Category Archives: Sex

Love Today❤️, Breakup Tomorrow💔, 2nd Love Day after Tomorrow❤️‍🩹

உங்களில் பலரும் படத்தைப் பார்த்திருப்பீர்கள். நெட்ஃபிலிக்ஸிலும் காணக்கிடைக்கிறது. படம் ஹிட். ப்ரதீப் ரங்கநாதன் செம நடிப்பு. ரஜினி பாராட்டினார். விஜய் ஃபோன் பண்ணினார். எல்லாம் ஓகே. எனக்கும் சிலபல கேள்விகள் உள்ளன. அதற்கு முன் படம் பேசும் அரசியலுக்கு வருவோம்.

நிகிதாவும் மாமாகுட்டியும் பாண்டிச்சேரியில் ரூம் போட்டிருந்தால்? ? ? ? ?” இதுதான் ப்ரதீப்’களால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத காட்சி. படம் இங்குதான் விறுவிறுப்புடன் வேகமெடுக்கிறது. சொல்லுங்க மாமாகுட்டி பாடலை போட்டு ப்ரதீப் படும் அவஸ்தைகளை துள்ளலாக காட்சிப்படுத்தியுள்ளார். ஏன் நமக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொள்கிறது? விரிவாகப் பார்ப்போம். இது ஒரு டீட்டெயில்டு கட்டுரை. அதனால் பல தலைப்புகள் உள்ளே வரும். பொறுமையாக வாசியுங்கள். Dots will connect.

மோனோகமி (Monogamy)

ஒருவனுக்கு ஒருத்தி என்று எளிமையாக சொல்லலாம். விரிவாக சொல்வதென்றால், ஒருவர் அவரது வாழ்நாளில் ஒரே ஒரு நபருடன் மட்டும் உடலாலும் மனதாலும் இணைந்து வாழ்வது. பறவைகளில் 95 விழுக்காடு மோனோகமி உறவுமுறையை உடையவை. ஆனால் பாலூட்டிகளில் வெறும் 5 விழுக்காடு மட்டுமே மோனோகமி உறவுமுறையை பின்பற்றுபவை. மனிதர்கள் ஏன் மோனோகமி வகையில் வரமாட்டார்கள்? உலகின் பல கலாச்சாரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறை இருந்தாலும் அது சமூகத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிற பறவைகள் போல இயற்கையாகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை நாம் பின்பற்றுவதில்லை. (வாய்ப்பு கிடைக்காத வரை அனைவருமே மோனோகமி எனலாம்.) பறவைகளிலும் socially monogamous என்ற உறவுமுறை இருக்கிறது. அதாவது வாழ்நாள் முழுக்க ஒரு துணையுடன் தான் வாழும். ஆனால் அதற்காக வேறு எந்த துணையையும் இணைசேர அனுமதிக்காது என்றில்லை. வேறு ஒரு பறவையுடன் இணை சேரும் ஆனால் அதுனோடு வாழாது. கூடு கட்டுவது, இறை தேடுவது, முட்டைகளை அடைகாப்பது என எல்லாமும் ஒரு பறவையோடு மட்டும்தான் இருக்கும். serial monogamy என்றொரு உறவுமுறை உள்ளது. ஒரு துணை இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்து விட்டாலோ அதன் பிறகு இன்னொரு துணையுடன் இணை சேர்வது. ஒரு நேரத்தில் ஒரு துணையுடன் மட்டுமே வாழ்வது.

மனிதர்கள் (மோனோகமி) ஒருதார உறவு கொள்பவர்களா?

“சிய்யான் நாலு பொண்டாட்டி கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ள” என்னும் போது அதில் எந்த வார்த்தையும் கசப்பது இல்லை. “ஆயா நாலு புருசன கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காங்க” என்னும் போது எவ்வளவு எதிர்மறை எண்ணங்கள் மனதில் எழுகின்றன. OCDயே தான். இங்கே ஆண்கள் எதிர்பார்ப்பது, நிறுவ நினைப்பது எல்லாமே female monogamy. அதாவது பெண்கள் தன் வாழ்நாளில் ஒருவனுடன் மட்டுமே இணை சேர வேண்டும். ஆண்கள் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் இணைசேரலாம். சிறிது தசாப்தத்திற்கு முன்பு வரை இரண்டு பொண்டாட்டி கலாச்சாரம் சாதாரணமாக இருந்தது. அது ஒரு கெத்து போல கட்டி வாழ்ந்தார்கள். இந்த இரண்டு பொண்டாட்டி, மூன்று பொண்டாட்டி கட்டிக்கொள்வது சாதாரணமாக இருந்ததற்கு சமூகக்காரணங்கள் சில உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு ஊரில் நூறு குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதில் நிச்சயம் பெண் குழந்தைகள்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் உயிரின் தேர்வு அவ்வாறானது. ஒரு உயிர் தனது இனத்தைக் காத்துக்கொள்ள எடுக்கும் தன்னிச்சையான முடிவு அது. உயிர் உருவாகும் போது அது ஆணாக வேண்டுமா அல்லது பெண்ணாக வேண்டுமா என்பது அதுவே எடுத்துக்கொள்ளும் முடிவு. பெரும்பாலும் பெண்ணாகத்தான் முடிவு எடுக்கும். அதற்கான உயிரியல் காரணம் இதோ.

ஒரு ஊரில் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஐந்து ஆண் குழந்தைகளும் ஐந்து பெண் குழந்தைகளும் பிறக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இனப்பெருக்கம் அந்த ஐந்து பெண் குழந்தைகள் மூலமாக மட்டுமே நிகழும். அந்த ஐந்து பெண் குழந்தைகளும் பருவமடைந்தப் பிறகு, குழந்தையை சுமப்பதற்கு தயராகிவிடுகிறார்கள். வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் அந்த ஐந்து பெண்களாலும் பத்து வருடங்களில் ஐம்பது குழந்தைகளைத்தான் பெற்றுதர முடியும். அதுவே ஒன்பது பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தால், பருவமடைந்த பிறகு வருடத்திற்கு ஒன்பது குழந்தைகள் வீதம் பத்து வருடங்களில் தொன்னூறு குழந்தைகளை பெற்று தர இயலும். இந்தக் கணக்கில்தான் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. (சரி நான் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம். கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் உங்களுக்குத்தெரிந்த யாருக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தது, அதில் எத்தனை ஆண் குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள் என்று விரல் விடுங்கள். நிச்சயமாக பெண் குழந்தைகளே அதிகம் பிறந்து இருப்பார்கள்.)

ஆண் குழந்தைகள் குறைந்த விகிதத்தில் பிறக்கின்றன. அதனால் ஆண் குழந்தைகள் அரிதாகப் பார்க்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்டது போல ஒரு ஆண் குழந்தைக்கு ஒன்பது பெண் குழந்தை என்றால் அவர்கள் பருவமடைந்தப் பிறகு ஒரு ஆணுக்கு ஒன்பது பொண்டாட்டி என்பதாகத்தான் ஆகும். பெண்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களுக்கான டிமாண்ட் குறைந்து அவர்கள் மீது ஒரு சலிப்பான எண்ணமும் ஏற்படும். அதனாலேயே பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகம் நிகழ்த்தப்பட்டு வந்தது. பாதுகாப்பு என்பதும் அதிகம் தேவைப்படுகிறது.

தற்போது இருப்பது போல கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அப்போது இல்லை. அதனால், பிறந்த பிறகே ஆணா பெண்ணா என்று தெரியும். பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கலைத்து வந்தனர். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் அரசு ஒரு சட்டத்தை இயற்றி கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிவதை சட்டவிரோதமாக்கியது. நல்ல விசியம்தான். ஆனால் அதே அரசாங்கம், பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை கட்டமைக்கும் நோக்கத்தில் ஏதேனும் செயல்படுகிறதா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும். சில நல்ல மனிதர்களால் பெண்களுக்கு கல்வி உரிமையும், ஓட்டு உரிமையும் கொண்டுவரப்பட்டது ஆறுதலானது. ஆனால், போதுமான பாதுகாப்பு என்பது இன்னும் ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

https://ourworldindata.org/sex-ratio-at-birth

மேலே உள்ள விளக்கப்படத்தில் பார்த்தால் 1950களில், 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் வீதம் பதிவாகியிருக்கும். அந்தக்காலகட்டத்தில் வீட்டுலேயே பிரசவம் நடந்தது அதிகம். எதன் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வந்தன என்று தெரியவில்லை. ஆனால், மருத்துவமனையில் தரவுகள் பதிவுசெய்வது 80, 90களில் இருந்துதான் முழுமையாகக் கொண்டுவரப்பட்டது. இன்று மருத்துவமனையில் மட்டுமே 100 விழுக்காடு பிரசவங்கள் நடைபெறுகின்றன. வீட்டில் மருத்துவர் துணையின்றி பிரசவம் பார்ப்பது குற்றமாகவே கருதப்படுகிறது. அதனால் மேலுள்ள விளக்கப்படத்தின் தரவுகளை இந்தியாவின் 90களில் இருந்து எடுத்துக்கொள்வோம். ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 107ல் இருந்து 110 வரை உயர்ந்திருக்கும். இந்தக்காலகட்டத்தில்தான் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கருகலைப்பு செய்வது அதிகரித்தது. அதைத்தொடர்ந்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்வது சட்டவிரோதம் எனக் கொண்டுவரப்பட்டது. பிறகு ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து தற்போது 107ல் வந்திருக்கிறது. இது இன்னமும் குறையும். நூறு பெண் குழந்தைகளுக்கு நூறுக்கும் குறைவான ஆண் குழந்தைகளே பிறக்கும் நிலை வரும். அப்போது மீண்டும் பெண்களுக்கான டிமேண்ட் குறையும். இதனை அரசு எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்று தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

இதுவரை பெண்களில் நிலை என்ன?

மனிதர்கள் குழுவாக வாழ்ந்து வந்த காலம் தொட்டே பிற இனக்குழுவின் பெண்களை காமத்திற்காக கடத்தி, கொன்று, விற்று, அடிமைப்படுத்தி, கொடுமை படுத்தி, பல இன்னல்களுக்கு ஆளாக்கினர். விளையாடி தீர்த்தனர். பிற இனக்குழு போக, அவரவர் குழுவிலும் தனியாக இருக்கும் பெண்களை ஆண்கள் தனியே விட்டுவைப்பதில்லை. ஆகவே பெண்களுக்கான சமூக பாதுகாப்பிற்காக அவளை இரண்டாம் தாரமாகவாவது ஒரு ஆணுக்கு கட்டி வைத்துவிட்டால் அவள் ஒரு ஆணுடைய உடைமை ஆகிவிடுவாள். வேற்று ஆண்கள் யாரும் அவளை சீண்ட மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்தனர். அவளை கட்டிக்கொண்டவன் அவளுக்கு வாழ்க்கை கொடுத்தது போல் உணர்வான். உணர்ந்தான். அவளைத் தன் உடமைப் போல நடத்தினான். உடமை என்ன உடமை, அடிமைதான். அதன் நீட்சியே பெண்களை குறிக்கும் போது அஃறிணையில் சாடுவது அம்மா வந்திச்சி, அக்கா சொன்னிச்சி, என்பதெல்லாம் இன்றும் தொடர்கிறது. இந்த பெண்ணடிமைத்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அது எப்படி அமைந்தது என்று விளக்குகிறேன் அவ்வளவுதான். பெண்களுக்கு சம்பாதித்து போடுவதாலும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாலுமே அவளை தன் அடிமையாகப்பார்த்தான். அவளை பிற ஆண்கள் தீண்டாதவாறு பார்த்துக்கொள்வான். ஒரு நிலத்தை, பொருளை பாதுகாப்பது போல தன் மனைவிகளையும் பாதுகாத்து வருவான். இந்நிலையில் தன் மனைவி இன்னொருவனுடன் தொடர்பில் இருக்கிறாள் என்பதை எந்தக்கணவனாலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. தான் பராமரிக்கும் ஒரு பொருளை இன்னொருவன் அனுபவிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள் அல்லவா? சமூகத்தில் கள்ளத்தொடர்பு என்பது எந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது என்பதை தினசரி நாளிதழ் வாசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். தினசரி ஒரு செய்தியாவது கள்ளத்தொடர்பு சம்மந்தப்பட்ட குற்றங்களில் நடந்திருக்கும். கள்ளத்தொடர்பு ஏற்படுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது கொலையிலோ, தற்கொலையிலோ, கொலை முயற்சியிலோ, தற்கொலை முயற்சியிலோ சென்று முடிவதன் காரணம் பெண்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் ‘பத்னி’ என்ற கூற்றுதான்.

வேற்று ஆள் தன்னுடைய மனைவியை புணர்ந்துவிட்டால் தன் மனைவிமீது வரும் அருவருப்பு, மாற்றான் மனைவியை தான் புணரும்போது தன்மீதோ அந்தப் பெண்மீதோ (புணரும் வரை) வருவதில்லை.

இது போக தன் மனைவியுடன் உறவுகொண்டு அதன்வழி வரும் குழந்தையையும் ஒரு பிண்டமாகவே பார்த்து வந்தான். பத்து பதினைந்து குழந்தைகள் இருக்கும்போது, அனைவரின் மீதும் அளவுகடந்த பாசம் வருவதில்லை. அந்த வாரிசுகளையும் ஒரு சுமையாகவே எண்ணுவர். இப்படி இருக்கும்போது அந்தப்பிள்ளைகளில் யாரேனும் தன்னுடைய வாரிசு இல்லை என்பது தெரியவந்தால்? யாருடைய வாரிசுக்கு நான் உழைத்துக்கொட்டுவது என்ற கோபமும் வரும்.

இப்படி இருக்க, பெண்களுக்கு மாப்பிளை கிடைப்பது அரிதாகி கிடைத்த மாப்பிளையின் கையில் பெண் பிள்ளைகளை பிடித்துக்கொடுப்பதற்கு பெண்ணுடன் சேர்த்து பணம், தங்கம், பொருள், காடு, மாடு, சொத்து, எல்லாத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது. ஆண் பிள்ளைகளின் மீதான மோகத்திற்கு இதுவும் ஒரு காரணம். வரதட்சனையாக ஒரு புடி புடித்துவிடலாம். நான்கு பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு நகை போட்டு கட்டிக்கொடுப்பதே வாழ்நாள் சாதனையாகும்.

பெண் குழந்தைகளை வளர்த்து கட்டிக்கொடுப்பது சவாலான அந்தக் காலத்தில் ஐந்து பெண்குழந்தைகள் பிறந்த வீட்டில் ஆறாவதும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதனை கள்ளிப்பால் ஊற்றிக்கொன்று விடுவர். இதற்கு பிஜிஎம் போட்டு ஹாரிஃபை பண்ண வேண்டாம். நானும் க்ளோரிஃபை பண்ணப்போவதில்லை. வத வதவென பிள்ளைகளை பெற்று தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறத்தல் என்பது மிக சாதாரண விசயமாக இருந்தது. பத்துப் பதினைந்து பிள்ளைகளில் ஒன்று இரண்டு தவறி விடுவதே சாதாரணமாக நிகழும் ஒன்றுதான். ஆதலால், பெண் சிசுக் கொலை என்பது தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. குழந்தையை கொல்வது பாவம் என்று தோன்றாதா? தோன்றாது! பிழைக்க வழியில்லாத இந்த உலகில் இன்னொரு உயிரையும் தன் விருப்பத்திற்கு கொண்டுவந்து கொடுமைகளுக்கு ஆளாக்குவதற்கு பதில் அதை இறக்கச் செய்வதே மேல் என்றும், தனக்கு மேலும் மேலும் சுமைகள் வேண்டாம் என்றும் கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றுவிடுவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் எந்தக் கவலையும் இல்லை. அதுவே இருப்பதை உண்டு வளர்ந்து, கிடைக்கும் வேலைய செய்து பிழைத்துக்கொள்ளும். இதனால்தான் எல்லாருக்கும் ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று ஆசை. சற்று கவலையின்றி இருக்கலாம்.

சரி இவையெல்லாம் அந்தக்காலம். தற்போது? பெண்கள் அவர்களை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். தன் பெற்றோர்களையும் சேர்த்து பார்த்துக்கொள்கிறார்கள். சிங்கில் மதர் என்று தானே பிள்ளையை வளர்க்கிறார்கள். பல நிறுவனங்களை உருவாக்கி நடத்துகிறார்கள். நாடாளுகிறார்கள். சிகரம் தொட்டு நிற்கிறார்கள். ஆனாலும், இன்னமும் சமூக பாதுகாப்பிற்காக ஒரு ஆணின் நிழலில் நிற்க வேண்டிய கதிதான் தொடர்கிறது. ஏனென்றால் எவனும் பட்டா போடவில்லை என்றால் தற்காலிகமாக நாம் கொட்டா போட்டுக்கொள்ளலாம் என்ற துடிப்பு ஒவ்வொரு ஆணிடமும் இருக்கிறது. யாருக்கும் சொந்தமில்லாத ஒரு பொருளை சிறிதுகாலம் தான் அனுபவித்துக்கொள்ளலாம் என்றுதான் எண்ணுவார்கள். காலத்திற்கும் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பமாட்டாரகள். இதெல்லாம் பெண்களுக்கும் ஆரம்பத்தில் புரியாது. சற்று லேட்டாகத்தான் புரியும்.

வரலாற்றில் ஆண்கள் எப்போதும் ஒரு தார உறவுமுறையில் வாழ்ந்ததில்லை. ஆனால், பெண்களை ஒரு தார உறவு முறையில் நிற்கவைக்க அனைத்து விதிகளையும் வகுத்து வந்துள்ளான். பத்தினி, கன்னி, சுமங்கலி, விதவை/கைம்பெண், தேவிடியா, ஐடம், மேட்டர், கேஸு, என்று எல்லா வார்த்தைகளும் ஒரு பெண்ணை பல ஆண்களுடன் பழகுவதைத் தடுக்கத்தான். ஆண்களுக்கு பெண்களின் மீது அக்கறை எல்லாம் இல்லை. இத்தனை விதிகளைப்போட்டு பாதுகாக்க. ஒரு ஆண் இன்னொரு ஆணிடமிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். அந்த ஆண் பிற ஆண்களிடம் இருந்து அதே பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். ஆக மொத்தம் திருடனும் கணவனும் ஆண்கள்தான். பலியாடு மட்டுமே பெண்கள்.

சமகாலக காதலி(யி)ன் கதி என்ன?

சமகாலத்தில் காதல், கல்யாணம், ரிலேசன்ஷிப் எல்லாம் எப்படி என்பது உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், அதன் சிக்கல்களை புரிந்து கொள்வதற்கு மேலே குறிப்பிட்ட விசியங்களை இவ்வளவு ரீவைண்ட் செய்ய வேண்டியுள்ளது. பையனோ பொண்ணோ நிறைய நபர்களுடன் பேசிப்பழக வேண்டும். கேரக்டர்கள் பலவிதம் உண்டு. அவர்களை படிப்பதன் மூலமாகவே வாழ்க்கையை கற்றுக்கொள்ள முடியும். ஒரு கேவலமான பிறவியையாவது சந்தித்து அதனுடன் ஓராண்டாவது வாழ்ந்துவிடுவீர்கள். அதன்பிறகு வாழ்க்கையில் நீங்கள் ஒரு கேவலமான செயலையும் சுயநினைவுடன் செய்ய மாட்டீர்கள்.

சரி பழகும் அத்தனை பேரையும் லவ்வர் என்று சொல்லிவிடலாமா? பெண்களுக்கு அப்படி சொல்ல விருப்பமில்லை என்றாலும், ஆண்களின் கொக்கியே ‘ஐ லவ் யு சொல்லு’, ‘லவ் பண்றன்னு சொல்லு’, ‘ஓகே சொல்லு’ என்பதாகத்தான் இருக்கிறது. அதாவது ஒருவனை முழுதாக தெரிந்துகொள்ளும் முன்பே கமிட்மெண்ட்டை கொடுக்க சொல்லி அடம்பிடிப்பது. “ஓய் செல்ஃபி எனக்கு எப்போ ஓகே சொல்ல போற?” என்று பின்னாடியே சுத்துவார்கள். எஸ்.கே ரசிகைகளும் ‘அவன் என்னை தொரத்தி தொரத்தி லவ் பண்ணினான் அதான் ஓகே சொன்னேன்’ என்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளவார்கள். உண்மையில் பையனோ பொண்ணோ ஒருவர் “சுத்த லூசு, மெண்டல், சைக்கோ” என என்று தெரிகிறதோ, அன்று முதல் அவனோ அவளோ எக்ஸ் (Ex) ஆகிவிடுகிறார்கள். பிறகு மீண்டும் ஜோடி தேடும் காட்சிகள் தொடரும். இது ஒரு லூப் போல போயிக் கொண்டே இருக்கும்.

சினிமாவில் பையனும் பொண்ணும் காதலிக்காமல், காதல், லவ் என்ற வார்த்தை இல்லாமல் பழகுவது போன்ற காட்சிகளோ, பாடல்களோ ரெஃபரென்ஸாகக்கூட இல்லை என்றே எண்ணுகிறேன். ( ஆட்டோகிராஃப் படத்தில் சேரனும் ஸ்னேகாவும் நண்பர்களாக இருப்பார்கள். குலு குலு படத்தின் அன்பரே பாடல் மட்டுமே ஞாபகத்திற்கு வருகிறது). அதனாலே ஒரு பெண் தன்னிடம் பேசினாலே லவ் என்று கற்பனை கட்டிக்கொள்கிறார்கள். காதலின்றி ஆணும் பெண்ணும் பழகுவது எவ்வளவு அழகானது என்று யார் இவர்களுக்கு சொல்லித்தருவது?

பள்ளி, கல்லூரி, அலுவலகம், தெரு, ஊர், பஸ், ட்ரெயின், மால், பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டா, ட்விட்டர், ஸ்னாப்ச்சேட், டெலிக்ராம், டிண்டர், அன்பே, டன் டன், இத்யாதி இத்யாதி இடங்களிலும் தளங்களிலும் ஆண்கள் பெண்களைத் துரத்திக்கொண்டுதான் இருப்பார்கள். பெண்கள் யாரிடமும் சிக்காமல் தப்பி வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலகீனமான இடம், காலம், சூழல், வார்த்தை, பாடல், பெயர் என்று எப்படியும் இருக்கும் அல்லவா? அதில் சிக்கிவிடுவார்கள். ஆண்களும் லேசுபட்ட ஜீவன்கள் இல்லை. பெரும்பாலும் பெண்கள் எளிதில் சிக்கிக் கொள்வர்.

ஒரு பையனை பிடிக்கும் என்பதற்கும் அவனோடு வாழவேண்டும் என்பதற்குமான இடைவெளி பெண்களின் பார்வையில் மைல் தூரமிருக்கும். ஆண்களின் பார்வையில் அது மயிர் தூரத்தில்கூட இல்லை. பிடித்துவிட்டால் வேறென்ன? வாழந்துவிட வேண்டியதுதானே என்பதாகத்தான் இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொண்டு வாழும் அளவிற்கு தான் என்ன தகுதியுடன் வாழ்கிறோம் என்பதையெல்லாம் சிறிதும் யோசிக்க மாட்டார்கள். படங்களில் வரும் காதல் காட்சிகளை மனதில் ஊறப்போட்டு அதன் பாதிப்பில் காதலித்தவர்கள்தான் இங்கு ஏறாளம். உண்மையில் ஒரு நபரின் மீது நல்ல எண்ணம் தோன்றி, அவரை வாழ்நாளில் தவறவிடக்கூடாது என்று உணர்ந்து, அவருக்கும் தன்மீது அதே எண்ணம் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தி, பிறகு காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ அரிதிலும் அரிதாகவே நடக்கிறது. சினிமாத்தனம் கலக்காத காதல் எங்கேனும் உண்டா என்ன?

Chatbox📱

மெசேஜ் செய்யும் போது ஒரு தைரியம் வரும். ரியால்டியில் அது வராது. மெசேஜ் செய்யும் போது ஒரு ஸ்பரிசம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான ஸ்பரிசம் வரும்.) மெசேஜ் செய்யும் போது ஒரு கோபம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான கோபம் வரும்.) ஏனென்றால் ச்சேட்டிங்கில் நாம் பேசுவது, பதில் வருவது எல்லாம் நம் மூளைக்குள் கற்பனையாக மறு உருவாக்கம் செய்யப்படுவது. அதனை நம் மூளை மிகைப்படுத்திக் கொண்டே வரும். communication என்பது முகபாவனை, வார்த்தையின் உச்சரிப்பு, வார்த்தை பயன்பாடு என எல்லாமும் சேர்ந்தது. இதில் வெறும் வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு நம் மூளை அதற்கு கற்பனையாக ஒரு முகபாவனையையும், உச்சரிப்பு தொனியையும் உருவாக்கும் பொழுது மறுமுனையில் இருந்து பேசுபவர் சொல்ல வருவதில் 50% விழுக்காடு நாம் தவறாகத்தான் உள்வாங்கிக்கொள்வோம். உதாரணமாக நீங்கள் சமீபத்தில் சேட்டிங்க் செய்தபோது, “I mean…” என்று நீங்களோ மற்றவரோ முன்பு சொன்னதையே நிச்சயம் விளக்கிக்கூற வேண்டிய சூழல் வந்திருக்கும். நேரில் பேசும்போது ஏற்படும் communication gaps மிகக்குறைவாக இருக்கும். சேட்டிங்கில் குழப்பம் இல்லாமல் இருக்காது. ரிலேஷன்சிப்பும் இப்படித்தான். மிக எளிதாக தவறாக உள்வாங்கிக்கொள்ளப்படும். ‘I feel low today 😞’ என்று ஒருவர் மெசேஜ் செய்தால் உடனே நாம் ஒரு 🥸 motivational speaker 🫵🏻 ஆகி சொற்பொழிவை நிகழ்த்த ஆரம்பித்துவிடுவோம். எதிரில் இருப்பவர் ‘hey tk it ez 🤪. Im alryt . Im jst not feel g8 2day. But thats 5n. Chill 🙃’ என்று சொல்வதற்குள் நாம் நிறைய பேசிருப்போம். இதுதான் சேட்பாக்ஸின் மிகப்பெரிய பிரச்சனை. ஒரு ஸ்மைலியும் ஓரிரு வார்த்தையும் நாம் நினைப்பதை அவ்வாறே மறுபக்கத்தில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்காது. மாறாக அவர் புரிந்துகொள்ளும்போது அது நாம் சொல்லிய விசியத்தின் அளவை, தன்மையை, அழுத்தத்தை கூட்டியோ குறைத்தோதான் வெளிப்படுத்தும்.

இது போக ஒருவரிடம் மெசேஜ்ஜில் பேசுவதற்கும் நேரில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் வரும். மெசேஜ்ஜில் பேசுவதை வைத்து ஒருவரின் குணங்களை எடைப்போடுவது, நல்லவர் வல்லவர் என நம்புவது நன்றல்லது. அப்படி பேசுபவர்களை மெசேஜ்ஜுடன் வைத்துக்கொள்வதே நன்று. நேரில் சந்திப்பதோ, வீட்டிற்கு அழைப்பதோ, பணம் அனுப்புவதோ, பாஸ்வேர்ட் கொடுப்பதோ, எல்லாமும் ரிஸ்க் நிறைந்ததுதான்.

மெளனம்

சமூக வலைதளங்களில் நண்பராகும் பலரும் சில காலம் நெருக்கமாக பேசிக்கொள்வர். யாரு என்ன என்பது போன்ற விசியங்களை பரிமாரிக்கொள்வர். பிறகு அந்த பேச்சுக்கள் அப்படியே நீர்த்துப்போகும். இது மிக மிக சாதாரணமான ஒன்று. மேலும் ஆன்லைனில் இருக்கும் நபர் நம்முடன் பேசவில்லை என்றால் அதற்கு ஆயிரம் இல்லை பத்தாயிரம் காரணம் இருக்கலாம். அதில் முதல் காரணம், நம்முடன் பேசுவது மட்டுமே அவருக்கு வேலை இல்லை என்பதுதான். நம்மைத் தவிற மற்ற தலைவலிகளும் அவருக்கு இருக்கக்கூடும் அல்லவா? இந்த யதார்த்தத்தைக்கூடப் புரிந்து கொள்ள நம் மூளை மறுக்கும். காரணம் அது கற்பனையில் ஒருவரை உருவாக்கியுள்ளது. நம் மூளை அவருக்கு ஒரு சராசரி மனிதர் செய்யும் வேலைகளை கற்பனைகூட செய்து பார்க்காது. சமீபத்தில் ஒரு வாக்கியம் படித்தேன். ‘People are not rude. They are just busy’. எவ்வளவு உண்மை இது. எதையும் சிந்திக்காமல் “reply me, reply pannu, saaptiya, enna panra, yen pesa matra, ennaachi, en mela kovama?, naan ethum thappa pesitana, antha msg nan pannala, awlothana?” என்று ஐம்பது நூறு மெசேஜ்களை அனுப்பித் தள்ளுவான். சனியன் இம்சகட்றானே என்று ப்ளாக் செய்தால், இன்னொரு ஐ.டி. ஓபன் பண்ணி மாறு வேடத்தில் வந்து உயிரெடுப்பான். மாப்ளைக்கு அவ்வளவு வெறி.

பெண்கள் பத்தினியாக இருக்க வேண்டுமா? வேண்டாமா?

இந்த விஷயத்தில் ஆண்களில் இரண்டு பிரிவினர் என் கண்களுக்குப் புலப்படுகிறார்கள்.

முதல் வகையினர், போலி புரட்சியாளர்கள். ‘பெண்கள் யாருடன் வேண்டுமனாலும் உறவு வைத்துக்கொள்ளட்டும்’, ‘அவள் உடல் அவளது சுதந்திரம்’, ‘உடலைப் பகிர்வதும் விற்பதும் அவளது உரிமை’, என்றெல்லாம் பெண்களின் சுதந்திரத்தை அவளது உடலைக் குறித்தே முன்வைப்பார்கள். இவர்கள் யாரும் பெண்களுக்கு காவலர்கள் இல்லை. காசு கொடுத்தால் பெண்கள் கிடைப்பார்கள் என்ற சூழல் வரும் போது, பெண்களின் உடலை காசு கொடுத்து அனுபவித்துக்கொள்ளலாம் என்ற பேரன்பு கொண்டவர்கள். பாவம் காசு சம்பாதிக்க பெண்கள் ஏன் படித்து வேலைக்குச் சென்று உழைக்க வேண்டும்? உடலை விற்றாலே காசு வரும் என்றால் இவர்களின் வாழ்க்கை சற்று சுலபம்தானே. பெண்கள் ‘தான் ஒருவனுடந்தான் வாழ்வேன், அந்த ஒருவனுடன் தான் புணர்வேன்’ என்பது இவ்வகை ஆண்களுக்கு மிகவும் கசக்கும். எனவே அதை பழமைவாதம் என்றும், பெண்ணடிமைத்தனம் என்றும் பெரியாருக்கே லெக்சர் எடுப்பதுபோல பேசுவார்கள். பெண்களின் மோனோகமியை எதிர்ப்பவர்கள். புரட்சியாளர்கள் போல் வேடமிடும் இவ்வகை ஆண்களுக்கு பெண்களின் மீது அளவற்ற அன்பொன்றும் இல்லை. அடக்கமுடியாத ஆசைதான் அவர்களை அப்படி பேச வைக்கிறது. இந்தக்கசாப்புக் கடைக்காரர்களிடமும் ஆடுகள் தானாக வந்து சிக்காமலில்லை.

இரண்டாம் வகையினர், கலாச்சாரக் காவலர்கள். பெண்களை பத்தினியாகத்தான் இருக்கவேண்டும் என்று நிர்பந்திப்பவர்கள். அதன் காரணமாக பெண்களை யாருடனும் பழக அனுமதிக்க மாட்டார்கள். வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பெண்களின் வாழ்க்கையில் கல்யாணமும் குழந்தையை வளர்ப்பதும் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் ஊறியவர்கள். சமூகத்திலும் இதனையே முன் வைப்பார்கள். கலாச்சாரம், பண்பாடு, மதநெறிகள், குடும்ப மானம், கெளரவம், வம்ச வீரம், என சகலத்தையும் துணைக்கு வைத்துக்கொள்வார்கள். பெண்களின் நலனில் அக்கரை காட்டுவதாக சொல்லிக்கொண்டு அவர்களின் சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி பெண்களுக்கென்று சொல்லி ஒரு மிருதுவான மெத்தை செய்து அதில் இவர்களும் படுத்து அதே பெண்களை புணர்வார்கள். கன்னித்தன்மையின் மீது ஆண்கள் அடுக்கும் இந்த எண்ணற்ற கூற்றுகள் யாவும் ஆண்களுக்கு பொருந்தாது இருப்பதுதான் ஆச்சர்யம். இவர்களின் முழு நோக்கமும், ஒரு பெண் திருமணம் வரை கன்னித்தன்மையோடும் திருமணத்திற்குப் பிறகு பத்தினியாகவும் இருந்துவிட்டால் போதும், ‘அவள் படித்து என்ன சாதிக்கப்போகிறாள்?’, ‘வேலைக்கு சென்று யாரைக்காப்பாற்றப் போகிறாள்?’, என்ற கீழ்நிலையிலே சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள். பெண்களை ஆட்டிவைக்கவும் இந்தக்கூற்றுகள் வசதியாக இருக்கின்றன. மற்றவருடன் பழகுவதையே விரும்பாத பொசசிவ் பேர்வழிகளுடன் காலந்தள்ளுவது சற்று கடினமான விசயம்தான். ஆனால், மற்றவருடன் பேசுவதை பழகுவதை நம்பி அனுமதிக்கும் அளவிற்கு யாரும் யோக்கியஸ்தன் இல்லை என்பது பெண்களுக்கும் நன்கு தெரியும். (அத்துமீறுவது ஆண்கள் மட்டும்தான் என்ற முடிவிற்கு நான் வரவில்லை. அதுதான் உண்மை. பெரும்பாலான தருணங்களில் ஆண்கள்தான் அத்துமீறுகிறார்கள். பெண்களும் ஆங்காங்கே ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக விதவிதமாக கள்ளத்தொடர்பில் தூள் கிளப்பி வருகிறார்கள்.)

இருவகையினருமே பெண்கள் ஏன் கன்னித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்கிற அடிப்படையை புரிந்துக்கொள்ளாதவர்கள்.

ஒன்று சமூகக்காரணம். மனிதன் ஒரு சமூக விலங்கு. அவன் தனியே வாழ்பவன் அல்ல. குடும்பமாகவும் சமூகமாகவும் உறவாடுவதிலேயே மனதில் அமைதியைக் காண்பவன். பெண்ணுக்கும் அதேதான். பிற மனிதர்களிடம் பேசி உறவாடுவதிலே தன்னை அறிந்துக்கொள்ளக்கூடியவர்கள். ஒரு ஆணும் பெண்ணும் முறையே ஒருவருக்கு ஒருவர் உண்மையாக குடும்பமாக வாழவில்லை என்றால் அவர்களது குடும்பத்திற்கு சமூகத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காது. இதில் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமல்ல, அவர்களது வழிவந்த குழந்தைகளும்தான். சுற்றம் யாவும் கீழாக நடத்தும் சூழ்நிலையில் வளரும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது ஆணும் பெண்ணும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை பின்பற்ற வேண்டும். (சைக்கோ, டாக்ஸிக், சந்தேகப்பேர்வழி, துணையுடன் வாழவேண்டும் என்றில்லை. நல்ல குடும்ப உறவில் இருக்கும் போது மனசஞ்சலங்களை தவிர்க்கவேண்டும் என்கிறேன்.)

மற்றொன்று உயிரியல் காரணம். இரு உயிர் சேர்ந்து மூன்றாவதாக ஒரு உயிரை உருவாக்குவதே உடலுறவு. இன்னொரு உயிரை இப்பூமிக்கு கொண்டுவருபவர்கள், அவ்வுயிரை தன்னால் இயன்றவரை துயரத்தில் இருந்தும் ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றி ஆளாக்கிவிட வேண்டும். ஒரு பெண் பல ஆண்களுடன் உறவில் இருந்துவந்தால் அவளால் ஒரு அழகான, லட்சனமான குழந்தையை பெற்றெடுக்க இயலாது. உடலுறவு முதல் கருவுற்று பிரசவித்து தாய்பாலூட்டி வளர்க்கும் வரை ஒரு பெண் எந்த மனநிலையில் இருக்கிறாளோ அதுதான் குழந்தையின் குணமாக மாறும். உதாரணத்திற்கு ஒரு பெண் தான் உடலுறவு கொண்டது முதல் பேறு காலம் வரை கொடுமைகளுக்கு ஆளாகாமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்து வருகிறாள் என்றால் அவளது குழந்தை அழகாகவும் லட்சனமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். இதுவே அவளை பல கொடுமைகளுக்கு ஆளாக்கி, துன்புறுத்தி, அல்லது அவளே பெரும் குழப்பத்திலும் மனம் போன போக்கிலும் வாழ்கிறாள், குழந்தையை ஒரு சுமையாக எண்ணுகிறாள் என்றால் அந்தக்குழந்தை அவலட்சனமாகவும், விகாரமாகவும், குறைபாடுகளுடனும் பிறக்கும். ஒரு உயிர் உருவாகும் போது அதை சுமக்கும் உயிரும் உடலும் மனதும் இன்புற்றிருக்க வேண்டும். குழப்பத்திலும், விரக்தியிலும், துயரத்திலும் பிறத்தல் நன்றன்று.

அப்படியானால், பெண்கள் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் புணர்ந்துக்கொண்டு, திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆணுடன் மட்டும் வாழ்ந்து நல்லபடியாக குழந்தைய பெற்றுக்கொண்டு. பிறகு மீண்டும் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாமா என்று கேட்கலாம். அதுதான் இல்லை. ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால் அதில் அனைவருமே புத்திசாலியாக இருப்பது அரிதே. முதல் குழந்தை அறிவாளியாக இருக்கும், இரண்டாவது குழந்தை சற்று மந்தமாக இருக்கும். அல்லது முதல் குழந்தை மந்தமாக இருக்கும், இரண்டாவது குழந்தை புத்திசாலியாக இருக்கும். இதற்குக் காரணம் பெற்றோர்களின் மனநிலையே. முதல் கர்ப்பம் திருமணம் முடிந்த முதல் வருடமே ஏற்படும்போது, பெண்ணுக்கு கணவனின் குடும்பம், இல்லற வாழ்க்கை எல்லாம் புதிதாக இருக்கும். கொடுமைகார ஆட்கள் இல்லை என்றால், கர்பகாலம் இனிமையாக அமையும், குழந்தையும் ஆரோக்யமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். பிறகு கனவன் மனைவி சண்டைகள் ஆரம்பித்து முத்தி, வாழ்க்கையை வெறுத்து, குழந்தையை வளர்க்கும் பாரம் தெரிந்தப்பிறகு ஒரு கர்ப்பம் நிகழும்பொழுது, முதல் குழந்தைக்கு இருந்த அதே ஆர்வமும் குதூகலமும் இரண்டாவது குழந்தைக்கு இருக்காது. எனவே இரண்டாவது குழந்தை சற்று புத்திக்கூர்மை குறைவாகப் பிறக்கும். பலதார உறவுகளில் எந்த மனக்குழப்பமும் இருக்காது என்று யார் உத்தரவாதம் தரமுடியும்? இந்த வாதங்கள் ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். நம் மன ஓட்டங்கள் நாளுக்கு நாள் மாறும், அந்தப்பொழுதில் ஒரு குழந்தை உருவாகும் போது அது அந்த குணங்களுடனே பிறக்கும்.

கன்னித்தன்மையுடனும் பத்தினியாகவும் இருப்பது ஒரு பொறுப்பு. அதன் அர்த்தமறிந்து பின்விளைவுகளைப் புரிந்து அந்தப்பொறுப்புகளை ஏற்க வேண்டும். ஆண்கள் வரைவதற்காகவே எந்தக்கோட்டையும் தாண்டாமல் இருக்கவேண்டிய அவசியமில்லை. வரைமுறைகளின் அர்த்தமறிந்து அதனை ஏற்றுக்கொண்டால் போதுமானது.

ப்ரதீப் காட்சிப்படுத்தும் (நிகிதா) பெண்கள்

நிகிதா ரெவியை தம்பி என்றுதான் அறிமுகப்படுத்தினாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவளே பின் அதை மாற்றிப்பேசுவதாக காட்சி அமைத்திருக்கிறார் திரு.உத்தமன் ப்ரதீப். நம் மூளை நாம் பேசுவதை அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. சிலசில வார்த்தைகள் எண்கள் இடங்கள் அளவுகளை நம் மூளை தவறாகத்தான் பதிவேற்றிக்கொள்ளும். அது நாம் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம் அல்லது பிறர் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இதை நிகிதாவின் கேரக்டரை டேமேஜ் செய்வதாக, அவள் பச்சையாக பொய் சொல்கிறாள் என்று காட்சி அமைத்துள்ளார் உத்தமன் ப்ரதீப்.

சொல்லுங்க மாமாகுட்டிக்கு துள்ளலாக பாடல் அமைத்த திரு.உத்தமன் ப்ரதீப்களால், ட்ரைபல் ஃபோட்டோஸ் கேட்டு அலைந்ததற்கு ஒரு பாட்டுகூட போடமுடியாமல் போனதுதான் ஆச்சர்யமே. நிகிதாவின் இன்ஸ்டாகிராமில் இருக்கும் மெசேஜ்களை படிக்கும்போது வரும் விஷுவலில் பல ஆண்களை காட்டி இருப்பார் உத்தமன் ப்ரதீப். சாப்டியா, சாப்டியா, சாப்டியா என என்னேரமும் அக்கரைக்கொள்ளும் ஆண்கள் முதல், கெளதம் வாசுதேவ் மேனன் பானியில் வரும் போலி இன்டெலக்சுவல் உமனைசர் வரை மிக நேர்த்தியாக காட்சி அமைத்த உத்தமன் ப்ரதீப்பும் அவர்களில் ஒருவர்தான். பலருக்கும் கொக்கி போட்டு வைத்திருப்பவர். மற்ற ஆண்கள் நிகிதாவிடம் நெருங்க முயற்சிப்பது க்ரின்ஜ் என்றால் இவர் மற்ற பெண்களிடம் பழக முயற்சிப்பதற்கு பெயர் என்ன?

நிகிதாவின் ஆபாச வீடியோ வந்தப்பிறகு யாரும் அவளை நம்ப மாட்டர்கள். உத்தமன் ப்ரதீப் மட்டும் அவளை நம்புவான். எப்படி? பாண்டிச்சேரி போய்விட்டு வந்ததையே சந்தேகப்பட்டவன், இப்போது எப்படி வீடியோவைக்கண்டப் பிறகும் நிகிதாவை நம்புகிறான்? மாமரத்தைக் கண்டதாலா? ராதிகா கண்திறந்துவிட்டதாலா? உத்தமன் ப்ரதீப் போன்ற ஆவரேஜ் ஆண்களுக்கு நிகிதாவே அதிகம். அதனால் இவன் பெருந்தன்மையாக நிகிதாவை ஏற்றுக்கொள்ளும்படியான காட்சியமைக்க வேண்டுமானால் அவளை அசிங்கமாகக் காட்ட வேண்டும். அங்குதான் நிகிதாவின் கற்பை துணைக்கு வைத்துக்கொள்கிறார் புத்திசாலி உத்தமன் ப்ரதீப்.

ஆண்களிடம் இருக்கும் காஜி மனப்பான்மையை நார்மலைஸ் செய்வதே தவறு, அதிலும் இறுதிகட்ட காட்சியில் நிகிதாவை அவளது அப்பாவே நம்பாதது போலவும், ஆனால் உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப் அவர்கள் நிகிதாவை நம்புவதாக காட்சி அமைத்திருக்கிறார். ஏன் உத்தமன் ப்ரதீப் அவர்களின் ஆபாச வீடியோ வைரலாகி நிகிதா அதே உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாதா? அப்படி ஒரு காட்சி, ஆம்பள ஐட்டத்தை பெண் ஒருத்தி ஏற்றுக்கொள்வது போல ஒரு காட்சி இருந்திருந்தால் அது அனைவருக்குமே (பெண்கள் உட்பட) உறுத்தும், கசக்கும், உமட்டும், ஒவ்வாது, படம் ஓடாது. ஆனால் கெட்டுப்போனதாக நம்பப்படும் நிகிதாவை ப்ரதீப்கள் நம்புவதாக காட்சி அமைத்தால் படம் ஹிட். பெண்களை மட்டப்படுத்தி ஆண்களை க்ளோரிஃபை செய்யும் ஹிட் ஃபார்முலாவை முன்பு ரஜினி காப்பாற்றி வந்தார், பிறகு விஜய், தனுஷ், சிம்பு, சிவா கார்த்திகேயன், இவர்களின் வரிசையில் தற்போது திரு.உத்தமன் ப்ரதீப் கற்று தேர்ந்து மெரிட்டில் தொழிலுக்கு வந்துள்ளார். இன்னும் நிறைய லெக்சர் ப்ராஜெக்டுகள் இவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். உத்தமன் ப்ரதீப் படத்தில் ஹீரோ, நிஜத்தில் அவர் நல்ல தரமான பிஸ்னஸ்மேன். க்ரியேட்டிவ் பிஸ்னஸ்மேன். நல்லவன் கெட்டவன் என வகைமைக்குள் வராத லாபம் பார்க்கும், வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்ட இண்டெலெக்சுவல் பிஸ்னஸ்மேன்.

கிட்டதட்ட அனைவருமே லவ் டுடேவை ரசித்துக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது எனக்கு மட்டும் இதில் இருக்கும் ஆபத்து கண்ணுக்கு தெரிந்தது. நண்பர்களுடன் கலந்துரையாடும் போது இதில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் என்ஜாய் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. என்னிடம், “ஒரு படத்தை இவ்வளவு சீரியசாக பார்க்காதே, இது வெறும் ஒரு படம்”, “ஏன் ஹுமரெஸ்சாவே பாக்க மாட்ற?”, என்றெல்லாம் நண்பர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் யதார்த்தில், சினிமா நம்மையும் நம் வாழ்வையும் பலமாக பாதிக்கிறது. எம்.ஜி.ஆர், கலைஞர், என சினிமாவில் வந்தவர்கள் நாடாளும் வரை செல்கிறார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்க வேண்டும் என்றால், சினிமாவில் சீரியஸான விசயங்களை சீரியஸாகவும், ஜாலியான விசியங்களை ஜாலியாகவும் காட்சிபடுத்த வேண்டும். யதார்தத்தில் சீரியஸான விசயங்களை சினிமாவில் ஜாலியாக காட்டுவதன் மூலம் பல அபத்தங்களை நார்மலைஸ் செய்வதும் க்ளோரிஃபை செய்வதும் பெரும் ஆபத்தானது. அதை மிகக்கவனமாக கையாள வேண்டும். என்னைப்போலவே RJ ஆனந்தி அவர்களும் இப்படத்தில் இருக்கும் அபத்தங்களை எடுத்துரைத்தார். இன்னும் பலரும் இந்தப்படத்தில் இருக்கும் அபத்தங்களை புரிந்திருக்கக்கூடும், அவர்களும் வாய்திறந்து பேச வேண்டும். கலந்துரையாடி களையவேண்டிய தேவை இதில் இருக்கிறது.

‘ரிலேஷன்சிப் பற்றி அடுத்த தலைமுறைக்கு நாம் நல்லவிதமாக சொல்லிக்கொடுக்கிறோம்’ என்ற பொறுப்பை நான் சினிமாக்காரர்களிடம் எதிர்பார்க்கவில்லை. பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம் என யாருமே அதை கையில் எடுக்காமல் இருப்பதால்தான் ஆண் பெண் உறவுகளைப் பற்றி சினிமா பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சினிமா ஒரு வணிகம். இங்கு நல்லதை எதிர்பார்க்க முடியாது. எது வியாபார ரீதியாக வெற்றி அடையுமோ அதைத்தான் நாம் பார்க்க நேரிடுகிறது.

பின்னூட்டம் முக்கியம் அன்பர்களே. உரையாடி அறியாமை களைவோம்.

Surya devan V —— 02.01.2023

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

திரைப்படங்கள் நம்மை எந்தளவிற்கு பாதிக்கும் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டிய விசயம் அல்ல. இருந்தாலும் சில உதாரணங்கள் அல்லது நினைவூட்டலகள் பின்வருமாறு.

கர்நாடகாவில் ஒரு இளைஞன் அருந்ததி படம் பார்த்து தன் உடலைத் தீயிட்டுக் கொள்கிறான். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இறந்து போகிறான்.

ஹைதராபாத்தில் ஒரு குழு மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்சால் கவரப்பட்டு அதே பாணியில் திட்டமிட்டு ஆட்களைக் கடத்தி பணம் பறித்து வந்துள்ளனர். பிறகு ஒருநாள் போலீஸில் மாட்டிக்கொள்கின்றனர்.

கே.ஜி.எஃப் படம் பார்த்து தவறாக ஊக்கமடைந்த 19 வயது இளைஞன், டான் ஆகும் ஆசையில் இரவு நேர காப்பாளர்கள் மூவரை கொலை செய்துள்ளான்.

இதுபோல பல சம்பவங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சரி இதெல்லாம் இயல்பான மனநிலையில் இருப்பவர்கள் யாரும் செய்யப்போவதில்லை, மனநிலையில் சமன் இல்லாதவர்கள்தான் இப்படி சினிமாத்தனங்களை நிஜ வாழ்வில் பிரதிபலிப்பர் என்று நாம் எண்ணலாம். அதுதான் இல்லை. மேலே குறிப்பிடப்பட்டவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டவரகள். நாம் சிறிது சிறிதாக தொடர்ந்து பாதிக்கப்படுபவர்கள். சிறிது சிறிதாக நிறைய விசயங்களை சினிமாக்கள் ட்ரெண்டாக்கிக் கொண்டே செல்லும், நார்மலைஸ் ஆக்கிக்கொண்டே செல்லும், எல்லாவற்றுக்கும் நாமும் தலையாட்டிக் கொண்டே பின்பற்றுகிறோம்.

சினிமாவில் சாராயம், சரக்கு, பீர், சிகரெட்

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு சிகரெட் கூட குடித்ததில்லை என்றாலும், தமிழ்நாட்டில் நிச்சயம் பல்லாயிரக் கணக்கானோர் சிகரெட்டிற்கு அடிமையாகியிருப்பார்கள். இல்லை என நான் மறுக்கவில்லை. ஆனால், ரஜினி சிகரெட் குடித்து அதை ஒரு ஸ்டைல் என ப்ராண்டிங் செய்துவிட்டபடியால் சிகரெட் குடித்திருக்காதவர்களும் தன் இமேஜை ரஜினி போல ரிசம்பில் பண்ண சிகரெட்டை பழக்கப்படுத்தி இருப்பார்கள். இதை இல்லை என யாராலும் மறுக்க முடியாது. பிறகு வயதான காலத்தில் “அனுபவத்தில் சொல்றேன்” என டயலாக் அடித்து சிகரெட்டை வேண்டாம் என அட்வைஸ் செய்வதெல்லாம் யார் கேட்டது? அவர் பற்றவைத்த சிகரெட்தான் இன்னமும் அணையாமல் எரிந்துக் கொண்டே இருக்கிறது.

சரக்கும் என்னும் சாராயத்தையும் மிகப்பிரபலம் ஆக்கி அதை நார்மலைஸ் செய்ய முயற்சித்து பெருமளவிற்கு நார்மலைசும் செய்துவிட்டார்கள். சினிமாவின் வளர்ச்சிக்கு முன்பும் நமது ஊர்களில் சுப நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் சாராயம் அருந்துவார்கள்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அது இலைமறைக் காய்மறையாக நடந்து வந்தது. அதனை சினிமாக் காட்சிகளில், நகைச்சுவை, ஹீரோயிசம், மேன்லினஸ் என்று அடையாளப்படுத்தி பதினைந்து வயதினரும் இன்று மது அருந்துவது சாதாரணமாக்கி வைத்திருக்கிறார்கள். எப்போதும் ஒரு திரைப்படத்தில் படம் பார்ப்பவர்கள் தங்களை கதையின் நாயகனுடனே பொருத்திக் கொள்வார்கள். அதுதான் மனித இயல்பு. அந்த ஹீரோ செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்தும் போது அது எவ்வளவு பெரிய அபத்தமாக ஆகிறது. திரைப்படத்தில் ஒரு நடிகர் பிறர் பணத்திற்கு ஆசைப்பட மாட்டார் என்பதாலேயே பல ரசிகர்கள் பிறர் பணத்திற்கு ஆசைபடுவதை தவிர்த்திருப்பார்கள். ஒரு நடிகர் தன் கதாப்பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லலாம். அது ரசிகர்களின் கொள்கையாகக்கூட உருமாறி நிற்கும். ஆனால், மக்களை குஷிபடுத்துவதற்காக போதைக்காட்சிகளை பழக்கப்படுத்திவிட்டு அதில் வரும் வருமானத்தில் செட்டில் ஆவது ரசிகர்களின் மீதுள்ள அக்கறையை நன்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதை சரி செய்வதாக எண்ணிக்கொண்டு வளர்ந்து பெரிய நடிகர் ஆனப்பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை விட்டால் போதும் அதற்கும் விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய கோடி ரசிகர்கள் இங்குண்டு.

சமீப நாட்களில்தான் இவர்கள் கஞ்சாவை பிரபலப்படுத்திவருகிறார்கள். அரசாங்கம் இதை தடை செய்த போதிலும், இது போன்ற போதை வஸ்துகளை வைத்து படம் வந்து கொண்டுதான் இருக்கிறது. அரசாங்கம் கஞ்சாவை தடை செய்திருப்பது மக்கள் மீதிருக்கும் அக்கறையினால் மட்டும் இல்லை. இதற்குப் பின்னால் ஒரு வியாபார நோக்கமும் உள்ளது. ஒரு நாளைக்கு இந்தியர்கள் ஊதித்தள்ளும் சிகரெட்டுகளின் மதிப்பு மட்டும் நூறு கோடியாவது வரும். கஞ்சாவின் மீதிருக்கும் தடையை நீக்கிவிட்டால், அவரவர் வீட்டிலேயே வளர்த்து காயவைத்து சுருட்டி ஊதிக்கொள்வார்கள். நாள்தோறும் நூறு கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் அரசாங்கத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் கம்பெனிகள் எப்படி பிழைப்பது? கள்ளுக்கு தடை போட்டு அரசே டாஸ்மாக் நடத்துவது தனியாருக்கு லாபம். மரத்தடியில் சீட்டாடினால் அடித்து விரட்டிவிட்டு ஆன்லைன் ரம்மியை கண்டுகொள்ளாமல் இருப்பது தனியாருக்கு லாபம். கஞ்சாவை தடை செய்துவிட்டு சிகரெட் கம்பெனிகளுக்கு அனுமதியளிப்பது தனியார் கம்பெனிகளுக்கு லாபம். எல்லாமும் யாரோ சில பண முதலைகள் சில ஆயிரம் கோடிகளை பல ஆயிரம் கோடிகளாக்கக் திட்டம் வகுக்கின்றனர். மக்களாகிய நாம், அவர்களின் வளர்ச்சிக்கு நாள்தோறும் கண்விழித்து உழைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் காதல்

சரக்கு, சிகரெட், சில்லறைத்தனங்கள் எல்லாம் ஓகே, அவையெல்லாம் அதைப்பயன்படுத்தும் நபர்களையும் அவர்களது குடும்பங்களையுமே பாதிக்கும். காதல்? காதலை இந்த சினிமாக்காரர்கள் கற்பழித்தேவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கேட்க ஆளில்லாமல் போனதுதான் காரணமோ என்னமோ தெரியவில்லை. காதலை வளைத்து வளைத்து சீரழித்தே விட்டார்கள். 19ஆம் நூற்றாண்டில்தான் ரொமாண்டிசேஷன் என்பது உலகம் முழுக்க பரவியது. அதாவது காதலை உருகி உருகி ரசித்துக் கொண்டாடித்தீர்ப்பது. ஏன் அதற்கு முன்பு வரை காதலை வெறுத்தார்களா என்று கேட்காதீர்கள். சங்ககாலம் தொட்டே காதலைக் கொண்டாடிதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதை சாமானியரும் கொண்டாடித் தீர்க்க ஒரு பெரிய மேடை இல்லாததால் அது பெருமளவிற்கு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சற்று விளக்கமாக சொல்கிறேன். 1920களில் ஒரு தம்பதி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் அன்யோன்யம் எப்படிப்பட்டதாக இருக்கும்? கண்டிப்பாக காதல் சார்ந்த எந்த உணர்வுகளையும் அவர்களால் வெளிக்காட்டிக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் அப்போது இருந்தது கூட்டுக்குடும்ப முறை. ஒரு தம்பதிக்கென தனி அறை கிடைப்பதே அரிது. இதில் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் என்பதெல்லாம் அரிதிலும் அரிது. “புதுசா கல்யாணம் ஆனதுக ரொம்பத்தான் கொஞ்சிக்குதுங்க, எல்லாம் எத்தன நாளைக்கின்னுதான் பாக்குறேன்” என்று காது படவே பேசுவார்கள். அதற்காகவே தம்பதிகள் முகத்தை இறுக்கமாம வைத்துக் கொள்வார்கள். ஆசை உணர்வுகளை வெளிப்படுத்த போதிய பாடல்களோ, காலர் ட்யுன்களோ, பேஸ்புக் ஸ்டோரிகளோ, இன்ஸ்டா போஸ்டுகளோ இல்லாத காலக்கட்டம் அது. இதில் இருந்து வெளியே வருவதற்கு, அச்சு ஊடகங்களும் ரேடியோக்களும் பெரிதும் உதவின. புத்தகங்கள், பத்திரிக்கைகள் என எங்கும் காதல் குறித்த பாடல்கள், கவிதைகள், ஓவியங்கள், கதைகள் என திசையெங்கும் காதல் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் இதுதான் நிலை. இந்தக்கூட்டத்தில் சினிமா என்ற ஒரு பொக்கிஷமும் கிடைத்தது. ஆனால், யார் கைகளில் அது கிடைத்தது என்பதுதான் அதன் தரத்தை நிர்ணயித்தது. சினிமா பல அபத்தங்களை உடைத்தும் உள்ளது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதைவிட பல அபத்தங்களை அறிமுகம் படுத்தியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சமீப நாட்களில் இன்ஸ்டாவில் பள்ளி உடையணிந்து காதல் காட்சிகளாக நிறைய ரீல்ஸ்கள் வந்துக்கொண்டிருந்தன. யுடியூபிலும் இது தொடர்ந்தது. பொதுமக்களுள் ஒளிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் பல Pedophiles-ஐ இது உசுப்பிவிடும் செயல்களாகத்தான் நான் பார்க்கிறேன். யோசித்துப்பாருங்கள், இருபத்தி ஏழு வயதுள்ள யுவதி ஒருவள் இருக்கமான பள்ளி சீருடை அணிந்து ஒரு பாட்டுக்கு நடனமாடி இன்ஸ்டா, பேஸ்புக், யுடியூப் என பதிவிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு ஆணின் பாலுணர்வை வலுவாகத் தூண்டும். அந்த ஆசாமிக்கு இந்த கவர்ச்சி நடனம் ஆடிய யுவதி எட்டாக்கணி. ஆனால், அவனது ஊரில், அவனது தெருவில் தினமும் பள்ளிக்கு சென்று திரும்பும் பதினான்கு பதினைந்து வயது சிறுமி அவனுக்கு பலியாடு. 10K லைக்ஸ்-ஐப் பார்த்து சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் யுவதிகள், ஆண்களின் காம வெறிக்கு பாலூத்தி வளர்ப்பதைவிட பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. பெண்களின் தேக அழகைத்தாண்டி அவர்களிடம் பகிர்வதற்கும், படைப்பதற்கும் எண்ணற்ற திறன்கள், ஆற்றல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தவிர்த்து பிரபலமாகும் போதையில் பல முட்டாள் பெண்கள் செய்யும் க்ளாமர் கூத்துகளால் பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவிப் பெண்கள்தான். பிரபலமடைந்த பெண்கள் தன்னைப்பாதுகாத்துக்கொள்ள பவுன்சர்கள் வைத்துக் கொள்வார்கள். பவுன்சர்கள் இல்லையென்றால் நடிகைகளின் நிலமையை யோசித்துப்பாருங்கள். குதறி வைத்து விடுவார்கள் ஆண்கள். குறைந்த பட்சம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ, தன்னார்வலர்களோ இத்தகைய வீடியோக்களை படம் பிடிப்பதற்கும், ஒளிபரப்புவதற்கும் தடைவிதிக்கலாம். மீறினால் கடும் தண்டனை என எச்சரிக்கலாம். பள்ளி மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களுக்கு வழிவகுக்கும் திரைப்படங்கள், குறும்படங்கள், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், யுடியூப் வீடியோக்கள் என அனைத்து வகையான பதிவுகளும் நிச்சயமாக தடுக்கப்பட வேண்டியவைகள்தான். பிறகு மாணவன் டீச்சரைக் காதலிப்பது. யெப்பா டேய். தயவுசெய்து யாராவது இந்த ஆகச்சிற்ந்த இயக்குநர்களிடமிருந்து காப்பாத்திச் செல்லுங்கள் இந்த பாலாய்ப்போன சினிமாவை. டீச்சர்கள் என்றுமே தேவதைகள்தான் ஆனால் அவர்களுடனே வாழ நினைப்பது எனக்கு இன்செஸ்ட் போலத் தெரிகிறது.

எங்கோ எப்போதோ யாருக்கோ நடந்த விசயங்களை படமாக்குவதினால், அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு அது லாபம் ஈட்டித்தரும். ஆனால், அதைப் பார்த்து வளரும் இளைய சமுதாயம் தன்னையும் அந்த ஹீரோவுடன் பொருத்திப் பார்த்துக்கொண்டு, தானும் அப்படித்தான் உணர்வதாக கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டு சீரழியும்.

Stalking. ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது எப்போது காதல் வரும். அந்த ஆண் அவளை எங்காவது பார்த்திருப்பான். அவள் அழகாக இருப்பான். அவனுக்கு அவளது உடல்கூறுகள் பிடித்திருக்கும். கிறுக்குப் பிடிக்கும் அளவிற்கு அவளைப்பிடித்திருக்கும். காதல் மலர இது போதும். வேறு என்ன வேண்டும்? அவளது ஒப்புதலா? வேண்டாம் வேண்டாம். ஆணுக்கு காதல் வந்துவிட்டப் பிறகு வேறென்ன வேண்டும். அவளுக்கும் இவன்மீது காதல் வந்தே தீரவேண்டும். எப்படி வராமல் இருக்கும். கண்டிப்பாக அந்தப்பெண்ணிற்கும் இதே ஆணின் மீது காதல் வரவேண்டும். இல்லை என்றால். இவன் அவள் பின்னாடியே திரிவான். தாடி வளர்ப்பான். சோகப்பாடல் பாடுவான். தற்கொலைக்கு முயல்வான். (செய்துகொண்டால் நல்லது). தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதுவான். தூது அனுப்புவான். சொப்ப்ப்பாஆஆ. தலையே சுற்றுகிறது. குணா படமெல்லாம் இன்னும் சற்று உச்சம். Stolkhome Syndrome-ல் கமல் செய்த சோதனை முயற்சியாகக்கூட இருக்கலாம்.

சினிமா வளர்க்கும் எதிர்காலம்

சினிமாவும் நம்மை வெகுவாக அல்ல பெரிதாகவே பாதிக்கும். வெறுமென மூன்று மணி நேரம் திரையரங்கில் பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு வரும் நாடகம் மட்டுமல்ல சினிமா. அது நம்முடனே பயணிக்கும். நமது காதல் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது வேலை எத்தகையதாக இருக்க வேண்டும், நமது தோற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது எதிர்வினைகள் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது பைக் எத்தகையதாக இருக்க வேண்டும், அவ்வளவு ஏன் நமது ஹேர்கட் எத்தகையதாக என்பதைக்கூட பெரும்பாலும் அந்தந்த காலத்து சினிமாதான் தீர்மானிக்கின்றன.

இதற்கு இணையாக இன்னொரு விசயத்தையும் பார்ப்போம். செக்ஸ் எஜுகேஷன். ஊடலை யார் சொல்லித்தருவது? ஆசிரியரா? ஆசிரியையா? மாணவர்களுக்கு யார் சொல்லித்தருவது? மாணவிகளுக்கு யார் சொல்லித்தருவது? அவரவரே திருட்டுத்தனமான அங்கும் இங்குமாக தெரிந்துக்கொள்ளட்டுமா? அது சரியா? பாட புத்தகத்தில் பிறப்புறுப்புகளின் குறுக்குவெட்டு தோற்றத்தை அச்சிட்டுவிட்டு அந்தப் பாடம் வரும்போது மட்டும் கவனமாக பக்கங்களை கடந்து விடலாமா? காதலையும் காமத்தையும் சினிமாவே சொல்லித்தந்து கொண்டிருந்தால் வருங்காலம் என்னவாகும்? சின்ன உதாரணம் கீழுள்ள இணைப்பில்.

https://tamil.news18.com/news/cuddalore/a-student-gave-birth-in-a-school-toilet-in-cuddalore-797078.html?fbclid=IwAR1Hhs0dp5Y5gAqqzkg_PNmDkZ-FFYLzoEM4lc-ULFcEbe9XUKZJWeXPo1U

ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்தும் பொறுப்பு யாருடையது?

இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்தால் காதல் லவ் அஃபேர் என்று எதையாவது செய்துவிடுவார்கள் என்று ஆண் பிள்ளைகளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலோ பெண் பிள்ளைகளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலோ சேர்த்து விடுவார்கள். ஒருவேளை இருபாலர் படிக்கும் பள்ளியாக இருந்துவிட்டால் மாணவர்களுக்கு தனி வகுப்பறை அல்லது தனி ப்ளாக், மாணவிகளுக்கு தனி வகுப்பறை தனி ப்ளாக். சக மாணவிகளை மாணவர்களை மிக இயல்பாக யதார்த்தமாக எதிர்கொள்வது எப்படி என்று சொல்லித்தர வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்பாலின ஈர்ப்பை ஏன் இவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். பொறுப்புத்துறப்பு மனோபாவமும், பொறுப்பின்மையும், பொருளாதார நெருக்கடிகளும்தான் இப்படியெல்லாம் மாணவர்களையும் மாணவிகளையும் பிரித்து வைத்து கல்லூரி வரை கொண்டுவந்து பிறகு நழுவிக்கொள்வார்கள். ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டால் அதற்கும் காரணம் பள்ளியின் அதீத அழுத்தம் என்று பெற்றோர்களும், மாணவருக்கு காதல் இருந்து அது தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டார் என பள்ளித்தரப்பும் மாற்றி மாற்றி பழி போட்டுக்கொண்டே இருப்பதை நாம் பார்க்காமல் இல்லை. அவர்கள் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தால் மட்டும் அதில் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். செத்துப்போனால் அது அவரவர் இயலாமை. இதுதான் பொறுப்புத்துறப்பு மனோபாவம். கல்வியை வியாபாரமாக்கியதின் விபரீதம்.

இது போதாதென்று சினிமா அதன் இஷ்டத்திற்கு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி வைக்கிறது. எது கெத்து என்று சினிமா சொல்கிறதோ அதைத்தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிறார்கள் இளம் வயதினர். இந்த மாயையில் இருந்து மீள, கல்லூரி முடித்து வேலைக்கு சென்று சகப் பெண்களிடம் ஆண்களுக்குரிய கெத்தைக் காட்டி, வீட்டில் மனைவியிடம் கெத்தைக் காட்டி, செய்தித்தாள்களின் பெரும்பாலன பக்கங்களில் பெண்கள் மீதான வன்முறைகள்தான் தினமும் அச்சிடப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள்தான் ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்த சரியானவர்கள். காதல் காமம் இரண்டையும் பெற்றோர்கள் சொல்லித்தருவதே நல்லது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு இணைந்து ஆலோசித்து ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளிகளையே நடத்த வேண்டும். இருபாலர் பள்ளிகளுக்கே அனுமதியும் அளிக்க வேண்டும். பார்ன் வலைப்பக்கங்களை முடக்கிய அரசாங்கத்தினால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் காதல் கதை போன்ற படங்களை தடுத்து நிறுத்த முடியாதா என்ன? டாஸ்மாக்கையே மூடாத அரசாங்கத்திடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கற்பனைக்கும் அதிகம்தான். ஆனால் இந்தப் பிரச்சனைகளின் பொறுப்பு அரசுதான்.

சினிமாவிற்கு இணையாக ஸ்மார்ட்ஃபோன் செயலிகளும் களத்தில் குதித்துள்ளன. போட்டிப்போட்டுக்கொண்டு அடுத்த தலைமுறையை சீரழிப்பதில்தான் எத்தனை லாபம் இந்தப் பணத்திற்கு அடித்துக்கொள்ளும் ஆறறிவு மானுடர்களுக்கு! இந்தக் கிட்ஸ்களெல்லாம் வளர்ந்து ஆளாகி திருமணம் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போதாவது ரியாலிட்டியை தலை நிமிர்ந்து பார்ப்பார்களா என்று காத்திருக்கிறேன். அல்லது அதையும் ஆன்லைன் யுடியுப் என டிஜிட்டலைஸ் ஆக்கினால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நட்சத்திரம் நகர்கிறது சொல்லும் வாழ்வியல் என்ன?

இந்தப் படம் பேசிய விசயங்களில் ஆண்-பெண் உறவு, பொதுபுத்தி, தன்பாலீர்ப்பாளர்கள், ஆணவக்கொலை என எல்லாமும் முக்கியமானவை. ஒருசில தமிழ் இயக்குநர்களுக்காவது பாலின பேதத்தைக் களைய வேண்டும் என்கிற அக்கறை இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் ஆயிரம் படங்கள் இந்த ஜானரில் வரவேண்டும். யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் பேசமுடியாத பிரச்சனைகளைப்பற்றி பேச கலைத்துறையில் போதிய கலைஞர்கள் இல்லையென்றே உணர்கிறேன். இருப்பினும் இந்தப்படத்திலும் ஒரு முக்கியமான விசயத்தை குறிப்பிட மறந்துவிட்டார்கள். அதுதான் இந்தப்படத்தைப் பார்த்து தவறாக ஊக்கமடைவதில் இருந்து தடுத்திருக்கும். சில பக்குவமில்லாத இளைஞர்கள் செய்யும் அதே தவறை பா.ரஞ்சித்தும் செய்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர் தவறவிட்டது வேலை. வேலைதான். கலை வேலை அல்ல. கலை சிலருக்கு தொழிலாக இருக்கலாம். ஆனால் கலை ஒரு போதும் வேலையாக இருக்க முடியாது.

சற்று யோசித்துப்பாருங்கள், பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தியில் ஹீரோ இறுதியில் ஒரு வக்கிலாகிவிடுவார். இரண்டாவது படம் மெட்ராஸ் ஹீரோ ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்வார். அடுத்து வந்த இரண்டு ரஜினி படங்களிலும் ரஜினி என்ன வேலை செய்வார்? டான் வேலையில் இருந்தால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோ ஒரு கூலித்தொழிலாளி. நட்சத்திரம் நகர்கிறதில் வரும் கதாப்பாத்திரங்கள் என்ன வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள் ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள். அரங்கேற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வியலுக்கு எது உதவுகிறது? யார் அவர்களின் அன்றாட செலவுகளை பார்த்துக்கொள்கிறார்கள். what do they do for a living? அது கதைக்கு முக்கியம் இல்லை என்று சொல்லி மூடி விடாதீர்கள். ஒருவன் என்ன வேலை செய்து அவனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறான் என்பது மிக முக்கியம். அதை சொல்லாவிட்டால் படம் பார்க்கும் பக்குவம் இல்லாத இளம் வயதினர் சினிமாவின் மீதும் கலையின் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டு சென்னையில் வந்து என்னவென்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு self assesment-உம் செய்து பார்க்காமல், வெறுமனே பரவசத்தினால் மட்டும் சென்னைக்கு கிளம்பி வந்து விடுவார்கள். பிறகு, நாட்களை ஓட்ட முடியாமல், என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஸ்விக்கி, டிரைவர், ஹோட்டல், டெக்ஸ்டைல்ஸ், என்று தொடங்கி, எண்ணில் அடங்காத வேலைபாடுகளை செய்து தீர்க்கிறார்கள். இதில் பக்குவத்துடன் இருந்து உழைத்து வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெருபவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது அனைவருக்கும் அமைவதில்லை.

நட்சத்திரம் நகர்கிறது போல சினிமாவைப் பற்றியோ, கலையைப் பற்றியோ, படம் எடுக்கும்போது அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பணத்திற்கு என்ன செய்தார்கள் என்பதையும் காட்டுங்கள். ரூம் வாடகை தர முடியாமல், நண்பர்களின் காசில் எத்தனை மாதங்கள் இருக்க முடியும் என்று காட்டுங்கள். குடும்பம் பொருளாதாரரீதியாக உதவுமா என்பதைக் காட்சிப்படுத்துங்கள். ரெனே என்ன செய்கிறாள்? அர்ஜுனைப் போல ரெனேவிற்கும் அவளது குடும்பம் பெரும் பின்னனி கொண்டதாக தெரியவில்லை. அவள் சொல்லும் கதையில் அவள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாகத்தான் தெரிகிறாள். பொருளாதார பின்னனி இல்லாமல் எப்படி அவள் வாழ்கிறாள். வேலைக்கு போகிறாள் என்றால் என்ன வேலை. அலுவலகமா? freelancer ஆ? சுயத்தொழில் எதுவும் செய்கிறாளா? இப்படி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண், அவள் பெயர் ரெனெ என்று மட்டும் சொன்னால், நிஜத்தில் ரெனேக்களினால் கவரப்படும் பெண்கள் ரெனெவைப் போலவே புரட்சிகரமான வசனங்களைப் பேசிக்கோண்டு எந்த இடத்தில் வாழ முடியும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். ருத்ரையா இதில் தெளிவுடன் இருந்திருக்கிறார். மஞ்சு அவளுக்கென ஒரு வேலையையும் தேடிக்கொண்டு அதன் மூலம் தன் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு வாழ்கிறாள். தன்னுடைய தேவைகளுக்காக யாரிடம் வழிந்து நிற்கவோ, கெஞ்சவோ, கொஞ்சவோ, காலில் விழவோ, கண்ணீர் விடவோ, படுக்கவோ தேவை இல்லை. இந்த விசயத்தில் ரெனேவை இன்னும் கொஞ்சம் டீட்டெயில் செய்திருந்தால் ஒரு முழுமையான ஓவியமாக மிளிர்ந்திருப்பாள்.

நட்சத்திரம் நகர்கிறது மட்டும் இல்லை. படித்து வேலைக்கு போவதை விடவும் கலைத்துறையில் சாதிப்பதோ அல்லது பிரபலமடைவதோதான் உண்மையான வெற்றி என்று போலியாக நம்பவைக்கும் படங்கள் ஏராளம். மீசைய முறுக்கு, 96, மயக்கம் என்ன, விண்ணைத்தாண்டி வருவாயா, டான், தோனி, என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். Target audience என்றோரு வார்த்தை உள்ளது. அதாவது ஊதாரித்தனமாக இருப்பவனை ஹீரோவாக வைத்து செக்கச் செவேலென்று ஒரு ஹீரோயினைப் போட்டு, இருவருக்கும் காதல் மலர்வது போன்ற காட்சியமைத்து ஒரு கிளுகிளுப்பு ஊட்டினால்தான் முதல் நாள் முதல் காட்சி வந்து படம்பார்க்கும் மைனர் குஞ்சுகளுக்கு ஒரு பரவசம் ஏற்படும். கல்லா கட்டும். நாள் முழுக்க உழைத்து ஒரு குடும்பத்தின் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றும் அப்பாக்களும் அம்மாக்களும்தான் எனக்கு ஹீரோக்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் செய்யும் வேலை அவர்களது ஃபேஷன் இல்லைதான். ஆனால் அலுக்காமல் செய்கிறார்கள்.

புடிச்சத பண்ணு, புடிச்சத பண்ணுன்னு சினிமாக்காரனுங்க சொல்லிட்டு போயிருவானுங்க. நாமளும் பின்னாடியே போனா ஜெயிச்சரலாம்னு கண்மூடித்தனமா போனா, வாழ்க்கைல சில பல வருஷங்கள் அப்டியே போயிரும்னு யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

இந்த கிட்ஸ்சின் அம்மாக்களும் அப்பாக்களும் இவர்களைப்போலவே புடிச்சதை செய்துக்கொண்டிருந்தால் கிட்ஸ்கள் அனைவரும் படிப்புக்கும், சோத்துக்கும் என்ன செய்திருப்பார்கள்? அதனால் இது போன்ற படங்கள் எடுக்கும் போது அதீத கவனம் தேவை. நாம் ஒரு விசயத்த விளக்கும் போது அதோட அடிப்படை ஆதாரத்தையும் சேர்த்தே விவரிக்க வேண்டும். ஒரு நீண்ட நெடிய போராட்டம் எப்படி சாத்தியப்பட்டுது என்றும் சொல்ல வேண்டும். சொல்லவில்லை என்றால் நிறைய இளைஞர்களின் வாழ்க்கையை அது புரட்டிப்போட்டுவிடும் அபாயம் உள்ளது.

ஏன் கலைக்கூடம்?

படம் நடக்கும் தளம் ஒரு மேடை நாடகம் நடத்தும் ஒரு தன்னார்வக் குழுவினரின் கூடாரம். இந்தக் கதையை ஏன் ஒரு கலையரங்கில் அரங்கேற்றினார்கள்? இப்படத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் ஒரு கார்ப்பரேட் ஆஃபிசில் நடக்கலாம் அல்லவா? ஒரு கெட்டுகெதரில் சக நண்பர்களுக்கிடையே நடக்கலாம் அல்லவா? ஒரு குடும்ப நிகழ்வில் நடக்கலாம் அல்லவா? ஒரு கோவில் திருவிழாவில் நடக்கலாம். ஏன் நாடக மேடை? நாடகக்காதலை மறுத்துப்பேச நாடகமேடையே பொருத்தமானதாக இருந்துவிட்டதாக நான் உணரவில்லை. நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதைக்கூட நாடகமாடித்தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது.

ஏன் பாண்டிச்சேரி?

பாண்டிச்சேரி நகரம் முழுவதும் ஆங்காங்கே கலையின் கைவண்ணங்கள் ஓவியங்களாக அங்குள்ள மக்களின் ரசனைத்தன்மையையும், கலையார்வத்தையும் உணர்த்திக்கொண்டே இருக்கும். மேலும் சென்னையை விட்டு சினிமா கொஞ்சமாவது வெளியில் வந்தால் நல்லது என்றே எண்ணுகிறேன்.

அவ்வப்போது சில தரமான நல்ல சினிமாக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்து படங்களையும் வைத்து அடுத்த தலைமுறையையும் வைத்து பார்க்கும் போது சினிமா வளர்க்கும் எதிர்காலம் சற்று அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. இது போன்ற பல அபத்தங்களைப் பேசி ஒரு தெளிவுக்கு வருவதற்காகவே ஆயிரம் நட்சத்திரங்கள் நகரட்டும்.

References

https://www.ndtv.com/india-news/copying-horror-movie-arundhati-that-he-watched-several-times-23-year-old-dies-for-salvation-in-karnataka-3249204

https://www.newindianexpress.com/nation/2022/sep/02/kgf-inspired-19-year-old-tribal-an-ex-waiter-turns-out-to-be-mp-serial-killer-2494184.html

https://telanganatoday.com/inspired-by-money-heist-on-netflix-gang-pulls-off-kidnaps-in-hyderabad

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

இந்த தலைப்பும் சற்று சென்சிடிவான தலைப்பு. எனவே, அடிப்படையில் இருந்து அலசி பார்த்தோமேயானால் ஒரு தெளிவுக்கு வரலாம்.

பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னார் முதன் முதலில் உயிர் தோன்றியபோது அது ஆணாக இருந்ததா? பெண்ணாக இருந்ததா? அல்லது இரண்டுமாக இருந்ததா? அல்லது இரண்டும் இல்லாமல் வேறு ஒரு பாலின வகையில் இருந்ததா? பதில் யாருக்கும் தெரியாது. ஆனால் யூகத்தின் அடிப்படையில் அவரவருக்கு ஒரு கருத்தும் நம்பிக்கையும் இதுதான் உண்மை என்று நேரில் பார்த்தது போல சத்தியம் செய்து எல்லாம்கூட சொல்லுவர்.

90களின் முடிவில் எனது ஊரில் சர்ச்சில் திரை கட்டி ஒரு படம் ஓட்டினார்கள். அதில் மண்ணில் இருந்து ஒரு மணிதன் தோன்றுவான் (ஆதாம்). அவன் தனியாக காட்டில் திரிந்து கொண்டிருப்பான். பிற விலங்குகள் எல்லாம் அதனதன் இணையோடு இருப்பதைக்கண்டு அவன் தனக்கொரு துனை இல்லை என்று ஏங்குவான். பிறகு எங்கிருந்தோ இன்னொரு பெண் ஒருத்தி (ஈவ்) வருவாள். இதைத்தான் மனிதனின் தோற்றம் என்று எத்தனை நாள் நம்பினேன் என்று தெரியவில்லை. ஆனால், டார்வினின் தியரி விரைவில் என்னை வந்தடைந்து நம்பும்படியான ஒரு கதையைத் தந்தது.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலரும் உண்மை என்று நம்பும் ஒரு கூற்று ஆணும் பெண்ணும் இனைந்தால் தானே இன்னொரு உயிர் தோன்றும் என்பது. ஆனால் ஒரு உயிர் தோன்ற ஆணும் பெண்ணும்தான் தேவை என்பது நூறு விழுக்காடும் அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நத்தை இனங்கள் ஒரே சமயத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும். இணை சேரும்போது எதோ ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் பங்காற்றி இனப்பெருக்கச் சேர்க்கையில் ஈடுபடும். எந்த ஒரு நத்தையாலும் விந்தணுக்களையும் உற்பத்தி செய்ய முடியும், கரு முட்டைகளையும் உற்பத்தி செய்து இனச்சேர்க்கையின் மூலம் கருக்களையும் சுமக்க முடியும். அதாவது நத்தை ஆணாகவும் இருக்கும், பெண்ணாகவும் இருக்கும், சமயத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப ஆணாகவும் நடந்து கொள்ளும், பெண்களாகவும் நடந்து கொள்ளும். ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? இதைவிட ஆச்சர்யம், நன்கு வளர்ந்த சில நத்தைகளால் தானாகவே கருவுற முடியும். இன்னொரு நத்தையின் துணை தேவையில்லை. இவ்வகை உயிரினங்களை hermophrodites என்பார்கள். மண் புழுக்களும் இவ்வகையைச் சார்ந்தவைகள் தான். ஆனால், அவைகளால் சுயமாக கருவுற முடியாது.

சில உயிரினங்கள் இதற்கு நேர்மாரானவை. ஒன்று ஆணாக இருக்கும் அல்லது பெண்ணாக இருக்கும். இரண்டு பாலுறுப்புகளையும் ஒரே உயிர் கொண்டிருக்காது. அவ்வகை உயிரினங்களை gonochoristic species என்பார்கள். விலங்குகளில் 95 விழுக்காடு gonochoristic தான். முதுகெலும்பு கொண்ட 99% உயிரினங்கள் gonochoristic தான். அது ஏன் 99% என்கிறார்கள் என்றால், மனிதர்களில் சிலர் அரிதாக இரண்டு பாலுறுப்புகளுடனும் இருப்பது உண்டு. அவர்களை true hermophordites அல்லது intersex என்றழைக்கிறார்கள். ‘LGBTQIA+’ல் உள்ள ‘I’ எழுத்து intersex ஐ குறிப்பதாகும். இவர்களுக்கு இரண்டு பாலுறுப்புகள் இருந்தாலும் ஏதேனும் ஒன்றுதான் முழு பயன்பாட்டில் இருக்கும். இவர்களை பலசமயங்களில் transgender/திருநர் என குழப்பிக்கொள்வார்கள்.

trioecy என சொல்லப்படும் உயிரினங்களில் male ஆண் இனங்கள் இருக்கும், female பெண் இனங்கள் இருக்கும், இந்த இரண்டு பாலுறுப்புகளும் கலந்த hermophrodites களும் இருக்கும்.

இவ்வளவு விளக்கங்கள் எதற்காக என்று யோசித்திருப்பீர்கள். ஒருவர் யாராக இருக்க வேண்டும், யாராக இருக்கப் போகிறார் என்ற முடிவு கருவில் இருக்கும் போது முடிவாவது. அது ரசாயன செயல். எந்தெந்த ஹார்மோன்கள் எவ்வளவு சுரக்க வேண்டும் என்பது யார் ஒருவரும் முடிவு செய்வதில்லை. அது இயற்கை. அதை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு இன்றி பிறத்தல் அரிது.” – கந்தன் கருணை படத்தில் இருந்து ‘அரியது கேட்கும்’ பாடல் வரிகள். இந்தப் பாடலை நாம் நிச்சயம் கேட்டிருப்போம். இதில் வரும் பேடு என்ற சொல் hermaphrodites ஐக் குறிக்கும் சொல். இந்த பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். ஒரு உயிர் முறையே முழு ஆணாகவோ அல்லது முழு பெண்ணாகவோ பிறத்தல்தான் அரிது என்கிறார். ஏனென்றால் அதுதான் இனப்பெருக்கத்திற்கான வழி. ஆனால், வாழ்தல் என்பது வெறும் இனப்பெருக்கத்தை மட்டுமே மையப்படுத்தியது அல்ல. வாழ்க்கை என்பது பலவாறானது.

சில ஆண்களிடம் பெண்மைக்கான பண்புகள் சற்று அதிகமாக இருக்கும். சில பெண்களிடம் ஆண்களுக்கான பண்புகள் சற்று அதிகமாக இருக்கும். அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் புரிதலும் எந்தக்காலத்திலும் மனிதர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கலை கலைஞர்களில் கைகளில் வந்திருக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

L G B T Q I A +

‘L’ என்றால் Lesbian. தன்பாலீர்ப்பு கொண்ட ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல். இது உணர்வு சார்ந்த விடயம். ஒரு பெண்ணுக்கு எப்படி இன்னொரு பெண்ணைப் பிடிக்கும் என்பதுதான் இன்னமும் பலரது கேள்வி. இக்கேள்விக்கு பதில் கிடைக்காமல் இல்லை. பதில்களை ஏற்றுக்கொள்ளும் புரிந்துகொள்ளும் தன்மையே இல்லாதவர்களால் இதனை எளிதில் கடந்து வர முடியாது. தாராளமாக ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணைப் பிடிக்கலாம். இது உடல்சார்ந்த விடயம் அல்ல. முழுமையான பெண்களுக்கும் இன்னொரு பெண்ணின் மீது காதலும் வரும்.

‘G’ என்றால் ‘Gay’. தன்பாலீர்ப்பு கொண்ட ஒரு ஆணைக் குறிக்கும் சொல். லெஸ்பியன்கள் போலதான் இவர்களும். ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணின் மீது காதலும் காமமும் ஏற்படலாம். இவர்களும் உடல் அளவில் முழு ஆணாக இருப்பார்கள். சிலர் gay என்ற சொல் பொதுவாக தன்பாலீர்ப்பு கொண்டவர்களை குறிக்கும் எனவும் விளக்குகின்றனர்.

‘B’ என்றால் ‘Bisexual’. சிலருக்கு ஆண் பெண் இருபாலர் மீதும் ஈர்ப்பு இருக்கும். இவர்கள் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். திருநங்கையாகவும் இருக்கலாம். இதுவும் அவரவர் மனதின் விருப்பத்தைப்போன்றது.

‘T’ என்றால் ‘Transgender’. இந்த வார்த்தை நம்மில் பலருக்கு தெரிந்ததுதான். ஆணாகப்பிறந்து, பெண்ணாகவோ அல்லது பெண்ணாகப் பிறந்து ஆணாகவோ மாறிவிடுவார்கள். இவர்களை இழிவாக சித்தரித்தே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காட்சிகள் காமெடி என்று வடிவமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு ஆண் பெண்போல வேடமிட்டாலோ, நடந்துகொண்டாலோ அதனை நக்கலடிக்காமல் இருக்க யாருலும் முடியாது. அலி, பொட்ட, ஒம்போது என பலவாறான இழி பெயர்களை தவறாமல் அடுத்தத்த தலைமுறைகளுக்கு கடத்திவந்தனர். சமீப வருடங்களில்தான், இவர்களுக்கான பொதுப்பெயராக, திருநங்கை transwoman, திருநம்பி transman, இவர்கள் இருவரையும் குறிக்கும் பெயராக திருநர் transgender ஆகியவை வழக்கத்திற்கு வந்தன. ஒரு ஆணின் மனம் பெண்ணில் உடலில் சிக்கிக் கொண்டால் எவ்வளவு சிரமப் படுமோ, அதே சிரமம்தான் ஒரு பெண்ணாக உளமாற உணர்பவர்களும் பிறப்பால் ஆணின் உடலில் சிக்கிக்கொள்வர். தான் ஒரு தவறான உடலில் இருப்பதாக உணர்வார்கள். இது க்ரோமோசோம்களின் கலவையே அன்றி தனிப்பட்ட நபர்களின் கேரக்டர் இல்லை. சமூகத்தில் இவர்களும் நல்ல நல்ல பதவிகளில் கால்பதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குறியது.

‘Q’ என்றால் ‘questioning’. இவ்வகை நபர்கள், தனக்கு யார் மீது ஆர்வம் மிகுதியாய் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்லத்தெரியாதவர்கள். அல்லது அதைக்கண்டரியும் நோக்கில் பயனப்படுபவர்கள். ‘Q’ என்றால் ‘Queer’ என்றும் குறிப்பிடுகிறார்கள். gay என்றால் ஒரு ஆண் இன்னொரு ஆண்மீது ஈர்ப்பு கொள்வதாக எடுத்துக்கொள்ளலாம். குயிர் என்பதும் ஆணின்மீது வரும் ஈர்ப்புதான் ஆனால் தான் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் அற்று தனது விருப்பத்தை மட்டும் வெளிப்படுத்த உதவும் ஒரு தனிச்சொல்.

‘I’ என்றால் ‘Intersex’. இவர்கள் சற்று அரிய வகையினர். முழுமையான ஆணும் அல்லாமல், பெண்ணும் அல்லாமல், இரண்டும் கலந்து, பிறப்புறுப்பு, க்ரோமோசோம்கள், இனப்பெருக்க உறுப்புகள் என்று அனைத்திலும் சின்ன சின்ன மாற்றங்களுடன் மொத்தம் முப்பது வகையாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ‘Intersex” என்ற ஒற்றை வார்த்தைக்குள் கொண்டுவருகிறார்கள். ஏனென்றால் மேலே உள்ள ஐந்து வகையினரும் LGBTQ தனித்தனியாக குறிப்பிட்ட உடல் பண்புகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இண்டர்செக்ஸ் எனப்படுபவர்களுக்கு பலவாறான உடல் பண்புகள் இருக்கின்றன. கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி இவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.slideshare.net/balogunwasiu/hermaphroditism-45763096

‘A’ என்றால் ‘Asexual’. இவர்களுக்கு ஊடலில் குறைவான ஆர்வமோ அல்லது கொஞ்சம் கூட ஆரவமில்லாமலோ இருக்கும். இவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆண், பெண், திருநர், இண்டர்செக்ஸ்.

இப்படி பலவாரன உடல் அமைப்புகளையும், பாலின ஈர்ப்புகளையும், உணர்வுகளையும் உள்ளடக்கிய பல வகுப்பினர் இங்கு இருக்கிறார்கள். இந்தப்பட்டியல் இப்படி நீண்டு கொண்டே செல்வதாலும், இவர்களுக்கென தனியே ஒரு + குறியீட்டை பயன்படுத்துகின்றனர்.

‘+’ என்றால் மேலே குறிப்பிட்ட வகுப்பினரும் அல்லாது ஏனையோரைக் குறிப்பது ஆகும். இதில் Pansexual, Allosexual, Aromantic, Demiromantic, Demisexual, Dyke, Faggot, Androsexual, Gynesexual, Polyamorous, skoliosexual, sapiosexual, reciprosexual, இத்யாதி இத்யாதி வகுப்பினர் உண்டு. அதனால் ‘+’ குறியீட்டை பயன்படுத்துகின்றனர். ‘+’ல் வகைப்படுத்தப்படும் பட்டியலில் சிலவகுப்பினர் இடம்பெற மாட்டார்கள். அவர்கள் heterosexual/straight- எதிர்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மற்றும் cisgender- பிறப்பால் எந்த பாலினத்தவரோ அதே உணர்வுடன் வாழ்பவர்கள். ஆணாகப் பிறந்து உடலிலும் உணர்விலும் முழு ஆணாக இருந்து ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்பவர்கள் அல்லது பெண்ணாகப் பிறந்து உடலாலும் உணர்வாலும் முழு பெண்ணாக இருந்து ஒரு ஆணின் மீது ஈர்ப்பு கொள்பவர்கள். இவர்கள் ‘+’ல் இடம்பெற மாட்டார்கள்.

ஏன் இவ்வளவு தனித்தனிப்பெயர்கள்? ஏன் இவ்வளவு பெருமை இதில்? இதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது? என்று பலரும் கூறக்கேட்டிருக்கிறேன். அதுவும் ப்ரைட் வாக்கின் போது வரும் சகிக்கவியலாத பேச்சுகளுக்கு குறைவே இல்லை. அதற்கான பதிலும், மேலே வகைப்படுத்தப்பட்ட தனிப்பெயர்களுக்கான தேவையும் இதோ. இங்கு பெரும்பாண்மை என்னவாக இருக்கிறதோ அதுவாகத்தான் சிறுபாண்மையும் இருக்கவேண்டும் என்ற திணிப்பும் அப்படி இல்லையேல் அதை வதைகளுக்கும், இழிவுகளுக்கும், குற்றவுணர்வுக்கும் உட்படுத்த முற்படும் மிருகத்தனம்தான் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒருவரை அவரது பாலின அடையாளத்தை வைத்து சிறுமை படுத்த முயற்சிக்கும் போது, குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தும்போது, தன்போன்றோரைத்தேடி தனக்கான குரலை பதிவு செய்து, தனக்கான அடிப்படை மரியாதையேக் கோரவும், “தனது பாலினத்தாலும், தனது பாலீர்ப்பாலும் தான் குறைவாக உணரவில்லை, நிறைவாகத்தான் உணர்கிறேன். சரியாகத்தான் உணர்கிறேன்.” என்பதை உரக்கச் சொல்வதற்கும் ‘எனது சுயத்தில் நான் வெட்கப்பட ஏதுமில்லை” என்பதை உலகுக்கு உணர்த்த இந்தப் பெயர்களும், முத்திரைகளும், pride-உம் அவசியம் தேவைப்படுகிறது.

சரி இவ்வளவு விசியங்களையும் பெரும்பாண்மையான பொதுப் புத்திக்காரர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பாக்கலாமா? இதை பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று யோசியுங்கள். இத்தனை நாட்கள் முகம்சுளித்தே பழகியவர்கள், இழிவுபடுத்தி பழகியவர்கள், நகைத்துப்பேசி மட்டுமே பழிகியவர்கள், அசிங்கம், கேவலம், என்று பலவாறு அறுவருப்புடன் பேசியவர்களால் முழுமனதுடன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வரும் தலைமுறையினருக்கு இதனை முறையே நல்வழியில் அறிமுகப் படுத்த முடியும். அதற்கு இன்னும் ஆயிரம் நட்சத்திரங்கள் நகரவேண்டும். நகரும் என்று நம்புவோம்.

None of your business. இதைத்தான் நான் சொல்லவிரும்புகிறேன். நான் யாருடன் உறவுகொள்ள விரும்புகிறேன் என்பதோ, நான் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பதோ, நான் ஆணா பெண்ணா திருநங்கையா திருநம்பியா என்பதோ, நான் யாராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்பதோ நான் மட்டுமே கவலைப்படவும் மற்றும் நான் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதைத் தீர்மானிக்க எனது குடும்பத்தினருக்கோ, சொந்தக்காரர்களுக்கோ, நண்பர்களுக்கோ, ஊரார்களுக்கோ யாருக்கும் உரிமை இல்லை. Stereotype-களாகத்தான் வாழவேண்டும் என்று நிர்பந்திக்க யாருக்கும் உரிமை இல்லை. None of your business.

ஆனால், நான் யாரக இருக்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அக்கறைகொள்ளும் நபர்களும் என்னோடு சேர்ந்து பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும். odd man out-ஆக ஒருவரை இச்சீர்மிகு சமூகம் புறக்கணிக்கும். இதைவெல்ல போதுமான மனத்திண்மை பாதிக்கப்படுவோர்களிடம் இருப்பது அரிது. வரலாற்றை திரும்பிப் பார்த்தால், பெண்களுக்கான வாக்குரிமையே சமீப ஆண்டுகளில்தான் நாம் பெற்றுள்ளோம். feminism-ஐ சரிவரப் புரிந்துகொள்ளவே (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம். இவர்களிடம் “LGBTQIA+” என்றால், “அப்டினா?” என்பார்கள்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

பாலியல் தொழிலும் ஒரு தொழில்தான் – உச்சநீதிமன்றம்

பாலியல் தொழில் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டம் அனுமதிக்கும் எல்லாமும் சரியும் அல்ல, சட்டம் தடைவிதித்த அனைத்தும் தீங்கும் அல்ல. குறிப்பாக பாலியல் தொழில் ஒரு குற்றமல்ல என்று கருதியிருக்கும் உச்ச நீதிமன்றம், இதில் உள்ள அனைத்து விளைவுகளையும் எண்ணி தொலைநோக்கு பார்வையுடன்தான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இதன் ஒரு முனையை தொட்டால் இன்னும் பல பிரச்சனைகளும் இதில் சம்மந்தப்படும். இது ஒரு தனி பிரச்சனை அல்ல. பாலியல் தொழில் என்பது ஒரு சமூகம் நேர்த்தியாக செயல்பட முடியாமல் தோற்றுப்போனதற்கான முத்திரையாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் தொழில் சரியா தவறா தேவையா தேவையில்லையா என்ற முடிவுக்கு வரவேண்டுமென்றால் முதலில் வருங்கால சமுதாயத்தை நிரப்பவிருக்கும் மாணவர்களிடம் இருந்துதான் வரவேண்டும்.

வரும் தலைமுறையினரின் கல்வி:

ஏற்கனவே அரசு இயற்றியுள்ள புதிய கல்விக்கொள்கையினால் எத்தனை மாணவர்கள் மேற்படிப்புகளுக்கு செல்லப்போகிறார்கள் என்ற அய்யம் எனக்குண்டு. தொழில் முனைவோர்கள் நமது சமுதாயத்திற்கு வேண்டும்தான். ஆனால், கல்லூரி படிப்பினை முடிக்காமல் ஆரம்பிக்கும் ஒரு தொழிலை அவர்களால் எந்த உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று எண்ணிப்பாருங்கள். ஓயோ (oyo) நிறுவனர் போன்று உதாரணங்களை நம்மிடம் தூக்கிக்கொண்டு வந்து நிற்பார்கள். நம்பாதீர்கள். இந்த நூற்றாண்டில் மொத்தமே சில ஆயிரம் நிறுவனர்கள்தான் அப்படி கல்லூரி படிப்பை முடிக்காமல் மல்டி மில்லியனர் ஆக முடியும். பெரும்பாலான மாணவர்களுக்கு அது சாத்தியம் இல்லை.

இந்த புதிய கல்விக்கொள்கை நிறைய கூலிக்காரர்களையும் ஒப்பந்தத் தொழிலாலர்களையும் ‘non skilled’ லேபர்ஸ் என்று சொல்லப்படும் தினக்கூலிகளையும்தான் உருவாக்கும். பிறகு அவர்களது தகுதி அதுதான் என்று நமக்கே புத்தி போதிக்கும். ஜாதிக்கொரு வேலை என்றாக்கி குடும்பத்தொழிலையே மகனும் மகளும் ஏற்றுக்கொள்ளும் நிலை வரும்.

கல்வி என்பது ஒருவனது தகுதியை மேம்படுத்ததானே தவிற, ஏற்கனவே ஒருவனது தகுதி இதுதான், ஒரு படிப்பினை படிக்கும் அளவிற்கு ஒருவன் தகுதியில்லாதவன் என்பது எத்தகைய கயமம் என்று எண்ணிப்பாருங்கள். டாக்டர் ஆவதற்கு ஒருவனுக்கு என்ன தகுதி வேண்டும் என்பது அதற்கான புத்தகங்களைப் படித்துப்பார்த்தப் பிறகுதான் அவனுக்கு பரிட்சை வைக்க வேண்டும். நீட் போன்ற தகுதித்தேர்வுகள் சற்றும் அறமற்றது.

மாணவர்கள் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்வது ஒரு கொடுமை என்றால், (அரசாங்கம் என்பது இந்த இடத்தில்தான் மாணவர்களுக்கு கை கொடுக்க வேண்டும். ஆனால்?) படிப்பதற்கு வழி இல்லை, சட்டம் இல்லை, வாய்ப்பு இல்லை, இடம் இல்லை என்பதற்காக வேலைக்கு போவது கொடுமையிலும் கொடுமை.

இப்படி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான கதவுகளை அரசாங்கம் ஒவ்வொன்றாக மூட, மாணவர்களும் வேறு ஒரு பக்கம் திசை திருப்பப்படுகின்றனர்.

புடிச்சத பண்ணுஎனும் மாய மந்திரம்:

கடந்த இருபது ஆண்டுகளில் மாணவர்களின் காதுகளில் தேனாக வந்து விழும் வார்த்தை “புடிச்சத பண்ணு”.

எனக்கு இதில் வியப்பு என்னவென்றால் எல்லாருக்கும், சினிமா சம்மந்தப்பட்ட வேலைதான் பேசனாக புடிச்சதாக இருக்கிறது.

முதல் தேர்வாக போட்டோகிராப்பர், டைரெக்டர், ஆக்டர், யுடியூபர்.

இரண்டாம் தேர்வாக பாடகர், பாடலாசிரியர், கேமராமேன், எடிட்டர்.

ஒரு வித்தியாசத்தை மாணவர்கள் நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். I like one thing. I’m good at one thing. இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.

Self assessment test நிறைய மேற்கொள்ளுங்கள்.

கண்டிப்பாக உங்களுக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திறமைகள் ஒளிந்திருக்கக்கூடும், அதை தேடிக் கண்டு பிடியுங்கள். ஆனால், அதற்கான விலையாக உங்களது பட்டப்படிப்பை கொடுக்காதீற்கள். ஒரு வேளை உங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டால், நீங்க படித்த படிப்புதான் உங்களுக்கு கை கொடுக்கும்.

உங்களைப் பரவசமூட்டும் வேலைகளை கையில் எடுத்துக்கொண்டு இதுதான் என் திறமை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

Humans can be easily manipulated thru movies.

Movie dialogues are not true. They are fantasy.

படிப்பது கடினம்தான். அதுவும் கவனமாகப் படிப்பது மிகக்கடினம்தான். அதற்காகத்தான் டாக்டர்கள் அதிகக்கட்டனத்தை வசூலிக்கிறார்கள். மருத்துவச்செலவை சற்று கவனியுங்கள். அவர்கள் கஷ்டப்பட்டு படித்ததற்கு சன்மானம் நாம்தான் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

வேலை என்பது சற்றும் ரசமில்லாத, அலுப்பான, கடியான, தலைவலியான, வெறியேற்றக்கூடிய, எத்தகைய வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை செய்வதன் மூலமாகத்தான் எனது குடும்ப சந்திக்கும் சிரமங்கள் குறையும் என்றால் நான் தாரளமாக அந்த வேலையை செய்வேன். ஆனால் அதில் அறம் இருத்தல் வேண்டும். காசுக்காக எதை வேண்டுமானலும் செய்யலாம் என்று போனால், ஜங்கில் ரம்மி, ரம்மி சர்கிள், போன்ற சூதாட்டத்தில்தான் நிற்போம். சூதாட்டத்தில் ஒருவனுக்கு மட்டுமே வெற்றி அவன் அந்த சூதாட்டத்தை நடத்துபவனே. சில கிரிக்கெட் மொபைல் ஆப்களும் இதே ரகத்தில் இருப்பதாக அறிகிறேன். 11team என்பது போன்ற பெயரில். இன்னும் டிரேடிங், போன்ற ஆப்கள் மூலம் சம்பாரிப்பதையும் நான் காண்கிறேன். இதுவும் நிலையற்ற அறமற்ற வருமானம்தான்.

என்ன வேலை செய்வது?

வேலை என்பது இரண்டு வகைதான். சேவை மற்றும் உற்பத்தி. Service and Product.

நீங்கள் செய்வது சேவையாக இருத்தல் வேண்டும். அல்லது ஒரு பொருளை நீங்கள் உற்பத்தி செய்தல் வேண்டும். இது இரண்டும் இல்லாத எதுவும் திருத்தமான சம்பாத்தியத்தில் வராது. நல்ல சேவை வழங்கி அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழலாம். நல்ல தரமான பொருட்களை உருவாக்கி அதன் மூலமாக வரும் வருமானத்தில் வாழலாம். இவ்விரண்டில் நீங்கள் தொழிலாளியோ முதலாளியோ எதுவாக இருந்தாலும் உங்களுக்கு அது திருப்தியாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. பிரபலமாக இருந்தால்தான் வாழ்வில் வெற்றிபெற்றவராக ஒருவர் மதிக்கப்படுவர் என்ற எண்ணம் வேறூன்றி இருப்பதாக நினைக்கிறேன். அதன் காரணமாகவே மக்கள் கொண்டாடும் சினிமாத்துறையையே தங்களது தனித்திறன் என்று போலியாகவோ மாயையிலோ நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்களை கொண்டாட வேண்டியது நீங்கள்தான். வேறு யாரும் இல்லை. உங்கள் குடும்பம், நண்பர்கள், சொந்தங்கள் உங்களைக் கொண்டடினால் போதும். செலபிரிட்டியாக ஆகி மக்கள் உங்களிடம் வந்து செல்பி எடுக்க ஆசைப்படும் அளவிற்கு வளர்ந்தால்தான் வெற்றியாளர் என்ற எந்த நிற்பந்தமும் இங்கு இல்லை. fame light விழும் இடத்தை தேடிச்செல்லாதீர்கள். நீங்கள் செய்யும் வேலை நன்கு செய்தால், fame light உங்களைத்தேடி வரும்.

இதற்கும் செக்ஸ் வொர்க்குக்கும் என்ன சம்மந்தம் என்று இன்னேரம் நீங்கள் எண்ணி இருக்கலாம்.

பொருளாதாரம் முக்கியம் தம்பி:

ஒரு குடும்பம் என்பது நிலையான வருமானம் இருந்தால் சீராக வளரும். நிலையான வருமானம் இல்லையென்றால் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் வரும். பொருளாதார நெருக்கடியினால் தூக்கில் தொங்கிய குடும்பங்களின் எண்ணிக்கை அரசாங்கத்திடம் கூட இருக்காது. குடும்பத்துடன் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு இன்னும் நமது மனதில் இருந்து நீங்கி இருக்காது என்றே நம்புகிறேன்.

ஆணோ பெண்ணோ குடும்பத்தை பார்த்துக்கொள்ள நிலையான வருமானம் இருவருக்கும் இல்லை எனக்கொள்க, குழந்தைய வளர்க்க செக்ஸ் ஒர்க் ஒரு லாவகமான வழி என்ற சூழல் மிக சாதாரனமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதில் அந்த பெண்ணுக்கும் எந்த பாதுகாப்பும் இருக்காது. அந்த பெண்ணுடன் இருக்கும் குழந்தைக்கும் எந்த பாதுகாப்பும் இருக்காது.

பொது சேவைக்காக எந்தப் பெண்ணும் தனது உடலை தடிமாடுகளுக்கு வாடகைக்கு விடப்பொவது இல்லை. பணத்திற்காகத்தான், செக்ஸ் வொர்க் லீகல் என்று அறிவிற்க ஒரு நாடு வெக்கப்பட வேண்டும். அவர்களுக்கான குடும்பத்தை அவர்களால் நிலைநாட்டிக்கொள்ள முடியாத அளவிற்கு பொருளாதர சூழல், வேலை இன்மை இருந்தால் அதை சரி செய்ய வேண்டிய கடமை அரசினுடையது.

“பிழைக்க வழி இல்லை என்றால் உடலை விற்று பிழைத்துக்கொள் நாங்கள் யாரும் எதுவும் (தேவிடியா என்று) சொல்ல மாட்டோம். மரியாதையாக நடத்துவோம். பணம் கொடுத்து படுத்துவிட்டு செல்வோம்.” என்பதாகத்தான் என் காதுகளில் கேட்கிறது.

சுள்ளான் படத்தில் வரும் காட்சி

சுள்ளான் படத்தில் பஸ்ஸில் ஒரு ஆண் ஒரு பெண்ணை உரசிக்கொண்டே வருவான், அந்தப்பெண் பொறுமை இழந்து, வா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னால், ஆண் ஜகா வாங்கி விடுவான்.

அப்படி ஒரு குடும்பத்தை மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நிறைவாக கொண்டுசெல்லமுடியாத ஆண்கள் நிறைந்த காலகட்டம் வருவதற்குள், தன்னை உரசிப் பார்க்கும் ஆண்களிடம் பெண்களே வந்து “ஒரு நைட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாதான்” என்று சொல்லக்கூடிய காலகட்டம் வருவதற்கு எல்லா திசைகளிலும் வழிவகைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

வாழ்வதற்கே வேறு வழியின்றி பாலியல் தொழிலை செய்யும் பெண்களுக்கு தற்காலிகமாக இந்த சட்டம் பாதுகாப்பளிக்கலாம். நீண்ட கால நோக்கத்தில் பார்க்கும் போது இது அடுத்த தலைமுறைக்கு தவறான அறமற்ற வாழ்க்கை முறைக்கு வாசலை திறந்து வைப்பதாகவே இருக்கிறது.

வரும் தலைமுறை மாணவர்களுக்கு தேவை தெளிந்த நல்லறிவு. திசை மாற்றி விட்டால், வட மாநிலங்களைப் போன்ற முட்டாள் ரவுடிக்கூட்டம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறுவது நிச்சயம்.

குடும்பம் என்ற கட்டமைப்பு கனிசமாகக் குறைய, நிலையான வருமானம், இல்லறம் பற்றின அறிவு, இரண்டும் இல்லாத ஆணும், பெண்ணும் போதும்.

பெண்களில் பலர் வேசிகளாவர். ஆண்களில் பலர் கூலிகளாவர். இதை சரி செய்யக்கூடிய இடத்தில் இருப்பது பெற்றோர்களும், அரசும்தான். அபாயகரமான ஒரு எதிர்காலம் இருக்கிறது. விதி அந்தப்பக்கம் செல்லாமல் நல்வழிப்படுத்த போராடுவோம். உழைப்போம் உயர்வோம், அறத்துடன் வாழ்வோம்.

-சூர்யதேவன். 8.50 pm 27-05-2022

தற்கொலைக் காதல்கள்

காட்சி 1:

வழக்கம் போல ஆஃபிஸுக்கு வெளியில் நின்று ஃபோனில் சில வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆபிஸுக்குள் என்ன செய்வதென்று தெரியாமல்தான் வெளியே வந்து  பால்கனியில் வசதியாக ஒரு கார்னரை தேர்வு செய்து சாய்ந்து நின்றுகொண்டேன். இப்போது ஃபோனில் பார்த்துக்கொண்டிருந்த வீடியோக்களும் ஒரு சலுப்பை ஏற்படுத்தின. ஃபோனை லாக் செய்து பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். சிலாகித்து ரசிக்கும் அளவிற்கு காற்று ஒன்றும் வீசவில்லை. சில நாட்களுக்கு முன்பு இரவு காணக்கிடைத்த காட்டுத்தீயும் அந்த மலையில் இன்று ஜொலிக்கவில்லை. சற்றே பெரும்மூச்சுடன் திரும்பி இரண்டாவது மாடியில் இருந்து அருகில் இருந்த ரவுண்டானாவை வேடிக்கைப்பார்த்தேன்.

எப்போதும் அந்த ரவுண்டானாவில் வாகனங்கள் சுழன்று சென்று கொண்டேயிருக்கும். உயரத்தில் இருந்த வாகன நெரிசலைக்காண்பதே ஒரு அலாதி இன்பம்தான் போல இருந்தது. எல்லாத்துக்கும் உயரத்தில் இருக்கும் கடவுளுக்கும் நாம் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கும், நாம் முட்டிக்கொள்வதைப் பார்ப்பதற்கும் வேடிக்கையாக இருக்குமோ என்னவோ. நாமக்குள்ளும் கடவுள் இருப்பாரென்றால், கடவுளுக்குள்ளும் நாம் இருக்கலாம் தானே. இன்று அப்படி ஒரு சம்பவம்.

ஒரு பெண், சேலைக்கட்டிக்கொண்டு நடுரோட்டில் நிற்கிறாள். எவ்வளவு நேரமாக அங்கு நிற்கிறாள் என்று எனக்கு தெரியாது. பைக்கில ஒரு ஆள் வந்தான், அவளது கையைப்பிடித்து வண்டியில் ஏற சொன்னான். துல்லியமாக என்ன பேசினார்கள் என்று இரண்டாவது மாடியில் இருந்த எனக்கு தெரியாது. அங்கிருக்கும் ஐம்பது  வண்டிகளின் சத்தமும் அவற்றிலிருந்து  வரும் நூறு ஹாரன் சத்தமும்  அவர்களின் பேச்சை நசுக்கியிருந்தன. அவர்களை யாரும் மோதிவிடவில்லை. இருந்தாலும். வேறு என்ன சொல்லிருக்கப்போகிறான்? பத்து  நொடிகளாவது அவள் இசைவதாக இல்லை.

எனக்கு என் மனைவியின் ஞாபகம் வந்தது. அவளும் ஆஃபிசுக்கு உள்ளேதான் இருந்தாள். வேகமாக சென்று அவளை அழைத்து வந்தேன். அந்த முப்பது நொடிகளும் அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்று பேராசைதான் எனக்கு. ரவுண்டானாவின்  அருகில் ஒரு ஜோடி நிற்பதையும் அவன் வந்த பைக்கும் நடுரோட்டிலே இருப்பதையும் அவள் பார்த்தாள். நாங்கள் அந்த எபிசோடுகளை கடந்து வந்தாயிற்று என்றவாறு பேசினோம். எப்படியும் அவ ஏறி போயிருவா. வேற என்ன செய்ய முடியும்? என நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் அந்தக்காட்சியைப்  பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த ஆள் அந்தப்பெண்ணின் காலில் விழுகிறான், அவள் பின்னால் நகர்ந்து அவனது கையை விலக்குகிறாள். அவள் அப்போதும் வண்டியில் ஏறி உட்காரவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் ஐந்து ஆறு நிமிடங்கள் அவள் அசையவில்லை. அவனோ வண்டியில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு அவளது கைகளைப்பற்றி கெஞ்சிக்கொண்டு இருக்கிறான். இறுதியில் அவள் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அவளது முந்தானையை அள்ளி மடியில் பிடித்துக்கொண்டாள். அவளது முகத்தில் கண்ணீர் இல்லை. சிரிப்பு இல்லை. வாழ்வின் மீதான பெரும் கோபமும், வெறுப்பும் மட்டும் நிறையவே இருந்தன. அவர்களது பைக் கிளம்பிப்போவதைப்பார்த்துக்கொண்டிருந்த செளமியா,”நீயா இருந்திருந்தா நேரா ஒரு ஹோட்டலுக்குதான் வண்டிய விடுவ.” என்று சொல்லி நகைத்தாள். “ஆமா, சாப்பாட்ட முன்னாடி வச்சிகிட்டு யாராலும் சண்ட போட முடியாது”என்று என் சாப்பாட்ராம கேரக்டருக்கு வக்காலத்து வாங்கினேன்.

காட்சி 2:

பிறகு பேசி முடித்துவிட்டு, வேலையையும் முடித்துவிட்டு ஆஃபிசில் இருந்து கிளம்பினோம். செளமியா வந்த டியோவில் அவளும், நான் வந்த காரில் நானும் கிளம்பினோம், அப்போது அன்றிரவு செய்வதற்கு நான் சில திட்டங்கள் வைத்திருந்தேன். அதில் செளமியா இல்லை. அவளிடம் அனுமதி கேட்டேன். ஒழுங்காக வீட்டுக்கு வா என்று அதட்டலுடன் ஆணையிட்டாள். வீட்டில் பேசிக்கொள்ளலம் என்று மலுப்பிக்கொண்டிருந்தேன். அந்நேரம், ஆஃபிசின் அருகில் ஒரு இருபதைத்தாண்டிய ஆண் பிள்ளை, நல்ல உயரம், யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். சட்டென சிறுபிள்ளைப்போல அழ ஆரம்பித்தான். அழுதுக்கொண்டே சில சில வார்த்தைகளை உச்சரித்தான். நான் செளமியாவிடம் கேட்டேன், “தம்பி என்ன பேசுறாரு?”. யாருக்கு தெரியும்? ஒன்னும் கேக்கல. ட்ராபிக் எத்தனை பேச்சுக்களை முழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு ராட்சசன் என்பதை உணர்ந்துகொண்டேன். அந்த ராட்சசனைத்தாண்டி ஒரே ஒரு வார்த்தை மட்டும் எனதிரு காதுகளில் விழுந்தது. “சொல்லுடி” என்ற வார்த்தை. பிறகு, இருவரும் அங்கிருந்து கிளம்பினோம்.

காட்சி 3:

நான் வீட்டுக்கு செல்லும் வழியில் எனது தம்பி அர்ஜுனை சந்திக்க வேண்டியிருந்தது. வழக்கமாக நாங்கள் செல்லும் டீக்கடைக்கு அருகில் காரை நிறுத்தினேன். அவன் வரும் வரை காரிலேயே காத்திருந்தேன். எல்லா ஜன்னல்களும் மூடியிருந்தும் யாரோ கத்தும் சத்தம் கேட்டது. வெளியே இறங்கி யாரெனப் பார்த்தேன். அவன் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்‌. “ஏய், நீ, வா, போ, டி” என்ற சொற்களின் மூலம் மறுபக்கத்தில் இருப்பது ஒரு பெண் என யார் வேண்டுமானாலும் யூகித்துவிடலாம். இங்கு மட்டும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டி சத்தத்தை விடவும் இவனது சத்தம் பலமாய் இருந்தது. ஆத்திரத்துடன் கத்தி கத்திப் பேசினான்‌. நான்கு நடை கிழக்கும் திரும்பி நான்கு நடை மேற்கும் என திரும்பத் திரும்ப நடந்துக் கொண்டிருந்தான்‌. நான் எனது காரை சற்று நகர்த்தி அவனுக்கும் காருக்கும் பத்து மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்திக்கொண்டேன். ஆத்திரத்தில் அருகில் இருக்கும் பொருட்களை உடைப்பது ஆண்களின் இயல்பு என்று எண்ணினேன். ஏன்னா நான் அப்டிதான்.

காட்சி 4:

தம்பி  அர்ஜுன் வந்தப்பிறகு அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான்சி யா காயத்ரியா என்பது அவனது குழப்பம். நான்சிக்கு அர்ஜுனைப் பிடித்திருக்கிறது. நான்சி க்ரிஸ்டின், அவளைக்கட்டிக்கொள்ள வேண்டுமானால் கிறுத்துவ மதத்திற்கு மாறவேண்டும் என்பது அவளின் அம்மாவது நிபந்தனை. நான்சியும் அம்மாவின் விருப்பப்படியே எல்லாமும் நடக்கனும் என்று சொல்லிவிட்டாள். நான்சி ஒரே பொண்ணு. வேற யாரும் இல்லை. அப்பா எப்போதோ இறந்துவிட்டார். குடும்ப சொத்தாக ஒரு கோடி இருக்கலாம். மேலும், நான்சி சொந்தமகள் இல்லை, வளர்ப்பு மகள் என்றும், இது அவளுக்கு மட்டும் தெரியாது என்றும் கூறினான். நான் குறுக்கிட்டேன், கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. நான்சியிடம் யாராவது இதை சொல்லி இருப்பார்கள். ரகசியத்தை ரகசியமாக வைத்திருப்பதில் நம்மூர் ஆட்களுக்கு எந்த ஒரு கிக்கும் கிடைக்கப்போவது இல்லை. ரகசியத்தை கசியவிடுவதிலேயே தனது கெத்தைக்காட்டிக் கொள்ளும் கூட்டம் இது.

பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் செளமியாவிற்கு கால் செய்து 

நான், “பத்து இருவதுக்கு மாமனிதன் படத்துக்கு போலாம் வரியா?”, 

அவள், “யாரெல்லாம் போறீங்க?”;

நான், “வேற யாரு நீயும் நானும் மட்டும்தான். வேற யார நீ எதிர்பாக்குற?”

அவள், “எப்டியும் உன் ஃப்ரெண்ட்ஸ், அர்ஜுன், யாராவது வருவாங்களே!”

நான், “அதெல்லாம் யாரும் இல்ல, நீயும் நானும் மட்டும்தான், சீக்கிரம் சொல்லு, இப்பவே மணி ஒம்பதே முக்கால்.”

அவள் நீண்ட யோசனைக்குப்பிறகு வரவில்லை என்றாள்.

அர்ஜுன், காயத்ரியைப்பற்றி பிறகொரு நாள் சொன்னான். போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறாள். அப்பா போலீஸ், அவர் இறந்தப்பிறகு அவரது போலீஸ் வேலையை இவள் வாங்கிக்கொண்டாள். வீட்டில் அம்மா அப்ரானி. மாமாதான் எல்லாமும். ஏற்கனவே ஒரு கல்யானம் நிச்சயம் ஆகி, கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் காணாமல் போய்விட்டாளாம். நேப்பால் வரை தனியாக ரயிலில் பயணித்துவிட்டு திரும்ப வந்துவிட்டாலாம்.

காயத்ரி அர்ஜுனிடம், “நீ நல்ல ஃப்ரெண்டுன்னு தெரியும், ஆனா ஹஸ்பண்ட் மெட்டீரியலான்னு தெரியல, வேணும்னா ஒரு ரெண்டு மாசம் லிவிங்’ல இருந்து பாக்கலாமா?” என்று கேட்டிருக்கிறாள். இதை நானும் அர்ஜுனும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தோம். ஹஸ்பண்ட் மெட்டீரியல்னா என்ன? எத மீன் பண்றா? காலைல எழுந்திரிச்சு பாத்தரமெல்லாம் வெளக்கி வைக்கனுமா? சலுப்பா இருக்குன்னு சொன்னா சமைச்சு தரனுமா? இல்ல, என்ன சொதப்பு சொதப்புனாலும் சூடு சொரனலாம் வராம கோவப்படாம இருக்கனுமா? ஒன்னும் புரியலையே.

எனக்கு தெரிஞ்சி அவ யாரையோ பாத்து நல்லா பயந்துருக்கா. கல்யாணம் பண்ணா இவ்ளோ அவஸ்தப்படனும்னு அவ மனசுல இருக்கு. அதனாலதான் உன்ன நல்ல ஃபிரண்டா தெரிஞ்சிருந்தும் நீயும் நாளைக்கு கல்யாணம் ஆனப்பிறகு காட்டுமிராண்டியா மாறிடுவியோனு பயப்படுறா. இந்த சொசைட்டீல நிறைய சைக்கோங்க இருக்கு, தாலி கட்ற வரைக்கும் நைஸ் டு பி பர்ஸனா நடந்துக்குவானுங்க, ஒன்ஸ் தாலிகட்டிட்டா போதும், இஷ்டத்துக்கு போட்டு ஹரஸ் பண்ணுவானுங்க. அப்டியும் இருக்கானுங்க. இது எந்த சைக்கோ நல்ல சைக்கோன்னு கண்டுபிடிக்கிறது ஒன்னும் அவ்வளவு ஈசியில்ல. காயத்ரி உன்கிட்ட ஓபன்னா கேட்டுட்டா. 

சொல்லு அவகிட்ட, “கல்யாணம் பண்ணினா எப்டியும் காலத்துக்கும் சண்ட போட்டுதான் ஆகனும். யார்கூட சண்ட போடப்போறங்கிறதுதான் நீ ச்சூஸ் பண்ண வேண்டியது. யார்கிட்ட சண்டப்போட்டாலும், மண்ணிப்பு கேட்டோ, இல்ல மண்ணிச்சோ, மறுபடி சமாதானம் ஆகி அடுத்த கணமோ, அடுத்த நாளோ இயல்பா பேசி சிரிச்சி வாழ்க்கைய வாழமுடியனும். அப்டி யார்கிட்ட தோனுதோ அவங்களையே கட்டிக்க சொல்லு”னு சொல்லிட்டேன்.

காயத்ரியே ஒத்துக்கொண்டாலும், அவளது வீட்டில் எப்படி பேசி சம்மதம்வாங்குவது என்று அர்ஜுனுக்கு ஒரே யோசனை. கண்டிப்பாக காதல் திருமணம் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றான். ஏன் என்றேன். ஏற்கன்வே ஒரு கல்யாணத்த நிறுத்தி எங்க மானத்த வாங்கின. இப்ப லவ் பண்ணி வேற அசிங்கப்படுத்துறியா என்று சண்டைக்கு வருவார்கள்.

நீ காயத்ரியையே கல்யாணம் பண்ணிக்கு. நான்சிய கட்டிக்கிட்டு உன்னால உன் இயல்புக்கு மாறா வாழமுடியாது. காயத்ரிக்கு சில மனக்குழப்பம்தான் இருக்கு, நம்ம வீட்டுக்கு கூப்டுட்டு வா, நானும் செளமியாவும் பேசுறோம். அவதான் உனக்கு செட் ஆவா. அவ ஃபோட்டோ காட்டு பாக்கலாம். அர்ஜுன் அவனது ஃபோனில் இருந்து ஓரிரு ஃபோட்டோவைக் காட்டினான். லட்சனமான முகம். உனக்கு காயத்ரியா நான்சியானுலாம் குழம்ப வேண்டாம். ஒரே முடிவா காயத்ரிய கல்யாணம் பண்ற வழிய பாரு.

காட்சி 5:

ஒரு வழியாக வீட்டுக்கு வந்துவிட்டேன். செளமியாவிடம் அர்ஜுனுடனான பேச்சுகளின் சுருக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தேன். 

அவள் குறுக்கிட்டு, “புங்கவாடில, பூங்கொடி மவ காவ்யா சூசைட் பண்ணிக்கிட்டாளாம்.” 

எனக்கு ஒரு நிமிடம் யாரென கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

சற்று நினைவுகளை திரட்டிக்கொண்டு, “யாரு?”

செளமியா, “பூங்கொடி மொவப்பா, காவியா, நீ கூட பூங்கொடி மவளா நீஈயி.. னு கிண்டல் பண்ணுவியே”

நான்,”ஆமா காவியா? அவளா அப்டி பண்ணா?”

செளமியா, “ஆமாம் எதோ லவ் மேட்டராம், வீட்ல தெரிஞ்சிரிச்சி போல, வேற மாப்ள பாத்து கல்யாணம் தேதி குறிச்சிட்டாங்க. அதான் சூசைட் பண்ணிக்கிட்ட”

காவியா காதலிக்கும் வயதுக்கு வளர்ந்துவிட்டாள் என்பது எனது முதல் ஆச்சர்யம். ஆனால், அந்த ஆச்சர்யத்தை நான் அடைவதற்குள் அவளுக்கு தற்கொலை செய்துகொள்ளவும் தெரியும் என்பது பெரும் அதிர்ச்சி. 

சின்ன பொண்ணுதான் அவ. பதினாறு இல்ல பதினெட்டு வயசுதான் இருக்கும்.

வீட்டுல என் தங்கச்சி சபியிஷா படுத்திருந்தா, அவள எழுப்பி என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருந்தேன். சபியின் சிநேகிதிதான் காவியா. லவ் பண்ணினது அஜித்னு ஒரு பையன. முன்னாடி வீடாம். டிப்ளமோ படிச்சிட்டு சென்னைல வேலபாக்றானாம். எங்க ஊர்ல பொறந்துட்டு தெள்ளவாரி ஆகாம படிச்சிட்டு வேலைக்கு போறதுலாம் ஒரு பெரிய சவால். அந்தப்பையன் படிச்சிட்டு வேலைக்கு போறதே எனக்கு பெருசாதான் தெரிஞ்சிது. காவியாவோட அம்மா பூங்கொடிதான், “அவனதான் கட்டிகுவன்னா நீ செத்து ஒழிடி”னு சொல்லிருச்சாம். அவ கொஞ்ச நாளாவே யார்கிட்டயும் பேசுறதே இல்லையாம். அவங்க அப்பா செல்வம் வண்டிக்கு போயிருந்தாராம். அவர் வர வரைக்கும் காத்திருந்து, அவர பாத்துட்டு, வீட்ல யாரும் இல்லாத சமையம் அம்மா பூங்கொடியோட சேலைல தூக்கு போட்டுகிட்டாளாம்.

எல்லாரும் பூங்கொடிய திட்டினாங்க, செல்வம் உட்பட சிலர் அடிச்சாங்க. ஆனா, போஸ் மாடம் பண்ண விடாம, ப்ளஸ் டூவுல மார்க்கம்மி அதனால புள்ள சூசைட் பண்ணிக்கிச்சினு விசியத்த மூடி மறச்சிட்டாங்களாம். மார்க் எவ்வளவுன்னு கேட்டேன். ஐநூறுக்கு முன்னூத்தி தொன்னூத்தி ஏழுன்னா சபி. புங்கவாடி போலாமா சபின்னு கேட்டேன். இல்லண்ணா, அப்பவே அவள எடுத்துட்டாங்கண்ணா என்றாள்.

மனசு கேட்காமல், அவளைப்பற்றியும், ஆண் பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களைப்பற்றியும், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் குற்றங்கள் பற்றியும், ஜாதி, பணம், எல்லாம் எப்படி எல்லாத்தையும் பாதிக்கிறது என்று என்னென்னமோ பேசினோம். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு செளமியாவும் சபியும் தூங்கச் சென்றார்கள்.

நான் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, நெட்ஃபிலிக்ஸில் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் போட்டுவிட்டு, கிச்சன் சிங்க்கில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருந்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தேன்.

-சூர்யா வாசு // 27-ஜூன்-2022

காதல், மேட்டர் மற்றும் தமிழ் சினிமா

சினிமாவுல சொல்ற நிறைய விசியங்கள் முகம் சுளிக்கிற மாதிரிதான் இருக்கு. ஆண்-பெண் உறவுகளில் அது சொல்லவரும் கருத்து/நியாயம் என்பது பலவாறானது. அது அந்தந்த சினிமாக்காரர்களின் இலக்கணம், விருப்பம், ஆசை, நிராசை, கற்பனை இப்டிலாம் வச்சிக்கலாம் ரசிக்கலாம் தவிற, அது மக்களின் வாழ்க்கைக்கான நெறிகள் இல்லை. ஆனால் மக்கள் அவ்வளவு தெளிவா என்ன?


இப்போ, கல்யாணத்துக்கு முன்னாடி கற்பமாறதுதான் கான்சப்ட்.

லவ்’ங்கிற கான்செப்ட்ட ஓவர்ரேட் பண்ணி பண்ணி ரொமான்டிசைஸ் பண்ணி பண்ணி லவ்வுன்னா என்னன்னே தெரியாம நானும் லவ் பண்றேன்னு ஏதேதோ பண்ணிட்டு இருக்காங்க. (இருந்தோம், இருக்கிறோம், இன்னும் பலனூறு ஆண்டுகளுக்கு இருப்போம்.) 

சென்ஸிடிவ் விசியத்த சென்ஸிடிவா கையாளனும். அதுதான் சரி. அத வச்சி காமெடி பண்றது, நார்மலைஸ் பண்றது ரியாலிட்டிக்கு செட் ஆகாது. இவை பெரும்பாலும் வாழ்க்கையை கடினமாக்கும் விடயங்கள். ஒவ்வொன்றாக இதை வகைப்பிரிக்க முயற்சிக்கிறேன். நூறு சதவீதம் என்னால் இந்த சிக்கல்களை வகைப்பிரிக்க முடியாதுதான், இருந்தாலும் பரவால முயற்சிக்கிறேன்.

ஒரு ஆர்டராக வருவோம்.

  • புடிச்சிருக்கனும்
  • ப்ரொப்போஸ் பண்ணனும்
  • ஒன் சைட், டூ சைட் ஆகனும்
  • வீட்ல சொல்லனும், போராடி சம்மதிக்க வைக்கனும்
  • கல்யாணம்
  • ஃபஸ்ட் நைட் (90ஸ் கிட்ஸ் அப்டிதான் சொல்லுவோம். 2K கிட்ஸ்’கு மேட்டர்னு நெனைக்கிறேன்)
  • ப்ரெக்னெண்ட்
  • குழந்தை
  • அப்றம் ஸ்கூல் பீஸ் கட்ட போராடனும்.

இது யதார்த்த லவ் மேரேஜ் பண்ணவங்க லைப்ல நடக்கிற சம்பவங்கள். 

இதில் கல்யாணத்துக்கு முன்னாடி ஃபஸ்ட் நைட்/மேட்டர் வருதுனா அதுதான் ஆண் வர்க்கத்துக்கே உரித்தான லட்சியக் கனவு. அதற்காகவே ஏங்கித்தவிக்கும் வாலிபர்கள் இல்லாத பள்ளி, கல்லூரி, அலுவலகமே இல்லை.

அப்படி நடக்கும்போது மேட்டரின் போது இருந்த அதே காதலிதான் கல்யாணத்தின்போதும் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஆண்களுக்கு கட்டாயம் இல்லை. ஆனால், இதை திரையில் கொண்டு வந்து நார்மலைஸ் ஆக்குவது ஆபத்து. ஆல்ரெடி மேட்டர்ங்கிறது அங்க இங்கன்னு நார்மலைஸ் ஆகிட்டு இருக்கு.

கல்யாணத்துக்கு முன்னாடி ப்ரெக்னெண்ட் ஆகுறதுதான் ட்விஸ்ட்டு. அதுக்கு முன்னாடி மேல சொன்ன 1 to 9 ஆர்டர்ல, சினிமா என்னவெல்லாம் கலேபரம் பண்ணிவச்சிருக்குன்னு ஒரு ரீவைண்ட் பண்ணி பாக்கலாம்.

கான்செப்ட் 1

காதல் – கல்யாணம் – சுபம். 

ஒரு பையனுக்கு ஒரு பொண்ண புடிச்சிபோச்சின்னா அவளையே கல்யாணம் பண்ணிகிட்டா போதும் அவங்க வாழ்க்கைல ஜெயிச்சுருவாங்க. இதுல முக்கியமா கீழ் ஜாதி மேல் ஜாதி கலக்கனும், இல்லன்னா கிக் இருக்காது. தொரத்தி தொரத்தி அந்த பையன் ‘நீ என்னத்தான் லவ் பண்ணனும்’னு டார்ச்சர் பண்ணி, ‘ஆமா நான் உன்னதான் லவ் பண்றேன்’னு அந்த பொண்ணே சொல்லிறனும். பல வருடங்களா மொத்த தமிழ் சினிமாவும் இதுதான். இப்பவும் இது தொடருது. இந்த மண்டையனுக்கு லவ் வந்துட்டா அந்தப் பொண்ணுக்கும் இவன் மேல லவ் வந்தே ஆகனும். உன் லவ் ட்ரூ லவ்தான் இல்லங்குல, ஆனா உனக்கு புடிச்சிருக்குன்னா அவங்களுக்கும் புடிச்சே ஆகனுங்கிறது ஒருவிதமான சைக்கோத்தனத்துல வரலையா? ஸ்டாக்கிங்-க்கும் லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் சினிமா மாட்டுனா இதான் கதி.

எ.கா. காதலுக்கு மரியாதை, சிவாஜி, ஆடுகளம், இத்யாதி இத்யாதி, மெளனராகம்.

கான்செப்ட் 2

முதல் காதல் – தோல்வி – ரெண்டாவது காதல் – கல்யாணம் – சுபம்.

இது கொஞ்சம் யதார்த்தம், சில உஷாரான பொண்ணுங்க என்னதான் தொரத்தி தொரத்தி சைக்கோத்தனம் பண்ணினாலும் ஏமாறமாட்டாங்க. போடா டோமருன்னுட்டு தப்பிச்சு போயிடுவாங்க. (சினிமால இத ப்ரேக் அப்னு சொன்னா நல்லாருக்காதுன்னு, கதைப்படி முதல் காதிலி செத்துட்டான்னு ஒரே போடா போட்டுருவாங்க) ஆனா அதே பைத்தியக்காரத்தனம் சில பொண்ணுங்களுக்கு புடிச்சு போயிருக்கும். ஆமாம். 

எ.கா. வாலி, வாரணம் ஆயிரம், சில்லுன்னு ஒரு காதல், ராஜா ராணி, 7ஜி ரெயின்போ காலனி.

கான்செப்ட் 3

நிறைய காதல் – நிறைய தோல்வி – கடசியா ஒரு கல்யாணம் – சுபம்.

இத விளக்க தேவையில்லன்னு நினைக்கிறேன். கிடைக்கிற வரைக்கும் அலைய வேண்டியதுதான். பாக்குற எடத்துல எல்லாம் அப்ளிக்கேசன் போட்டறனும்.

எ.கா. ஆட்டோகிராஃப், ப்ரேமம், அட்டக்கத்தி.

இதுக்கு அடுத்த ஸ்டேஜ் மேட்டர். என்ன மாயமோ தெரியல தமிழ் சினிமால கல்யாணத்துக்கு முன்னாடி மேட்டர் பண்றதெல்லாம் ok cool / casual / not a problem / heavenly / so what? / they need it னு glorify பண்ற காலகட்டம் சீக்கிரமா முடிஞ்சிரிச்சி. அதிக டைம் எடுத்தக்கல.

கான்செப்ட் 4

காதல் – மேட்டர் – ப்ரேக்கப் – வேற ஒருத்தனோட கல்யாணம் – ஹீரோக்கும் வேற ஒரு புது லவ்.

எ.கா. வின்னைத்தாண்டி வருவாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா.

கான்செப்ட் 5

கல்யாணம் – குழந்தை – டிவோர்ஸ் – ரெண்டாவது காதல்

எ.கா. என்னை அறிந்தால், ரிதம், வேட்டையாடு விளையாடு, 

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆன கொஞ்ச வருசத்துல தன் கனவன் இறந்துட்டா, ரெண்டாவது கல்யாணம் பண்றதுன்னா அந்தப் பொண்ணுக்கே தப்புன்னு தோணும். அந்த அளவுக்கு சமூகம் போதிச்சு வச்சிருக்கும். இது வாழ்க்கைய இன்னும் கடினமாக்குறது. ரெண்டாவது கல்யாணம் எனும்போது, இது சரிதான் யார் என்ன சொன்னாலும் தன் நலனுக்காகவும் தன் குழந்தையின் நலனுக்காகவும் சில சமூக கட்டுபாடுகளை தாண்டி வந்துதான் கல்யாணம் செய்வார்கள். அது வரவேற்கத் தக்கது. வாழ்க்கை வாழ்வதற்கே. சமூகத்தை மனம் கோணாமல் வைத்து அழகு பார்ப்பதற்கு அல்ல.

திருமணத்திற்கு பிறகான காதலை பதிவு செய்த படங்கள் என்பது மிகச்சொற்பம். இருந்தா சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன். மிகைப்படுத்தப் படாத காதலை, யதார்த்த காதலை பதிவு செய்தப் படங்களுள் ஒன்று அட்டக்கத்தி. பசங்க அப்டிதான் லவ் பண்ணுவானுங்க. ஒன்னு போச்சினா இன்னொன்னு. 96 காதல்லாம் ரியாலிட்டில கோடில ஒன்னுதான். அதுவும் பைத்தியக்காரத் தனமாத்தான் தெரியுது எனக்கு. வேணும்னே கல்யாணம் பண்ணிக்காம இருந்துகிட்டு ஜானு மாதிரி யதார்த்த பொண்ணுக்கும் ஒரு கில்ட் ஃபீலிங் ஏற்படுத்த முயற்சிக்கிறது எவ்ளோ சைக்கோத்தனம்? அந்த கில்ட் போக அவ என்ன பண்ணனும். 96 படத்த பாத்துட்டு, கேரலாவுல நடந்த ஒரு ஸ்கூல் கெட்டுகெதர்ல ஒருவரது மனைவி தன் முன்னால் காதலனுடன் ஓடிப்போனதுதான் ரியாலிட்டி.

மேட்டர் லவ்வர் கூட மட்டுமா? இல்ல ஃபிரண்டஸ் வித் பெனிஃபிட்டா, மேட்டர் பண்ணிட்டா அந்த நபரையேத்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்களானுலாம் கேக்காதீங்க. பதில் இல்லை. பதில் இருந்தாலும் அது சரியா தவறா என்பதெல்லம் அந்தந்த சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்களா இல்லை காயப்படுத்திக் கொள்கிறார்களா என்பதே தீர்மானிக்கும். 

சில டாக்ஸிக் நபர்களிடம் இருந்து உறவுகளை முறித்துக் கொண்டால் அது சரியே. அது திருமணமே ஆகி மூன்று குழந்தைகள் இருந்தாலும் சரி. நம் வீக்நெஸ்ஸை தெரிந்துக் கொண்டு, நம்மை எமோஷ்னலாக துண்புறுத்தும் ட்ரிக்கர் செய்யும் எவரையும் நம் வாழ்வில் இருந்து தூக்கி எறிவதே சரி.

ஒரே ஒரு படம் வந்துச்சு ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’னு அதுலையும் ஏகப்பட்ட நாராசமான விசியங்கள 18+ ஆ இல்ல அடல்ட் காமெடியா இல்ல என்ன எழவுன்னே வகைப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். நான் ஒரு விர்ஜின் பையன், எனக்கு விர்ஜின் பொண்ணுதான் வேணும்னு ஜி.வி. கேக்க, விடிவி கனேஷ் ‘அதெல்லாம் டைநோசர் காலத்துலையே அழிஞ்சி போச்சிடா தம்பி’னு சொல்லுவார். என்ன சொல்ல வர்றாங்க? ஊர்ல இருக்குற பொண்ணுங்கெல்லம் தேவிடியான்னா? இதுக்கும் தேட்டர்ல விசில் பறந்துச்சு. அந்த தேட்டர்ல பெரும்பாலும் பசங்கதான், சில லவ்வர்ஸ் கப்பில்ஸ் வந்திருந்தாங்க. ஒரு குடும்பமும் வந்திருந்துச்சு. அதுவும் இண்டர்வல்ல கிளம்பி போகல. முழுபடமும் பாத்துட்டுதான் போனாங்க. டிக்கட் காசு வீணாகக்கூடாதுன்னு நெனச்சிருப்பாங்க போல. அந்தக்குடும்பத்துல பத்து வயசுப் பையனும் அடக்கம்.

அடுத்து அப்டி மேட்டர் பண்ணி ப்ரெக்னன்ட் ஆகுறது தனி கிக் ஆடியன்ஸுக்கு. இப்போ என்ன பண்ண போறாங்கன்னு இவங்களாலையே யூகிக்க முடியலனாதான் படம் சுவாரசியமா போச்சின்னு மைக்ல, fbல, டிவிட்டர்ல, யுடியுப்ல எல்லாம் சொல்லுவாங்க. இல்லன்னா படம் ஓடாது. லாபம் வராது. சினிமாக்காரங்க சிலர் கார் வீடு பங்களானு செட்டில் ஆக முடியாது.

அந்த சினிமால எதுலையும் கண்டிப்பா ஒரு மாத்திரைல கருவ கலைக்க மாட்டாங்க. அந்த பொண்ணுக்கு கலைக்க மனசு வராது. வராதா? இல்ல வரக்கூடாதா? இப்டிதான் கொஞ்ச காலம் தாலி செண்டிமெண்ட்ட தூக்கி புடிச்சிட்டு இருந்தாங்க. தாலி கட்டிட்டா அவந்தான் புருசன், அது இதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க. புதுப்பேட்ட தனுஷ் மாதிரி எவனாச்சும் தாலி கட்டினா யாரும் தாலிக்கட்டினவன் கூடத்தன வாழனும்னு பேசப்போறதில்ல. கழட்டி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க.

அப்போ தாலி, இப்போ கற்பம். 

கலைக்கவே கூடாதாம். ஏன்னா அது ஒரு உயிராம். அவசரப்பட்டு பையனும் பொண்ணும் தப்பு பண்ணிட்டாங்க அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் சரி. குழந்த பொறந்து நாலு அஞ்சு வருசம் கழிச்சி அந்தப் பையனுக்கு ஒரு சந்தேகம் வருது. சுயமாகவோ இல்லை சொல்லிக்கொடுத்தோ வரலாம். அந்த குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். அந்த பொண்ணோட வாழ்க்கையே சூனியமாகிவிடும். மெண்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பது எல்லருக்கும் இங்கு புரிய வாய்ப்பில்லை. மெண்டல் ஹெல்த் குறைவாக உள்ளவர்களிடம் நெருக்கமாக வாழ்ந்தவர்களுக்குதான் அது புரியும். ஒரு உயிர காப்பாத்தறதா சொல்லி, அந்த பொண்ண காயப்படுத்தி ரணமாக்கி கடசில அந்த குழந்தையோட மனசுலையும் நஞ்சுதான் வளரும்.

ப்ரோ டாடி படத்துல வர மாதிரியோ அர்ஜுன் ரெட்டி படத்துல வர மாதிரியோ அவ்ளோ ஈசியா கற்பமான பொண்ண ஒத்துக்க மாட்டாங்க. குடும்பம் அக்கம் பக்கம்னு அவள சுத்தி இருக்கிற எல்லாரும் அவள பேசிப்பேசியே சாவடிச்சிருவாங்க. அவ ஒரு தேவிடியாத்தான்னு நிரூபிக்க அவள எப்பவும் ஒரு கூட்டம் மொச்சிகிட்டே இருக்கும். அவளோட நடை உடை பாவனை பாவாடை மயிர் மட்டைன்னு எல்லாத்தையும் நோட்டம் விடும். எதாவது ஒரு நேரத்துல, அவ கால் சந்துல வேற யாரு இருக்கா, இருந்தா, இருப்பானு தெரிஞ்சிறாதானு தேடுவாங்க. அவ்ளோ அரிப்பு இருக்கு அடுத்தவங்க அந்தரங்கத்த தெரிஞ்சிக்கிறதுல.

சிங்கிள் மதர்களிடம் கேட்டுப்பாருங்கள், நியாமான காரணத்திற்காகவே அவர்கள் தன் கனவனை பிரிந்து தானே குழந்தையை வளர்க்க முயற்சித்தாலும், அது அவ்வளவு சுலபமாக இருந்திராது. பல ஆண்கள் தீண்டத்துடிப்பார்கள். சின்ன கேப் கிடைக்காதா எனக் காத்திருப்பர்கள். நல்லவர்கள் போல் நயமாக பேசி மனதைக்கவர மெனக்கெடுவார்கள். இவர்கள் அனைவரும் நரிகள்தான். அசந்த நேரம் வாயில் போட்டு மென்று தின்று சற்று கசந்தவுடன் சக்கையாய் துப்பிவிட்டு போடி தேவிடியா என்று வாயாற வாழ்த்திவிட்டு அடுத்த தேவிடியா யாரென்று தேடிப் போய் விடுவார்கள். ஆண்களுக்கு வெரைட்டியாக அனுபவிப்பதில் அவ்வளவு அலாதி இன்பம்.

ப்ரோ டாடில வர மாதிரி ரெண்டு பேர் வீட்லையும் அப்பா அம்மாலாம் எங்கயுமே இருக்க மாட்டாங்க. நாப்பது ஐம்பது வயச நெருங்கிய எல்லாருக்கும் தெரியும் சமூகத்துல நமக்கான மரியாத’ங்கிறது எவ்வளவு முக்கியம்னு. தன் பையனோ பொண்ணோ இப்டி பண்ணிட்டான்னு வெளிய தெரிஞ்சா தன்ன புறக்கனிப்பாங்கன்னு இங்க எல்லாருக்கும் தெரியும். ப்ரோ டாடில வர மாதிரி எல்லா அப்பாக்களும் இங்க கோடீஸ்வர முதலாளிகள் கிடையாது. பலரும் தமிழ்நாட்டுல மிடில் கிலாஸ்தான். இந்த எலைட் குடும்பங்கள் ஒரு பிரச்சனையை கையாளும் விதத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு சாதாரன மக்கள் தங்களின் பிரச்சனைகளை ஒரு இன்ச் கூட அனுக முடியாது.

ஆதலால் காதல் செய்வீர்தான் ரியாலிட்டியை பதிவு செய்த படம். அதுதான் யதார்த்தம். சபையில் ஒருவர் “ஏன்யா சும்மா பேசிட்டு இருக்கீங்க? பொண்ணோட ஒரு நைட்டு ரேட்டு எவ்ளோன்னு சொல்லுயா.” என்பார். எந்தத் தகப்பனும் கேட்கக் கூடாத வார்த்தைகள்.

இந்த சினிமாக்காரனுங்க இப்டிதான் எதையாவது டிரெண்ட் பண்ணிட்டு சமூகத்துல ஒரு மனநிலையை உருவாக்கிட்டு அடுத்த டிரெண்ட செட் பண்ண போயிருவானுங்க. பாவம் இந்த மக்கள்தான் அந்த டிரெண்டை தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஃபாலோ பண்ண ட்ரை பண்ணி செத்துகிட்டு இருக்காங்க. நல்லத சொல்லவும் இங்க படங்கள் இருக்கு. ஆனா சொற்பம். பேசப்படாத பல விசியங்கள பேசி ஒரு தீர்வு கொண்டு வரனும், அதற்கு கலை ஒரு மிகப்பெரிய ஆயுதம். அதை திருத்தமா பயன்படுத்தனும். இல்லன்னா அது திசையறியாமல் எல்லாரையும்தான் சிதைக்கும். முக்கியமா சினிமாவ பாத்து இதுதான் உலகம்னு நினைக்கிற வளரும் தலைமுறையினர ரொம்ப பாதிக்கும்.

இங்க யார் என்ன சொல்லனும்ங்கிற வரைமுறைய வகுக்குறது மிகப்பெரிய சிரமம். பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு. தெரியுதோ இல்லையோ வாய்க்கு வந்தத பேசிவச்சிட்டும் தோன்றத எல்லாம் படமா எடுத்துவச்சிட்டும் போயிருவாங்க. அது நன்மையா தீமையானு தெரியாம பரவசத்துல எடுத்து வாழ்க்கைல பொறுத்திபாத்துட்டு, பின்னாடி அவதிபடுறது என்னமோ சாதாரண மக்கள்தான்.

ஆகையால், “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்”ங்கிறத அடுத்த தலைமுறைக்கு நம் வாழ்வின் வழியாக வாழ்ந்து காட்டுவது நமது கடமை. நம் கடமை என்றென்றும் தவறேல். கலையை கலங்கமில்லாமல் உருவாக்கவும் உள்வாங்கவும் நல்லறிவுடன் முனைவோம்.

#brodaddymovie  #bachelormovie  #arjunreddymovie  #மா shortfilm #ஆதலால்_காதல்_செய்வீர்

-சூர்யா வாசு

-26-06-2022 11.20 am