவையும் இதோ. இங்கு பெரும்பாண்மை என்னவாக இருக்கிறதோ அதுவாகத்தான் சிறுபாண்மையும் இருக்கவேண்டும் என்ற திணிப்பும் அப்படி இல்லையேல் அதை வதைகளுக்கும், இழிவுகளுக்கும், குற்றவுணர்வுக்கும் உட்படுத்த முற்படும் மிருகத்தனம்தான் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒருவரை அவரது பாலின அடையாளத்தை வைத்து சிறுமை படுத்த முயற்சிக்கும் போது, குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தும்போது, தன்போன்றோரைத்தேடி தனக்கான குரலை பதிவு செய்து, தனக்கான அடிப்படை மரியாதையேக் கோரவும், “தனது பாலினத்தாலும், தனது பாலீர்ப்பாலும் தான் குறைவாக உணரவில்லை, நிறைவாகத்தான் உணர்கிறேன். சரியாகத்தான் உணர்கிறேன்.” என்பதை உரக்கச் சொல்வதற்கும் ‘எனது சுயத்தில் நான் வெட்கப்பட ஏதுமில்லை” என்பதை உலகுக்கு உணர்த்த இந்தப் பெயர்களும், முத்திரைகளும், pride-உம் அவசியம் தேவைப்படுகிறது.

சரி இவ்வளவு விசியங்களையும் பெரும்பாண்மையான பொதுப் புத்திக்காரர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பாக்கலாமா? இதை பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று யோசியுங்கள். இத்தனை நாட்கள் முகம்சுளித்தே பழகியவர்கள், இழிவுபடுத்தி பழகியவர்கள், நகைத்துப்பேசி மட்டுமே பழிகியவர்கள், அசிங்கம், கேவலம், என்று பலவாறு அறுவருப்புடன் பேசியவர்களால் முழுமனதுடன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வரும் தலைமுறையினருக்கு இதனை முறையே நல்வழியில் அறிமுகப் படுத்த முடியும். அதற்கு இன்னும் ஆயிரம் நட்சத்திரங்கள் நகரவேண்டும். நகரும் என்று நம்புவோம்.

None of your business. இதைத்தான் நான் சொல்லவிரும்புகிறேன். நான் யாருடன் உறவுகொள்ள விரும்புகிறேன் என்பதோ, நான் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பதோ, நான் ஆணா பெண்ணா திருநங்கையா திருநம்பியா என்பதோ, நான் யாராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்பதோ நான் மட்டுமே கவலைப்படவும் மற்றும் நான் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதைத் தீர்மானிக்க எனது குடும்பத்தினருக்கோ, சொந்தக்காரர்களுக்கோ, நண்பர்களுக்கோ, ஊரார்களுக்கோ யாருக்கும் உரிமை இல்லை. Stereotype-களாகத்தான் வாழவேண்டும் என்று நிர்பந்திக்க யாருக்கும் உரிமை இல்லை. None of your business.

ஆனால், நான் யாரக இருக்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அக்கறைகொள்ளும் நபர்களும் என்னோடு சேர்ந்து பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும். odd man out-ஆக ஒருவரை இச்சீர்மிகு சமூகம் புறக்கணிக்கும். இதைவெல்ல போதுமான மனத்திண்மை பாதிக்கப்படுவோர்களிடம் இருப்பது அரிது. வரலாற்றை திரும்பிப் பார்த்தால், பெண்களுக்கான வாக்குரிமையே சமீப ஆண்டுகளில்தான் நாம் பெற்றுள்ளோம். feminism-ஐ சரிவரப் புரிந்துகொள்ளவே (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம். இவர்களிடம் “LGBTQIA+” என்றால், “அப்டினா?” என்பார்கள்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

Preview in new tab

Watch Natchathiram nagargiradhu movie here in Netflix

படம் சுமார்தான். ஆனால் படத்தில் பேசுபொருட்களாக எடுத்துக்கொண்ட தலைப்புகள் மிக முக்கியமானவை. இந்தப்படத்தை நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் பெரிய தலைப்புகள்தான்.

  1. ஆணவக்கொலைகள்
  2. LGBTQIA+
  3. ரெனேக்களும் காதலும்
  4. படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

பகுதி-1 ஆணவக்கொலைகள்

தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் ஆங்காங்கே அரங்கேறுவது புதிதல்ல. அதன் பின்னனி முழுக்க 100 விழுக்காடும் ஜாதிப்பற்று அல்ல. அதில் ஒரு உளவியல் சார்ந்த சிக்கலும் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கம் என்று குறிப்பிடப்படும், ஒரு டிபிக்கல் குடும்பத்தை எடுத்துக்கொள்ளலாம். சொந்த வீடு, லோன் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஒரு கார். இரண்டு அல்லது மூன்று பைக்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டின் அப்பா ஒரு இயல்பான மனிதர் என்றே கொள்வோம். அவர் தினசரிகளில் வழக்கமாக செல்லும் இடங்கள் என்று சில இடங்களும், அங்கே வழக்கமாக சந்திக்கும் நபர்களும் இருப்பார்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள் என தினம் ஒரு பத்து பேரிடமாவது குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஏதேனும் பேசிவிட்டு வருவார். இந்த பேச்சுதான் அவரை இயல்புநிலையில் வைத்துக்கொள்ள உதவும். எதுவும் முக்கியமான பேச்சுகள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

“நேத்து நல்ல மழை, நைட்டு ஐம்பது நிமிஷம் கரண்ட்டே இல்ல. உக்ரேன்ல போர் நிறுத்திட்டாங்க. குஜராத்ல வெள்ளம். இந்த முறையும் ரெட்டலதான் வரும். வெயில் இப்பலாம் ஜாஸ்தி.”

இப்படியாக நியுஸ்பேப்பரிலும், அக்கம் பக்கத்தில் இருந்தும் அறிந்து வைத்திருந்த மேட்டர்களை பகிர்ந்து கொள்வர். இதுதான் இன்றளவும் தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பஸ்தர்களின் ராஜபோதை. இந்த நாலு பேரு மதித்து பேசும்படி இவரும், இவர் நின்று மதித்து பேசும்படி அந்த நான்கு பேர்களும் வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதற்காகவே சாராயம் தொடாதவர்களும் அதிகம் இருக்கிறார்கள். குடிச்சா யாரும் மதிக்க மாட்டாங்க என்பதால். இதற்காகவே டீ கடைகளில் டீ குடிப்பவர்களும் அதிகம். அங்குதான் நட்பு வெகுவாக பாராட்டப்படும்.

அந்தக் குடும்பத்தின் அம்மாவை எடுத்துக் கொள்வோம். இரண்டு பிள்ளைகளை வளர்த்த களைப்பு இன்னும் இருக்க, அதனோடே கணவனுக்கு மாத்திரைகளை எடுத்து கொடுத்து அவரையும் குழந்தைப்போல பார்த்துக்கொள்ளும் ஒரு அம்மாவின் மாபெரும் ஆறுதலே அவரைப்போன்ற மற்றோரிடம் பேசித்தீர்ப்பதுதான். அவர்களுக்குள்ளும் எப்போதுமே முக்கியமான பேச்சுக்கள் மட்டுமே இருக்காது. வாணி ராணி தொட்டு, பிக்பாஸ் வந்து, அமெரிக்காவில் இருந்து லீவில் வந்துவிட்டுப்போன சொந்தக்கார பையனைப்பற்றி பேசி, இன்னிக்கு என்ன டிஃபன் வரை எல்லா விசியங்களையும் சகஜமாகப் பேசி சிரிக்க ஒவ்வொரு சமயத்திலும் யாரேனும் ஒருவர் கிடைப்பர். இவர்களிடம் பேசுவதனாலே அம்மாக்களின் மனம் ஆசுவாசப்படும்.

இந்த சூழ்நிலையில் மகளோ மகனோ காதல் திருமணம் செய்துகொண்டால், அது வேறு ஜாதியில் இருந்தால், அந்த தினசரிகளில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களே இவர்களிடம் இயல்பாகப் பழக மாட்டர்கள். லாக்டவுன் காலத்தில் கொரோனா வந்த வீட்டின் முன்பு பச்சை நோட்டீஸ் ஒட்டுவார்கள் அல்லவா, அதைப்போலவே இவர்களது வீட்டின் விசியமும் ஏனையோர்களுக்கும் ஒரு பேச்சுபொருளாகிவிடும். இவர்களது வீடு பேச்சுபொருளாக ஆகியிருக்கிறது, அதற்கு காரணம் நடந்த காதல் திருமணம்தான் என்னும் தகவலை அந்த ஏனையோர்களில் சிலர் இந்த பெற்றோரிடமே சொல்லி அரிப்பை ஆர்கஸமாக்கிக் கொள்வர்.

இப்படிப்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த பெற்றோர்களும் தெரிந்தோ தெரியாமலோ பிறர் வீட்டில் காதல் திருமணம் நடக்கும் போதும் இதையேதான் செய்வர். இந்த சுற்றத்தாரின் பார்வை, சொல் தாங்காமலோ, தாங்கமுடியாது என்று பயந்தோதான், காதல் திருமணம் செய்த பிள்ளைகளை பெற்றோர்கள் இன்னும் சேர்த்துக்கொள்வதில்லை. யாரையும் பார்க்க முடியாமல், யாரிடமும் பேச முடியாமல், டிவிகளில் ஓடும் நியுஸ் சேனல்களையும், சீரியல்களையும் பார்த்து நாட்களை கடத்துவர். பிள்ளைகளது வாழ்க்கை அவர்களுக்கு பிடித்தது போல் இருப்பதில் இவர்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லைதான். ஆனால், சமூக அங்கீகாரம் கிடைக்கப்பெறாததால், அப்பாக்களின் தினசரிகளும், அம்மாக்களின் தினசரிகளையும் ஒரு காதல் திருமணம் சிதைத்து விடுகிறது. காமன் மேன்களால் இந்த உளவியல் சவாலை சமாளிக்கமுடியாமல் தினறவேண்டியதாக உள்ளது. இதைப்பற்றி பிள்ளைகள் கவலைப்பட்டு அப்பா அம்மாவிற்காக காதல் திருமணத்தை தவிர்க்க வேண்டியதில்லை. அந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ள பிள்ளைகள்தான் உடனிருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்த ஜெனேரஷன் கேப்பை நிறப்ப நிறைய விசியங்களை வெளிப்படையாக பேசவேண்டும். அவர்களின் சம்மதத்தோடு அதே காதல் திருமணம் சுற்றமும் நட்பும் சூழ நடக்க வேண்டும்.

எனது காதுகளில் நன்கு கேட்கிறது. இது எல்லோரது வீடுகளிலும் நடக்க வாய்ப்பு இல்லை. அதுவும் ஜாதி மூலமாகவே ஒரு கெளரவத்தையும் சொத்துகளையும் சேர்த்து வைத்த பெரிய மனிதற்களின் குடும்பத்தில் இது நடக்க வாய்ப்பே இல்லை.

அளவுக்கு அதிகமான பணமும் பிறர் மீதான அதிகாரமும் ஒருவனுக்கு பிறப்பின் காரணமாக மட்டுமே கிடைத்து அதையும் அவன் சிறுவயது முதலே அனுபவித்து வளர்ந்து திடீரென தன் மகனோ மகளோ வந்து பிற ஜாதியில் ஒருவரை திருமணம் செய்து வையுங்கள் என்று சொன்னாலே போதும், பாயாசத்தை ரெடி செய்ய தொடங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு இமேஜினால் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தன்னால் சுயமாக சம்பாதிக்க முடியாத இயலாத சொத்தையும் மரியாதையையும் இந்த ஜாதியில் பிறந்த ஒரே காரணத்தினாலே granted ஆக அணுபவித்து வந்திருக்கிறார்கள். இப்போது அந்த சகல செளகரியத்தை யாருக்காக விட்டுத்தருவார்கள்? யாருக்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். இவர்களின் தினசரி வாழ்க்கையை வசதியாக நடத்த பத்துக்கும் மேற்பட்ட கூலி ஆட்களை வேலைக்கு வைத்திருப்பர். மிகக் குறைந்த சம்பளத்தில் இவர்கள் எளிதில் கிடைப்பர். இவர்களை அடக்கி ஆள்வதில்தான் எத்தனை போதை இந்த பணம்படைத்த சாதிக்காரர்களுக்கு. இப்படி இருக்க தன் மகனோ மகளோ பணமில்லாத சாதியில் ஒருவரை காட்டி அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பது கூலிக்காரனை சம்பந்தி ஆக்குவதில்லையா? வாசலில் நின்று கைகட்டி பேசிய வேலைக்காரன், தோளில் துண்டு போட்டுக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்து சம்பந்தம் பேசுவது போன்ற காட்சிகளை கனவிலும் நினைத்துப் பார்க்காதவர்கள். இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர்கள் இருக்க, சரியான சமயத்தில் சக ஜாதிக்கார சொந்தங்கள், நண்பர்கள், பங்காளிகள் வந்து வேதம் ஓதுவார்கள். சாதிப்பெருமை, சாதிப்பற்று, சாதி வெறி, என அனைத்து கோணங்களிலும் ஒரு அப்பனையும் அம்மாவையும் நொடித்து பேசி, இதை சரிசெய்ய எந்த எல்லைக்கும் செல்லத்தான் வேண்டும் என்று நம்பவைத்துவிடுவர். பல சமயம் பணக்கார வீட்டு பிள்ளைகளை பலிகொடுப்பதில்லை. பணம் இல்லாதவர் வீட்டு பிள்ளையை பலி கொடுத்து பணம்படைத்த வீட்டு பிள்ளைகளை கலங்கப்படாமல் காப்பாற்றிவிடுவார்கள். கோகுல்ராஜ், இளவரசன் போன்றவர்களின் படுகொலைதான் வெளியில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. வெளியில் தெரியாத பல பெயர்கள் இன்னமும் உண்டு.

ஜாதிகளில் இருக்கும் படிநிலைகளை சமன்செய்ய ஜாதிக்கலப்பு திருமணம் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. ஏனென்றால், ஜாதி கலப்பு திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகளை அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்கவேண்டியோ அல்லது ஆணாதிக்கத்தாலோ அப்பாக்களின் ஜாதியையே பிள்ளைக்கும் பதிவிடுகின்றனர். ஆகவே, கலப்பு திருமணம் எவ்வளவு செய்தாலும் ஜாதி ஒழியாது. ஒரு ஜாதியினரின் பிள்ளை வேறு ஜாதியினரின் பட்டியலில் சேர்க்கப்படுவதினால் ஜாதி மாறுகிறதேத் தவிற ஜாதி அழிவதில்லை.

பின்பு எங்கிருந்து இதனை சரி செய்வது?

பொருளாதாரம். பொருளாதாரத்தினால் மட்டுமே வீழ்த்தப்பட்டார்கள். சோற்றுக்கே வழி இல்லாத சூழலில் அடிமைப்பட்டு உயிர்பிழைத்ததை நினைவில் கொண்டு, நிகழ்காலத்தில் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி படித்து, தொழில்தொடங்கி, தொழில் தொடங்க உதவி, பொருளாதாரத்தில் தன்னிறைவடைய வேண்டும். கோடி ரூபாய் இருந்துவிட்டால் மட்டும் கீழ் ஜாதி எனப்படுவோருக்கு மேல் ஜாதி எனப்படுவோர் தத்தம் மகனையோ மகளையோ திருமணம் செய்து கொடுப்பார்களா? நிச்சயமாக இல்லை! ஆனால், அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கும். நாடகக் காதல் என்ற பொய் குற்றம் சாட்ட வாய்ப்பிருக்காது. மாறாக வரட்டு கெளரவம்தான் திருமணத்திற்கு தடையாக இருக்கிறது என்ற உண்மையை மேல் ஜாதி எனப்படும் குடும்பத்தினர் உணர நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இவை அனைத்து ஒரே நாளில் நிறைவேறாது. பொருளாதார ரீதியாக மேம்பட இன்னமும் ஒரு தலைமுறை காலமாக ஆகும் என அனுமானிக்கிறேன்.

சில சமயங்களில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலருக்கு, மேல் சாதிக்காரனுக்கு பணத்தினால்தானே இத்தனை திமிர் என்று உணர்ச்சிவசப்பட்டு, பணம்படைத்தோரின் பணத்தையும் செல்வத்தையும் சூறையாடுவது மட்டுமே வழி என்று தப்பு கணக்கு போட்டுவிடுகின்றனர். அதன் விளைவே, கட்ட பஞ்சாயத்தின் போது, பணம் படைத்தவர்களை பணத்தை இழக்க வைக்க பேரம் பேசி பெரிய தொகையை பெற்று விடுகிறார்கள். இதுவும் சமூகத்தில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. பொருளாதாரத்தில் சமனடைய பணம் வைத்திருப்பவர்களிடம் அடாவடியாக பறிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பலரும் திறம்பட உழைத்து நிறைய பொருள் ஈட்டுகிறார்கள். நமக்கான வசதியை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். யாரிடம் இருந்தும் இலவசமாகவோ அடாவடியாகவோ பெறக்கூடாது.

ஆணவக்கொலைகள் அனைத்தும் கேட்க ஆளில்லாத நசுக்கப்பட்டவர்களின் மீது மட்டுமே நிகழ்த்தப்படுவது ஒன்றை தெளிவாக விளக்குகிறது. ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிகிறார்கள். அந்தத் துணிவு, ஆணவம் எப்படி வந்தது? அவர்களிடம் இருக்கும் பணபலத்தை நீக்கிவிட்டாலும் இதே போல வெறிகொண்டு எழுந்து வருவார்களா? கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் வசதிவாய்ப்புடன் இருந்திருந்தால், கொலை செய்ய துணிந்திருப்பார்களா? ஒரு உயிரைப் பறிகொடுத்த குடும்பம் அந்தக் குற்ற வழக்கை எடுத்து தொடர்ச்சியாக நடத்தக்கூட வசதியில்லாத நிலைமை குற்றவாளிகளுக்கு எவ்வளவு சாதகமாக அமைகிறது. அறியாமையையும், ஏழ்மையையும் களையத்தான் கல்வியும், சலுகைகளும் பெற்றுத்தந்துள்ளார் அன்னல் அம்பேத்கர். ஆணவத்தை அறிவுகொண்டு அடக்கிவிட முடியும். அடக்கிவிடுவோம். அறிவின் பின்னால் நாம் செல்வோம், நம் பின்னால் பொருளாதாரம் வரும், பொருளாதாரத்தின் பின்னால் சுதந்திரம் வரும். அடக்குமுறைகள் அக்கிரமங்கள் அற்ற முழு சுதந்திரம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

மலையன்குஞ்சு (Malayankunju) – உடைந்த கண்ணாடிகளில் நம் பிம்பம்

Movie 2022

ஃபகத் ஃபாசில் என்ற ராட்சசன். இன்னும் எத்தனை உலகங்களுக்கு நம்மை இழுத்துச்செல்வான் என்று தெரியவில்லை. ஆனால், இந்த மலையன்குஞ்சு ஒரு கண்ணாடி உலகம். இதில் பல இடங்களில் நம்மை நாம் கண்டுகொள்ள முடியும். அப்படி ஒரு கண்ணாடி உலகத்தில் கல்லெரிந்தால் என்ன ஆகும் என்று யோசிக்காதீர்கள். படம் தொடங்கும் முன்பே இந்த கண்ணாடி உலகத்தில் கற்கள் பல எறிந்து கண்ணாடிகள் உடைந்து பலவாறாக பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியில்லாத பிம்பங்களில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் அக்கண்ணாடியின் கூர்மையில் நாம் கிழித்துக்கொள்ளாமல் இருப்பது சிரமம்.

மகேஷ் நாராயணன் எழுதி ஒளிப்பதிவு செய்ய சாஜிமோன் பிரபாகரன் இயக்கியிருக்கும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக்கிடைக்கிறது. நேரம் ஒதுக்கி பார்க்குமளவிற்கு தரமான படைப்பு.

வாழ்க்கை ஓடும் ஓட்டத்தில் நாம் எவ்வளவுதான் நல்ல சிந்தனைகளை மனதிற்குள் கொண்டிருந்தாலும், சூழ்நிலை நம்மை சோதிக்கும்போது, மனதில் ஆத்திரமும், வன்மம், கோபமும் முட்டி மோதிக்கொண்டு முதலில் வந்து நிற்கும். நல்லவை மனதின் ஏதோ ஒரு மூலையில் பாய் விரித்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கும். அனிக்குட்டனாக நடித்திருக்கும் ஃபகத் ஃபாசில் வாழ்க்கை தந்த வலியை யாரிடமெல்லாமோ கோபமாய் கொட்டித் தீர்க்கப்பார்க்கிறார். ஆனாலும் தீரவில்லை. இறுதியில் அழுது கொட்டுகிறார் வலியும் வன்மமும் தீர்ந்து விடுகிறது. ஆண்பிள்ளை அழக்கூடாது என்ற எண்ணத்தினாலோ என்னமோ, வலியைக்கூட கோபமாகவே வெளிப்படுத்தத் தெரிகிறது அனிக்குட்டன் உட்பட பல ஆண்களுக்கு. முழு சைக்கோக்கள் இல்லை இவர்கள், ஷார்ட் டேர்ம் சைக்கோக்கள்.

படம்முழுக்க அனிக்குட்டன் கோபப்பட்டுக்கொண்டே இருப்பது போல இருக்கும். அவன் கோபப்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் வரும்போது அவனால் பொறுமை காக்க முடியவில்லை. காற்றடைத்த பலூனில் ஊசி குத்தியது போல வெடித்துச்சிதறுகிறான். என்றோ எங்கோ எதற்கோ யாரிடமோ ஏற்பட்ட வலி உணர்வு, அவனை நிழல்போல துரத்திக்கொண்டே வருகிறது.

மனிதன் ஒரு சமூகவிலங்கு என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. மனிதன் ஒரு உண்ர்ச்சிமிகு மிருகம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. ஆறு அறிவு இல்லை நூறு அறிவு இருந்தாலும், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதான். படம் நெடுக இதனை காட்சிப்படுத்திக் கொண்டே வருவர். அனிக்குட்டன் புத்திசாலி, சாமர்த்தியகாரன், விவரமான மனிதன். ஆனால் என்ன பயன், கோபம் அவனை அடிமுட்டாளாக்கிவிட்டது.

படத்தின் இன்னொரு ராட்சசன் இசைப்புயல் எ.ஆர். ரஹ்மான். இசையின் மழையில் நனைந்து நனைந்து மனமென்னும் ஈரமற்ற மலை கரைந்து சரிந்து தரைமட்டம் ஆகிவிடுகிறது. இயற்கை சீற்றத்திற்கு இசைப்புயலின் இசை ராகம் கூட்டியிருந்தது.

ஆயிரம் வருஷம் வாழும் ஒருவன் எத்தனை வருஷம் நல்லவனாக இருப்பான்? முதல் ஐநூறு ஆண்டுகள்? கடைசி நூறு ஆண்டுகள்? அறுபது வருசம் வாழும் நாமும் அப்படித்தான். இடையில் நல்லவராய் இருப்போம். இடையில் கெட்டவராய் இருப்போம். கெட்டதை உணர்ந்து திருந்தி நல்லவராய் இருப்போம். நல்லவராய் இருந்து பயனில்லை என்று அலுத்துபோய் மனம்போன போக்கில் அலைவோம். எல்லாம் முடியும் போது எது நல்லது என்று தேடித்தேடி அதை நோக்கி மட்டுமே நகர்வோம். இறுதி நிமிடங்களில் அனிக்குட்டன் தேடுவதைப் போல.

இது ஃபீல் குட் மூவி இல்லை. ஃபீல் கில்ட் மூவி. நாம் வில்லன் இல்லைதான். ஆனால் நல்லவனும் இல்லை. நமக்குள் இருக்கும் நல்லவனை வெளியில் கொண்டுவர போதாத காலம் வரும்வரை காத்திருக்காமல் ஒவ்வொரு நிமிடமும் நல்லதில் மனதில் இட்டுச்செல்லுங்கள். இதை உணர்த்த ஃபகத் ஃபாசிலும், ரஹ்மானும், மகேஷ் நாராயணனும், சாஜிமோனும், படத்தில் பங்களித்த அனைவரும் கைகோர்த்து படத்தை செதுக்கியுள்ளனர்.