Tag Archives: Movie

The Substance (2024) Not for all the adults

அது என்ன Not for all adults என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு பெரும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் கல்நெஞ்சமும் வேண்டும். அது அனைத்து adult-சுக்கும் இங்கு இருப்பதில்லை. இது ஒரு R rated movie என்பதால், R rating என்றால் என்ன என்று பார்த்துவிட்டு, அவற்றில் பட்டிலிடப்பட்டிருக்கும் விசயங்களை உங்களால் படத்தில் தயக்கமின்றி பார்க்கமுடியும் என்றால் இந்தப்படத்தை நீங்களும் பார்க்கலாம். இந்தப் படம் அமெசான் ப்ரைம் வீடியொவில் காணக்கிடைக்கிறது.


1. அழகும் பருவமும்

ஒரு பெண் பிறந்தது முதல் இறப்பு வரை அவள் பெண்தான். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு அவளிடம் இருக்கும். அதைக்கொண்டு பெண்ணின் பருவங்களை ஏழாகப் பிரிக்கிறார்கள்.

பேதை: 5-7 வயது
பெதும்பை: 8-11 வயது
மங்கை: 12-13 வயது
மடந்தை: 14-19 வயது
அரிவை: 20-25 வயது
தெரிவை: 26-31 வயது
பேரிளம்பெண்: 32-40 வயது

இந்த ஏழு பருவங்களின் வயது வரம்புகளும் அவ்வப்போது வேறுபடுகின்றன. ஆனால், பெண்ணின் பருவங்களை இப்படியாகத்தான் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதில் பேரிளம் பெண்தான் நம் கதை கதாநாயகி. அவள் அரிவையாக (20 வயது) இருந்ததுமுதல் கதை நடக்கும் நிகழ்காலம் வரை நாற்பதைக் கடந்தபின்பும் துள்ளலாகவும், ஆரோக்கியமாகவும் வசீகரத்துடன் வாழ்ந்து வருகிறாள். புகழ் பணம் இருந்தும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் குழந்தைகளும் இல்லை. அவளுடைய மிகப்பெரிய சொத்தே அவளுடைய மங்காத பேரழகுதான் என்று அவள் திர்க்கமாக நம்பி வாழ்ந்து வருகிறாள்.

ஒரு நாள் அவளின் வயதின் மூப்பு காரணமாக அவளுடைய வசீகரம் குறைய ஆரம்பிக்கிறது, ஆரோக்கியம் குன்றுகிறது. தன் கண் முன்னே தன் இளமை தன்னைவிட்டு போய்க்கொண்டு இருப்பதை அவளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. தன் அழகும் இளமையும் நிரந்தரமாக தனக்கு வேண்டும் என்று எண்ணுகிறாள். அதற்காக எதையும் செய்யத்துணிகிறாள். ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.

நிற்க.


2. வாரிசு

தன்னுடலைக் கிழித்துப் பிறந்த பெண்பிள்ளைக்கு தாய்ப்பாலூட்டி வளர்க்கிறாள் ஒருதாய். மகள் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வேகமாகவும் வளர்கிறாள். ஆனால் அந்த தாய்க்கு அதில் மகிழ்ச்சி இல்லை. ஏனென்றால், அந்தப் பெண் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போதெல்லாம், அந்த தாய்க்கு முதுமை அதிகரிக்கிறது. குழந்தை வேகமாக தாய்ப்பால் குடிக்க குடிக்க குழந்தை அழகாய் மாறுகிறது, தாயின் இளமையோ வேகமாகக் குறைகிறது. குழந்தையின் பேரழகை உலகமே போற்றுகிறது. புகழுக்கு மயங்கிய குழந்தைக்கு நிறைய பால் தேவைப்பட்டது.

தாயினால் குழந்தையைத் தடுக்க முடியவில்லை. தாய்ப்பாசமோ, தன் உருவத்தை தானே தாக்குவதா, என்ற எண்ணமோ, ஏதோ ஒரு இனம்புரியாதக் காரணம் அந்தத் தாயினால் குழந்தையை நிறுத்தமுடியவில்லை. ஆனால், கருணையற்ற அந்தக்குழந்தை தான் மேலும் அழகாக மாற தன் தாயை கிட்டத்தட்ட மரணத்தின் எல்லைக்கே தள்ளிவிட்டது. தாய் சுதாரித்துக்கொள்ளும் தருணம் குழந்தை பலசாலியாகவும் தாய் பலகீனமாகவும் இருக்கிறாள். தாய்க்கும் மகளுக்கும் நடந்த யுத்தத்தில் தாய் மகளை தின்று தன் இளமையை அழகை மீண்டும் எடுத்துக்கொள்கிறாள்.

நிற்க


3. ஆவேசம்

ஒரு செல்வச் செழிப்பான வனம். அதில் எல்லா விதமான செடிகளும் கொடிகளும் மரங்களும் இருந்தன. எல்லா வகையான உயிரினங்களும் இருந்தன. நிலத்துக்கு மேலே தாவர வளங்களும், பல்லுயிர் வளங்களும், நிலத்துக்கு கீழே தங்கமும் இருந்தன. இந்த கோடிக்கணக்கான வயதுடைய வனத்திற்கு அதுவரை மனிதர்கள் யாரும் வந்ததேயில்லை. அப்படி ஒரு வனத்தில் மனிதர்களின் கால் பட்டது.

மனிதர்கள் முதலில் தாவரங்களைப் பறித்து, பசியாற்றினார்கள். மரங்களை வெட்டி பொருட்கள் பல செய்தார்கள். ஆடைகள் நெய்தார்கள். மிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாடிப் புசித்தார்கள். நிலங்களை வெட்டி தங்கச்சுரங்கங்கள் அமைத்தார்கள். ஆபரணங்கள் செய்து மிடுக்காய் நடனமாடி கவர்ந்தீர்த்து புணர்ந்து இனத்தைப் பெருக்கினார்கள்.

ஆயிரம் வருடங்கள் செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தார்கள். எல்லா வளங்களும் தீர்ந்தப்பிறகு வேறு வளமான வனம் தேடினார்கள். தேடிக்கொண்டிருக்கும் போதே சிலர் வெள்ளம் வந்து மூழ்கி மரணித்தனர். சிலர் நிலச்சரிவில் சிக்கி மாண்டனர். சிலர் பட்டினியில் இறந்தனர். யாருக்கும் அந்த வனம் போல வேறு வனம் கிடைக்கவில்லை. தங்கம் வீதியில் இரைந்துக் கிடந்தது. எல்லாரும் இறந்தப்பிறகு மழை வந்தது மீண்டும் அந்த வனம் துளிர்விட ஆரம்பித்தது.

நிற்க


எது அழகு?

எனக்குப் பிடித்தமான தத்துவம் ஒன்று இருக்கிறது. அது

அழகாய் இருப்பதெல்லாம் நமக்குப் பிடித்திருப்பதில்லை.

நமக்குப் பிடித்திருப்பவை எல்லாம் அழகாய் தெரிகிறது.

அழகு என்பது முழுக்க முழுக்க அகம் சார்ந்தது. தோற்றம் சார்ந்தது இல்லை. நம்ப மாட்டீர்கள் அல்லவா? சரி, அவரவரது அம்மாவும் அப்பாவும் அவரவருக்கு அழகுதானே? தாத்தா பாட்டி, அழகு இல்லையா? அசிங்கம் என்று சொல்லி விடுவீர்களா? உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ளுமா? பார்க்கப் பார்க்க எல்லாம் அழகாய் தெரியும் என்பது பொய். சிலரைப் பார்க்க பார்க்க எரிச்சலும் வரும். ஆக, அழகு, பிடித்தம் எல்லாமுமே அகம் சார்ந்த விசியம்.

ஆனால்,

ஆனால்,

ஆனால், ‘அழகு’ என்று ஒன்று இருக்கிறது. அது வியாபாரம் சொல்லும் ‘அழகு‘. நிறுவனங்கள் லாபத்திற்காக, உள்நோக்கத்திற்காக அழகு என்பதற்கான வரையரையை அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.

  1. வெள்ளை அல்லது சிவப்பாய் இருந்தால் அழகு
  2. கூந்தல் நீளமாக இருந்தால் அழகு
  3. இடுப்பு மட்டும் ஒல்லியாக இருந்தால் அழகு
  4. தாடை கூர்மையாக இருந்தால் அழகு
  5. மூக்கு சின்னதாக க்யூட்டாக இருந்தால் அழகு
  6. உதடு சற்று பெரிதாய் இருந்தால் அழகு
  7. புருவங்கள் திருத்தப்பட்டிருந்தால் அழகு
  8. கை கால்களில் ரோமங்கள் மழிக்கப்பட்டிருந்தால் அழகு
  9. நகங்கள் சற்று நீளமாகவும் பளபளப்பாகவும் நிறங்கள் பூசி இருந்தால் அழகு
  10. கூந்தல் வளைவு நெளிவாக இல்லாமல் நேராக இருந்தால் அழகு
  11. மினுமினுக்கும் ஆடை அனிந்திருந்தால் அழகு
  12. அதுவரை ஆடை மறைத்திருந்த மேனியை சற்று தெரியும்படி ஆடை அனிந்தால் அழகு
  13. ஆடையைக் குறைத்துக் கொண்டால் அழகு
  14. உதட்டில் சாயம் அப்பிக்கொண்டால் அழகு
  15. இத்யாதி இத்யாதி

மேலே சொன்ன எல்லாமும் வியாபார நோக்கம் மட்டுமே அன்றி வேறில்லை. இவை அனைத்தும் வெளிச்சாயம் மற்றும் புறம் சார்ந்த விசியங்கள். இவையனைத்தும் இருந்தும் சிலரை பலரை நமக்குப் பிடிக்காமல் போகும். அதன் பிறகு அவர்கள் நம் கண்களுக்கு அழகாய் தெரியமாட்டார்கள். பிறகு எது அழகு?

  1. அன்பாய் இருத்தல் அழகு
  2. ஆசையாய் கொடுத்தல் அழகு
  3. உண்மையாய் இருத்தல் அழகு
  4. சுத்தமாய் இருத்தல் அழகு
  5. ஆரோக்கியமாய் இருத்தல் அழகு
  6. கடமையை செய்தல் அழகு
  7. கட்டுப்பாடுடன் இருத்தல் அழகு
  8. பரிவாய் இருத்தல் அழகு
  9. இத்யாதி இத்யாதி

மேலே சொன்ன அனைத்தும் அகம் சார்ந்த விசியங்கள். இந்தப் பண்புடையவர்களின் முகம் எப்படி இருந்தாலும் நமக்குப் பிடிக்கும். இவை அனைத்தும் நம் தாத்தாப் பாட்டியிடம் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆனால்,

ஆனால்,

ஆனால், ‘மீடியா’ என்று ஒன்று இருக்கிறது. (டிவி, சினிமா, ரேடியோ, விளம்பரம், யுடியூப், எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்.) அவை பெண்களை எப்போதும் ஒப்பனை செய்து கொள்ளத்தூண்டிக்கொண்டே இருக்கிறது.

பெண்கள் மீதான காதலை வெளிப்படுத்தும் போது, அவளது புற அழகை வர்ணிக்காமல், அவளது அகப்பண்புகளை வர்ணித்து குண்நலன்களை வர்ணித்து எழுதிய சினிமாப்பாடல்களை பட்டியலிடுங்கள் பார்க்கலாம்? இருக்காது, இருக்கவே இருக்காது. பெண்களின் கண்ணில் தொடங்கி, அவளது நிழல் வரை எல்லாமும், நிறம், அளவு, தோற்றம் என்று உடல் உறுப்புகளை வர்ணித்தே இருக்கும்.

காதலன் காதலியை நினைத்துப் பாடும் பாட்டில் ஏன் அவளைக் காதலிக்கிறான் என்பதற்கான காரணத்தை தேடிப்பாருங்கள், அழகு என்ற ஒற்றைக்கூற்றைத் தவிர வேறு எதுவும் இருக்காது. ஆக, ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது மூன்று அல்லது நான்கு ஜான் இடத்தைதான். அதற்குள் இருப்பவற்றை கடித்துக் குதறியப்பிறகு, “நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு, அதுக்குதாண்டா வந்துபோறேன் டெய்லி வைனுசாப்புக்கு”ன்னு பாட்டு பாடுவார்கள்.

திருமணத்திற்குப்பிறகு ஏன் வாழ்க்கை கசக்கிறது? நாமக்கு காதலிக்க சொல்லித்தந்த சினிமா, அழகான பெண்களைத்தான் காதலிக்க சொல்லித் தந்தது. நமக்கு பிடித்தமான பெண்களை காதலிக்க சொல்லித்தரவில்லை. இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

கடந்த ஒரு நூற்றாண்டுகளாக வண்ன ஓவிய விளம்பரங்களும், புகைப்படங்களும் வந்தப்பிறகு, நாம் திரும்பும் திசையெல்லாம், விளம்பரப் பலகைகளிலும், டிவி விளம்பரங்களிலும், சினிமாக்களிலும், வெள்ளைத் தோல் பெண்களையே நடிக்க வைத்து நம் கண்களில், அவர்கள் மட்டுமே பட்டுக் கொண்டிருந்ததாலும், நமக்குப் பிடித்தமான நடிகரின் காதலியும் சினிமாக்களில் வெள்ளையாக இருந்து வந்ததாலும், நமக்கும் நம்மை அறியாமலே நம் மூலைக்குள் வெள்ளையாய் இருக்கும் பெண்களைத்தான் அழகிகள் என்றும் அவர்களே நாம் காதலிக்கத் தகுதியானவர்கள் என்றும் ஆழமாக நம்பவைத்திருக்கிறார்கள்.

‘அங்கவை சங்கவை’ என்று சிவாஜிபடத்தில் ஒரு காட்சி வரும். அதெல்லாம் நிற வன்மத்தின் உச்சம்.

இதன் மற்றோரு வியாபார வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்ததுதான் ‘Fair and Lovely’. கருப்பாக இருக்கும் பெண்களின் மனதில் அவர்கள் தாழ்வுமனப்பாண்மையோடுதான் இருக்கிறார்கள் என்று விளம்பரத்தில் காட்டி காட்டி, உண்மையிலேயே தாழ்வுமனப்பாண்மையை வரவழைத்துவிட்டார்கள். ஆண் வர்க்கமும், பொண்ணு செவப்பா எலுமிச்ச பழ கலர்ல இர்ந்தால்தான் கட்டிக்குவேன்னு அடம்பிடிக்க, வியாபார முதலைகளின் காட்டில் பணமழைதான்.

மற்றொரு பெரும் மோசடி ஒல்லியான தோற்றம். உடற் பருமனுடன் இருக்கும் எல்லோரையுமே ஒரு தாழ்வுமனப்பாண்மைக்கு தள்ளிக்கொண்டே இருக்க வேண்டியது. உடற்பருமனுடன் ஆரோக்கியமாக இருந்தவர்களே இல்லையா? ஒல்லியான தோற்றமுடைவர்கள் அனைவரும் நூறுவயது ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதீத உடற்பருமன் ஆபத்துதான். ஆனால், அதைக்கொண்டு வியாபராம் செய்ய லாபம் பார்க்க மக்களை பயமுறுத்த வேண்டிய அளவிற்கு லாப வெறியில் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களே உஷார்.

ஒரு பக்கம் பெருநிறுவனங்கள் சினிமா, சீரியல், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் அழகான பெண்களுக்கான வரையறையை நிறுத்தாமல் ஒளிபரப்பு செய்துகொண்டே இருக்கின்றன. பெண்களும் விட்டில் பூச்சியாய் அந்த ரசாயன சாயங்களை வாங்கி தேவையற்ற செலவை செய்து உடல்நலத்தையும் மனநலனையும் கெடுத்துக்கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம், அந்த சினிமா, சீரியல், விள்மபரங்கள், பார்க்கும் ஆண்கள் சிவப்பழகு பெண்களையே நாங்கள் சைட் அடிப்போம், காதலிப்போம், திருமணம் செய்வோம், கருப்பான பெண்களை கலாய்ப்போம் என்று பெண்களை ஒல்லியான தோற்றம், சிவப்பழகு இத்யாதி இத்யாதி அழகை நோக்கி ஓட வைக்கிறார்கள். பெண்களும் சலைக்காமல் ஓடுகிறார்கள்.

பெருநிறுவன முதலாளி ஆண்களுக்கு பண லாபம். சாதாரன மக்களில் இருக்கும் ஆசாமி ஆண்களுக்கு வென்னிறத்தோல் கொண்ட பெண்ணுறுப்புகள் லாபம். பெண்களுக்கு என்ன லாபம்?

அவள் பேரழகி என்ற சொற்பகால பட்டமா?

~

வா. சூர்யதேவன்

3.33 am டிசம்பர் 19, 2024

(கடைசிவரை படத்தைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை என்று நினைக்கவேண்டாம். படத்தைப்பாருங்கள். இந்தப் பதிவு முழுக்கவே அந்தப்படத்தில் இருப்பவை பற்றிதான். ஆனால் இப்படியே இல்லை)

Love Today❤️, Breakup Tomorrow💔, 2nd Love Day after Tomorrow❤️‍🩹

உங்களில் பலரும் படத்தைப் பார்த்திருப்பீர்கள். நெட்ஃபிலிக்ஸிலும் காணக்கிடைக்கிறது. படம் ஹிட். ப்ரதீப் ரங்கநாதன் செம நடிப்பு. ரஜினி பாராட்டினார். விஜய் ஃபோன் பண்ணினார். எல்லாம் ஓகே. எனக்கும் சிலபல கேள்விகள் உள்ளன. அதற்கு முன் படம் பேசும் அரசியலுக்கு வருவோம்.

நிகிதாவும் மாமாகுட்டியும் பாண்டிச்சேரியில் ரூம் போட்டிருந்தால்? ? ? ? ?” இதுதான் ப்ரதீப்’களால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத காட்சி. படம் இங்குதான் விறுவிறுப்புடன் வேகமெடுக்கிறது. சொல்லுங்க மாமாகுட்டி பாடலை போட்டு ப்ரதீப் படும் அவஸ்தைகளை துள்ளலாக காட்சிப்படுத்தியுள்ளார். ஏன் நமக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொள்கிறது? விரிவாகப் பார்ப்போம். இது ஒரு டீட்டெயில்டு கட்டுரை. அதனால் பல தலைப்புகள் உள்ளே வரும். பொறுமையாக வாசியுங்கள். Dots will connect.

மோனோகமி (Monogamy)

ஒருவனுக்கு ஒருத்தி என்று எளிமையாக சொல்லலாம். விரிவாக சொல்வதென்றால், ஒருவர் அவரது வாழ்நாளில் ஒரே ஒரு நபருடன் மட்டும் உடலாலும் மனதாலும் இணைந்து வாழ்வது. பறவைகளில் 95 விழுக்காடு மோனோகமி உறவுமுறையை உடையவை. ஆனால் பாலூட்டிகளில் வெறும் 5 விழுக்காடு மட்டுமே மோனோகமி உறவுமுறையை பின்பற்றுபவை. மனிதர்கள் ஏன் மோனோகமி வகையில் வரமாட்டார்கள்? உலகின் பல கலாச்சாரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறை இருந்தாலும் அது சமூகத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிற பறவைகள் போல இயற்கையாகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை நாம் பின்பற்றுவதில்லை. (வாய்ப்பு கிடைக்காத வரை அனைவருமே மோனோகமி எனலாம்.) பறவைகளிலும் socially monogamous என்ற உறவுமுறை இருக்கிறது. அதாவது வாழ்நாள் முழுக்க ஒரு துணையுடன் தான் வாழும். ஆனால் அதற்காக வேறு எந்த துணையையும் இணைசேர அனுமதிக்காது என்றில்லை. வேறு ஒரு பறவையுடன் இணை சேரும் ஆனால் அதுனோடு வாழாது. கூடு கட்டுவது, இறை தேடுவது, முட்டைகளை அடைகாப்பது என எல்லாமும் ஒரு பறவையோடு மட்டும்தான் இருக்கும். serial monogamy என்றொரு உறவுமுறை உள்ளது. ஒரு துணை இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்து விட்டாலோ அதன் பிறகு இன்னொரு துணையுடன் இணை சேர்வது. ஒரு நேரத்தில் ஒரு துணையுடன் மட்டுமே வாழ்வது.

மனிதர்கள் (மோனோகமி) ஒருதார உறவு கொள்பவர்களா?

“சிய்யான் நாலு பொண்டாட்டி கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ள” என்னும் போது அதில் எந்த வார்த்தையும் கசப்பது இல்லை. “ஆயா நாலு புருசன கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காங்க” என்னும் போது எவ்வளவு எதிர்மறை எண்ணங்கள் மனதில் எழுகின்றன. OCDயே தான். இங்கே ஆண்கள் எதிர்பார்ப்பது, நிறுவ நினைப்பது எல்லாமே female monogamy. அதாவது பெண்கள் தன் வாழ்நாளில் ஒருவனுடன் மட்டுமே இணை சேர வேண்டும். ஆண்கள் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் இணைசேரலாம். சிறிது தசாப்தத்திற்கு முன்பு வரை இரண்டு பொண்டாட்டி கலாச்சாரம் சாதாரணமாக இருந்தது. அது ஒரு கெத்து போல கட்டி வாழ்ந்தார்கள். இந்த இரண்டு பொண்டாட்டி, மூன்று பொண்டாட்டி கட்டிக்கொள்வது சாதாரணமாக இருந்ததற்கு சமூகக்காரணங்கள் சில உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு ஊரில் நூறு குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதில் நிச்சயம் பெண் குழந்தைகள்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் உயிரின் தேர்வு அவ்வாறானது. ஒரு உயிர் தனது இனத்தைக் காத்துக்கொள்ள எடுக்கும் தன்னிச்சையான முடிவு அது. உயிர் உருவாகும் போது அது ஆணாக வேண்டுமா அல்லது பெண்ணாக வேண்டுமா என்பது அதுவே எடுத்துக்கொள்ளும் முடிவு. பெரும்பாலும் பெண்ணாகத்தான் முடிவு எடுக்கும். அதற்கான உயிரியல் காரணம் இதோ.

ஒரு ஊரில் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஐந்து ஆண் குழந்தைகளும் ஐந்து பெண் குழந்தைகளும் பிறக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இனப்பெருக்கம் அந்த ஐந்து பெண் குழந்தைகள் மூலமாக மட்டுமே நிகழும். அந்த ஐந்து பெண் குழந்தைகளும் பருவமடைந்தப் பிறகு, குழந்தையை சுமப்பதற்கு தயராகிவிடுகிறார்கள். வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் அந்த ஐந்து பெண்களாலும் பத்து வருடங்களில் ஐம்பது குழந்தைகளைத்தான் பெற்றுதர முடியும். அதுவே ஒன்பது பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தால், பருவமடைந்த பிறகு வருடத்திற்கு ஒன்பது குழந்தைகள் வீதம் பத்து வருடங்களில் தொன்னூறு குழந்தைகளை பெற்று தர இயலும். இந்தக் கணக்கில்தான் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. (சரி நான் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம். கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் உங்களுக்குத்தெரிந்த யாருக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தது, அதில் எத்தனை ஆண் குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள் என்று விரல் விடுங்கள். நிச்சயமாக பெண் குழந்தைகளே அதிகம் பிறந்து இருப்பார்கள்.)

ஆண் குழந்தைகள் குறைந்த விகிதத்தில் பிறக்கின்றன. அதனால் ஆண் குழந்தைகள் அரிதாகப் பார்க்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்டது போல ஒரு ஆண் குழந்தைக்கு ஒன்பது பெண் குழந்தை என்றால் அவர்கள் பருவமடைந்தப் பிறகு ஒரு ஆணுக்கு ஒன்பது பொண்டாட்டி என்பதாகத்தான் ஆகும். பெண்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களுக்கான டிமாண்ட் குறைந்து அவர்கள் மீது ஒரு சலிப்பான எண்ணமும் ஏற்படும். அதனாலேயே பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகம் நிகழ்த்தப்பட்டு வந்தது. பாதுகாப்பு என்பதும் அதிகம் தேவைப்படுகிறது.

தற்போது இருப்பது போல கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அப்போது இல்லை. அதனால், பிறந்த பிறகே ஆணா பெண்ணா என்று தெரியும். பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கலைத்து வந்தனர். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் அரசு ஒரு சட்டத்தை இயற்றி கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிவதை சட்டவிரோதமாக்கியது. நல்ல விசியம்தான். ஆனால் அதே அரசாங்கம், பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை கட்டமைக்கும் நோக்கத்தில் ஏதேனும் செயல்படுகிறதா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும். சில நல்ல மனிதர்களால் பெண்களுக்கு கல்வி உரிமையும், ஓட்டு உரிமையும் கொண்டுவரப்பட்டது ஆறுதலானது. ஆனால், போதுமான பாதுகாப்பு என்பது இன்னும் ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

https://ourworldindata.org/sex-ratio-at-birth

மேலே உள்ள விளக்கப்படத்தில் பார்த்தால் 1950களில், 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் வீதம் பதிவாகியிருக்கும். அந்தக்காலகட்டத்தில் வீட்டுலேயே பிரசவம் நடந்தது அதிகம். எதன் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வந்தன என்று தெரியவில்லை. ஆனால், மருத்துவமனையில் தரவுகள் பதிவுசெய்வது 80, 90களில் இருந்துதான் முழுமையாகக் கொண்டுவரப்பட்டது. இன்று மருத்துவமனையில் மட்டுமே 100 விழுக்காடு பிரசவங்கள் நடைபெறுகின்றன. வீட்டில் மருத்துவர் துணையின்றி பிரசவம் பார்ப்பது குற்றமாகவே கருதப்படுகிறது. அதனால் மேலுள்ள விளக்கப்படத்தின் தரவுகளை இந்தியாவின் 90களில் இருந்து எடுத்துக்கொள்வோம். ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 107ல் இருந்து 110 வரை உயர்ந்திருக்கும். இந்தக்காலகட்டத்தில்தான் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கருகலைப்பு செய்வது அதிகரித்தது. அதைத்தொடர்ந்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்வது சட்டவிரோதம் எனக் கொண்டுவரப்பட்டது. பிறகு ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து தற்போது 107ல் வந்திருக்கிறது. இது இன்னமும் குறையும். நூறு பெண் குழந்தைகளுக்கு நூறுக்கும் குறைவான ஆண் குழந்தைகளே பிறக்கும் நிலை வரும். அப்போது மீண்டும் பெண்களுக்கான டிமேண்ட் குறையும். இதனை அரசு எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்று தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

இதுவரை பெண்களில் நிலை என்ன?

மனிதர்கள் குழுவாக வாழ்ந்து வந்த காலம் தொட்டே பிற இனக்குழுவின் பெண்களை காமத்திற்காக கடத்தி, கொன்று, விற்று, அடிமைப்படுத்தி, கொடுமை படுத்தி, பல இன்னல்களுக்கு ஆளாக்கினர். விளையாடி தீர்த்தனர். பிற இனக்குழு போக, அவரவர் குழுவிலும் தனியாக இருக்கும் பெண்களை ஆண்கள் தனியே விட்டுவைப்பதில்லை. ஆகவே பெண்களுக்கான சமூக பாதுகாப்பிற்காக அவளை இரண்டாம் தாரமாகவாவது ஒரு ஆணுக்கு கட்டி வைத்துவிட்டால் அவள் ஒரு ஆணுடைய உடைமை ஆகிவிடுவாள். வேற்று ஆண்கள் யாரும் அவளை சீண்ட மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்தனர். அவளை கட்டிக்கொண்டவன் அவளுக்கு வாழ்க்கை கொடுத்தது போல் உணர்வான். உணர்ந்தான். அவளைத் தன் உடமைப் போல நடத்தினான். உடமை என்ன உடமை, அடிமைதான். அதன் நீட்சியே பெண்களை குறிக்கும் போது அஃறிணையில் சாடுவது அம்மா வந்திச்சி, அக்கா சொன்னிச்சி, என்பதெல்லாம் இன்றும் தொடர்கிறது. இந்த பெண்ணடிமைத்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அது எப்படி அமைந்தது என்று விளக்குகிறேன் அவ்வளவுதான். பெண்களுக்கு சம்பாதித்து போடுவதாலும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாலுமே அவளை தன் அடிமையாகப்பார்த்தான். அவளை பிற ஆண்கள் தீண்டாதவாறு பார்த்துக்கொள்வான். ஒரு நிலத்தை, பொருளை பாதுகாப்பது போல தன் மனைவிகளையும் பாதுகாத்து வருவான். இந்நிலையில் தன் மனைவி இன்னொருவனுடன் தொடர்பில் இருக்கிறாள் என்பதை எந்தக்கணவனாலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. தான் பராமரிக்கும் ஒரு பொருளை இன்னொருவன் அனுபவிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள் அல்லவா? சமூகத்தில் கள்ளத்தொடர்பு என்பது எந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது என்பதை தினசரி நாளிதழ் வாசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். தினசரி ஒரு செய்தியாவது கள்ளத்தொடர்பு சம்மந்தப்பட்ட குற்றங்களில் நடந்திருக்கும். கள்ளத்தொடர்பு ஏற்படுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது கொலையிலோ, தற்கொலையிலோ, கொலை முயற்சியிலோ, தற்கொலை முயற்சியிலோ சென்று முடிவதன் காரணம் பெண்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் ‘பத்னி’ என்ற கூற்றுதான்.

வேற்று ஆள் தன்னுடைய மனைவியை புணர்ந்துவிட்டால் தன் மனைவிமீது வரும் அருவருப்பு, மாற்றான் மனைவியை தான் புணரும்போது தன்மீதோ அந்தப் பெண்மீதோ (புணரும் வரை) வருவதில்லை.

இது போக தன் மனைவியுடன் உறவுகொண்டு அதன்வழி வரும் குழந்தையையும் ஒரு பிண்டமாகவே பார்த்து வந்தான். பத்து பதினைந்து குழந்தைகள் இருக்கும்போது, அனைவரின் மீதும் அளவுகடந்த பாசம் வருவதில்லை. அந்த வாரிசுகளையும் ஒரு சுமையாகவே எண்ணுவர். இப்படி இருக்கும்போது அந்தப்பிள்ளைகளில் யாரேனும் தன்னுடைய வாரிசு இல்லை என்பது தெரியவந்தால்? யாருடைய வாரிசுக்கு நான் உழைத்துக்கொட்டுவது என்ற கோபமும் வரும்.

இப்படி இருக்க, பெண்களுக்கு மாப்பிளை கிடைப்பது அரிதாகி கிடைத்த மாப்பிளையின் கையில் பெண் பிள்ளைகளை பிடித்துக்கொடுப்பதற்கு பெண்ணுடன் சேர்த்து பணம், தங்கம், பொருள், காடு, மாடு, சொத்து, எல்லாத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது. ஆண் பிள்ளைகளின் மீதான மோகத்திற்கு இதுவும் ஒரு காரணம். வரதட்சனையாக ஒரு புடி புடித்துவிடலாம். நான்கு பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு நகை போட்டு கட்டிக்கொடுப்பதே வாழ்நாள் சாதனையாகும்.

பெண் குழந்தைகளை வளர்த்து கட்டிக்கொடுப்பது சவாலான அந்தக் காலத்தில் ஐந்து பெண்குழந்தைகள் பிறந்த வீட்டில் ஆறாவதும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதனை கள்ளிப்பால் ஊற்றிக்கொன்று விடுவர். இதற்கு பிஜிஎம் போட்டு ஹாரிஃபை பண்ண வேண்டாம். நானும் க்ளோரிஃபை பண்ணப்போவதில்லை. வத வதவென பிள்ளைகளை பெற்று தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறத்தல் என்பது மிக சாதாரண விசயமாக இருந்தது. பத்துப் பதினைந்து பிள்ளைகளில் ஒன்று இரண்டு தவறி விடுவதே சாதாரணமாக நிகழும் ஒன்றுதான். ஆதலால், பெண் சிசுக் கொலை என்பது தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. குழந்தையை கொல்வது பாவம் என்று தோன்றாதா? தோன்றாது! பிழைக்க வழியில்லாத இந்த உலகில் இன்னொரு உயிரையும் தன் விருப்பத்திற்கு கொண்டுவந்து கொடுமைகளுக்கு ஆளாக்குவதற்கு பதில் அதை இறக்கச் செய்வதே மேல் என்றும், தனக்கு மேலும் மேலும் சுமைகள் வேண்டாம் என்றும் கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றுவிடுவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் எந்தக் கவலையும் இல்லை. அதுவே இருப்பதை உண்டு வளர்ந்து, கிடைக்கும் வேலைய செய்து பிழைத்துக்கொள்ளும். இதனால்தான் எல்லாருக்கும் ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று ஆசை. சற்று கவலையின்றி இருக்கலாம்.

சரி இவையெல்லாம் அந்தக்காலம். தற்போது? பெண்கள் அவர்களை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். தன் பெற்றோர்களையும் சேர்த்து பார்த்துக்கொள்கிறார்கள். சிங்கில் மதர் என்று தானே பிள்ளையை வளர்க்கிறார்கள். பல நிறுவனங்களை உருவாக்கி நடத்துகிறார்கள். நாடாளுகிறார்கள். சிகரம் தொட்டு நிற்கிறார்கள். ஆனாலும், இன்னமும் சமூக பாதுகாப்பிற்காக ஒரு ஆணின் நிழலில் நிற்க வேண்டிய கதிதான் தொடர்கிறது. ஏனென்றால் எவனும் பட்டா போடவில்லை என்றால் தற்காலிகமாக நாம் கொட்டா போட்டுக்கொள்ளலாம் என்ற துடிப்பு ஒவ்வொரு ஆணிடமும் இருக்கிறது. யாருக்கும் சொந்தமில்லாத ஒரு பொருளை சிறிதுகாலம் தான் அனுபவித்துக்கொள்ளலாம் என்றுதான் எண்ணுவார்கள். காலத்திற்கும் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பமாட்டாரகள். இதெல்லாம் பெண்களுக்கும் ஆரம்பத்தில் புரியாது. சற்று லேட்டாகத்தான் புரியும்.

வரலாற்றில் ஆண்கள் எப்போதும் ஒரு தார உறவுமுறையில் வாழ்ந்ததில்லை. ஆனால், பெண்களை ஒரு தார உறவு முறையில் நிற்கவைக்க அனைத்து விதிகளையும் வகுத்து வந்துள்ளான். பத்தினி, கன்னி, சுமங்கலி, விதவை/கைம்பெண், தேவிடியா, ஐடம், மேட்டர், கேஸு, என்று எல்லா வார்த்தைகளும் ஒரு பெண்ணை பல ஆண்களுடன் பழகுவதைத் தடுக்கத்தான். ஆண்களுக்கு பெண்களின் மீது அக்கறை எல்லாம் இல்லை. இத்தனை விதிகளைப்போட்டு பாதுகாக்க. ஒரு ஆண் இன்னொரு ஆணிடமிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். அந்த ஆண் பிற ஆண்களிடம் இருந்து அதே பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். ஆக மொத்தம் திருடனும் கணவனும் ஆண்கள்தான். பலியாடு மட்டுமே பெண்கள்.

சமகாலக காதலி(யி)ன் கதி என்ன?

சமகாலத்தில் காதல், கல்யாணம், ரிலேசன்ஷிப் எல்லாம் எப்படி என்பது உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், அதன் சிக்கல்களை புரிந்து கொள்வதற்கு மேலே குறிப்பிட்ட விசியங்களை இவ்வளவு ரீவைண்ட் செய்ய வேண்டியுள்ளது. பையனோ பொண்ணோ நிறைய நபர்களுடன் பேசிப்பழக வேண்டும். கேரக்டர்கள் பலவிதம் உண்டு. அவர்களை படிப்பதன் மூலமாகவே வாழ்க்கையை கற்றுக்கொள்ள முடியும். ஒரு கேவலமான பிறவியையாவது சந்தித்து அதனுடன் ஓராண்டாவது வாழ்ந்துவிடுவீர்கள். அதன்பிறகு வாழ்க்கையில் நீங்கள் ஒரு கேவலமான செயலையும் சுயநினைவுடன் செய்ய மாட்டீர்கள்.

சரி பழகும் அத்தனை பேரையும் லவ்வர் என்று சொல்லிவிடலாமா? பெண்களுக்கு அப்படி சொல்ல விருப்பமில்லை என்றாலும், ஆண்களின் கொக்கியே ‘ஐ லவ் யு சொல்லு’, ‘லவ் பண்றன்னு சொல்லு’, ‘ஓகே சொல்லு’ என்பதாகத்தான் இருக்கிறது. அதாவது ஒருவனை முழுதாக தெரிந்துகொள்ளும் முன்பே கமிட்மெண்ட்டை கொடுக்க சொல்லி அடம்பிடிப்பது. “ஓய் செல்ஃபி எனக்கு எப்போ ஓகே சொல்ல போற?” என்று பின்னாடியே சுத்துவார்கள். எஸ்.கே ரசிகைகளும் ‘அவன் என்னை தொரத்தி தொரத்தி லவ் பண்ணினான் அதான் ஓகே சொன்னேன்’ என்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளவார்கள். உண்மையில் பையனோ பொண்ணோ ஒருவர் “சுத்த லூசு, மெண்டல், சைக்கோ” என என்று தெரிகிறதோ, அன்று முதல் அவனோ அவளோ எக்ஸ் (Ex) ஆகிவிடுகிறார்கள். பிறகு மீண்டும் ஜோடி தேடும் காட்சிகள் தொடரும். இது ஒரு லூப் போல போயிக் கொண்டே இருக்கும்.

சினிமாவில் பையனும் பொண்ணும் காதலிக்காமல், காதல், லவ் என்ற வார்த்தை இல்லாமல் பழகுவது போன்ற காட்சிகளோ, பாடல்களோ ரெஃபரென்ஸாகக்கூட இல்லை என்றே எண்ணுகிறேன். ( ஆட்டோகிராஃப் படத்தில் சேரனும் ஸ்னேகாவும் நண்பர்களாக இருப்பார்கள். குலு குலு படத்தின் அன்பரே பாடல் மட்டுமே ஞாபகத்திற்கு வருகிறது). அதனாலே ஒரு பெண் தன்னிடம் பேசினாலே லவ் என்று கற்பனை கட்டிக்கொள்கிறார்கள். காதலின்றி ஆணும் பெண்ணும் பழகுவது எவ்வளவு அழகானது என்று யார் இவர்களுக்கு சொல்லித்தருவது?

பள்ளி, கல்லூரி, அலுவலகம், தெரு, ஊர், பஸ், ட்ரெயின், மால், பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டா, ட்விட்டர், ஸ்னாப்ச்சேட், டெலிக்ராம், டிண்டர், அன்பே, டன் டன், இத்யாதி இத்யாதி இடங்களிலும் தளங்களிலும் ஆண்கள் பெண்களைத் துரத்திக்கொண்டுதான் இருப்பார்கள். பெண்கள் யாரிடமும் சிக்காமல் தப்பி வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலகீனமான இடம், காலம், சூழல், வார்த்தை, பாடல், பெயர் என்று எப்படியும் இருக்கும் அல்லவா? அதில் சிக்கிவிடுவார்கள். ஆண்களும் லேசுபட்ட ஜீவன்கள் இல்லை. பெரும்பாலும் பெண்கள் எளிதில் சிக்கிக் கொள்வர்.

ஒரு பையனை பிடிக்கும் என்பதற்கும் அவனோடு வாழவேண்டும் என்பதற்குமான இடைவெளி பெண்களின் பார்வையில் மைல் தூரமிருக்கும். ஆண்களின் பார்வையில் அது மயிர் தூரத்தில்கூட இல்லை. பிடித்துவிட்டால் வேறென்ன? வாழந்துவிட வேண்டியதுதானே என்பதாகத்தான் இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொண்டு வாழும் அளவிற்கு தான் என்ன தகுதியுடன் வாழ்கிறோம் என்பதையெல்லாம் சிறிதும் யோசிக்க மாட்டார்கள். படங்களில் வரும் காதல் காட்சிகளை மனதில் ஊறப்போட்டு அதன் பாதிப்பில் காதலித்தவர்கள்தான் இங்கு ஏறாளம். உண்மையில் ஒரு நபரின் மீது நல்ல எண்ணம் தோன்றி, அவரை வாழ்நாளில் தவறவிடக்கூடாது என்று உணர்ந்து, அவருக்கும் தன்மீது அதே எண்ணம் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தி, பிறகு காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ அரிதிலும் அரிதாகவே நடக்கிறது. சினிமாத்தனம் கலக்காத காதல் எங்கேனும் உண்டா என்ன?

Chatbox📱

மெசேஜ் செய்யும் போது ஒரு தைரியம் வரும். ரியால்டியில் அது வராது. மெசேஜ் செய்யும் போது ஒரு ஸ்பரிசம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான ஸ்பரிசம் வரும்.) மெசேஜ் செய்யும் போது ஒரு கோபம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான கோபம் வரும்.) ஏனென்றால் ச்சேட்டிங்கில் நாம் பேசுவது, பதில் வருவது எல்லாம் நம் மூளைக்குள் கற்பனையாக மறு உருவாக்கம் செய்யப்படுவது. அதனை நம் மூளை மிகைப்படுத்திக் கொண்டே வரும். communication என்பது முகபாவனை, வார்த்தையின் உச்சரிப்பு, வார்த்தை பயன்பாடு என எல்லாமும் சேர்ந்தது. இதில் வெறும் வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு நம் மூளை அதற்கு கற்பனையாக ஒரு முகபாவனையையும், உச்சரிப்பு தொனியையும் உருவாக்கும் பொழுது மறுமுனையில் இருந்து பேசுபவர் சொல்ல வருவதில் 50% விழுக்காடு நாம் தவறாகத்தான் உள்வாங்கிக்கொள்வோம். உதாரணமாக நீங்கள் சமீபத்தில் சேட்டிங்க் செய்தபோது, “I mean…” என்று நீங்களோ மற்றவரோ முன்பு சொன்னதையே நிச்சயம் விளக்கிக்கூற வேண்டிய சூழல் வந்திருக்கும். நேரில் பேசும்போது ஏற்படும் communication gaps மிகக்குறைவாக இருக்கும். சேட்டிங்கில் குழப்பம் இல்லாமல் இருக்காது. ரிலேஷன்சிப்பும் இப்படித்தான். மிக எளிதாக தவறாக உள்வாங்கிக்கொள்ளப்படும். ‘I feel low today 😞’ என்று ஒருவர் மெசேஜ் செய்தால் உடனே நாம் ஒரு 🥸 motivational speaker 🫵🏻 ஆகி சொற்பொழிவை நிகழ்த்த ஆரம்பித்துவிடுவோம். எதிரில் இருப்பவர் ‘hey tk it ez 🤪. Im alryt . Im jst not feel g8 2day. But thats 5n. Chill 🙃’ என்று சொல்வதற்குள் நாம் நிறைய பேசிருப்போம். இதுதான் சேட்பாக்ஸின் மிகப்பெரிய பிரச்சனை. ஒரு ஸ்மைலியும் ஓரிரு வார்த்தையும் நாம் நினைப்பதை அவ்வாறே மறுபக்கத்தில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்காது. மாறாக அவர் புரிந்துகொள்ளும்போது அது நாம் சொல்லிய விசியத்தின் அளவை, தன்மையை, அழுத்தத்தை கூட்டியோ குறைத்தோதான் வெளிப்படுத்தும்.

இது போக ஒருவரிடம் மெசேஜ்ஜில் பேசுவதற்கும் நேரில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் வரும். மெசேஜ்ஜில் பேசுவதை வைத்து ஒருவரின் குணங்களை எடைப்போடுவது, நல்லவர் வல்லவர் என நம்புவது நன்றல்லது. அப்படி பேசுபவர்களை மெசேஜ்ஜுடன் வைத்துக்கொள்வதே நன்று. நேரில் சந்திப்பதோ, வீட்டிற்கு அழைப்பதோ, பணம் அனுப்புவதோ, பாஸ்வேர்ட் கொடுப்பதோ, எல்லாமும் ரிஸ்க் நிறைந்ததுதான்.

மெளனம்

சமூக வலைதளங்களில் நண்பராகும் பலரும் சில காலம் நெருக்கமாக பேசிக்கொள்வர். யாரு என்ன என்பது போன்ற விசியங்களை பரிமாரிக்கொள்வர். பிறகு அந்த பேச்சுக்கள் அப்படியே நீர்த்துப்போகும். இது மிக மிக சாதாரணமான ஒன்று. மேலும் ஆன்லைனில் இருக்கும் நபர் நம்முடன் பேசவில்லை என்றால் அதற்கு ஆயிரம் இல்லை பத்தாயிரம் காரணம் இருக்கலாம். அதில் முதல் காரணம், நம்முடன் பேசுவது மட்டுமே அவருக்கு வேலை இல்லை என்பதுதான். நம்மைத் தவிற மற்ற தலைவலிகளும் அவருக்கு இருக்கக்கூடும் அல்லவா? இந்த யதார்த்தத்தைக்கூடப் புரிந்து கொள்ள நம் மூளை மறுக்கும். காரணம் அது கற்பனையில் ஒருவரை உருவாக்கியுள்ளது. நம் மூளை அவருக்கு ஒரு சராசரி மனிதர் செய்யும் வேலைகளை கற்பனைகூட செய்து பார்க்காது. சமீபத்தில் ஒரு வாக்கியம் படித்தேன். ‘People are not rude. They are just busy’. எவ்வளவு உண்மை இது. எதையும் சிந்திக்காமல் “reply me, reply pannu, saaptiya, enna panra, yen pesa matra, ennaachi, en mela kovama?, naan ethum thappa pesitana, antha msg nan pannala, awlothana?” என்று ஐம்பது நூறு மெசேஜ்களை அனுப்பித் தள்ளுவான். சனியன் இம்சகட்றானே என்று ப்ளாக் செய்தால், இன்னொரு ஐ.டி. ஓபன் பண்ணி மாறு வேடத்தில் வந்து உயிரெடுப்பான். மாப்ளைக்கு அவ்வளவு வெறி.

பெண்கள் பத்தினியாக இருக்க வேண்டுமா? வேண்டாமா?

இந்த விஷயத்தில் ஆண்களில் இரண்டு பிரிவினர் என் கண்களுக்குப் புலப்படுகிறார்கள்.

முதல் வகையினர், போலி புரட்சியாளர்கள். ‘பெண்கள் யாருடன் வேண்டுமனாலும் உறவு வைத்துக்கொள்ளட்டும்’, ‘அவள் உடல் அவளது சுதந்திரம்’, ‘உடலைப் பகிர்வதும் விற்பதும் அவளது உரிமை’, என்றெல்லாம் பெண்களின் சுதந்திரத்தை அவளது உடலைக் குறித்தே முன்வைப்பார்கள். இவர்கள் யாரும் பெண்களுக்கு காவலர்கள் இல்லை. காசு கொடுத்தால் பெண்கள் கிடைப்பார்கள் என்ற சூழல் வரும் போது, பெண்களின் உடலை காசு கொடுத்து அனுபவித்துக்கொள்ளலாம் என்ற பேரன்பு கொண்டவர்கள். பாவம் காசு சம்பாதிக்க பெண்கள் ஏன் படித்து வேலைக்குச் சென்று உழைக்க வேண்டும்? உடலை விற்றாலே காசு வரும் என்றால் இவர்களின் வாழ்க்கை சற்று சுலபம்தானே. பெண்கள் ‘தான் ஒருவனுடந்தான் வாழ்வேன், அந்த ஒருவனுடன் தான் புணர்வேன்’ என்பது இவ்வகை ஆண்களுக்கு மிகவும் கசக்கும். எனவே அதை பழமைவாதம் என்றும், பெண்ணடிமைத்தனம் என்றும் பெரியாருக்கே லெக்சர் எடுப்பதுபோல பேசுவார்கள். பெண்களின் மோனோகமியை எதிர்ப்பவர்கள். புரட்சியாளர்கள் போல் வேடமிடும் இவ்வகை ஆண்களுக்கு பெண்களின் மீது அளவற்ற அன்பொன்றும் இல்லை. அடக்கமுடியாத ஆசைதான் அவர்களை அப்படி பேச வைக்கிறது. இந்தக்கசாப்புக் கடைக்காரர்களிடமும் ஆடுகள் தானாக வந்து சிக்காமலில்லை.

இரண்டாம் வகையினர், கலாச்சாரக் காவலர்கள். பெண்களை பத்தினியாகத்தான் இருக்கவேண்டும் என்று நிர்பந்திப்பவர்கள். அதன் காரணமாக பெண்களை யாருடனும் பழக அனுமதிக்க மாட்டார்கள். வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பெண்களின் வாழ்க்கையில் கல்யாணமும் குழந்தையை வளர்ப்பதும் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் ஊறியவர்கள். சமூகத்திலும் இதனையே முன் வைப்பார்கள். கலாச்சாரம், பண்பாடு, மதநெறிகள், குடும்ப மானம், கெளரவம், வம்ச வீரம், என சகலத்தையும் துணைக்கு வைத்துக்கொள்வார்கள். பெண்களின் நலனில் அக்கரை காட்டுவதாக சொல்லிக்கொண்டு அவர்களின் சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி பெண்களுக்கென்று சொல்லி ஒரு மிருதுவான மெத்தை செய்து அதில் இவர்களும் படுத்து அதே பெண்களை புணர்வார்கள். கன்னித்தன்மையின் மீது ஆண்கள் அடுக்கும் இந்த எண்ணற்ற கூற்றுகள் யாவும் ஆண்களுக்கு பொருந்தாது இருப்பதுதான் ஆச்சர்யம். இவர்களின் முழு நோக்கமும், ஒரு பெண் திருமணம் வரை கன்னித்தன்மையோடும் திருமணத்திற்குப் பிறகு பத்தினியாகவும் இருந்துவிட்டால் போதும், ‘அவள் படித்து என்ன சாதிக்கப்போகிறாள்?’, ‘வேலைக்கு சென்று யாரைக்காப்பாற்றப் போகிறாள்?’, என்ற கீழ்நிலையிலே சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள். பெண்களை ஆட்டிவைக்கவும் இந்தக்கூற்றுகள் வசதியாக இருக்கின்றன. மற்றவருடன் பழகுவதையே விரும்பாத பொசசிவ் பேர்வழிகளுடன் காலந்தள்ளுவது சற்று கடினமான விசயம்தான். ஆனால், மற்றவருடன் பேசுவதை பழகுவதை நம்பி அனுமதிக்கும் அளவிற்கு யாரும் யோக்கியஸ்தன் இல்லை என்பது பெண்களுக்கும் நன்கு தெரியும். (அத்துமீறுவது ஆண்கள் மட்டும்தான் என்ற முடிவிற்கு நான் வரவில்லை. அதுதான் உண்மை. பெரும்பாலான தருணங்களில் ஆண்கள்தான் அத்துமீறுகிறார்கள். பெண்களும் ஆங்காங்கே ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக விதவிதமாக கள்ளத்தொடர்பில் தூள் கிளப்பி வருகிறார்கள்.)

இருவகையினருமே பெண்கள் ஏன் கன்னித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்கிற அடிப்படையை புரிந்துக்கொள்ளாதவர்கள்.

ஒன்று சமூகக்காரணம். மனிதன் ஒரு சமூக விலங்கு. அவன் தனியே வாழ்பவன் அல்ல. குடும்பமாகவும் சமூகமாகவும் உறவாடுவதிலேயே மனதில் அமைதியைக் காண்பவன். பெண்ணுக்கும் அதேதான். பிற மனிதர்களிடம் பேசி உறவாடுவதிலே தன்னை அறிந்துக்கொள்ளக்கூடியவர்கள். ஒரு ஆணும் பெண்ணும் முறையே ஒருவருக்கு ஒருவர் உண்மையாக குடும்பமாக வாழவில்லை என்றால் அவர்களது குடும்பத்திற்கு சமூகத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காது. இதில் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமல்ல, அவர்களது வழிவந்த குழந்தைகளும்தான். சுற்றம் யாவும் கீழாக நடத்தும் சூழ்நிலையில் வளரும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது ஆணும் பெண்ணும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை பின்பற்ற வேண்டும். (சைக்கோ, டாக்ஸிக், சந்தேகப்பேர்வழி, துணையுடன் வாழவேண்டும் என்றில்லை. நல்ல குடும்ப உறவில் இருக்கும் போது மனசஞ்சலங்களை தவிர்க்கவேண்டும் என்கிறேன்.)

மற்றொன்று உயிரியல் காரணம். இரு உயிர் சேர்ந்து மூன்றாவதாக ஒரு உயிரை உருவாக்குவதே உடலுறவு. இன்னொரு உயிரை இப்பூமிக்கு கொண்டுவருபவர்கள், அவ்வுயிரை தன்னால் இயன்றவரை துயரத்தில் இருந்தும் ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றி ஆளாக்கிவிட வேண்டும். ஒரு பெண் பல ஆண்களுடன் உறவில் இருந்துவந்தால் அவளால் ஒரு அழகான, லட்சனமான குழந்தையை பெற்றெடுக்க இயலாது. உடலுறவு முதல் கருவுற்று பிரசவித்து தாய்பாலூட்டி வளர்க்கும் வரை ஒரு பெண் எந்த மனநிலையில் இருக்கிறாளோ அதுதான் குழந்தையின் குணமாக மாறும். உதாரணத்திற்கு ஒரு பெண் தான் உடலுறவு கொண்டது முதல் பேறு காலம் வரை கொடுமைகளுக்கு ஆளாகாமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்து வருகிறாள் என்றால் அவளது குழந்தை அழகாகவும் லட்சனமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். இதுவே அவளை பல கொடுமைகளுக்கு ஆளாக்கி, துன்புறுத்தி, அல்லது அவளே பெரும் குழப்பத்திலும் மனம் போன போக்கிலும் வாழ்கிறாள், குழந்தையை ஒரு சுமையாக எண்ணுகிறாள் என்றால் அந்தக்குழந்தை அவலட்சனமாகவும், விகாரமாகவும், குறைபாடுகளுடனும் பிறக்கும். ஒரு உயிர் உருவாகும் போது அதை சுமக்கும் உயிரும் உடலும் மனதும் இன்புற்றிருக்க வேண்டும். குழப்பத்திலும், விரக்தியிலும், துயரத்திலும் பிறத்தல் நன்றன்று.

அப்படியானால், பெண்கள் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் புணர்ந்துக்கொண்டு, திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆணுடன் மட்டும் வாழ்ந்து நல்லபடியாக குழந்தைய பெற்றுக்கொண்டு. பிறகு மீண்டும் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாமா என்று கேட்கலாம். அதுதான் இல்லை. ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால் அதில் அனைவருமே புத்திசாலியாக இருப்பது அரிதே. முதல் குழந்தை அறிவாளியாக இருக்கும், இரண்டாவது குழந்தை சற்று மந்தமாக இருக்கும். அல்லது முதல் குழந்தை மந்தமாக இருக்கும், இரண்டாவது குழந்தை புத்திசாலியாக இருக்கும். இதற்குக் காரணம் பெற்றோர்களின் மனநிலையே. முதல் கர்ப்பம் திருமணம் முடிந்த முதல் வருடமே ஏற்படும்போது, பெண்ணுக்கு கணவனின் குடும்பம், இல்லற வாழ்க்கை எல்லாம் புதிதாக இருக்கும். கொடுமைகார ஆட்கள் இல்லை என்றால், கர்பகாலம் இனிமையாக அமையும், குழந்தையும் ஆரோக்யமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். பிறகு கனவன் மனைவி சண்டைகள் ஆரம்பித்து முத்தி, வாழ்க்கையை வெறுத்து, குழந்தையை வளர்க்கும் பாரம் தெரிந்தப்பிறகு ஒரு கர்ப்பம் நிகழும்பொழுது, முதல் குழந்தைக்கு இருந்த அதே ஆர்வமும் குதூகலமும் இரண்டாவது குழந்தைக்கு இருக்காது. எனவே இரண்டாவது குழந்தை சற்று புத்திக்கூர்மை குறைவாகப் பிறக்கும். பலதார உறவுகளில் எந்த மனக்குழப்பமும் இருக்காது என்று யார் உத்தரவாதம் தரமுடியும்? இந்த வாதங்கள் ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். நம் மன ஓட்டங்கள் நாளுக்கு நாள் மாறும், அந்தப்பொழுதில் ஒரு குழந்தை உருவாகும் போது அது அந்த குணங்களுடனே பிறக்கும்.

கன்னித்தன்மையுடனும் பத்தினியாகவும் இருப்பது ஒரு பொறுப்பு. அதன் அர்த்தமறிந்து பின்விளைவுகளைப் புரிந்து அந்தப்பொறுப்புகளை ஏற்க வேண்டும். ஆண்கள் வரைவதற்காகவே எந்தக்கோட்டையும் தாண்டாமல் இருக்கவேண்டிய அவசியமில்லை. வரைமுறைகளின் அர்த்தமறிந்து அதனை ஏற்றுக்கொண்டால் போதுமானது.

ப்ரதீப் காட்சிப்படுத்தும் (நிகிதா) பெண்கள்

நிகிதா ரெவியை தம்பி என்றுதான் அறிமுகப்படுத்தினாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவளே பின் அதை மாற்றிப்பேசுவதாக காட்சி அமைத்திருக்கிறார் திரு.உத்தமன் ப்ரதீப். நம் மூளை நாம் பேசுவதை அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. சிலசில வார்த்தைகள் எண்கள் இடங்கள் அளவுகளை நம் மூளை தவறாகத்தான் பதிவேற்றிக்கொள்ளும். அது நாம் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம் அல்லது பிறர் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இதை நிகிதாவின் கேரக்டரை டேமேஜ் செய்வதாக, அவள் பச்சையாக பொய் சொல்கிறாள் என்று காட்சி அமைத்துள்ளார் உத்தமன் ப்ரதீப்.

சொல்லுங்க மாமாகுட்டிக்கு துள்ளலாக பாடல் அமைத்த திரு.உத்தமன் ப்ரதீப்களால், ட்ரைபல் ஃபோட்டோஸ் கேட்டு அலைந்ததற்கு ஒரு பாட்டுகூட போடமுடியாமல் போனதுதான் ஆச்சர்யமே. நிகிதாவின் இன்ஸ்டாகிராமில் இருக்கும் மெசேஜ்களை படிக்கும்போது வரும் விஷுவலில் பல ஆண்களை காட்டி இருப்பார் உத்தமன் ப்ரதீப். சாப்டியா, சாப்டியா, சாப்டியா என என்னேரமும் அக்கரைக்கொள்ளும் ஆண்கள் முதல், கெளதம் வாசுதேவ் மேனன் பானியில் வரும் போலி இன்டெலக்சுவல் உமனைசர் வரை மிக நேர்த்தியாக காட்சி அமைத்த உத்தமன் ப்ரதீப்பும் அவர்களில் ஒருவர்தான். பலருக்கும் கொக்கி போட்டு வைத்திருப்பவர். மற்ற ஆண்கள் நிகிதாவிடம் நெருங்க முயற்சிப்பது க்ரின்ஜ் என்றால் இவர் மற்ற பெண்களிடம் பழக முயற்சிப்பதற்கு பெயர் என்ன?

நிகிதாவின் ஆபாச வீடியோ வந்தப்பிறகு யாரும் அவளை நம்ப மாட்டர்கள். உத்தமன் ப்ரதீப் மட்டும் அவளை நம்புவான். எப்படி? பாண்டிச்சேரி போய்விட்டு வந்ததையே சந்தேகப்பட்டவன், இப்போது எப்படி வீடியோவைக்கண்டப் பிறகும் நிகிதாவை நம்புகிறான்? மாமரத்தைக் கண்டதாலா? ராதிகா கண்திறந்துவிட்டதாலா? உத்தமன் ப்ரதீப் போன்ற ஆவரேஜ் ஆண்களுக்கு நிகிதாவே அதிகம். அதனால் இவன் பெருந்தன்மையாக நிகிதாவை ஏற்றுக்கொள்ளும்படியான காட்சியமைக்க வேண்டுமானால் அவளை அசிங்கமாகக் காட்ட வேண்டும். அங்குதான் நிகிதாவின் கற்பை துணைக்கு வைத்துக்கொள்கிறார் புத்திசாலி உத்தமன் ப்ரதீப்.

ஆண்களிடம் இருக்கும் காஜி மனப்பான்மையை நார்மலைஸ் செய்வதே தவறு, அதிலும் இறுதிகட்ட காட்சியில் நிகிதாவை அவளது அப்பாவே நம்பாதது போலவும், ஆனால் உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப் அவர்கள் நிகிதாவை நம்புவதாக காட்சி அமைத்திருக்கிறார். ஏன் உத்தமன் ப்ரதீப் அவர்களின் ஆபாச வீடியோ வைரலாகி நிகிதா அதே உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாதா? அப்படி ஒரு காட்சி, ஆம்பள ஐட்டத்தை பெண் ஒருத்தி ஏற்றுக்கொள்வது போல ஒரு காட்சி இருந்திருந்தால் அது அனைவருக்குமே (பெண்கள் உட்பட) உறுத்தும், கசக்கும், உமட்டும், ஒவ்வாது, படம் ஓடாது. ஆனால் கெட்டுப்போனதாக நம்பப்படும் நிகிதாவை ப்ரதீப்கள் நம்புவதாக காட்சி அமைத்தால் படம் ஹிட். பெண்களை மட்டப்படுத்தி ஆண்களை க்ளோரிஃபை செய்யும் ஹிட் ஃபார்முலாவை முன்பு ரஜினி காப்பாற்றி வந்தார், பிறகு விஜய், தனுஷ், சிம்பு, சிவா கார்த்திகேயன், இவர்களின் வரிசையில் தற்போது திரு.உத்தமன் ப்ரதீப் கற்று தேர்ந்து மெரிட்டில் தொழிலுக்கு வந்துள்ளார். இன்னும் நிறைய லெக்சர் ப்ராஜெக்டுகள் இவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். உத்தமன் ப்ரதீப் படத்தில் ஹீரோ, நிஜத்தில் அவர் நல்ல தரமான பிஸ்னஸ்மேன். க்ரியேட்டிவ் பிஸ்னஸ்மேன். நல்லவன் கெட்டவன் என வகைமைக்குள் வராத லாபம் பார்க்கும், வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்ட இண்டெலெக்சுவல் பிஸ்னஸ்மேன்.

கிட்டதட்ட அனைவருமே லவ் டுடேவை ரசித்துக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது எனக்கு மட்டும் இதில் இருக்கும் ஆபத்து கண்ணுக்கு தெரிந்தது. நண்பர்களுடன் கலந்துரையாடும் போது இதில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் என்ஜாய் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. என்னிடம், “ஒரு படத்தை இவ்வளவு சீரியசாக பார்க்காதே, இது வெறும் ஒரு படம்”, “ஏன் ஹுமரெஸ்சாவே பாக்க மாட்ற?”, என்றெல்லாம் நண்பர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் யதார்த்தில், சினிமா நம்மையும் நம் வாழ்வையும் பலமாக பாதிக்கிறது. எம்.ஜி.ஆர், கலைஞர், என சினிமாவில் வந்தவர்கள் நாடாளும் வரை செல்கிறார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்க வேண்டும் என்றால், சினிமாவில் சீரியஸான விசயங்களை சீரியஸாகவும், ஜாலியான விசியங்களை ஜாலியாகவும் காட்சிபடுத்த வேண்டும். யதார்தத்தில் சீரியஸான விசயங்களை சினிமாவில் ஜாலியாக காட்டுவதன் மூலம் பல அபத்தங்களை நார்மலைஸ் செய்வதும் க்ளோரிஃபை செய்வதும் பெரும் ஆபத்தானது. அதை மிகக்கவனமாக கையாள வேண்டும். என்னைப்போலவே RJ ஆனந்தி அவர்களும் இப்படத்தில் இருக்கும் அபத்தங்களை எடுத்துரைத்தார். இன்னும் பலரும் இந்தப்படத்தில் இருக்கும் அபத்தங்களை புரிந்திருக்கக்கூடும், அவர்களும் வாய்திறந்து பேச வேண்டும். கலந்துரையாடி களையவேண்டிய தேவை இதில் இருக்கிறது.

‘ரிலேஷன்சிப் பற்றி அடுத்த தலைமுறைக்கு நாம் நல்லவிதமாக சொல்லிக்கொடுக்கிறோம்’ என்ற பொறுப்பை நான் சினிமாக்காரர்களிடம் எதிர்பார்க்கவில்லை. பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம் என யாருமே அதை கையில் எடுக்காமல் இருப்பதால்தான் ஆண் பெண் உறவுகளைப் பற்றி சினிமா பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சினிமா ஒரு வணிகம். இங்கு நல்லதை எதிர்பார்க்க முடியாது. எது வியாபார ரீதியாக வெற்றி அடையுமோ அதைத்தான் நாம் பார்க்க நேரிடுகிறது.

பின்னூட்டம் முக்கியம் அன்பர்களே. உரையாடி அறியாமை களைவோம்.

Surya devan V —— 02.01.2023

அம்மு (Ammu) 2022 மற்றும் The Great Indian Kitchen 2021

அம்மு – Ammu (2022)

அக்டோபர் மாதம் அமேசான் ப்ரைமில் வெளிவந்த அம்மு படம், சத்தமில்லாமல் பல மெளனங்களை உடைத்தது என்றே சொல்லலாம். உடைபட்ட உடன் மெளனங்கள் உரக்கப் பேசின என எண்ண வேண்டாம். அதுதான் நடக்கவில்லை. சில மெளனங்களை உடைக்கும் சத்தம் அதிகமாக இருக்கும். சில மெளனங்கள் உடைந்த பிறகு வரும் குரலின் சத்தம் அதிகமாக இருக்கும். சில சமயம் அந்த குரலின் கனம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தப் படம் சற்று வித்தியாசமாக இருந்தது. இது ஒரு பெரும் மெளனத்தை உடைத்தது. உடைக்கும் சத்தமும் யாருக்கும் கேட்கவில்லை. உடைத்த பிறகும் எந்த சத்தமும் எழவில்லை. ஆம் அப்படி ஒரு நிசப்தமான பேரசைவுதான் அம்மு. 

இந்தப் படத்தில் வரும் அம்முவின் கணவர் பெயர் ரவி. ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ரவியுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தான் எந்தளவிலான முரடன் என்பதை சாட்சிப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தத்ரூபமான கதாப்பாத்திரம் ரவி. அதை ஏற்று நடித்த நவின் சந்திரா கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். யதார்த்தத்தில் ஆண்கள் அனைவரும் ரவி அளவிற்கு கொடூரக்காரர்கள் இல்லை என்றாலும் சில சில இடங்களில் ரவியுடன் ஒத்துப்போகாமல் இருக்க முடியாது. நிஜத்தில் பல ரவி’க்களும் இங்கு உள்ளனர்.

போலீஸ் ரவி வில்லன். திருடன் பிரபு ஹீரோ. பிரபு கதாப்பாத்திரத்தில் பாபி சிம்மா நடித்துள்ளார். ஜிகர்தண்டா, இறைவி படங்களுக்குப்பிறகு அவரது நல்ல நடிப்பை அம்முவில் காணலாம். தான் செய்த எந்தத் தப்பிற்கும் சிறிதும் வருந்தாத ரவி மிருகமாகவும் தான் செய்த ஒரே ஒரு தவறுக்கு தினந்தினம் மனம் வருந்தும் பிரபு நல்லவனாகவும் தெரிகிறார்கள். ரவி பிரபுவை அடிக்கும் போது பிரபு சொல்லும் ஒரு வசனம், ‘ஆனா நீங்க சூப்பர் சார்! யாரை அடிச்சா திருப்பி அடிக்க மாட்டாங்களோ கரெக்டா செலெக்ட் பண்ணி அடிக்றீங்க சார்.’ என்று சொல்லிவிட்டு அம்முவை நோக்கி, ‘மேடம் கரெக்டா?’ என்பான். இதுதான் உண்மையும் கூட. ரவி’களுக்கு யாரை அடிக்க முடியும் யாரால் நம்மை திருப்பி அடிக்க முடியாது என்பதெல்லம் அத்துபடி. மனதில் இருக்கும் வன்மத்தை பெண்கள் மீது காட்டுவதை மிக மிக எளிதாக்கிக் கொள்வார்கள். ரக்கட் பாய் மொமெண்ட்டுகள் நிறையவே இருக்கும். ஆனால் அது பெண்கள் மீது மட்டுமே இருக்கும்.

அம்மு படத்தின் இயக்குநர் சாருகேஷ் சேகர். நிஜத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்களை மிக நேர்த்தியாக காட்சிபடுத்தியுள்ளார். ஆனால், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதை மட்டும் நிஜத்தில் நடப்பது போல் யோசிக்காமல் சினிமாத்தனமாக தீர்வை வைத்துள்ளார். படத்தின் முதல் பாதி அப்பட்டமான நிஜ வாழ்வியலைக் கண்முன்னே நிறுத்திவிட்டு. இரண்டாம் பாதியை வழக்கமான வெற்றித் திரைப்படங்களின் பேட்டர்னில் திரைக்கதை அமைத்துள்ளார். அம்மு படத்தின் இறுதிக்கட்ட திரைக்கதையை zootopia (2016) என்னும் அனிமேஷன் படத்தில் இருந்து தழுவி எடுத்துள்ளார் என்பதை மறுக்கமுடியாது.

அம்மு. அம்மு ஒரு சராசரி இந்தியப் பெண் என்று சொல்லலாம். உலகம் தெரியாதவள். ரவிதான் அவளுக்கு உலகம் என நம்பிக்கொண்டிருப்பவள். ரவியை விட்டுவிட்டால் என்ன செய்வதென்றே தெரியாதவள். நாள் முழுக்க ரவியையும் தன் வீட்டையுமே சிந்தனையாய்க் கொண்டவள். அக்கம் பக்கத்தினரிடம் தன் மனதைப் பேசி ஆறுதல் அடைந்து கொள்ளும் இயல்பான பெண். ஒரு கொடூர ஆணிடம் சிக்கித் தவிக்கிறாள். இதற்கிடையில் தான் கருவுற்றால், குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று திணறுகிறாள். இவள் அனுபவிக்கும் வதைகளே போதும். இந்தப் போராட்டத்தில் இன்னொரு உயிரைக்கொண்டு வர வேண்டாம் என்று எண்ணுகிறாள். ஆனால் நிஜம் வேறு. ஓரிரு வருடத்தில் ஒரு குழந்தையும் அடுத்த மூன்று நான்கு வருடத்தில் இன்னொரு குழந்தையும் பிறந்துவிடும். சுற்றி சுற்றி அழுகையும், முதுகை ஒடிக்கும் வீட்டு வேலையும், சமையல் வாடையுமாய் ஆறேழு ஆண்டுகள் ஓடுவதே தெரியாமல் போய்விடும். இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றால்தால்தான் மதிய வேளையில் அப்பாடா என்று ஜன்னல் திரையை இழுத்து வெளிச்சத்தை மறைத்துவிட்டு அலுப்பில் பாதி தீர ஒரு உறக்கம் போட முடியும். இதில் கணவனின் அறச்சீற்றங்கள், நாத்தனாரின் நாரதர் பணிகள், மாமியாரின் புதுப்புது அர்த்தங்கள், மாமனாரின் லேட்டஸ்ட் ரூல்ஸ்கள், என டிசைன் டிசைனாக சவால்கள் வந்தவண்ணம் இருக்கும். அம்மு நிஜமானவள். அம்முவின் பிரச்சனைகளும் நிஜமானவை. அம்முவிற்கான தீர்வு மட்டும் கற்பனையானது வருத்தம்.

தி கிரேட் இந்தியன் கிட்சன் – The great Indian kitchen (2021)

சென்ற வருட தொடக்கத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் இதை மறு உருவாக்கம் செய்கிறார்கள் என்று அறிகிறேன்.

சமையல் தெரியாத பெண்கள் இன்று ஏராளம். அது தவறு இல்லை. சமையலின் முக்கியத்துவம் தெரியாததில்தான் பிரச்சனை. சமைக்க வராத பெண்களுக்கு சமையலின்மீது ஒரு பெருங்கோபம் இருக்கும். அதை யார்மீது காட்டுவது என்று தெரியாது. அவர்களுக்கு இந்தப்படம் ஒரு சிறந்தப் படமாகத் தெரியும். அதுதான் ஆபத்து. படத்தின் பேசுபொருளாக இருப்பது ஆணாதிக்கம் என்பது போல் தெரிந்தாலும் உண்மையில் பேசுபொருள் ‘உழைப்பு’. யார் எங்கு என்ன உழைக்கிறார்கள் என்பதே அடிநாதம். சமைக்க வரவில்லை அல்லது பிடிக்கவில்லை என்பதற்கு தீர்வு ஒரு சமையல் தெரிந்த வேலையாள். அது போதும். மருமகளேதான் சமைக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. சமையலுக்கு ஆள் போட வேண்டும் என்றால் மருமகள் அதற்கேற்றார்போல் சம்பாதிக்கவும் வேண்டும். முப்பதாயிரம் நாப்பதாயிரம் என சம்பளம் வாங்கும் பெண் சுலபமாக ஒரு பணியாளை சமையலுக்கு வைத்துக்கொள்ளலாம். வேலைக்கும் போக மாட்டேன், டான்ஸ் க்ளாஸ் போவேன், அரசு வேலைத்தேர்வுகளுக்கு படிக்கிறேன் பேர்வழி தன் பொறுப்புகளில் இருந்து நழுவிக்கொள்ள ஏதுவாக ஆணாதிக்கத்தை சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இல்லை.

ஒரு கற்பனை பரிமாணத்திற்குள் செல்வோம். பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்று வீடு திரும்புகிறார்கள். ஆண்கள் அனைவரும் வீட்டை பார்த்துக் கொள்கிறார்கள். ஆண்களும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும். பெண்களும் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் சமாளிக்க வேண்டும்.

படத்தில் வரும் மாமனார் கதாப்பாத்திரம் காலத்துக்கும் உழைத்து ஓய்ந்துவிட்டார். அவர் சேர்த்து வைத்த சொத்துக்களை பராமரிப்பதற்கே மருமகளுக்கு அலுப்பாய் இருக்கிறது. அத்தனையையும் சேர்ப்பதற்கு மாமனாரும் பாடுபட்டிருப்பார். மாமனார் வெளியே செல்லும் போதெல்லாம் மாமியார்தான் வந்து செருப்பை எடுத்து தருவார். தினமும் காலையில் பல்விளக்க ப்ரஷில் பேஸ்ட் வைத்து தருவார். இப்படி கணவனை தாங்கிக்கொண்டிருக்கும் மாமியார் ஊருக்கு சென்றுவிட்டப்பிறகு அந்தப் பணிகளை மருமகள் செய்வது போல் ஆகும். ஒரு கிழவனுக்கு பேஸ்ட் எடுத்து கொடுப்பதும் செருப்பு எடுத்து கொடுப்பதுமா இந்த நவயுவதிகளின் ஆசை கனவு லட்சியம்? அந்த மாமனார் பேஸ்ட் கேட்பார் ஆனால் செருப்பை அவரே எடுத்து போட்டுக்கொள்வார். மருமகளிடம் கேட்க மாட்டார். தனக்கு வைக்கும் சோற்றை விறகடுப்பில் வைக்கச் சொல்வார். அது அவரது விருப்பம். ஆனால் மருமகளுக்கு அது கடினம். கேஸ் அடுப்பு என்றால் சற்று எளிதாக முடியும் வேலை. விறகடுப்பில் கண்கள் எரிய சமைக்கவேண்டும்.

சரி இப்படி வைத்துக் கொள்வோம். இதே கதையில் வரும் கணவனும் மாமனாரும் அவர்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ள அவர்களது தினசரிகளில் யார் யாரையெல்லாம் எதிர்கொள்கிறார்கள், எதையெல்லாம் எதிர்கொள்கிறார்கள் என்ற அவர்களது சவால்களையும் பிரதான காட்சிகளாகக் காட்டிவிட்டு, அவ்வப்போது மருமகள் கோரும் வசதிகள், ஆடைகள், ஊர்சுத்தல்கள், தீனிகள், நகைகள், செளகரியங்கள் யாவற்றையும் காட்சிப்படுத்தினால், மருமகள்மீது அனைவருக்கும் கோபம்தான் வரும். எவ்வளவு பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது இதில் இது தேவைதானா என்று சலிப்பார்கள்.

இந்தப்படத்தின் இயக்குநர் ஜோ பேபி. சமையலறையில் நடக்கும் அலுப்பூட்டும் வேலைகளை மிகத்துல்லியமாக படமாக்கியுள்ளார். ஆனால், அவராலும் முதல் பாதிக்கு மேல் கதையை நகர்த்த முடியாமல் திசைமாறி மாதவிடாய் என்ற மற்றொரு கருப்பொருளுக்குள் சென்றுவிடுகிறார். மாதவிடாய் நாட்களில் பெண்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்றளவிலும் பல இடங்களில் இது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தப்படத்தில் இந்தத் தலைப்பிற்கு இடமில்லை என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் படத்தின் எதிரி ஆணாதிக்கமாக இருக்க முடியாது. படத்தில் வரும் கணவன் மாமனார் என இரு ஆண்களுமே முழுமையான ஆணாதிக்கவாதிகள் இல்லை. ஆணாக நடந்துக் கொள்பவர்கள். அவர்களை முழுமையான ஆணாதிக்கவாதியாகக் காட்டாமல், ஆணாதிக்கத்தை எதிர்த்து ‘பெண்களை சமைக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள் பார்த்தீர்களா?’ என்பது பூட்டிய வீட்டில் சண்டைக்குப்போவது போல் ஆகிறது.

கணவனும் மாமனாரும் முருங்கைக்காயை மென்று துப்பி மேசையில் வைத்து விடுவார்கள். அதை மருமகள் எடுக்கும் போது ஏதோ குடிகாரனின் வாந்தியை அள்ளுவது போல் முகும் சுழிப்பாள். ஓவராகத்தான் இருந்தது. அடுத்தவர் மென்றுவிட்டு துப்பியவற்றை அள்ளி எடுக்க அருவறுப்பாக இருந்தால், ஒரு சின்ன தட்டோ ப்ளேட்டோ வைத்து அதில் வைக்குமாறு சொல்லிவிடலாம். அந்த தட்டை அப்படியே எடுத்து குப்பை தொட்டியில் தட்டிவிடலாம். பிரச்சனைக்கு தேவை தீர்வு. அதை சிந்திக்கவோ சரியான முறையில் அணுகவோ பெண்களுக்கு தெரியவில்லை என்றால் பரவாயில்லை. ஒரு இயக்குநருக்கும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப்பிரச்சனைகளுக்காக மருமகள் மாமனாரின் மீதும் கணவன் முகத்திலும் அழுக்குத்தண்ணியை ஊற்றிவிட்டு வேக வேகமாக வீட்டை விட்டு வெளியே செல்கிறாள். இதைப்பார்க்கும் சமையலறையில் வெந்து தவிக்கும் பெண்களுக்கு விசிலடித்து கைத்தட்டி கொண்டாடத் தோன்றும். இதைப்படிக்கும் உங்களுக்கும் அப்படி தோன்றினால், வெறுமனே கேட்பதையும் பார்ப்பதையும் மட்டுமே நம்புபவர்கள் நீங்கள் என அறிந்து கொள்ளுங்கள். உண்மையை உற்றுப்பாருங்கள். சோசியல் செக்யுரிட்டி என்ற ஒன்று நமது ஊரில் நிச்சயம் தேவை. அது இந்த மாமனாரின் வீட்டில் இருக்கும். இந்தப் படத்தில் வரும் இன்னொரு பெண்ணுக்கு இருக்காது. அந்த இன்னொரு பெண் ஒரு சிங்கிள் மதர். அவளது சமூக செயல்பாட்டிற்காக அவளது வீட்டில் கல்லெறிவார்கள். ஸ்கூட்டியை கொளுத்துவார்கள். இந்த மருமகளின் வீட்டில் யாரும் வந்து அப்படி ஒரு கல்லை எறிந்துவிட முடியாத அளவிற்கு அந்த ஊரில் செல்வாக்கை சம்பாதித்து வைத்திருக்கிறார் மாமனார். அந்த சிங்கிள் மதர் பதிவிடும் முகநூல் பதிவைப்பார்த்துதான் இந்த மருமகளுக்கும் உணர்ச்சிகள் பொங்கும்விதமாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர். இப்படி நிறைய இடத்தில் ஸ்லீப்பர் செல் போல சேம் சைட் கோல் அடித்திருக்கிறார் இயக்குநர். படம் எதை எதிர்க்கிறதோ அதற்கு ஆதரவான பல விசியங்கள் படத்திலேயே இருக்கின்றன.

Patriarchy and Feminism

இன்றும் பல குடும்பங்களில் கணவன்கள் மனைவிகளைக் கொன்றுவிடக்கூடத் தயங்க மாட்டார்கள். ஆனால் கொன்றுவிட்டால் எங்கு போலீஸில் மாட்டிக்கொள்வோமோ, ஊரில் மரியாதைக் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உயிரோடு விட்டுவிடுவார்கள். சரியாகச் சொல்வதென்றால் உயிரை மட்டும் விட்டுவிடுவார்கள். மீதி இருக்கும் நிம்மதி, மரியாதை, மன அமைதி, ஆசை, ஆழ் மனம், உடல்நலம், மனநலம் என அனைத்தையும் தினந்தினம் அடித்துக் கொன்று மென்று தூ எனத் துப்பிவிட்டு ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவரச் சொல்வார்கள், அதே மனைவியிடம். 

இவை அனைத்தும் அவர்களது குழந்தைகளை பார்வையாளர்களாக வைத்துக்கொண்டேதான் நடக்கும். பிறகு அந்தக் குழந்தை ஆணாக இருந்தால் அதே முரட்டு அப்பா போலவும், பெண்ணாக இருந்தால் அதே அப்பாவி அம்மா போலவும் வளர்ந்து நிற்கும். தொன்றுதொட்டு இது தொடரவது கவலைக்குரியது. இந்த அபாயத்தை திரையில் கொண்டுவந்திருக்கலாம். திருமணத்திற்குப்பிறகு கணவன் மனைவி உறவில் பல உரசல்கள் சலசலப்புகள் நிகழும் அது இயல்பு. இன்னொரு உயிருடன் வாழ்வதற்கு ஒரு குறைந்தபட்ச சகிப்புத்தன்மை நிச்சயம் வேண்டும். ஆனால், எந்த அளவிற்கு அந்த சகிப்புத்தன்மையின் எல்லையை நீட்டிக்கொண்டே போவது என்பதில்தான் பெரும் பிரச்சனை. எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதா? எதையுமே சகித்துக்கொள்ளாமல் செல்வதா? எதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டும்? எதையெல்லாம் எள்ளளவும் சகித்துக்கொள்ளவே கூடாது? பதில் எளியது.

தன்னை ஒரு சக மனிதராகக்கூட பார்க்கத்தெரியாத, பார்க்கமுடியாத, தன் மன அமைதியை கெடுக்கவும், என்ன சொன்னால் என்ன செய்தால் தான் பாதிப்புக்கு உள்ளாவேன் என்பதைத் தெரிந்து தன் பலவீனத்தினால் தன்னைக் காயப்படுத்தவும் ஆட்டிவைக்கவும் தயங்காத எவரையும் வாழ்க்கைத் துணையாக தொடராதீர்கள்.

அது கணவனோ மனைவியோ. சின்ன சின்ன விசியங்களை சகித்துக்கொள்ளுங்குள். பேசி சரி செய்யுங்கள். சகிக்கவே முடியாத காரியங்களை மூடி மறைக்க ஆயிரம் குட்டிக்கரணங்கள் அடித்தாலும் அதை ஏறெடுத்தும் பார்க்காதீர்கள்.

கணவன்கள் செய்துவரும் அட்டூழியங்கள் ஏராளம். அதைத் தாங்கிப்பிடிக்க சில சொற்றொடர்களை வசதியாக துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.

  1. ஆம்பளனா கொஞ்சம் அப்டி இப்டிதான் இருப்பான்
  2. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
  3. அரசன நம்பி புருசனா விட்றாத
  4. ஜான் பிள்ளைனாலும் ஆண்பிள்ளை
  5. ஆம்பள சிங்கம்டி
  6. அதிகமா ஆசபட்ற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல. (அதாவது பொண்ணுங்க கோபப்படக்கூடாதாம்).

தனிப்பட்ட முறையில் சிறுவயது முதலே கணவன்கள் மனைவிகளை அடிப்பதை ஆங்காங்கே கண்டு வந்திருக்கிறேன். அதில் அடி உதையுடன் நின்றவைதான் அதிகம். சில சமயம் அறைவது முடியைப்பிடித்து ஆட்டுவது என்பதைத் தாண்டி தாக்குதல்கள் எல்லைமீறி செல்லும். அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

  1. வயசான நபர் ஒருவர் தான் அழைப்பது கேட்காமல் அசந்து தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவிக்கு, தக்க பாடம் புகட்ட அவள் தூங்கிக்கொண்டிருக்கும்போதே அவளது ஒரு காதை கத்தியால் அறுத்துவிடுகிறார்.
  2. கணவன் மனைவி சண்டையில் கணவன் மனைவியின் தோடை பிடித்து இழுத்ததில் காது மடலில் இருக்கும் ஓட்டை கிழிந்துவிடுகிறது.

உண்மையான தீர்வு

நிஜ உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நிஜ உலகில் சாத்தியப்படக்கூடிய தீர்வுகளை திரையில் கொண்டுவருவதே மிகச் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். உதாரணத்திற்கு லஞ்சம் என்பதை எடுத்துக் கொள்வோம். அதை வைத்து ஏகப்பட்ட படங்கள் வந்தாகிவிட்டது. ரமனா, அந்நியன், இந்தியன், இத்யாதி இத்யாதி. எதிலுமே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அரசியல்வாதிகளை விதவிதமாக கொன்றுக் குவிப்பார்கள். யதார்த்தத்தில் இதற்கு சாத்தியமே இல்லை. அதாவது நிஜத்தில் இருக்கும் பிரச்சனையை சரி செய்யாமல் அதைவைத்து படம் எடுத்து மக்களை மேலும் உணர்ச்சிவசப்பட வைத்து பிரபலம் ஆகி செட்டிலும் ஆகிவிடுவார்கள். ஒரு பிரச்சனையை சரி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதை வைத்து பணம் பண்ண நினைப்பது ஏதோ ஒரு வகையில் மருத்துவத் துறையை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. நோயை குணப்படுத்தும் வகையில் அவர்களின் ஃபீசில் குறியாக இருப்பார்கள். நோய் தீர்ந்தாலும் தீராவிட்டாலும் பில் கட்டித்தான் ஆகவேண்டும். தொழில் என்றால் அப்படிதான் இருக்கும். மருத்துவமும் இன்று சேவை இல்லை. சினிமாவும் இன்று கலையில்லை. எல்லாமும் வியாபாரம். நாம் அனைவரும் வாடிக்கையாளர்கள். தவறாமல் ஏமாறும் வாடிக்கையாளர்கள்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

திரைப்படங்கள் நம்மை எந்தளவிற்கு பாதிக்கும் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டிய விசயம் அல்ல. இருந்தாலும் சில உதாரணங்கள் அல்லது நினைவூட்டலகள் பின்வருமாறு.

கர்நாடகாவில் ஒரு இளைஞன் அருந்ததி படம் பார்த்து தன் உடலைத் தீயிட்டுக் கொள்கிறான். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இறந்து போகிறான்.

ஹைதராபாத்தில் ஒரு குழு மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்சால் கவரப்பட்டு அதே பாணியில் திட்டமிட்டு ஆட்களைக் கடத்தி பணம் பறித்து வந்துள்ளனர். பிறகு ஒருநாள் போலீஸில் மாட்டிக்கொள்கின்றனர்.

கே.ஜி.எஃப் படம் பார்த்து தவறாக ஊக்கமடைந்த 19 வயது இளைஞன், டான் ஆகும் ஆசையில் இரவு நேர காப்பாளர்கள் மூவரை கொலை செய்துள்ளான்.

இதுபோல பல சம்பவங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சரி இதெல்லாம் இயல்பான மனநிலையில் இருப்பவர்கள் யாரும் செய்யப்போவதில்லை, மனநிலையில் சமன் இல்லாதவர்கள்தான் இப்படி சினிமாத்தனங்களை நிஜ வாழ்வில் பிரதிபலிப்பர் என்று நாம் எண்ணலாம். அதுதான் இல்லை. மேலே குறிப்பிடப்பட்டவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டவரகள். நாம் சிறிது சிறிதாக தொடர்ந்து பாதிக்கப்படுபவர்கள். சிறிது சிறிதாக நிறைய விசயங்களை சினிமாக்கள் ட்ரெண்டாக்கிக் கொண்டே செல்லும், நார்மலைஸ் ஆக்கிக்கொண்டே செல்லும், எல்லாவற்றுக்கும் நாமும் தலையாட்டிக் கொண்டே பின்பற்றுகிறோம்.

சினிமாவில் சாராயம், சரக்கு, பீர், சிகரெட்

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு சிகரெட் கூட குடித்ததில்லை என்றாலும், தமிழ்நாட்டில் நிச்சயம் பல்லாயிரக் கணக்கானோர் சிகரெட்டிற்கு அடிமையாகியிருப்பார்கள். இல்லை என நான் மறுக்கவில்லை. ஆனால், ரஜினி சிகரெட் குடித்து அதை ஒரு ஸ்டைல் என ப்ராண்டிங் செய்துவிட்டபடியால் சிகரெட் குடித்திருக்காதவர்களும் தன் இமேஜை ரஜினி போல ரிசம்பில் பண்ண சிகரெட்டை பழக்கப்படுத்தி இருப்பார்கள். இதை இல்லை என யாராலும் மறுக்க முடியாது. பிறகு வயதான காலத்தில் “அனுபவத்தில் சொல்றேன்” என டயலாக் அடித்து சிகரெட்டை வேண்டாம் என அட்வைஸ் செய்வதெல்லாம் யார் கேட்டது? அவர் பற்றவைத்த சிகரெட்தான் இன்னமும் அணையாமல் எரிந்துக் கொண்டே இருக்கிறது.

சரக்கும் என்னும் சாராயத்தையும் மிகப்பிரபலம் ஆக்கி அதை நார்மலைஸ் செய்ய முயற்சித்து பெருமளவிற்கு நார்மலைசும் செய்துவிட்டார்கள். சினிமாவின் வளர்ச்சிக்கு முன்பும் நமது ஊர்களில் சுப நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் சாராயம் அருந்துவார்கள்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அது இலைமறைக் காய்மறையாக நடந்து வந்தது. அதனை சினிமாக் காட்சிகளில், நகைச்சுவை, ஹீரோயிசம், மேன்லினஸ் என்று அடையாளப்படுத்தி பதினைந்து வயதினரும் இன்று மது அருந்துவது சாதாரணமாக்கி வைத்திருக்கிறார்கள். எப்போதும் ஒரு திரைப்படத்தில் படம் பார்ப்பவர்கள் தங்களை கதையின் நாயகனுடனே பொருத்திக் கொள்வார்கள். அதுதான் மனித இயல்பு. அந்த ஹீரோ செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்தும் போது அது எவ்வளவு பெரிய அபத்தமாக ஆகிறது. திரைப்படத்தில் ஒரு நடிகர் பிறர் பணத்திற்கு ஆசைப்பட மாட்டார் என்பதாலேயே பல ரசிகர்கள் பிறர் பணத்திற்கு ஆசைபடுவதை தவிர்த்திருப்பார்கள். ஒரு நடிகர் தன் கதாப்பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லலாம். அது ரசிகர்களின் கொள்கையாகக்கூட உருமாறி நிற்கும். ஆனால், மக்களை குஷிபடுத்துவதற்காக போதைக்காட்சிகளை பழக்கப்படுத்திவிட்டு அதில் வரும் வருமானத்தில் செட்டில் ஆவது ரசிகர்களின் மீதுள்ள அக்கறையை நன்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதை சரி செய்வதாக எண்ணிக்கொண்டு வளர்ந்து பெரிய நடிகர் ஆனப்பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை விட்டால் போதும் அதற்கும் விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய கோடி ரசிகர்கள் இங்குண்டு.

சமீப நாட்களில்தான் இவர்கள் கஞ்சாவை பிரபலப்படுத்திவருகிறார்கள். அரசாங்கம் இதை தடை செய்த போதிலும், இது போன்ற போதை வஸ்துகளை வைத்து படம் வந்து கொண்டுதான் இருக்கிறது. அரசாங்கம் கஞ்சாவை தடை செய்திருப்பது மக்கள் மீதிருக்கும் அக்கறையினால் மட்டும் இல்லை. இதற்குப் பின்னால் ஒரு வியாபார நோக்கமும் உள்ளது. ஒரு நாளைக்கு இந்தியர்கள் ஊதித்தள்ளும் சிகரெட்டுகளின் மதிப்பு மட்டும் நூறு கோடியாவது வரும். கஞ்சாவின் மீதிருக்கும் தடையை நீக்கிவிட்டால், அவரவர் வீட்டிலேயே வளர்த்து காயவைத்து சுருட்டி ஊதிக்கொள்வார்கள். நாள்தோறும் நூறு கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் அரசாங்கத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் கம்பெனிகள் எப்படி பிழைப்பது? கள்ளுக்கு தடை போட்டு அரசே டாஸ்மாக் நடத்துவது தனியாருக்கு லாபம். மரத்தடியில் சீட்டாடினால் அடித்து விரட்டிவிட்டு ஆன்லைன் ரம்மியை கண்டுகொள்ளாமல் இருப்பது தனியாருக்கு லாபம். கஞ்சாவை தடை செய்துவிட்டு சிகரெட் கம்பெனிகளுக்கு அனுமதியளிப்பது தனியார் கம்பெனிகளுக்கு லாபம். எல்லாமும் யாரோ சில பண முதலைகள் சில ஆயிரம் கோடிகளை பல ஆயிரம் கோடிகளாக்கக் திட்டம் வகுக்கின்றனர். மக்களாகிய நாம், அவர்களின் வளர்ச்சிக்கு நாள்தோறும் கண்விழித்து உழைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் காதல்

சரக்கு, சிகரெட், சில்லறைத்தனங்கள் எல்லாம் ஓகே, அவையெல்லாம் அதைப்பயன்படுத்தும் நபர்களையும் அவர்களது குடும்பங்களையுமே பாதிக்கும். காதல்? காதலை இந்த சினிமாக்காரர்கள் கற்பழித்தேவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கேட்க ஆளில்லாமல் போனதுதான் காரணமோ என்னமோ தெரியவில்லை. காதலை வளைத்து வளைத்து சீரழித்தே விட்டார்கள். 19ஆம் நூற்றாண்டில்தான் ரொமாண்டிசேஷன் என்பது உலகம் முழுக்க பரவியது. அதாவது காதலை உருகி உருகி ரசித்துக் கொண்டாடித்தீர்ப்பது. ஏன் அதற்கு முன்பு வரை காதலை வெறுத்தார்களா என்று கேட்காதீர்கள். சங்ககாலம் தொட்டே காதலைக் கொண்டாடிதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதை சாமானியரும் கொண்டாடித் தீர்க்க ஒரு பெரிய மேடை இல்லாததால் அது பெருமளவிற்கு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சற்று விளக்கமாக சொல்கிறேன். 1920களில் ஒரு தம்பதி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் அன்யோன்யம் எப்படிப்பட்டதாக இருக்கும்? கண்டிப்பாக காதல் சார்ந்த எந்த உணர்வுகளையும் அவர்களால் வெளிக்காட்டிக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் அப்போது இருந்தது கூட்டுக்குடும்ப முறை. ஒரு தம்பதிக்கென தனி அறை கிடைப்பதே அரிது. இதில் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் என்பதெல்லாம் அரிதிலும் அரிது. “புதுசா கல்யாணம் ஆனதுக ரொம்பத்தான் கொஞ்சிக்குதுங்க, எல்லாம் எத்தன நாளைக்கின்னுதான் பாக்குறேன்” என்று காது படவே பேசுவார்கள். அதற்காகவே தம்பதிகள் முகத்தை இறுக்கமாம வைத்துக் கொள்வார்கள். ஆசை உணர்வுகளை வெளிப்படுத்த போதிய பாடல்களோ, காலர் ட்யுன்களோ, பேஸ்புக் ஸ்டோரிகளோ, இன்ஸ்டா போஸ்டுகளோ இல்லாத காலக்கட்டம் அது. இதில் இருந்து வெளியே வருவதற்கு, அச்சு ஊடகங்களும் ரேடியோக்களும் பெரிதும் உதவின. புத்தகங்கள், பத்திரிக்கைகள் என எங்கும் காதல் குறித்த பாடல்கள், கவிதைகள், ஓவியங்கள், கதைகள் என திசையெங்கும் காதல் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் இதுதான் நிலை. இந்தக்கூட்டத்தில் சினிமா என்ற ஒரு பொக்கிஷமும் கிடைத்தது. ஆனால், யார் கைகளில் அது கிடைத்தது என்பதுதான் அதன் தரத்தை நிர்ணயித்தது. சினிமா பல அபத்தங்களை உடைத்தும் உள்ளது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதைவிட பல அபத்தங்களை அறிமுகம் படுத்தியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சமீப நாட்களில் இன்ஸ்டாவில் பள்ளி உடையணிந்து காதல் காட்சிகளாக நிறைய ரீல்ஸ்கள் வந்துக்கொண்டிருந்தன. யுடியூபிலும் இது தொடர்ந்தது. பொதுமக்களுள் ஒளிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் பல Pedophiles-ஐ இது உசுப்பிவிடும் செயல்களாகத்தான் நான் பார்க்கிறேன். யோசித்துப்பாருங்கள், இருபத்தி ஏழு வயதுள்ள யுவதி ஒருவள் இருக்கமான பள்ளி சீருடை அணிந்து ஒரு பாட்டுக்கு நடனமாடி இன்ஸ்டா, பேஸ்புக், யுடியூப் என பதிவிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு ஆணின் பாலுணர்வை வலுவாகத் தூண்டும். அந்த ஆசாமிக்கு இந்த கவர்ச்சி நடனம் ஆடிய யுவதி எட்டாக்கணி. ஆனால், அவனது ஊரில், அவனது தெருவில் தினமும் பள்ளிக்கு சென்று திரும்பும் பதினான்கு பதினைந்து வயது சிறுமி அவனுக்கு பலியாடு. 10K லைக்ஸ்-ஐப் பார்த்து சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் யுவதிகள், ஆண்களின் காம வெறிக்கு பாலூத்தி வளர்ப்பதைவிட பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. பெண்களின் தேக அழகைத்தாண்டி அவர்களிடம் பகிர்வதற்கும், படைப்பதற்கும் எண்ணற்ற திறன்கள், ஆற்றல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தவிர்த்து பிரபலமாகும் போதையில் பல முட்டாள் பெண்கள் செய்யும் க்ளாமர் கூத்துகளால் பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவிப் பெண்கள்தான். பிரபலமடைந்த பெண்கள் தன்னைப்பாதுகாத்துக்கொள்ள பவுன்சர்கள் வைத்துக் கொள்வார்கள். பவுன்சர்கள் இல்லையென்றால் நடிகைகளின் நிலமையை யோசித்துப்பாருங்கள். குதறி வைத்து விடுவார்கள் ஆண்கள். குறைந்த பட்சம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ, தன்னார்வலர்களோ இத்தகைய வீடியோக்களை படம் பிடிப்பதற்கும், ஒளிபரப்புவதற்கும் தடைவிதிக்கலாம். மீறினால் கடும் தண்டனை என எச்சரிக்கலாம். பள்ளி மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களுக்கு வழிவகுக்கும் திரைப்படங்கள், குறும்படங்கள், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், யுடியூப் வீடியோக்கள் என அனைத்து வகையான பதிவுகளும் நிச்சயமாக தடுக்கப்பட வேண்டியவைகள்தான். பிறகு மாணவன் டீச்சரைக் காதலிப்பது. யெப்பா டேய். தயவுசெய்து யாராவது இந்த ஆகச்சிற்ந்த இயக்குநர்களிடமிருந்து காப்பாத்திச் செல்லுங்கள் இந்த பாலாய்ப்போன சினிமாவை. டீச்சர்கள் என்றுமே தேவதைகள்தான் ஆனால் அவர்களுடனே வாழ நினைப்பது எனக்கு இன்செஸ்ட் போலத் தெரிகிறது.

எங்கோ எப்போதோ யாருக்கோ நடந்த விசயங்களை படமாக்குவதினால், அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு அது லாபம் ஈட்டித்தரும். ஆனால், அதைப் பார்த்து வளரும் இளைய சமுதாயம் தன்னையும் அந்த ஹீரோவுடன் பொருத்திப் பார்த்துக்கொண்டு, தானும் அப்படித்தான் உணர்வதாக கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டு சீரழியும்.

Stalking. ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது எப்போது காதல் வரும். அந்த ஆண் அவளை எங்காவது பார்த்திருப்பான். அவள் அழகாக இருப்பான். அவனுக்கு அவளது உடல்கூறுகள் பிடித்திருக்கும். கிறுக்குப் பிடிக்கும் அளவிற்கு அவளைப்பிடித்திருக்கும். காதல் மலர இது போதும். வேறு என்ன வேண்டும்? அவளது ஒப்புதலா? வேண்டாம் வேண்டாம். ஆணுக்கு காதல் வந்துவிட்டப் பிறகு வேறென்ன வேண்டும். அவளுக்கும் இவன்மீது காதல் வந்தே தீரவேண்டும். எப்படி வராமல் இருக்கும். கண்டிப்பாக அந்தப்பெண்ணிற்கும் இதே ஆணின் மீது காதல் வரவேண்டும். இல்லை என்றால். இவன் அவள் பின்னாடியே திரிவான். தாடி வளர்ப்பான். சோகப்பாடல் பாடுவான். தற்கொலைக்கு முயல்வான். (செய்துகொண்டால் நல்லது). தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதுவான். தூது அனுப்புவான். சொப்ப்ப்பாஆஆ. தலையே சுற்றுகிறது. குணா படமெல்லாம் இன்னும் சற்று உச்சம். Stolkhome Syndrome-ல் கமல் செய்த சோதனை முயற்சியாகக்கூட இருக்கலாம்.

சினிமா வளர்க்கும் எதிர்காலம்

சினிமாவும் நம்மை வெகுவாக அல்ல பெரிதாகவே பாதிக்கும். வெறுமென மூன்று மணி நேரம் திரையரங்கில் பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு வரும் நாடகம் மட்டுமல்ல சினிமா. அது நம்முடனே பயணிக்கும். நமது காதல் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது வேலை எத்தகையதாக இருக்க வேண்டும், நமது தோற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது எதிர்வினைகள் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது பைக் எத்தகையதாக இருக்க வேண்டும், அவ்வளவு ஏன் நமது ஹேர்கட் எத்தகையதாக என்பதைக்கூட பெரும்பாலும் அந்தந்த காலத்து சினிமாதான் தீர்மானிக்கின்றன.

இதற்கு இணையாக இன்னொரு விசயத்தையும் பார்ப்போம். செக்ஸ் எஜுகேஷன். ஊடலை யார் சொல்லித்தருவது? ஆசிரியரா? ஆசிரியையா? மாணவர்களுக்கு யார் சொல்லித்தருவது? மாணவிகளுக்கு யார் சொல்லித்தருவது? அவரவரே திருட்டுத்தனமான அங்கும் இங்குமாக தெரிந்துக்கொள்ளட்டுமா? அது சரியா? பாட புத்தகத்தில் பிறப்புறுப்புகளின் குறுக்குவெட்டு தோற்றத்தை அச்சிட்டுவிட்டு அந்தப் பாடம் வரும்போது மட்டும் கவனமாக பக்கங்களை கடந்து விடலாமா? காதலையும் காமத்தையும் சினிமாவே சொல்லித்தந்து கொண்டிருந்தால் வருங்காலம் என்னவாகும்? சின்ன உதாரணம் கீழுள்ள இணைப்பில்.

https://tamil.news18.com/news/cuddalore/a-student-gave-birth-in-a-school-toilet-in-cuddalore-797078.html?fbclid=IwAR1Hhs0dp5Y5gAqqzkg_PNmDkZ-FFYLzoEM4lc-ULFcEbe9XUKZJWeXPo1U

ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்தும் பொறுப்பு யாருடையது?

இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்தால் காதல் லவ் அஃபேர் என்று எதையாவது செய்துவிடுவார்கள் என்று ஆண் பிள்ளைகளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலோ பெண் பிள்ளைகளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலோ சேர்த்து விடுவார்கள். ஒருவேளை இருபாலர் படிக்கும் பள்ளியாக இருந்துவிட்டால் மாணவர்களுக்கு தனி வகுப்பறை அல்லது தனி ப்ளாக், மாணவிகளுக்கு தனி வகுப்பறை தனி ப்ளாக். சக மாணவிகளை மாணவர்களை மிக இயல்பாக யதார்த்தமாக எதிர்கொள்வது எப்படி என்று சொல்லித்தர வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்பாலின ஈர்ப்பை ஏன் இவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். பொறுப்புத்துறப்பு மனோபாவமும், பொறுப்பின்மையும், பொருளாதார நெருக்கடிகளும்தான் இப்படியெல்லாம் மாணவர்களையும் மாணவிகளையும் பிரித்து வைத்து கல்லூரி வரை கொண்டுவந்து பிறகு நழுவிக்கொள்வார்கள். ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டால் அதற்கும் காரணம் பள்ளியின் அதீத அழுத்தம் என்று பெற்றோர்களும், மாணவருக்கு காதல் இருந்து அது தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டார் என பள்ளித்தரப்பும் மாற்றி மாற்றி பழி போட்டுக்கொண்டே இருப்பதை நாம் பார்க்காமல் இல்லை. அவர்கள் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தால் மட்டும் அதில் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். செத்துப்போனால் அது அவரவர் இயலாமை. இதுதான் பொறுப்புத்துறப்பு மனோபாவம். கல்வியை வியாபாரமாக்கியதின் விபரீதம்.

இது போதாதென்று சினிமா அதன் இஷ்டத்திற்கு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி வைக்கிறது. எது கெத்து என்று சினிமா சொல்கிறதோ அதைத்தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிறார்கள் இளம் வயதினர். இந்த மாயையில் இருந்து மீள, கல்லூரி முடித்து வேலைக்கு சென்று சகப் பெண்களிடம் ஆண்களுக்குரிய கெத்தைக் காட்டி, வீட்டில் மனைவியிடம் கெத்தைக் காட்டி, செய்தித்தாள்களின் பெரும்பாலன பக்கங்களில் பெண்கள் மீதான வன்முறைகள்தான் தினமும் அச்சிடப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள்தான் ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்த சரியானவர்கள். காதல் காமம் இரண்டையும் பெற்றோர்கள் சொல்லித்தருவதே நல்லது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு இணைந்து ஆலோசித்து ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளிகளையே நடத்த வேண்டும். இருபாலர் பள்ளிகளுக்கே அனுமதியும் அளிக்க வேண்டும். பார்ன் வலைப்பக்கங்களை முடக்கிய அரசாங்கத்தினால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் காதல் கதை போன்ற படங்களை தடுத்து நிறுத்த முடியாதா என்ன? டாஸ்மாக்கையே மூடாத அரசாங்கத்திடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கற்பனைக்கும் அதிகம்தான். ஆனால் இந்தப் பிரச்சனைகளின் பொறுப்பு அரசுதான்.

சினிமாவிற்கு இணையாக ஸ்மார்ட்ஃபோன் செயலிகளும் களத்தில் குதித்துள்ளன. போட்டிப்போட்டுக்கொண்டு அடுத்த தலைமுறையை சீரழிப்பதில்தான் எத்தனை லாபம் இந்தப் பணத்திற்கு அடித்துக்கொள்ளும் ஆறறிவு மானுடர்களுக்கு! இந்தக் கிட்ஸ்களெல்லாம் வளர்ந்து ஆளாகி திருமணம் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போதாவது ரியாலிட்டியை தலை நிமிர்ந்து பார்ப்பார்களா என்று காத்திருக்கிறேன். அல்லது அதையும் ஆன்லைன் யுடியுப் என டிஜிட்டலைஸ் ஆக்கினால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நட்சத்திரம் நகர்கிறது சொல்லும் வாழ்வியல் என்ன?

இந்தப் படம் பேசிய விசயங்களில் ஆண்-பெண் உறவு, பொதுபுத்தி, தன்பாலீர்ப்பாளர்கள், ஆணவக்கொலை என எல்லாமும் முக்கியமானவை. ஒருசில தமிழ் இயக்குநர்களுக்காவது பாலின பேதத்தைக் களைய வேண்டும் என்கிற அக்கறை இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் ஆயிரம் படங்கள் இந்த ஜானரில் வரவேண்டும். யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் பேசமுடியாத பிரச்சனைகளைப்பற்றி பேச கலைத்துறையில் போதிய கலைஞர்கள் இல்லையென்றே உணர்கிறேன். இருப்பினும் இந்தப்படத்திலும் ஒரு முக்கியமான விசயத்தை குறிப்பிட மறந்துவிட்டார்கள். அதுதான் இந்தப்படத்தைப் பார்த்து தவறாக ஊக்கமடைவதில் இருந்து தடுத்திருக்கும். சில பக்குவமில்லாத இளைஞர்கள் செய்யும் அதே தவறை பா.ரஞ்சித்தும் செய்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர் தவறவிட்டது வேலை. வேலைதான். கலை வேலை அல்ல. கலை சிலருக்கு தொழிலாக இருக்கலாம். ஆனால் கலை ஒரு போதும் வேலையாக இருக்க முடியாது.

சற்று யோசித்துப்பாருங்கள், பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தியில் ஹீரோ இறுதியில் ஒரு வக்கிலாகிவிடுவார். இரண்டாவது படம் மெட்ராஸ் ஹீரோ ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்வார். அடுத்து வந்த இரண்டு ரஜினி படங்களிலும் ரஜினி என்ன வேலை செய்வார்? டான் வேலையில் இருந்தால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோ ஒரு கூலித்தொழிலாளி. நட்சத்திரம் நகர்கிறதில் வரும் கதாப்பாத்திரங்கள் என்ன வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள் ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள். அரங்கேற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வியலுக்கு எது உதவுகிறது? யார் அவர்களின் அன்றாட செலவுகளை பார்த்துக்கொள்கிறார்கள். what do they do for a living? அது கதைக்கு முக்கியம் இல்லை என்று சொல்லி மூடி விடாதீர்கள். ஒருவன் என்ன வேலை செய்து அவனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறான் என்பது மிக முக்கியம். அதை சொல்லாவிட்டால் படம் பார்க்கும் பக்குவம் இல்லாத இளம் வயதினர் சினிமாவின் மீதும் கலையின் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டு சென்னையில் வந்து என்னவென்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு self assesment-உம் செய்து பார்க்காமல், வெறுமனே பரவசத்தினால் மட்டும் சென்னைக்கு கிளம்பி வந்து விடுவார்கள். பிறகு, நாட்களை ஓட்ட முடியாமல், என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஸ்விக்கி, டிரைவர், ஹோட்டல், டெக்ஸ்டைல்ஸ், என்று தொடங்கி, எண்ணில் அடங்காத வேலைபாடுகளை செய்து தீர்க்கிறார்கள். இதில் பக்குவத்துடன் இருந்து உழைத்து வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெருபவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது அனைவருக்கும் அமைவதில்லை.

நட்சத்திரம் நகர்கிறது போல சினிமாவைப் பற்றியோ, கலையைப் பற்றியோ, படம் எடுக்கும்போது அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பணத்திற்கு என்ன செய்தார்கள் என்பதையும் காட்டுங்கள். ரூம் வாடகை தர முடியாமல், நண்பர்களின் காசில் எத்தனை மாதங்கள் இருக்க முடியும் என்று காட்டுங்கள். குடும்பம் பொருளாதாரரீதியாக உதவுமா என்பதைக் காட்சிப்படுத்துங்கள். ரெனே என்ன செய்கிறாள்? அர்ஜுனைப் போல ரெனேவிற்கும் அவளது குடும்பம் பெரும் பின்னனி கொண்டதாக தெரியவில்லை. அவள் சொல்லும் கதையில் அவள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாகத்தான் தெரிகிறாள். பொருளாதார பின்னனி இல்லாமல் எப்படி அவள் வாழ்கிறாள். வேலைக்கு போகிறாள் என்றால் என்ன வேலை. அலுவலகமா? freelancer ஆ? சுயத்தொழில் எதுவும் செய்கிறாளா? இப்படி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண், அவள் பெயர் ரெனெ என்று மட்டும் சொன்னால், நிஜத்தில் ரெனேக்களினால் கவரப்படும் பெண்கள் ரெனெவைப் போலவே புரட்சிகரமான வசனங்களைப் பேசிக்கோண்டு எந்த இடத்தில் வாழ முடியும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். ருத்ரையா இதில் தெளிவுடன் இருந்திருக்கிறார். மஞ்சு அவளுக்கென ஒரு வேலையையும் தேடிக்கொண்டு அதன் மூலம் தன் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு வாழ்கிறாள். தன்னுடைய தேவைகளுக்காக யாரிடம் வழிந்து நிற்கவோ, கெஞ்சவோ, கொஞ்சவோ, காலில் விழவோ, கண்ணீர் விடவோ, படுக்கவோ தேவை இல்லை. இந்த விசயத்தில் ரெனேவை இன்னும் கொஞ்சம் டீட்டெயில் செய்திருந்தால் ஒரு முழுமையான ஓவியமாக மிளிர்ந்திருப்பாள்.

நட்சத்திரம் நகர்கிறது மட்டும் இல்லை. படித்து வேலைக்கு போவதை விடவும் கலைத்துறையில் சாதிப்பதோ அல்லது பிரபலமடைவதோதான் உண்மையான வெற்றி என்று போலியாக நம்பவைக்கும் படங்கள் ஏராளம். மீசைய முறுக்கு, 96, மயக்கம் என்ன, விண்ணைத்தாண்டி வருவாயா, டான், தோனி, என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். Target audience என்றோரு வார்த்தை உள்ளது. அதாவது ஊதாரித்தனமாக இருப்பவனை ஹீரோவாக வைத்து செக்கச் செவேலென்று ஒரு ஹீரோயினைப் போட்டு, இருவருக்கும் காதல் மலர்வது போன்ற காட்சியமைத்து ஒரு கிளுகிளுப்பு ஊட்டினால்தான் முதல் நாள் முதல் காட்சி வந்து படம்பார்க்கும் மைனர் குஞ்சுகளுக்கு ஒரு பரவசம் ஏற்படும். கல்லா கட்டும். நாள் முழுக்க உழைத்து ஒரு குடும்பத்தின் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றும் அப்பாக்களும் அம்மாக்களும்தான் எனக்கு ஹீரோக்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் செய்யும் வேலை அவர்களது ஃபேஷன் இல்லைதான். ஆனால் அலுக்காமல் செய்கிறார்கள்.

புடிச்சத பண்ணு, புடிச்சத பண்ணுன்னு சினிமாக்காரனுங்க சொல்லிட்டு போயிருவானுங்க. நாமளும் பின்னாடியே போனா ஜெயிச்சரலாம்னு கண்மூடித்தனமா போனா, வாழ்க்கைல சில பல வருஷங்கள் அப்டியே போயிரும்னு யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

இந்த கிட்ஸ்சின் அம்மாக்களும் அப்பாக்களும் இவர்களைப்போலவே புடிச்சதை செய்துக்கொண்டிருந்தால் கிட்ஸ்கள் அனைவரும் படிப்புக்கும், சோத்துக்கும் என்ன செய்திருப்பார்கள்? அதனால் இது போன்ற படங்கள் எடுக்கும் போது அதீத கவனம் தேவை. நாம் ஒரு விசயத்த விளக்கும் போது அதோட அடிப்படை ஆதாரத்தையும் சேர்த்தே விவரிக்க வேண்டும். ஒரு நீண்ட நெடிய போராட்டம் எப்படி சாத்தியப்பட்டுது என்றும் சொல்ல வேண்டும். சொல்லவில்லை என்றால் நிறைய இளைஞர்களின் வாழ்க்கையை அது புரட்டிப்போட்டுவிடும் அபாயம் உள்ளது.

ஏன் கலைக்கூடம்?

படம் நடக்கும் தளம் ஒரு மேடை நாடகம் நடத்தும் ஒரு தன்னார்வக் குழுவினரின் கூடாரம். இந்தக் கதையை ஏன் ஒரு கலையரங்கில் அரங்கேற்றினார்கள்? இப்படத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் ஒரு கார்ப்பரேட் ஆஃபிசில் நடக்கலாம் அல்லவா? ஒரு கெட்டுகெதரில் சக நண்பர்களுக்கிடையே நடக்கலாம் அல்லவா? ஒரு குடும்ப நிகழ்வில் நடக்கலாம் அல்லவா? ஒரு கோவில் திருவிழாவில் நடக்கலாம். ஏன் நாடக மேடை? நாடகக்காதலை மறுத்துப்பேச நாடகமேடையே பொருத்தமானதாக இருந்துவிட்டதாக நான் உணரவில்லை. நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதைக்கூட நாடகமாடித்தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது.

ஏன் பாண்டிச்சேரி?

பாண்டிச்சேரி நகரம் முழுவதும் ஆங்காங்கே கலையின் கைவண்ணங்கள் ஓவியங்களாக அங்குள்ள மக்களின் ரசனைத்தன்மையையும், கலையார்வத்தையும் உணர்த்திக்கொண்டே இருக்கும். மேலும் சென்னையை விட்டு சினிமா கொஞ்சமாவது வெளியில் வந்தால் நல்லது என்றே எண்ணுகிறேன்.

அவ்வப்போது சில தரமான நல்ல சினிமாக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்து படங்களையும் வைத்து அடுத்த தலைமுறையையும் வைத்து பார்க்கும் போது சினிமா வளர்க்கும் எதிர்காலம் சற்று அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. இது போன்ற பல அபத்தங்களைப் பேசி ஒரு தெளிவுக்கு வருவதற்காகவே ஆயிரம் நட்சத்திரங்கள் நகரட்டும்.

References

https://www.ndtv.com/india-news/copying-horror-movie-arundhati-that-he-watched-several-times-23-year-old-dies-for-salvation-in-karnataka-3249204

https://www.newindianexpress.com/nation/2022/sep/02/kgf-inspired-19-year-old-tribal-an-ex-waiter-turns-out-to-be-mp-serial-killer-2494184.html

https://telanganatoday.com/inspired-by-money-heist-on-netflix-gang-pulls-off-kidnaps-in-hyderabad

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

மஞ்சு from அவள் அப்படித்தான்

ரெனேவைப் பேசுவதென்றால், ருத்ரையாவின் அவள் அப்படித்தான் படத்தில் வரும் மஞ்சுவைப்பற்றி பேசாமல் இருக்கமுடியாது.

“வித்தியாசமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்”,

“ஃப்ரீயா செக்ஸ் பத்தி பேசுறேன்தான். ஃப்ரீ செக்ஸ் வேணும்னா பேசுறேன்”,

“பழமொழிகளால வாழ்றத நான் விரும்பல”,

“i hate hypocrytes. வேஷம் போடுறவங்கள கண்டாலே எனக்கு பிடிக்காது.”

“அவங்க அப்டிதான் இருப்பாங்கன்னா, நானும் இப்டிதான் இருப்பேன்”,

“முரண்பாடு இல்லாம யாரு இருக்காங்க? முரண்பாடு இருக்கிறதாலதான் நாம மனுஷனா இருக்கோம்.”

“நீங்க ரொம்ப கஷ்டப்படப்போறீங்க” என்ற கமலின் வார்த்தைகளுக்கு “அதப்பத்தி எனக்கு கவலயில்ல” என்று நொடியில் பதிலளிக்கும் மஞ்சுதான், பின்பு தன்னை நல்லவன் போல் நடித்து உடலுறவு கொண்டவன் தன்னை தங்கை என்று சொல்லியதற்காக “அவன் தங்கச்சினு கூப்பிடாம, தேவிடியானு கூப்டிருந்தான்னா கூட I wouldn’t have bothered” என்று கொதிக்கிறாள்.
(படத்தை துள்ளலான தொனியில் நகர்த்திச்செல்வதே ரஜினியின் ரகளையான நடிப்பும் வசனங்களும்தான். இந்த ரஜினியை ரசிக்க தவறிவிடாதீர்கள். அவள் அப்படித்தான் படத்தின் லிங்க். https://youtu.be/lvhZBBt7oD8)

ரெனே – nose-cut நாயகி

தனக்கெனவே தனித்துவமான திமிருடன் மிளிரும் ரெனேக்கள் எப்படி உருவாகிறார்கள்? ரெனேக்களை உருவாக்குவது காயங்கள்தான். what doesn’t kill you makes you stronger. மனிதர்களின் வார்த்தைகளைத் தாண்டி அவர்களின் பார்வைகளில் இருந்தும் செயல்களில் இருந்தும் அவர்களைத் துள்ளியமாகக் கணிக்கத் தெரிந்தவர்கள். ஏனென்றால், ஒரு காலத்தில் அவர்களின் பாசாங்குகளினாலும் ஆசை வார்த்தைகளினாலும் சிறுபிள்ளைப்போல ஏமாந்து இருப்பார்கள். ரெனேக்களை பெண் என்பதாலே ருசிபார்த்திருப்பார்கள். பிறகு ஒரு கட்டத்திற்கு மேல தான் ஒரு பெண் என்பதையே கேடையமாக பயன்படுத்துவாள்.

ரெனேக்களுக்கும் மஞ்சுக்களுக்கும் பசப்புக்காரர்களின் பாசாங்குகள் நன்கு தெரியும். ஆண்கள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல ஒரே பேட்டர்னில் கொக்கி போடுவார்கள். ரெனேக்களுக்கு அலுத்தே போகியிருக்கும். இவன் அடுத்து இந்த நகர்வைத்தான் மேற்கொள்வான் என்று. பிரச்சனை என்னவென்றால், இவர்கள் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, யாவரையும் கயவர்களாகவும் நயவஞ்சகர்களாகவுமே யூகித்துப் பழகுவார்கள். 99 விழுக்காடு அவர்களின் கணிப்பு சரியானதாகத்தான் இருக்கும். ஆதரவு தருவதாகக்கூறி ஆர்கஸத்திற்கு அடித்தளமிடுவார்கள் ஆண்கள். பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள். கோரப்பற்கள் நிறைந்த தந்திர நரிகள். முத்தம் கொடுத்தால்கூட அக்கோரப்பற்களால் காயம்தான் படும். இடைவெளி கடைபிடிப்பது ரெனேக்களுக்கு நல்லது. மீதி ஒரு விழுக்காட்டு தூயமனம் படைத்த ஆண்களாகவே 99 விழுக்காடு ஆண்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அதனால் நெருங்கி வருபவர்களையெல்லாம் தூக்கி எறிவதே ரெனேக்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தருகிறது.

ரெனேவிற்கு பொருத்தமான ஆண் என்றாவது ஒருநாள் அமையலாம். இனியனைவிட, அர்ஜுனைவிட மிகப்பொருத்தமாய். ஆனால், அவனுடனும் ரெனே சண்டையிடுவாள். உலகின் மிக உண்ணதமான ஆணுடனும் ரெனே முரன்பட்டு சண்டையிடுவாள். உலகின் மகா அய்யோக்கியனிடமும் ரெனே முரன்பட்டு சண்டையிடுவாள். இந்த விஷியத்தில் ரெனேவும் ஒரு பெண்தான், எல்லாப் பெண்களும் ஒரு ரெனேதான். (ஆமா அந்தப்படத்துல இருந்துதான் சுட்டேன்.) தம்பி ஒருவன் என்னிடம் ஒரு பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டான், “அவ கல்யாணம் பண்ணிகிட்டாலே நிறைய சண்ட வரும்னு பயப்படுறாண்ணா, என்ன சொல்றது”. நான், “கல்யாணம் பண்ணினாலே சண்ட போட்டுதான் ஆகனும், அதுக்குதான் மனசுக்கு புடிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சம் சலிக்காம சண்ட போடலாம்னு சொல்லு”என்றேன். காதலும் மோதலும் வாழ்க்கைல சாதாரணமில்லையா?

அர்ஜுன் – a miserable character or a miserable characterisation?

வானவில்லைக் கடந்த காகம் பஞ்சவர்ணக்கிளி ஆனதுண்டா? அர்ஜுனும் அப்படித்தான். கபாலத்தில் அடிப்பட்ட உடன், திடீரென நல்லவனாக மாறிவிடுகிறான். அவன் தன் தவறை உணர்ந்து மாறும் அளவிற்கு என்ன நடந்துவிட்டது? திருநங்கை, தன்பாலீர்ப்பாளர்கள் மீதான அவனுடைய மதிப்பீடுகளை யார் மாற்றினார்கள்? தான் ஒரு நிகழ்வில் சண்டையிட்டு அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேன் அதனால் நான் அனைவரது உணர்வுகளையும் மதிக்கிறேன் என்று யாரும் கூறிவிடமுடியுமா? அப்படி மாறியதாகக் கூறினால் இதுவும் வெறும் நடிப்புதான் அன்றி வேறில்லை. அர்ஜுன்கள் இங்கு நிறைய உள்ளனர். ரெனே அவளைப்பற்றி சொல்லும் கதையைக் கேட்டு, அவள்மீது அனுதாபக்காதல் கொள்ளவில்லை அர்ஜுன். ஏற்கனவே அவள்மீதிருக்கும் தனது ஈர்ப்பை அவள் இளகிய நேரம்பார்த்து இறுதி ஆயுதத்தை கையில் எடுக்கிறான். ‘I love you Rene’ என்கிறான். ரெனே சலித்தேப்போய்விட்டாள். போடா டேய் என்கிறாள்.

அர்ஜுனின் மூலம் நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதை சொல்ல முயற்சிக்கிறார் பா.ரஞ்சித். இன்னும் சற்று இறங்கி அர்ஜுனின் வீட்டில் நடக்கும் நாடகங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாடகம் இருப்பக்கங்களிலும் இருக்கின்றன. அதனை இருத்தரப்புகளும் மறுத்துப் பேசுவது வாதமாக மட்டுமே இருக்கிறது. நியாயமாக இல்லை.

இப்படத்தில் தவிர்க்கமுடியாத இன்னொரு பெண் ரோஷினி. மாடர்ன் மங்கையாக வருபவர். மிகவும் இயல்பாகத் தன் வாழ்வியலுக்கேற்ற ஆடையுடனும் வரைமுறையுடனும் எல்லைகளுடனும் வாழும் பல பெண்களை, ஆடைகளைக் கொண்டு, கடிகார நேரங்களைக் கொண்டு குத்திவிளையாட ‘தேவிடியா’ என்ற சொல்லுடன் கண்படும் தூரத்தில், காது கேட்கும் தூரத்தில் எப்போதும் ஆண்கள் காத்திருப்பார்கள். இந்த கலாச்சாரக் காவலர்களிடமிருந்து இந்த பாலாய்ப்போன கலாச்சாரத்தை யாராவது காப்பாற்றினால் பரவாயில்லை என்றிருக்கும். ரெனேவும் இன்னொரு ரோஷினியாகியிருக்க வேண்டியவள். பிறப்பின்பால் தாழ்த்தப்படும் சமுதாயத்தில் ரெனேக்கள் என்றுமே ரோஷினியாக முடியாது.

ரெனேக்கள் பழகுவதற்கும், பேசுவதற்கும் மிகவும் ஆர்வமானவர்கள். அழகானவர்கள். அனைவரையும் அசரடிக்கும் அழகுகுணம் பொருந்தியவர்கள். முக்கியமாக பட்டாம்பூச்சி போன்றவர்கள். அவர்களின் ரெக்கைகளை காதல் காமம் என இரு விரல்களுக்கு இடையில் வைத்து கசக்கிவிடத் துடிக்காதீர்கள். பட்டாம்பூச்சியை பறக்கவிட்டால்தானே ரசிக்க முடியும். ரெனே ரெனேவாகவே பறக்கட்டும். நாம் ரசிகனாகவே ரசிக்கலாம். காதலோடு, ரசனையோடு, இளையராஜாவின் இசையோடு, வாழ்நாள் முழுக்க ரசிக்கலாம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

Preview in new tab

Watch Natchathiram nagargiradhu movie here in Netflix

படம் சுமார்தான். ஆனால் படத்தில் பேசுபொருட்களாக எடுத்துக்கொண்ட தலைப்புகள் மிக முக்கியமானவை. இந்தப்படத்தை நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் பெரிய தலைப்புகள்தான்.

  1. ஆணவக்கொலைகள்
  2. LGBTQIA+
  3. ரெனேக்களும் காதலும்
  4. படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

பகுதி-1 ஆணவக்கொலைகள்

தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் ஆங்காங்கே அரங்கேறுவது புதிதல்ல. அதன் பின்னனி முழுக்க 100 விழுக்காடும் ஜாதிப்பற்று அல்ல. அதில் ஒரு உளவியல் சார்ந்த சிக்கலும் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கம் என்று குறிப்பிடப்படும், ஒரு டிபிக்கல் குடும்பத்தை எடுத்துக்கொள்ளலாம். சொந்த வீடு, லோன் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஒரு கார். இரண்டு அல்லது மூன்று பைக்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டின் அப்பா ஒரு இயல்பான மனிதர் என்றே கொள்வோம். அவர் தினசரிகளில் வழக்கமாக செல்லும் இடங்கள் என்று சில இடங்களும், அங்கே வழக்கமாக சந்திக்கும் நபர்களும் இருப்பார்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள் என தினம் ஒரு பத்து பேரிடமாவது குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஏதேனும் பேசிவிட்டு வருவார். இந்த பேச்சுதான் அவரை இயல்புநிலையில் வைத்துக்கொள்ள உதவும். எதுவும் முக்கியமான பேச்சுகள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

“நேத்து நல்ல மழை, நைட்டு ஐம்பது நிமிஷம் கரண்ட்டே இல்ல. உக்ரேன்ல போர் நிறுத்திட்டாங்க. குஜராத்ல வெள்ளம். இந்த முறையும் ரெட்டலதான் வரும். வெயில் இப்பலாம் ஜாஸ்தி.”

இப்படியாக நியுஸ்பேப்பரிலும், அக்கம் பக்கத்தில் இருந்தும் அறிந்து வைத்திருந்த மேட்டர்களை பகிர்ந்து கொள்வர். இதுதான் இன்றளவும் தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பஸ்தர்களின் ராஜபோதை. இந்த நாலு பேரு மதித்து பேசும்படி இவரும், இவர் நின்று மதித்து பேசும்படி அந்த நான்கு பேர்களும் வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதற்காகவே சாராயம் தொடாதவர்களும் அதிகம் இருக்கிறார்கள். குடிச்சா யாரும் மதிக்க மாட்டாங்க என்பதால். இதற்காகவே டீ கடைகளில் டீ குடிப்பவர்களும் அதிகம். அங்குதான் நட்பு வெகுவாக பாராட்டப்படும்.

அந்தக் குடும்பத்தின் அம்மாவை எடுத்துக் கொள்வோம். இரண்டு பிள்ளைகளை வளர்த்த களைப்பு இன்னும் இருக்க, அதனோடே கணவனுக்கு மாத்திரைகளை எடுத்து கொடுத்து அவரையும் குழந்தைப்போல பார்த்துக்கொள்ளும் ஒரு அம்மாவின் மாபெரும் ஆறுதலே அவரைப்போன்ற மற்றோரிடம் பேசித்தீர்ப்பதுதான். அவர்களுக்குள்ளும் எப்போதுமே முக்கியமான பேச்சுக்கள் மட்டுமே இருக்காது. வாணி ராணி தொட்டு, பிக்பாஸ் வந்து, அமெரிக்காவில் இருந்து லீவில் வந்துவிட்டுப்போன சொந்தக்கார பையனைப்பற்றி பேசி, இன்னிக்கு என்ன டிஃபன் வரை எல்லா விசியங்களையும் சகஜமாகப் பேசி சிரிக்க ஒவ்வொரு சமயத்திலும் யாரேனும் ஒருவர் கிடைப்பர். இவர்களிடம் பேசுவதனாலே அம்மாக்களின் மனம் ஆசுவாசப்படும்.

இந்த சூழ்நிலையில் மகளோ மகனோ காதல் திருமணம் செய்துகொண்டால், அது வேறு ஜாதியில் இருந்தால், அந்த தினசரிகளில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களே இவர்களிடம் இயல்பாகப் பழக மாட்டர்கள். லாக்டவுன் காலத்தில் கொரோனா வந்த வீட்டின் முன்பு பச்சை நோட்டீஸ் ஒட்டுவார்கள் அல்லவா, அதைப்போலவே இவர்களது வீட்டின் விசியமும் ஏனையோர்களுக்கும் ஒரு பேச்சுபொருளாகிவிடும். இவர்களது வீடு பேச்சுபொருளாக ஆகியிருக்கிறது, அதற்கு காரணம் நடந்த காதல் திருமணம்தான் என்னும் தகவலை அந்த ஏனையோர்களில் சிலர் இந்த பெற்றோரிடமே சொல்லி அரிப்பை ஆர்கஸமாக்கிக் கொள்வர்.

இப்படிப்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த பெற்றோர்களும் தெரிந்தோ தெரியாமலோ பிறர் வீட்டில் காதல் திருமணம் நடக்கும் போதும் இதையேதான் செய்வர். இந்த சுற்றத்தாரின் பார்வை, சொல் தாங்காமலோ, தாங்கமுடியாது என்று பயந்தோதான், காதல் திருமணம் செய்த பிள்ளைகளை பெற்றோர்கள் இன்னும் சேர்த்துக்கொள்வதில்லை. யாரையும் பார்க்க முடியாமல், யாரிடமும் பேச முடியாமல், டிவிகளில் ஓடும் நியுஸ் சேனல்களையும், சீரியல்களையும் பார்த்து நாட்களை கடத்துவர். பிள்ளைகளது வாழ்க்கை அவர்களுக்கு பிடித்தது போல் இருப்பதில் இவர்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லைதான். ஆனால், சமூக அங்கீகாரம் கிடைக்கப்பெறாததால், அப்பாக்களின் தினசரிகளும், அம்மாக்களின் தினசரிகளையும் ஒரு காதல் திருமணம் சிதைத்து விடுகிறது. காமன் மேன்களால் இந்த உளவியல் சவாலை சமாளிக்கமுடியாமல் தினறவேண்டியதாக உள்ளது. இதைப்பற்றி பிள்ளைகள் கவலைப்பட்டு அப்பா அம்மாவிற்காக காதல் திருமணத்தை தவிர்க்க வேண்டியதில்லை. அந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ள பிள்ளைகள்தான் உடனிருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்த ஜெனேரஷன் கேப்பை நிறப்ப நிறைய விசியங்களை வெளிப்படையாக பேசவேண்டும். அவர்களின் சம்மதத்தோடு அதே காதல் திருமணம் சுற்றமும் நட்பும் சூழ நடக்க வேண்டும்.

எனது காதுகளில் நன்கு கேட்கிறது. இது எல்லோரது வீடுகளிலும் நடக்க வாய்ப்பு இல்லை. அதுவும் ஜாதி மூலமாகவே ஒரு கெளரவத்தையும் சொத்துகளையும் சேர்த்து வைத்த பெரிய மனிதற்களின் குடும்பத்தில் இது நடக்க வாய்ப்பே இல்லை.

அளவுக்கு அதிகமான பணமும் பிறர் மீதான அதிகாரமும் ஒருவனுக்கு பிறப்பின் காரணமாக மட்டுமே கிடைத்து அதையும் அவன் சிறுவயது முதலே அனுபவித்து வளர்ந்து திடீரென தன் மகனோ மகளோ வந்து பிற ஜாதியில் ஒருவரை திருமணம் செய்து வையுங்கள் என்று சொன்னாலே போதும், பாயாசத்தை ரெடி செய்ய தொடங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு இமேஜினால் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தன்னால் சுயமாக சம்பாதிக்க முடியாத இயலாத சொத்தையும் மரியாதையையும் இந்த ஜாதியில் பிறந்த ஒரே காரணத்தினாலே granted ஆக அணுபவித்து வந்திருக்கிறார்கள். இப்போது அந்த சகல செளகரியத்தை யாருக்காக விட்டுத்தருவார்கள்? யாருக்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். இவர்களின் தினசரி வாழ்க்கையை வசதியாக நடத்த பத்துக்கும் மேற்பட்ட கூலி ஆட்களை வேலைக்கு வைத்திருப்பர். மிகக் குறைந்த சம்பளத்தில் இவர்கள் எளிதில் கிடைப்பர். இவர்களை அடக்கி ஆள்வதில்தான் எத்தனை போதை இந்த பணம்படைத்த சாதிக்காரர்களுக்கு. இப்படி இருக்க தன் மகனோ மகளோ பணமில்லாத சாதியில் ஒருவரை காட்டி அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பது கூலிக்காரனை சம்பந்தி ஆக்குவதில்லையா? வாசலில் நின்று கைகட்டி பேசிய வேலைக்காரன், தோளில் துண்டு போட்டுக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்து சம்பந்தம் பேசுவது போன்ற காட்சிகளை கனவிலும் நினைத்துப் பார்க்காதவர்கள். இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர்கள் இருக்க, சரியான சமயத்தில் சக ஜாதிக்கார சொந்தங்கள், நண்பர்கள், பங்காளிகள் வந்து வேதம் ஓதுவார்கள். சாதிப்பெருமை, சாதிப்பற்று, சாதி வெறி, என அனைத்து கோணங்களிலும் ஒரு அப்பனையும் அம்மாவையும் நொடித்து பேசி, இதை சரிசெய்ய எந்த எல்லைக்கும் செல்லத்தான் வேண்டும் என்று நம்பவைத்துவிடுவர். பல சமயம் பணக்கார வீட்டு பிள்ளைகளை பலிகொடுப்பதில்லை. பணம் இல்லாதவர் வீட்டு பிள்ளையை பலி கொடுத்து பணம்படைத்த வீட்டு பிள்ளைகளை கலங்கப்படாமல் காப்பாற்றிவிடுவார்கள். கோகுல்ராஜ், இளவரசன் போன்றவர்களின் படுகொலைதான் வெளியில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. வெளியில் தெரியாத பல பெயர்கள் இன்னமும் உண்டு.

ஜாதிகளில் இருக்கும் படிநிலைகளை சமன்செய்ய ஜாதிக்கலப்பு திருமணம் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. ஏனென்றால், ஜாதி கலப்பு திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகளை அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்கவேண்டியோ அல்லது ஆணாதிக்கத்தாலோ அப்பாக்களின் ஜாதியையே பிள்ளைக்கும் பதிவிடுகின்றனர். ஆகவே, கலப்பு திருமணம் எவ்வளவு செய்தாலும் ஜாதி ஒழியாது. ஒரு ஜாதியினரின் பிள்ளை வேறு ஜாதியினரின் பட்டியலில் சேர்க்கப்படுவதினால் ஜாதி மாறுகிறதேத் தவிற ஜாதி அழிவதில்லை.

பின்பு எங்கிருந்து இதனை சரி செய்வது?

பொருளாதாரம். பொருளாதாரத்தினால் மட்டுமே வீழ்த்தப்பட்டார்கள். சோற்றுக்கே வழி இல்லாத சூழலில் அடிமைப்பட்டு உயிர்பிழைத்ததை நினைவில் கொண்டு, நிகழ்காலத்தில் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி படித்து, தொழில்தொடங்கி, தொழில் தொடங்க உதவி, பொருளாதாரத்தில் தன்னிறைவடைய வேண்டும். கோடி ரூபாய் இருந்துவிட்டால் மட்டும் கீழ் ஜாதி எனப்படுவோருக்கு மேல் ஜாதி எனப்படுவோர் தத்தம் மகனையோ மகளையோ திருமணம் செய்து கொடுப்பார்களா? நிச்சயமாக இல்லை! ஆனால், அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கும். நாடகக் காதல் என்ற பொய் குற்றம் சாட்ட வாய்ப்பிருக்காது. மாறாக வரட்டு கெளரவம்தான் திருமணத்திற்கு தடையாக இருக்கிறது என்ற உண்மையை மேல் ஜாதி எனப்படும் குடும்பத்தினர் உணர நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இவை அனைத்து ஒரே நாளில் நிறைவேறாது. பொருளாதார ரீதியாக மேம்பட இன்னமும் ஒரு தலைமுறை காலமாக ஆகும் என அனுமானிக்கிறேன்.

சில சமயங்களில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலருக்கு, மேல் சாதிக்காரனுக்கு பணத்தினால்தானே இத்தனை திமிர் என்று உணர்ச்சிவசப்பட்டு, பணம்படைத்தோரின் பணத்தையும் செல்வத்தையும் சூறையாடுவது மட்டுமே வழி என்று தப்பு கணக்கு போட்டுவிடுகின்றனர். அதன் விளைவே, கட்ட பஞ்சாயத்தின் போது, பணம் படைத்தவர்களை பணத்தை இழக்க வைக்க பேரம் பேசி பெரிய தொகையை பெற்று விடுகிறார்கள். இதுவும் சமூகத்தில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. பொருளாதாரத்தில் சமனடைய பணம் வைத்திருப்பவர்களிடம் அடாவடியாக பறிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பலரும் திறம்பட உழைத்து நிறைய பொருள் ஈட்டுகிறார்கள். நமக்கான வசதியை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். யாரிடம் இருந்தும் இலவசமாகவோ அடாவடியாகவோ பெறக்கூடாது.

ஆணவக்கொலைகள் அனைத்தும் கேட்க ஆளில்லாத நசுக்கப்பட்டவர்களின் மீது மட்டுமே நிகழ்த்தப்படுவது ஒன்றை தெளிவாக விளக்குகிறது. ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிகிறார்கள். அந்தத் துணிவு, ஆணவம் எப்படி வந்தது? அவர்களிடம் இருக்கும் பணபலத்தை நீக்கிவிட்டாலும் இதே போல வெறிகொண்டு எழுந்து வருவார்களா? கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் வசதிவாய்ப்புடன் இருந்திருந்தால், கொலை செய்ய துணிந்திருப்பார்களா? ஒரு உயிரைப் பறிகொடுத்த குடும்பம் அந்தக் குற்ற வழக்கை எடுத்து தொடர்ச்சியாக நடத்தக்கூட வசதியில்லாத நிலைமை குற்றவாளிகளுக்கு எவ்வளவு சாதகமாக அமைகிறது. அறியாமையையும், ஏழ்மையையும் களையத்தான் கல்வியும், சலுகைகளும் பெற்றுத்தந்துள்ளார் அன்னல் அம்பேத்கர். ஆணவத்தை அறிவுகொண்டு அடக்கிவிட முடியும். அடக்கிவிடுவோம். அறிவின் பின்னால் நாம் செல்வோம், நம் பின்னால் பொருளாதாரம் வரும், பொருளாதாரத்தின் பின்னால் சுதந்திரம் வரும். அடக்குமுறைகள் அக்கிரமங்கள் அற்ற முழு சுதந்திரம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்